Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, 16 February 2015

குலநாசம் ஓங்கட்டும்!

“ஸ்ரீகிருஷ்ணா! கௌரவர்களைக் கொன்றுவிட்டால் குலநாசமாகிவிடும்; குலநாசம் ஏற்பட்டால் அதர்மம் பெருகும்; குலப்பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள்; பெண்கள் நடத்தைக் கெட்டுப் போனால் வர்ணக் கலப்பு உண்டாகிவிடும்; வர்ணக் கலப்பு குலத்தை நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது; வர்ணக் கலப்பால் சாதி தர்மங்கள் அழிந்து விடும்; குலதர்மங்கள் அழிந்துவிட்டால் நரகவாசம் ஏற்படும்; அதனால் போர் வேண்டாம்!”

என கண்ணனைப் பார்த்துக் கூறிவிட்டு அம்புகளுடன் வில்லை எறிந்துவிட்டு உட்கார்ந்துவிட்டான் அர்ச்சுனன். (பகவத்கீதை 1:37-47).

அதாவது போரில் ஆண்கள் மாண்டு போனால் பெண்கள் கண்டவனோடெல்லாம் கள்ள உறவு வைத்துக் கொள்வார்கள். கள்ள உறவில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் சாதிக் கலப்பு ஏற்பட்டு சாதி தர்மம் அழிந்து விடும் என்பதே அர்ச்சுனனின் கவலை. அர்ச்சுனன் சத்திரியன் அல்லவா!

சாதி தர்மத்தைக் காப்பதற்காக மிகக் கீழ்நிலையில் உள்ள சூத்திரன் தன்சாதிப் பெண்களை மட்டுமே மனைவியாக்கிக் கொள்ளலாமேயொழிய உயர்ந்த சாதிப் பெண்களை மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது (மனு:9:157) என்றும், நான்கு வர்ணசாதிகளும் தன் தன் சாதிகளுக்குள்ளேயே மணம் முடிக்க வேண்டும் (மனு: 10:5) எனவும்  விதி வகுத்து வைத்தான் மனு.

என்னதான் விதி வகுத்து வைத்தாலும் வர்ணக் கலப்பை மனுவால் தடுக்க முடியவில்லை.

அதனால்தான் நான்கு வர்ணங்களுக்கிடையில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் (காதல் இன்றி கலப்பு மணம் ஏது!) பிறந்த வாரிசுகளை அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, விராத்திய சாதி, பாகிய சாதி எனச் சாதிகளாகப் பகுத்து இவைகளுக்குள் அம்பட்டன், மீனவன், தச்சன், ஒட்டன் உள்ளிட்ட பல்வேறு சாதிப் பிரிவுகளாக மக்களை அடையாளப்படுத்தி அந்தந்த சாதிகளுக்கான தொழிலையும், அவரவர்களுக்கான தர்மங்களையும், வசிக்க வேண்டி இடங்களையும் தீர்மானித்து அதையும் விதியாக்கினான் அனு. (மனு:10:1-131).

பிராமணன், சத்திரியன், வைசியன் உள்ளிட்ட மேல் சாதிப் பெண்களை கீழ்சாதி சூத்திரன் மணம் முடிக்கக்கூடாது என்றான் அன்றைய மனுவாதி.

பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட உயர்சாதி வீட்டுப் பெண்களை கீழ்சாதி தாழ்த்தப்பட்டவன் மணம் முடிக்கக் கூடாது என்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

அன்று அர்ச்சுனன் பெயரால்  வர்ண சாதிக் கலப்பை தடுப்பதன் மூலம் வர்ண சாதி கௌரவத்தைக் காக்க முயன்றான் மனு.  

இன்று அதே கவலையோடு காதலர் தின எதிர்ப்பு என்ற போர்வையில் காதலை எதிர்ப்பதன் மூலம் சாதிக் கலப்பை தடுத்து தன் தன் சாதிக் கௌரவத்தைக் காக்க மனுவின் வழியில் முயல்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

காதலுக்கு எதிராக - சாதிக் கலப்பிற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக கூச்சல் போடும் மனுவாதிகள் சாதிக் கௌரவத்தைக் காத்தார்களா இல்லை சாதிக் கௌரவம் இவர்களை சந்தி சிரிக்க வைத்ததா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Sunday, 15 February 2015

காதலற்ற உலகை நோக்கி.....!

ஆஸ்திரேலியாவின் புனித வின்சென்ட் வளைகுடா அருகில் அடிலெய்டில் இன்று மாலை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராத்கோலியின் அதிரடியில் உருவான கிரிக்கெட் சுனாமி பசுபிக் கடலைத்தாண்டி இந்தியாவில் மகிழ்ச்சி அலைகளை அள்ளிக் கொட்டியதால் மக்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம். இந்த அலை ஒரே நொடியில் இந்திய மக்களின் தேசபக்தியை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டதால் இந்த தருணத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் தேசத்தின் பெருமையை நிலைநாட்டவும் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழியத் தொடங்கிவிட்டனர். பாருங்களேன்! கலைஞர்கூட இந்த மகிழ்ச்சி அலையில் மிதக்கும் போது சாமான்யர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

இரண்டு நாட்களாக இந்தியாவை உலுக்கிய காதலர் தினக் கொண்டாட்டங்களும் - எதிர்ப்புகளும்கூட இந்த கிரிக்கெட் சுனாமியில் காணாமல் போய்விட்டனவோ! காதலர் தினக் கொண்டாட்டங்கள் வேண்டுமானால் வருவதும் போவதுமாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்புகள் மட்டும் எப்போதும் தொடரவே செய்கின்றன. ஏன் எதிர்ப்புகள் மட்டும் தொடர்கின்றன?

காதலை எதிர்ப்பவர்கள் காதலையும் காதல் திருமணங்களையும் எதிர்க்கவில்லையாம். திட்டமிட்ட காதலையும் நாடகக் காதலையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். அறியாப் பருவத்தில் காதலித்தால் ”எது சரி! எது தவறு!” என்பது தெரியாதாம். 25 வயதுக்கு மேல் பக்குவம் வந்த பிறகு காதலிக்கலாமாம்; படித்துவிட்டு காதலிக்கலாமாம்; வேலைக்குச் சென்று பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் காதலிக்கலாமாம். ஆனால் அப்படிக் காதலித்தாலும் பெற்றோர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்ளக்கூடாதாம்?

காதல் திருமணங்களில் 5% மட்டுமே வெற்றி பெறுகின்றனவாம். 95% காதல் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகின்றனவாம். மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம். காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கைவிட்டுவிட்டால் கேட்க நாதி இல்லையாம். காதலில் தோற்ற பெண்கள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டு வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களாம். காதலால் சமூகத்தில் பதட்டம் ஏற்பட்டு சமூக அமைதி குலைகிறதாம். 

இவர்கள் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மனைவியை - குழந்தையை - தாயை - தங்கையை - தகப்பனை - அண்ணனை - அக்காளை - ஆயாவை - நாயை - பேயை - கழுதையை - குதிரையை இப்படி யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் காதலிக்கலாமாம். அதாவது அன்பு செலுத்தலாமாம்; நேசிக்கலாமாம். யாரும் எதிர்க்கப் போவதில்லையாம். இப்படி கேப்பையில் நெய்வடிகிற மாதிரி இவர்கள் பேசுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட பிற OC-BC- MBC உள்ளிட்ட பிற உயர் சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் காதலித்துவிடக் கூடாது. குலநாசம் - அதாவது சாதிநாசம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் ஒரே கவலை.

இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக்கூட அஞ்சும் இந்தக் கோழைகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு யார் காரணம்? 

அடுத்த பதிவில் பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

விளையாட்டு இரசனைக்கானதா?

Thursday, 18 July 2013

பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது?

தருமபுரி மாவட்டம்பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியரான  திரு.சுரேஷ் (வயது:30) என்பவர் தாழ்த்தப்பட்டவரான s.சுதா (வயது:23) என்பரை காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி மனு இன்னும் மடியவில்லை! என்கிற தலைப்பில் ஜீலை 4, 2013 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டேன். 


இவர்களின் திருமணம் ஏப்ரல் 21, 2010 ல்  பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இக்குடும்பத்திற்குள் புகுந்து குடி கெடுக்கும் வேலையை தொடங்கியுள்ளனர் பசுமை வேடம் போடும் குச்சிகொளுத்தி வன்னிய சாதி வெறியினர். 


படம்: THE HINDU

சுரேஷ் -சுதா இருவரும் மைனர்கள் அல்ல. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது நாடகக் காதலும் அல்ல. மைனர்களின் திருமணமும் அல்ல. "நாடகக் காதல் மற்றும் மைனர்களின் திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்; மற்றபடி நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல!" என பம்மும் குச்சி கொளுத்திகள் சுரேஷ் - சுதா இருவரின் காதலை ஏற்க மறுப்பதேன்? அவர்களின் குடிமைக் கெடுக்க எக்காளமிடுவது ஏன்?

காரணம் ஒன்றுதான். பறையர் சாதியிலிருந்து எவரும் மருமகளாகவோ - மருமகனாகவோ வந்துவிடக்கூடாது என்கிற தீண்டாமை சாதி வெறியைத் தவிர வேறு நோக்கம் எதுவும் குச்சி கொளுத்திகளுக்கு இல்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒரு முறை தெளிவாக நிரூபித்துள்ளது. 

இது குறித்து பசுமை பக்கத்திற்கு இரண்டு முறை பின்னூட்டச் செய்தி அனுப்பியும் அதை வெளியிடாமல் நீக்கியதன் மூலம் பசுமைவாதியின் வலைப்பூ இருள் பிளாக் ஆனதில் வியப்பேதும் இல்லை. பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது? 

Monday, 20 May 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9


தொட்டால் தீட்டு

தீண்டாமைதான் பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கூறு. தீண்டாமையை ஆங்கிலத்தில் untouchable என்கிறார்கள். தீண்டுதல் என்றால் தொடுதல், மீறி தொட்டு விட்டால் தீட்டாகிவிடும் என்பதுதான் இதன் நேரடி பொருள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடை காற்றில் அசைந்து தங்கள் மேல் பட்டுவிட்டாலே தாங்கள் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதினார்கள் பிற மேல்சாதியினர். இப்படித் தீட்டுப்பட்டுவிட்ட மேல் சாதியினர் தீட்டோடு தங்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். வீட்டை நெருங்கும் போது குழந்தைகள் பாசத்தோடு ஓடிவந்து அணைக்க முயலும் போது “தொடாதே!” என ஒதுங்கிக் கொள்வார்கள். தன்னைத் தொட்டு விட்டால் குழந்தையும் தீட்டுப்பட்டு விடுமாம். அதனால்தான் இத்தனை எச்சரிக்கை.

பிறகு பின்வாசல் வழியாகச் சென்று உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களையாமல் குடம் குடமாய் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்ட பிறகுதான் வீட்டிற்குள் நுழைவார்கள். உடுத்தியிருந்த ஆடைகளை நனைக்காமல் கழற்றி போட்டுவிட்டு குளித்தால் நனைக்கப்படாத துணியில்கூட தீட்டு ஒட்டிக் கொண்டிருக்குமாம். அதனால்தான் உடுத்திய உடையோடு தலை முதல் பாதம் வரை தண்ணீரால் கழுவுகிறார்கள். சாவுக்குச் சென்று வந்தவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஒரு தாழ்த்தப்பட்டவனின் துணி தன்மேல் பட்டுவிட்டதற்கும் செய்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனை பிணத்துக்குச் சமானமாகத்தான் பார்க்கின்றனர்.

தனது துணியின் நுனி ஒரு உயர்சாதிக்காரன் மீது பட்டுவிட்டது என்பது மட்டும்தான் அந்தத் தாழ்த்தப்பட்டவனுக்குத் தெரியும். ஆனால் தீட்டுக் கழிப்புகள் எப்படி நடக்கின்றன என்பதை அவன் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. தீண்டாமை எத்தனைக் கொடியது என்பதை அவன் இன்னமும் முழமையாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் இச்செயல்கள் உணர்த்துகின்றன. ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடையின் ஒரு நுனி தன்மேல் பட்டுவிட்டதற்கே இத்தனை தீட்டுக்கழிப்புகள் நடத்தும் பிற மேல் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை மற்ற விசயங்களில் எப்படி நடத்தியிருப்பார்கள் / நடத்துகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. குடம் குடமாய் தலையில் ஊற்றுவதற்குத் தண்ணீர் இல்லை என்றால் தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டு தீட்டுக் கழிப்போரும் உண்டு.

இன்று போக்குவரத்து வசதிகள் கிராமம் வரை செய்யப்பட்டுள்ளன. எல்லாச் சாதியினரும் ஒரே பேருந்தில் ஒட்டி உரசிக் கொண்டு பயணிக்கிறார்கள். முன்பு துணியின் நுனி பட்டதற்கே தலை முழுகியவன் இன்று இவன் வேர்வையும் அவன் வேர்வையும் ஒன்று கலந்தாலும் அவ்வாறு தலை முழுகுவதில்லை. அப்படியானால் தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இது போன்ற சில மாற்றங்களை வைத்துதான் “இப்பவெல்லாம் யாரு சார் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்?” என்று பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

வாடகை வீட்டில் தீட்டு

ஐயர் முதல் அகமுடையர் வரை சாதியைக் கேட்காமல் நகரங்களில் வாடகைக்கு வீடு தருகிறார்களா? எதற்காக முன்கூட்டியே சாதியைத் தெரிந்து கொள்கிறார்கள்? வாடகைக்கு வருபவன் தாழ்த்தப்படவனாக இருந்தவிடக்கூடாது என்பதால்தானே? இது தீண்டாமை இல்லையா? கிராமங்களில் சேரிகள் தனியாக இருப்பதனாலும், தாழ்த்தப்பட்டவர்கள் வாடகை வீடு தேடுவதற்கான தேவை இல்லை என்பதனாலும் வாடகை வீட்டுத் தீட்டு கிராமங்களில் இருக்க வாய்ப்பில்லை.

பரோடா மன்னரால் மாநிலத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் அம்பேத்கருக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்த போது அவர் ஒரு பயணிகள் விடுதியில் தங்குகிறார். அது பார்சிகள் தங்கும் விடுதி. தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் விடுதியில் தங்க இடம் தரமாட்டார்கள் என்பதால் தன்னை ஒரு பார்சி எனக்கூறியதால்தான் அவருக்கு அங்கே இடம் கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களில் பார்சிகள் இதைத் தெரிந்து கொண்டு அவரை அடிக்க வந்த போது “இன்னும் ஒரு வாரமாவது தங்க அனுமதியுங்கள்” எனக் கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் பார்சிகள் அதற்கு இடம் தரவில்லை.

அதன் பிறகு தனது நெருங்கிய நண்பர்களான ஒரு இந்துவையும், ஒரு கிருஸ்தவரையும் அணுகி அவர்களது வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி கோருகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதித்தால் வேலையாட்கள் வெளியேறி விடுவார்கள் என்பதற்காக அந்த இந்து நண்பரும், பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த பழைமைவாதி என்பதால் தனது மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதிக்கமாட்டார் என அந்தக் கிருஸ்தவ நண்பரும் கைவிரித்துவிட அன்று இரவே ஊரைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் பயணமாகிறார் அம்பேத்கர்.

“இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என 1916 ல் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வேதனையோடு பதிவு செய்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட நுறு ஆண்டுகள் முடியப் போகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாடகை வீடு தருவதில் அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

கோவில்களில் தீட்டு

கோவில்களில் நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லையே ஏன்? அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் என்ன நடந்து விடும்? கோவில் இடிந்து விழுந்து விடுமா? அல்லது கோவிலில் வீற்றிருக்கும் சாமி கோபித்துக் கொண்டு வெளியேறிவிடுமா? “இது எங்க கோவில், வேண்டுமானால் அவர்கள் தனியாக கோவில் கட்டிக் கொள்ளட்டுமே, ஏன் இங்கே வர வேண்டும்?” என்று கேட்கிறார்களே இதில் தீண்டாமை இல்லையா?

தண்ணீரில் தீட்டு

அம்பேத்கர் உள்ளிட்ட சுமார் 30 பேர் வேருலிலுள்ள புத்த சமயக் குகைகளைப் பார்க்க அவர்கள் தவுலாதாபாத் நகரைக் கடந்து பிறகு அவுரங்காபாத் வழியாகச் செல்ல வேண்டும். தவுலாதாபாத் கோட்டை மிகவும் பிரபலமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்கள். இவர்களோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து செல்கின்றனர். பயணக் கலைப்பைப் போக்க கோட்டை வாயிலுக்கு வெளியே நீர் நிரம்பியிருந்த குளத்தில் முகத்தையும் கால்களையும் கழுவிக் கொண்டு கோட்டை வாயிலுக்குச் சென்ற போது ஒரு வயதான வெள்ளைத் தாடியுடன் கூடிய முகமதியர் “தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டார்கள்” என்று கூப்பாடு போடுகிறார். அந்த முதியவரோடு பல இளம் முகமதியர்கள் சேர்ந்து கொண்டு “இந்தக் குளத்தை தீண்டத்தகாதவர்கள் உபயோகிக்கக்கூடாது என்பதை நீங்கள் ஏன் வெளியூர்க்காரர்களுக்குச் சொல்லவில்லை?” எனக் கொலை வெறியோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்ததோடு மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார்கள். அதன் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டாலும் எந்தத் தண்ணீரையும் அவர்கள் தொட்டுவிடக்கூடாது என்பதை கண்காணிக்க கூடவே ஆயுதந்தாங்கிய சிப்பாய் ஒருவனை அனுப்பி வைக்கிறார்கள்.

“ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவனே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டும்” என 1934 ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாமியர்களே இப்படி என்றால் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?. எண்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் பொதுக் கிணற்றிலும், பொதுக் குழாயிலும் தண்ணீர் பிடிப்பதற்கு இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே.ஏன்?  தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

காதலில் தீட்டு

பிற உயர் சாதிக்காரர்கள் தங்கள் சாதிகளுக்குள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஏதோ ஒரு வழியில் சமாதானமாகி விடுகிறார்கள். இங்கே தீண்டாமை என்கிற கேள்வியே எழுவதில்லை. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் பிற சாதிப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டால் அது எட்டிக் காயாகக் கசக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுதானே என அவன் இங்கே சமாதானமாவதில்லை. தாத்தப்பட்டவன் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து விட்டால் நாயக்கன் கொட்டாய்கள் பற்றி எரிகின்றன. இத்தகைய காதல் திருமணங்களை எதிர்ப்பதில் தீண்டாமை கிடையாதா?

பொதுவாக பார்ப்பனர்கள் வேறு சாதிப் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பார்ப்பனப் பெண் பிற்படுத்தப்பட்டவன் வீட்டிற்கு மருமகளாக வரலாம். அல்லது ஒரு பிற்படுத்தப்பட்டப் பெண் மற்றொரு பிற்படுத்தப்பட்டவனின் வீட்டிற்கு மருமகளாக வரலாம். சாதிய ஏற்றத்தாழ்வு என்கிற எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு சமாதானமாகி விடுகிறார்கள். ஆனால் ஒரு தாழ்தப்பட்டவள் தனது வீட்டிற்கு மருமகளாக வந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்களே பிற உயர் சாதியினர். அது ஏன்? அதனால்தானே தாழ்த்தப்பட்டப் பெண்களை பிற உயர் சாதியினர் காதலிப்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. இந்த எச்சரிக்கை உணர்வில் தீண்டாமை ஒளிந்திருக்கவில்லையா?

இப்படி தீண்டாமைக் கொடுமைகள் அன்றாட வாழ்க்கையில் ஏறாளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்கிற பழைய வடிவிலிருந்து புதிய வடிவில் தொடர்கின்றன. இத்தகைய தீண்டாமையை பார்ப்பனர்கள் மட்டுமா கடை பிடிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல் உள்ள எல்லா சாதியினரும்தான் கடைபிடிக்கிறார்கள். அப்படியானால் இவை எல்லாம் பார்ப்பனியம் கிடையாதா?

தொடரும்.....

தொடாபுடைய பதிவுகள்




பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7