Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Thursday, 9 April 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----3


குடியுரிமை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

1947 இல் நாடு ‘விடுதலை’ அடைந்த போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் மக்களின் இடப் பெயர்வு பெருமளவில் நடந்தேறியது. அதன் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தங்கள் நாடுகளுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டன.

இந்திய நாட்டை, மதச்சார்பற்ற ஒரு குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்கள் உறுதிபூண்டு அரசியல் நிர்ணய சபையில் 26.11.1949 அன்று இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி, ஏற்றுக் கொண்டு நமக்கே வழங்கிக் கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம். அதன் பிறகு 26.01.1950 அன்று இந்தியா தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டது.

இந்தியா ஒரு குடியரசான பிறகு இந்தியாவில் வாழுகின்றவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கான சட்டப் பிரிவுகள் பாகம் 2 இல் குடியுரிமை என்ற தலைப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் துவக்கப்பட்ட நாளில், (26.01.1950), இந்தியாவில் குடியிருந்தவர்கள், இந்தியாவில் குடியேறிவர்கள் மற்றும் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்றால்,
“இந்திய அரசியல் சாசனம் துவக்கப்பட்ட நாளில் அதாவது 26.01.1950 அன்று இந்தியாவில் குடியிருக்கும் எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.”  (பிரிவு: 5)

“பாகிஸ்தானில் அடங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வெளியேறி இந்திய மண்ணில் குடியேறியுள்ள ஒவ்வோரு நபரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.” (பிரிவு: 6)

“இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-
அ)

தானோ, பெற்றோரில் ஒருவரோ அல்லது தாத்தா அல்லது பாட்டி ஆகிய ஒருவரோ இந்தியாவில் பிறந்திருந்தால்,
“ஒரு நபர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அல்லது அவரது தாய்-தந்தை இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அல்லது தாத்தா-பாட்டி இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் 1935 இந்திய அரசாங்கச் சட்டப்படி அவர் இந்தியக் குடிமகனாக் கருதப்படுவார். (பிரிவு: 6-அ)

காட்டாக, மேற்கண்ட விளக்கப்படி 1930 மற்றும் 1933 இல், இந்திய மண்ணில் பிறந்து, 26.01.1950 அன்று இந்தியாவிலேயே வசித்து வந்த எனது தந்தையும் தாயும் தானாகவே (Autonatic) இந்தியக் குடிமக்களாகிவிட்டனர். 

பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருப்பின்,
“அவ்வாறு இந்திய மண்ணில் பிறந்த அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் அதாவது தாயோ அல்லது தந்தையோ இந்தியராக இருப்பின் மேற்கண்ட நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-ஆ)

காட்டாக, தந்தை இந்தியராக இருந்து தாய் பாகிஸ்தானியராக இருந்தாலும், அல்லது தாய் இந்தியராக இருந்து தந்தை பாகிஸ்தானியராக இருந்தாலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தை இந்தியாவில் பிறந்திருந்தால் அக்குழந்தை இந்தியக் குடிமகன்தான்.

26.01.1945 முதல் இந்தியாவில் வசித்து வருபவராக இருந்தால்,
“இந்திய அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிருந்தே அதாவது 26.01.1945 இலிருந்து இந்தியாவில் வசித்து வரும் எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-இ)

19.07.1948 க்கு முன்பாக இந்தியாவில் குடியேறி இருந்தால்,
19.07.1948 க்கு முன்னதாக இந்தியாவில் குடியேறி, அப்படி குடியேறிய நாளிலிருந்து இந்தியாவிலேயே வசித்து வருபவர் இந்தியக் குடிமகன்தான்” (பிரிவு: 6-ஆ-i)

19.07.1948 க்குப் பிறகு இந்தியாவில் குடியேறி இருந்தால்,
ஒரு நபர் 19.07.1948 க்குப் பிறகு இந்தியாவில் குடியேறிய இருந்தால் அவர் 26.01.1950 க்கு முன்பாக உரிய அலுவலரிடம் குடியுரிமை கோரி  விண்ணப்பித்து பதிவு செய்திருந்தால் அத்தகைய நபரும் இந்தியக் குடிமகன்தான். (பிரிவு: 6-ஆ-ii).

ஆனால் அவர் அவ்வாறு மனு செய்த தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்குச் சென்று மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினால்,
01.03.1947 க்கு முன்பாக பாகிஸ்தானுக்கு குடியேறிய எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகனாகக் கருதப்படமாட்டார்”. (பிரிவு:7)

ஆனால், அவ்வாறு பாகிஸ்தானில் குடியேறிய அந்த நபர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்து இங்கேயே நிரந்தரமாக் குடியேறியதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரியிடம் பெற்று இந்தியாவில் வசித்து வரும் நபர் பிரிவு 6-ஆ(ii) இன்படி 19.07.1948 க்குள் இந்தியாவில் குடியேறியவராக கருதப்பட்டு இந்தியக் குடிமகனாவதற்கான தகுதி உடையவராகிறார்.

இந்தியாவில் பிறந்து இந்தியாவிற்கு வெளியே வாழ்ந்து வந்தால்,
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 இல், இந்தியா என்று விவரிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பிறந்த ஒவ்வொரு நபரும் அல்லது அத்தகைய நபரின் பெற்றோரில் ஒருவர் அல்லது தாத்தா அல்லது பாட்டி ஆகியோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால், அத்தகைய நபர்கள் இந்தியாவிற்கு வெளியேயுள்ள வேறு பிரதேசத்தில் வசித்து வந்தாலும் இந்தியக் குடிமக்களாகவே கருதப்பட வேண்டும். (பிரிவு: 8)

அப்படிக் கருதப்பட வேண்டுமெனில், அந்த நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியக் குடிமகனாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு முன்னர் அதற்கென உரிய படிவத்திலும் இந்திய அரசின் விதிமுறைகளின்படியும் அப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வேறு நாட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தால்,
ஒருவர், தாமே வலிந்து முன்சென்று, வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால், அந்த நபரை இந்தியக் குடிமகனாகக் கருதமுடியாது. (பிரிவு: 9)

இவைதான் இந்தியக் குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.

மேற்கண்ட எந்தப் பிரிவிலும் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமை தீர்மானிக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்தியக் குடிமகனாக நீடிக்க வேண்டுமானால்,
இந்தியக் குடிமகனாக இருக்கும் அல்லது இந்தியக் குடிமகனாகக் கருதப்படும் ஒவ்வொரு நபரும் குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் உருவாக்கும் சட்டத்திற்குட்பட்டு இந்தியக் குடிமக்களாக நீடிப்பர் (பிரிவு: 10)

குடியுரிமை குறித்த சட்டங்களை புதிதாகக் கொண்டு வரமுடியுமா?
ஒரு குடியுரிமையை வழங்குவதற்கும், இரத்து செய்வதற்கும் மற்றும் குடியுரிமை பற்றிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்திற்குரிய அதிகாரத்தை பாகம் 2 இல் உள்ள பிரிவுகள் கட்டுப்படுத்த முடியாது. (பிரிவு: 11)

தொடரும்
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----2

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!


Friday, 6 March 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

CAA, NRC, NPR-க்கு எதிரானப் போராட்டம் இதுவரை அமைதியாக நடைபெற்றுவந்தது. இஸ்லாமியர்களையும் தாண்டி பிறர் மத்தியிலும் இப்போராட்டத்திற்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. இனிமேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது முதலுக்கே மோசமாகி விடும் என்பதால் 24.02.2020 அன்று டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி உள்ளது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். வன்முறை மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதுதான் பார்ப்பனியம் கையாண்டு வரும் நடைமுறை. இதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன.

டெல்லி ஷாகின்பாக் போல நாடெங்கிலும் பல இடங்கள் ஷாகின்பாக்குகளாக மாறி உள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் ஷாகின்பாக்கை காக்கிச் சட்டைகளைக் கொண்டு சீர்குலைக்க முயன்று தோற்றுப் போன சங் பார்ப்பனப் பரிவாரங்களின் கைப்பாவையான எடப்பாடி கும்பல் அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று வருகிறது. இது ஏதோ இஸ்லாமியர்கள் பிரச்சனை என்பது போல வேடிக்கைப் பார்க்கிறது இந்துப் பெருஞ் சமூகம். இது இஸ்லாமியர்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்துக்கள் உள்ளிட்ட அனைவரின் பிரச்சனை என்பதை விரைவிலேயே இந்துப் பெருஞ் சமூகம் உணரத்தான் போகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூனறு நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்குவற்கு ஏற்ப CAA என்று சொல்லக்கூடிய 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டம் வழி செய்கிறது. மாறாக மேற்கண்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ள முஸ்லீம்கள் மற்றும் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம்கள், திபெத் பௌத்தர்கள், இலங்கை ஈழத் தமிழ் இந்துக்கள், பூட்டான் கிருத்தவர்கள், நேபாள இந்துக்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது.

அகதிகள் என்றால் அனைவரையும் சமமாகத்தானே கருத வேண்டும். அது என்ன ஒரு சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது? மற்றவர்களுக்கு மறுப்பது? இது பாரபட்சமானதல்லவா? மதத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பதாகாதா? சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை மீறுவதாகாதா? இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15,17,19 & 21 மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பிரிவு 2 & 7 க்கு எதிரானது என்பதனால்தானே இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் CAA-வுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 11-ன்படி குடியுரிமை குறித்த சட்டங்கள்/விதிமுறைகளை அரசு வகுக்க முடியும் என்றாலும் அவ்வாறு வகுக்கப்படும் சட்டங்கள்/விதிமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற வகையில் இருந்தால் அவை அரசமைப்புச் சட்டம் பிரிவு 13(2)-ன்படி செல்லாது என்பது தெரிந்தும் CAA-வை கொண்டு வருவது இந்திய அரசமைப்பை அவமதிப்பதாகாதா? இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் உரிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம் என்றாலும் அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை பிரிவு 245 தெளிவு படுத்தினாலும் 14,15,17,19 & 21 ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகத்தானே CAA சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

CAA-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையமும் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டுள்ளது. வழக்கை விசாரித்தால் சந்தி சிரித்துவிடும் என்பதால் விசாரணைக்கு எடுக்க அஞ்சுகிறது உச்ச நீதிமன்றம். சபரிமலை வழக்குதான் முக்கியம் என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இதன் மூலம் வழக்கை இழுத்தடித்து CAA, NPR, NRC-யை நடைமுறைப்படுத்துவதற்குத் துணை போகிறது உச்ச நீதிமன்றம்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ‘துன்புறுத்தலுக்கு’ (persecuted minority) உள்ளாகிறார்கள் என்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது மோடி-அமித்ஷா கும்பல். பௌத்த சிங்களப் பேரினவாதிகளால் சிறுபான்மை தமிழ் இந்துக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? மியான்மரில் பௌத்தப் பேரினவாதிகளால் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினால் அவர்களெல்லாம் அந்தந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டியதுதானே என திமிர்த்தனமாக பேசுகிறது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். மேலும் ‘துன்புறுத்தலுக்கு’ உள்ளாகும் சிறுபான்மையினர் (persecuted minority) என சட்டத் திருத்தத்தில் எங்குமே குறிப்பிடாத போது பொது வெளியில் மட்டும் அவ்வாறு பேசி மழுப்பி வருகின்றது இக்கும்பல்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ‘துன்புறுத்தலுக்கு’ ஆளான சிறுபான்மை இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டம் என்கிறார்கள். பிறகு ஏன் 31 டிசம்பர் 2014 வரைக்கும் உள்ளவர்களை மட்டும் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? அதன் பிறகு அங்கு இவர்கள் யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அப்படி துன்புறுத்தலுக்கு ஆளாகி யாரும் இந்தியாவிற்குள் தஞ்சம் புகவில்லையா? இனிமேலும் அங்கு துன்புறுத்தல் இருக்காதா? இன்றைய தேதியிலோ அல்லது நாளையோ யாராவது துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தால் அவர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அப்படி எல்லாம் இனி யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என கருதுகிறார்களா? அவ்வாறு கருதினால் அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதில்லை என எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளை திரும்ப அந்தந்த நாடுகளுக்கே போகச் சொல்லலாமே? சிங்களப் பேரினவாத துன்புறுத்தலுக்குத் தொடர்ந்து ஆளாகும் ஈழத் தமிழர்களை மட்டும் இலங்கைக்குப் போகச் சொல்கிறார்கள்? என்ன நியாயம் இது?

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து அதிலும் குறிப்பாக வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து ஊடுருவும் முஸ்லீம்களைத் தடுத்து இந்திய நாட்டைப் பாதுகாக்கப் போகிறார்களாம். அங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறதாம். குடிக்கத் தண்ணீர்கூட கிடையாதாம் இந்தியாவில் வளம் கொழிக்கிறதாம். அதனால் மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்தியாவிற்குள் மொத்தமாக வந்து விடுவார்களாம். அப்படி வந்து விட்டால் நம்மால் வாழ முடியாதாம். இப்படி வியாக்கியானம் செய்கிறது அன்புமணி-கிருட்டிணசாமி கும்பல். மோடிக்கு ஜால்ரா தட்டுவதில் அ.தி.மு.க டயர் நக்கிகளே தேவலாம் போல. நாட்டைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டத் திருத்தமாம். சரி! இஸ்லாமிய நாடுகள் இவை மூன்று மட்டும்தானா? வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவினால் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு இந்தக் கும்பலிடம் பதில் இல்லை.

பொன்.சேகர்
வழக்குரைஞர்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!

Sunday, 15 February 2015

காதலற்ற உலகை நோக்கி.....!

ஆஸ்திரேலியாவின் புனித வின்சென்ட் வளைகுடா அருகில் அடிலெய்டில் இன்று மாலை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராத்கோலியின் அதிரடியில் உருவான கிரிக்கெட் சுனாமி பசுபிக் கடலைத்தாண்டி இந்தியாவில் மகிழ்ச்சி அலைகளை அள்ளிக் கொட்டியதால் மக்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம். இந்த அலை ஒரே நொடியில் இந்திய மக்களின் தேசபக்தியை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டதால் இந்த தருணத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் தேசத்தின் பெருமையை நிலைநாட்டவும் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழியத் தொடங்கிவிட்டனர். பாருங்களேன்! கலைஞர்கூட இந்த மகிழ்ச்சி அலையில் மிதக்கும் போது சாமான்யர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

இரண்டு நாட்களாக இந்தியாவை உலுக்கிய காதலர் தினக் கொண்டாட்டங்களும் - எதிர்ப்புகளும்கூட இந்த கிரிக்கெட் சுனாமியில் காணாமல் போய்விட்டனவோ! காதலர் தினக் கொண்டாட்டங்கள் வேண்டுமானால் வருவதும் போவதுமாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்புகள் மட்டும் எப்போதும் தொடரவே செய்கின்றன. ஏன் எதிர்ப்புகள் மட்டும் தொடர்கின்றன?

காதலை எதிர்ப்பவர்கள் காதலையும் காதல் திருமணங்களையும் எதிர்க்கவில்லையாம். திட்டமிட்ட காதலையும் நாடகக் காதலையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். அறியாப் பருவத்தில் காதலித்தால் ”எது சரி! எது தவறு!” என்பது தெரியாதாம். 25 வயதுக்கு மேல் பக்குவம் வந்த பிறகு காதலிக்கலாமாம்; படித்துவிட்டு காதலிக்கலாமாம்; வேலைக்குச் சென்று பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் காதலிக்கலாமாம். ஆனால் அப்படிக் காதலித்தாலும் பெற்றோர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்ளக்கூடாதாம்?

காதல் திருமணங்களில் 5% மட்டுமே வெற்றி பெறுகின்றனவாம். 95% காதல் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகின்றனவாம். மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம். காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கைவிட்டுவிட்டால் கேட்க நாதி இல்லையாம். காதலில் தோற்ற பெண்கள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டு வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களாம். காதலால் சமூகத்தில் பதட்டம் ஏற்பட்டு சமூக அமைதி குலைகிறதாம். 

இவர்கள் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மனைவியை - குழந்தையை - தாயை - தங்கையை - தகப்பனை - அண்ணனை - அக்காளை - ஆயாவை - நாயை - பேயை - கழுதையை - குதிரையை இப்படி யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் காதலிக்கலாமாம். அதாவது அன்பு செலுத்தலாமாம்; நேசிக்கலாமாம். யாரும் எதிர்க்கப் போவதில்லையாம். இப்படி கேப்பையில் நெய்வடிகிற மாதிரி இவர்கள் பேசுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட பிற OC-BC- MBC உள்ளிட்ட பிற உயர் சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் காதலித்துவிடக் கூடாது. குலநாசம் - அதாவது சாதிநாசம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் ஒரே கவலை.

இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக்கூட அஞ்சும் இந்தக் கோழைகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு யார் காரணம்? 

அடுத்த பதிவில் பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

விளையாட்டு இரசனைக்கானதா?

Friday, 1 April 2011

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தியா!

இன்று காலை அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை நேரம், அலுவலக நாள் என்பதால் எப்போதும் போல கூட்டம் நிரம்பி வழிந்தது. கைபேசியின் ஒலிபெருக்கிகளை காதில் திணித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை இரசிக்கும் இளைஞர்கள் கையில் வழக்கத்திற்கு மாறாக தினகரன் நாளேடு. அதிலும் விளையாட்டுச் செய்தி போடப்பட்டிருந்த பக்கத்தில் இலயித்திருந்தார்கள்.

அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இனி விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்பதால் சென்னையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள அன்றாடம் தொடர் வண்டியில் பயணிப்பவர்கள். மொத்தமாக தொடர் வண்டி இருக்கைகளை தங்களது சக உழைப்பாளி நண்பர்களுக்காக 'முன்பதிவு' செய்து கொள்ளும் 'தவறைத்' தவிர இவர்கள் எதார்த்தமான உழைப்பாளிகள். நாம் முன்கூட்டியே சென்றாலும் நமக்கு முடியாத போதுகூட இவர்களால்  இடம் கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் எனக்கு உண்டு.

காலையில் சுறுசுறுப்பாகச் செல்லும் இவர்கள் பகல் முழுதும் முதலாளிகளால் கசக்கி பிழியப்பட்டு மாலையில் துவண்டு வரும் போது அவர்களுக்கு நாம் இடம் தரவேண்டும் எனத் தோன்றும். 

இப்படி பிழைப்புக்காக சென்னை செல்வோரில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படிக்காதவர்கள், பத்தாம் வகுப்பு, +2,  அல்லது தொழில் நுட்ப பட்டயம் (diploma) என ஏழைகளால் படிக்க முடிந்த படிப்பை மட்டுமே படித்தவர்கள். இவர்களால் இதற்கும் மேலே படிக்காமல் போனதற்கு அவர்களுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அல்ல.சிறந்த கல்விக் கூடங்களும், ஆசிரியர்களும் இல்லை என்பதும், சிறந்த கல்விக் கூடங்களில் பயில்வதற்கான பொருளாதார வசதியின்மையுமே காரணங்களாகும்.

இன்று தொடர் வண்டியில் பயணித்த அத்தனை பேரும் கிரிக்கெட்டைப் பற்றிதான் பேசிக்கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு வீரரின் பெயரரும் அத்துப்படி. முதல் ஓவரை யார் வீசியது? ஒவ்வொரு ஓவரையும் வீசியது யார்? முதல் பந்தில் எத்தனை ஓட்டங்கள்? யார் எடுத்தது? பந்து எந்தத் திசையில் அடிக்கப்பட்டது? மட்டையாளர் என்ன தவறு செய்தார்? பந்து வீச்சாளர் செய்த தவறு என்ன? குறிப்பாக இந்திய தரப்பு வீரர்களின் அத்தனை அசைவுகளும் அத்துப்படி.

அது மட்டுமல்ல இதற்கு முன்பு இவ்விரு அணிகளும் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். சச்சின் சதத்தை நழுவ விட்டதற்காக பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டாலும் இந்தியாவின் வெற்றி அதை சாதாரணமாக்கிவிட்டது. கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் அலசிய இவர்களின் அசாத்திய நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனேன்.

வெறும் புலனறிவு மட்டுமே இத்தனை விவரங்களை அளிக்கிறது என்றால் அடுத்தடுத்த கட்டங்களில் அறிவை வளர்க்கும் போது இவர்களின் திறமை வியக்கவல்லதாக அமையும். அந்த வகையில் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் உணர முடிந்தது.

ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இவ்வளவு விவரங்களும் அத்துப்படியானது எப்படி? ஆனால் படிக்கும் காலத்தில் பாடங்களை திரும்பப் திரும்பப் படித்தாலும், எழுதிப் பார்த்தாலும், அடிக்கடித் தேர்வுகள் வைத்தாலும் படிப்பு மட்டும் அத்துப்படியாக வில்லையே! ஏன்? முன்னதில் இருக்கும் ஈடுபாடு பின்னதில் இல்லை என்பதும், இதற்கு நமது கல்வி முறையில் உள்ள குறைபாடுகளுமே காரணங்களாக இருக்குமேயன்றி  'அவாளெல்லாம்' சொல்வது போல நம்மவர்களுக்கு அறிவு குறைவு, படிப்பு வராது என்பதல்ல காரணம்.

ஆனால் அவாளெல்லாம் இன்னமும் நம்மைப்பற்றி அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  "திராவிடவாளுக்கெல்லாம் புத்தி கிடையாது". இது சுப்பரமணியசாமி சமீபத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த நேர்காணலுக்காக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உதிர்த்தது. இதை யாரேனும் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. காரணம் ஒரு கண்டனக் குரல்கூட இதுவரை எழவில்லை.

நான் பயணித்தது கடற்கரை விரைவுத் தொடர் வண்டி. அது கொரட்டூரில் நிற்காது என்பதால் ஆவடியில் இறங்கி அடுத்த தொடர் வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு அருகில் ஒரு இளைஞரும், எதிரில் இரு இளைஞர்களும் வந்து அமர்ந்தனர். இவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. மாறாக அன்றைய தேர்வுக்காக தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கேள்வி பதில்களும் இவர்கள் மருந்தியல் (pharmacology) தொடர்பான தேர்வுக்காகச் செல்கிறார்கள் எனபதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. 'டர்மெரிக்கின்' பயன்பாடு, 'ஓப்பியத்தின்' பயன்பாடு என இவர்களின் பரிமாற்றம் இருந்தது. தோலைப் பாதுகாக்கவும், கிரிமி நாசினயாகவும் 'டர்மெரிக்' பயன்படுகிறது என ஒரு மாணவர் சொன்னதைக்கூட மற்றோரு மாணவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. "நான் புத்தகத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

பாடங்களைப் பற்றி முழுமையான தெளிவு இவர்களிடம் இல்லை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ஆறு மாத கால படிப்பை இந்த அரைமணி நேர இரயில் பயணத்தல் ஈடு செய்து விடலாம் என அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார்கள். அல்லது நேற்றைய கிரிக்கெட் இந்த பரபரப்புக்கு ஒரு விதத்தில் காரணமாய் இருக்கக்கூடும்.

ஒரே ஒரு முறை பார்த்த கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களும் அங்கே அத்துப்படி. ஆறுமாத காலம் படித்த படிப்பின் மிகச்சாதாரண விவரங்கள்கூட இங்கே குழப்பமாய் இருக்கிறது. அங்கே கிரிக்கெட்டோடு உறவாடுகிறார்கள். அனைத்தும் அத்துப்படியாகிறது. அது போல படிப்பு தொடர்பானவற்றில் உறவாடுவதில்லை. அதனால் புரிவதில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புற உலகோடு நாம் கொண்டிருக்கும் உறவு மிக் பெரிய அளவில் பங்காற்றுகிறது. இந்த இடைவெளிதான் பாடத்தில் தெளிவின்மைக்குக் காரணம்.

காலை நேர கிரிக்கெட் மகிழ்ச்சி, தொடர் வண்டியில் மட்டுமல்ல வீடு முதல் அலுவலகம் வரை எங்கும் இருந்திருக்கும். இன்று இந்தியா மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருக்கும். தங்கள் அலுவலகத்தில் பெரிய திரை அமைத்து கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை தனது நண்பர்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொண்டார் ஒருவர். கிரிக்கெட் ஏற்படுத்தும் 'ஓப்பிய' போதை அவ்வளவு விரைவில் குறையாது. ஆனால் கிரிக்கெட்டால் நேற்று குறைந்த உற்பத்தி இன்று இரட்டிப்பாகும் என்பது முதலாளிக்குத் தெரியும்.

குறிப்பு: 31.03.2011 அன்றைய தொடர் வண்டிப் பயண அனுபவம்.