Showing posts with label பிராமணன். Show all posts
Showing posts with label பிராமணன். Show all posts

Wednesday, 13 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 10 September 2023

சனாதன தருமத்தின் மூலம் எது?

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். 

உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது. 

இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள். 

இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.

1.ரிக்-யசூர்-சாம-அதர்வன‌ எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).

2.மனுதரும சாஸ்திரம் உள்ளிட்ட 18 தரும சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), மொத்தம் 128 ஸ்மிருதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

3.பாகவத புராணம் உள்ளிட்ட 18 புராணங்கள். இவை தவிர, உப புராணங்கள் சில இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

4.மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள்.

5.பகவத் கீதை.

மேலுள்ளவற்றில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும், ஒரு சட்ட நூல் போல தொகுத்துத் தருவதுதான் மனுதரும சாஸ்திரம். எனவே, மனுதரும சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால், அதில் சொல்லப்பட்டுள்ள தருமங்களின் இன்றைய நடைமுறையையும் தெரிந்து கொண்டாலே சனாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைத்து விடும். விடையைத் தெரிந்து கொண்டால், சனாதன தருமத்தை ஒழிப்பதா அல்லது காப்பதா என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும்.

12 தலைப்புகளைக் கொண்ட மனுதரும சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அவசியம் கருதி உடனடியாகப் படிக்க வேண்டிய சில முக்கியப் பிரிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

தலைப்பு I: உலகத் தோற்றம், உயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றுவாய்

31: நான்கு வருணங்களின் தோற்றம்
87,88, 89,90: நான்கு வருணங்களின் தொழில்
92, 93, 95, 96, 97, 100: வருணங்களில் உயர்வு தாழ்வு.

தலைப்பு II: வருண தருமம்

11- நாஸ்திகன்
21, 22: ஆரியர்களின் நாடு
27: சீமந்தம் எனும் தீட்டுக் கழிப்பு
30, 31, 32, 33:  பெயர் சூட்டல்
36, 39, 44, 66: பூணூல்
135, 137, 155, 156: மரியாதை

தலைப்பு III: திருமணம், திதி

4, 6, 8, 10, 11, 12, 13, 15, 16, 16, 21: திருமணம்
46: மாதவிடாய், தீட்டு
110: தாழ்ந்த சாதி

தலைப்பு IV: குடும்ப வாழ்க்கை

30: வேதத்தை நம்பாதவர்கள்
57: மாதவிடாய், தீட்டு
61: சூத்திரன் ஆளும் நாடு
79: மர நிழல் தீட்டு
162, 165: பிராமணச் சலுகை
215-219: உணவுத் தீண்டாமை

தலைப்பு V: உணவு

5, 6, 10, 14, 19, 27, 36, 48, 51: உணவுப் பழக்கம்
62, 85, 86,93: பிறப்பு இறப்பு தீட்டு
124: கிரகப்பிரவேசம், கும்பாபிசேகம் தீட்டு
147-169: மகளிர் தருமம்

தலைப்பு VI: சந்நியாசம்

தலைப்பு VII: அரசின் செயல்பாடு

32, 37-43, 54, 59, 63, 64: அரசாங்கத்தில் பிராமணர்களின் பங்கு

தலைப்பு VIII: நீதி பரிபாலனை

1, 3, 8, 11, 20-22, 24, 88 112, 123, 124: நீதித் துறையில் பிராமணர்களின் பங்கு
267-283, 352, 353: சொற்கொடுமை- தண்டனையில் பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்
379-381, 410:  தகாத உறவு, பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்.
413, 415: தொழிலாளர்கள்

தலைப்பு IX: ஆண்-பெண் தருமம்

2-3, 13, 14, 17, 19, 27-30, 46, 58, 59,69, 78, 81, 88, 94: பெண்ணடிமை
225: வேத நிந்தனை
229, 319, 320: அபராதம், பிராமணர்களுக்குச் சலுகை

தலைப்பு X: சாதிகள் உற்பத்தி, தொழில்

1-73: வருணக் கலப்பால் உருவான கீழ் சாதிகள், தொழில், வசிப்பிடம், உணவு, உடை
83, 84: பிராமணர்கள் ஏன் வேளாண்மை செய்வதில்லை.

தலைப்பு XI: பரிகாரம்
தலைப்பு XII: பாவ புண்ணியம்.

****

மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சில வாழ்வியல் நடைமுறைகள், புதிய சட்டத் திருத்தங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் சாதி, தீண்டாமை, பார்ப்பன மேலாண்மை உள்ளிட்ட பெரும்பாலானவை வழி வழியாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதால் அவற்றை மனுதரும சாஸ்திரத்தோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால்தான், அது சனாதனமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்: 

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

Wednesday, 13 May 2020

வர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி!

“பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைசியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களைத் தூற்றுகிறார்களாம்.”  

வேதம் படித்த பார்ப்பனனின் முகம் பொலிவானதாம். சத்திரியனின் தோள் பிரம்ம தேவனின் தோள் போல வலிமையானதாம். வலிமையான துடை கொண்டு அமர்ந்து வாணிபம் செய்பவனாம் வைசியன். வயலில் பாடுபடும் சூத்திரனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டுமாம். இதுதான் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்திற்கான உண்மையான பொருளாம். இப்படி புதுக் கோணார் உரை எழுதி வாட்ஸ்அப்பில் உலவவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

மேலும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என மனு தர்மம் சொல்வதாக வேறு அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அது எந்த சுலோகத்தில் வருகிறது என்பதைச் சுட்டவில்லை.

வேதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பன இந்து மத நூல்களின் சாரம்தான் மனுதர்மம். இது வர்ண பேதங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூல். மனுதர்மம் இல்லையேல் வர்ணங்கள் இல்லை. வர்ணங்கள் இல்லையேல் சாதிகள் இல்லை. சாதிகள் இல்லையேல் இந்து மதமே இல்லை.

வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதற்கான ஆதாரங்கள் மனுதர்மத்தில் கொட்டிக் கிடக்கின்றன. காட்டாக சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டு பண்ணினார். (மனு 1-31)
But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. (Manu 1-31)

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண சத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
But in order to protect this universe He, the most resplendent one, assigned separate (duties and) occupations to those who sprang from his mouth, arms, thighs, and feet. (Manu 1-87)

வர்ணம் பிறப்பின் அடிப்படையில்தான் திர்மானிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் வர்ண சாதி அமைப்பு குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். குறிப்பாக அவரது ஆய்வு நூல் தொகுப்பு (தமிழில்) 6 முதல் 10 வரை வர்ண சாதி அமைப்பு பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மனு மட்டுமல்லாமல் யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் பார்ப்பன இந்து மத சட்ட நூல்களும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம் குறித்துப் பேசுகின்றன. “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”(4-13) என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே. நான்கு வர்ணங்களும் குணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என சங்கிகளின் தலைமைப் பீடமான நாக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை தெளிவு படுத்துகிறது.
ஆனால் தற்பொழுது வெளியிடப்படும் பார்ப்பன இந்து மத நுல்களில் மேற்கண்டவை எல்லாம் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோதான் வெளியிடப்படுகின்றன. அத்தகையதோர் முயற்சிதான் கீழ்கண்ட வாட்ஸ்அப் பதிவும்.

எனவே பார்ப்பன இந்து மதத்தின் மூல நூல்களைத் தேடிப் படித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

ஊரான்
*****
பார்ப்பனர்கள் உலவவிட்ட வாட்ஸ்அப் செய்தி கீழே.


#ஒரு_கதை_ரொம்ப நாளாக_ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது

பிராமணன்  முகத்தில் இருந்து பிறந்தான்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் 

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைஷியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). 

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனாபிறப்பால்;
ஜாயதேபிறந்த அனைவரும்
சூத்ரசூத்திரரே
கர்மணாதான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜஇருபிறப்பாளனாக
ஜாயதேபிறப்பாளன் ஆகிறான்.

Saturday, 18 July 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

”வரான் பார் திருட்டுப் பய!”

”கொலைகாரப் பய போறான் பாரு!”

”அவன் ஒரு 420 பா!”

திருட்டுப்பய, கொலைகாரன், 420(ஏமாற்றுப் பேர்வழி), இதற்கெல்லாம் விளக்கம் தரத் தேவையில்லை. எல்லாச் சாதிகளிலும், அனைத்து மதங்களிலும் இவர்களைக் காணலாம். இவர்கள் மக்களுக்குத் தீங்கானதையே செய்கிறார்கள் என்பதை இந்தச் சொற்களே புரியவைத்துவிடுகின்றன.

“அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள கடத்துறானுங்க!” 1983-ல் இராமநாராயனனின் இயக்கத்தில் வெளியான "சீறும் சிங்கங்கள்!" திரைப்படத்தில் வி.கே.இராமசாமி பேசும் வசனம் இது.

ஆனால் அது என்ன சண்டாளன்? யார் அது?

இந்தக் கேள்விகளை சில நண்பர்களிடம் கேட்டேன்.

”துரோகி!” என்றார் ஒருவர்.

”தெரியாது!” என்றார் மற்றொருவர்.

”சண்டாளன் என்றால் கீழ் சாதிக்காரன்!” என்றார் மூன்றாமவர். அவரது தொணியே அவர் ஒரு உயர் சாதிக்காரர் என்பதை உணர்த்தியது.

இவர்கள் எல்லாம் ஐம்பதைக் கடந்தவர்கள். அதனால்தானோ என்னவோ சண்டாளன் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு அதன் பொருளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதெல்லாம் பிறரை திட்டுவதற்கு சண்டாளன் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஆண்கள் என்றால் சண்டாளன் என்றும் பெண்கள் என்றால் சண்டாளச்சி என்றும் திட்டுவார்கள்.

இதன் பொருள் அப்போழுதெல்லாம் தெரியாது. வி.கே.இராமசாமி வசனம் பேசும்போதுகூட புரியவில்லை.

சண்டாளன் என்றால் கீழ்சாதிக்காரன் என்று ஒரு நண்பர் சொன்னாரே! அது உண்மையாக இருக்கக்கூடும் என்பதை அவரது தொணியே உணர்த்தியதால் இது குறித்த விவரங்களைத் தேடினேன்.

“பிராமணன் சாப்பிடும் போது சண்டாளன் அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாது!” (மனு: 3-239),

“சண்டாளனுடன் ஒருமித்து வசிக்கக்கூடாது!” (மனு: 4-79),

“ஒரு பிராமணன் உடல் நலமில்லாத போது தனது மனைவி உடனிருக்கையில் வேறு சாதி மனைவியைக் கொண்டு தனக்கு பணிவிடை செய்து கொண்டால் அவன் சண்டாளனாகி விடுகிறான்!” (மனு: 9-87),

”சண்டாளனுக்கு ஊருக்கு வெளியேில் வீடிருக்க வேண்டியது. அவனுக்கு உலோக பாத்திரம் கிடையாது. அவன் தீண்டின பாத்திரங்களை சுத்தி செய்தாலும் பரிசுத்தமாகாது. நாய் மற்றும் குரங்கு மட்டுமே அவனது சொத்து” (மனு:10-51).

”சண்டாளன் பிணத்தின் துணியை உடுத்த வேண்டும். உடைந்த சட்டியில் அண்ணம் புசிக்க வேண்டும். இரும்பு பித்தளை இவைகளால் செய்யப்பட்ட பூஷணங்களை (அணிகலன்கள்) அணிய வேண்டும். அவன் எப்போழுதும் தொழிலுக்காக திரிந்து கொண்டிருக்க வேண்டும்.” (மனு: 10-52).

”தருமகாரியஞ் செய்கிற சமயத்தில் சண்டாளனைப் பார்க்கவும் அவனோடு பேசவும் கூடாது.” (மனு: 10-53).

”சண்டாளர்களுக்கு நேரே உணவு போடக்கூடாது. வேலையாளைவிட்டு உடைந்த பாத்திரங்களில் உணவை போட்டு வைக்க வேண்டும்.” (மனு: 10-54).

“சண்டாளர்கள் பிணங்களை எடுக்க வேண்டும், அவர்கள் அடையாள அட்டையோடுதான் ஊரில் சஞ்சரிக்க வேண்டும்.” (மனு: 10-55),

“பிணங்களின் ஆடைகள் மற்றும் படுக்கை இவைகளை சண்டாளர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும்.” (மனு: 10-56),

“நல்ல வேடத்தில் இருந்தாலும் இவன் செய்கிற தொழிலால் சண்டாளன் ஈனனென்றே அறியப்படுகிறான்.” (மனு: 10-57).

“யாகம் செய்வதற்காக சூத்திரனின் பொருளை ஒரு பிராமணன் வாங்கினால் அவன் இறந்து மீண்டும் பிறக்கும் போது சண்டாளனாகத்தான் பிறப்பான்.” (மனு: 11-24).

“ஒரு பிராமணன் தெரிந்தே ஒரு சண்டாளப் பெண்ணை புணர்ந்தாலோ, அவள் கொடுத்த உணவை சாப்பிட்டாலோ, அவளிடத்தில் தானம் வாங்கினாலோ அந்தப் பிராமணன் சண்டாளனாகி விடுகிறான்.”(மனு: 11-175).

யார் இந்தச் சண்டாளன்?

”சூத்திரனுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் இந்தச் சண்டாளன்.” (மனு: 10-12).

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கு அடிமை சேவகம் செய்பவனே சூத்திரன். ஒரு மேல்சாதி பிராமணப் பெண்னை ஒரு கீழ்சாதி சூத்திரன் காதலிப்பதா? அவனுக்கு ஒரு வாரிசா? என ஆத்திரமடைந்த மனு அந்த வாரிசுகளை சண்டாளர்கள் என அடையாளப்படுத்தி ஊருக்கு வெளியே விரட்டி அடித்தான்.

மாதவிலக்கில் உள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பிணத்தையோ அல்லது ஒரு பறையனையோ – இங்கெ பறையன் என்று குறிப்பிடுவது சண்டாளனைத்தான் - ஒரு பிராமணன் தொட்டுவிட்டால் அவன் தீட்டாகிவிடுகிறான். தெரியாமல் தொட்டுவிட்டால் தலைக்கு முழுகினால் அவனிடமிருந்து தீட்டு நீங்கிவிடுகிறது. (மனு: 5-85).

ஒரு பிராமணன் ஒரு பறையனையோ அல்லது அசுத்தமானவர்களையோ பார்த்துவிட்டால் அப்பொழுதெல்லாம் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். (மனு: 5-86).

இப்படி நீள்கிறது சண்டாளர்கள் அதாவது பறையர்கள் பற்றிய மனுவின் வரையறை.

சண்டாளர்கள் குறித்து – அதாவது பறையர்கள் குறித்து - மனுவால் வரையறுக்கப்பட்டு, பார்ப்பனர்களால் பரப்பப்பட்டு மக்களிடம் ஒரு வாழ்க்கை முறையாக பண்பாடாக நிலை பெற்றுவிட்ட சேரி மக்களின் நிலையை அறிய நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியதில்லை. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பிப் பாருங்கள். திண்டாமையின் உண்மை முகம் தெரியும்!

தொடரும்…

குறிப்பு: இந்தக் கட்டுரை ”இந்துவாக இருப்பது பெருமையா? இழிவா?என்பதன் தொடர்ச்சி. இந்தத் தலைப்பை ”தீண்டாமையை புகுத்தியன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!” என மாற்றி அமைத்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...