நடிகர் யோகி பாபு கைகுலுக்கச் சென்ற போது 'கிட்ட வராதே!' என்று ஒரு அர்ச்சகர் நடந்து கொண்ட விதமும், நாங்குநேரியில் பள்ளி மாணவனை வீடு புகுந்து வெட்டிய இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களின் செயலும் வடிவத்தில்தான் வேறு வேறானவை; ஆனால், தன்மையில் இரண்டிலும் தீண்டாமைதான் அடிப்படையானது.
Friday, 11 August 2023
நாங்குநேரியும் நடிகர் யோகி பாபுவும்!
Saturday, 5 August 2023
'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?
கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய்
வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி
எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால்
சரி என்பது அவள் கணக்கு.
குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது.
தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.
மாதங்கள்
உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும்
நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும்
என்ன? கசியும் நீரிலாவது கடமையை
முடிக்க வேண்டுமல்லவா?
இதோ பதினெட்டும்
வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி,
பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக
ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக்
கட்டுக் கட்டாய் ‘புல்' கொடுத்து குதூகலித்தது
உடன் சென்ற கூட்டம்.
ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான்.
உள்ளூர் கிடாவென்றால்
தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை
ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில் கொங்கக்கா!
ஊரான்
Wednesday, 2 August 2023
பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "விவசாயிகளுக்கு விடிவே இல்லையா?" இறுதிப் பகுதி!
வேளாண்மையில் இன்று உழவுக்கும், சில இடங்களில் விதைப்புக்கும், அறுவடைக்கும் டிராக்டர்கள் மற்றும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வேலைகள் பெரும்பாலும் இன்னமும் மனிதர்களைத்தான் நம்பி இருக்கின்றன.
விவசாய வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் 100 நாள் வேலைக்குச் சென்று விடுவதால் விவசாயம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் அறியாமையில் சிலர் பிதற்றி வருகின்றனர். 100 நாள் வேலை வருவதற்கு முன்பு ஏதோ விவசாயம் செழித்தோங்கி இருந்தது போலவும் இவர்கள் கதைக்கின்றனர். ஓராண்டில் 100 நாள் போக மீதி 265 நாட்கள் மனித சக்தியை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைந்து விடுமா?
தற்போதைய சூழலில் அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்பவர்கள், ஆயிரக் கணக்கில் அரசிடமிருந்து மாதஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், கள்ளச்சாராயம்-கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு விவசாயம் செய்பவர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்ள முடியும். ஏனைய பெரும்பான்மை வேளாண் குடிகளின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவுமில்லை; இனி நிகழப் போவதுமில்லை.
உலக அளவில் வேளாண் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்கு-பாகப்பிரிவினைகளால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலங்கள் துண்டு துண்டாக விரவிக் கிடப்பதனால் ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்களை நவீனக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்யவதில் சிரமங்கள் இருக்கின்றன.
சிறுவீத உற்பத்தியிலிருந்து பெருவீத உற்பத்திக்கு வேளாண்மை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துண்டு துக்காணி நிலங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமன்படுத்தி பெரும் பண்ணைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். உற்பத்திக் கருவிகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கிராமப்புற குடியிருப்புகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் வரவு செலவு, இலாப-நட்டக் கணக்குப் பார்க்கப்படுவதைப் போல வேளாண்மையிலும் பார்க்கப்பட வேண்டும். இலாபம் இல்லாத வேளாண் பண்ணைகளை மேம்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
அனைத்து வகை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உள்ள சம்பள வேறுபாட்டைக் குறைத்து, கிட்டத்தட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் அல்லது சமமான ஊதியம் பெறுகின்ற வகையில் ஊதியக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்கவும் அதற்கு இசைவான ஒரு அரசை நிறுவவும் முயற்சிப்பது ஒன்றுதான் வேளாண் குடிகளின் விடுதலைக்கு வழி வகுக்கும்.
*****
வாலாஜாவில் அடுத்த சில வேலைகள் எனக்காகக் காத்திருந்ததால், நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனம்பழத்தை ருசி பார்க்கும் ஆசை என்னைத் துரத்தியதால், தொடர் சாரல் மழை காரணமாக இரண்டு நாள் முயற்சித்து பழத்தைச் சுடமுடியாமல், கடைசி நாளில் அது கைகூடியதால் ஒரே நேரத்தில் மூன்று கொட்டைகளைக் கொண்ட ஒரு முழு பழத்தையும் சுவைத்து முடித்தேன்.
இத்தனை நாள் இருந்தும் காட்டுக்குள் போகாமலா ஊர் திரும்புவது என உள்ளம் துள்ளியதால், கணுக்காலில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்திக் கொண்டு மாலை வேளையில் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றேன். கலாக்காயைத் தேடிச் சென்ற போது, எலந்தை, சூரை, காரை, பூலாச் செடிகள் கண்ணில் பட்டன. பழங்கள் கிடைக்கும் பருவம் இது இல்லை என்றாலும் ஒரு பூலாச்செடியில் மட்டும் சில பழங்கள் பளிச்சிட்டன. இனிப்பு கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட சில பூலாப்பழங்களை வாயில் போட்டு அதக்கியவாறு காட்டுக்குள் நீண்ட தூரம் சென்றேன். கலாச்செடி மட்டும் கண்ணில் படவேயில்லை. ஆனால் கண்ணில் பட்டவையோ காலி பாட்டில்களே!
கண்ணாடிக் காடுகளை வளர்க்கும் அரசை நம்பினால் வேளாண் குடிகளுக்கு இனி விடுதலை இல்லை; வேறு வழியைத்தான் நாடு வேண்டும் என எண்ணியவாறு காட்டை விட்டு வெளியேறினேன்.
எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும்.
பச்சை வேர்க்கடலைகளை கொஞ்சம் பையிலே திணித்ததனால் முதுகுப் பாரம் சற்று கூடியதே ஒழிய, இந்த ஒரு வாரத்தில் மனசு லேசாகி உறவுகளிடம் விடைபெற்றுக் கொண்டு மறுநாள் ஊர் திரும்பினேன்.
முற்றும்.
Tuesday, 1 August 2023
பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5
'கைய கால வெச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?' என்று என்னைப் பார்த்து எனது தங்கை அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஆம்! கிராமங்களுக்குச் சென்றால் நான் சும்மா இருப்பதில்லை. மண்வெட்டி, கடப்பாறை, கொடுவா என எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மண்டிக் கிடக்கும் புற்களையும், புதர்களையும், முச்செடிகளையும் அப்புறப்படுத்தி அழகு பார்ப்பவன்.
இந்த ஆறு நாட்களில், கொடுக்காப்புளி முட்செடிகளை வெட்டிய போது அதனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்த சீங்கை முட்கள் என் கைகளைப் பதம் பார்த்தன. மாமரத்துக்கடியில் மண்டிக் கிடந்த தேங்காய் மட்டைகளை அப்புறப்படுத்தி செருப்பணியாமல் சமன் செய்த போது மண்ணில் புதைந்து கிடந்த கவரிங் தோடு ஒன்றின் ஊசி முனை என் பாதத்தைத் துளைத்தது. தேவையற்ற கொளஞ்சிச் செடியின் கிளைகளை வெட்டிக் கழித்து அப்புறப்படுத்திய போது வலது தோள்பட்டை வலி கண்டது. மேட்டுக்கும் பள்ளத்திற்கும் இடையில் ஏறி இறங்கி வேலை செய்த போது வலது கணுக்காலில் ஏற்பட்ட உட்காயம் இன்னும் வலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நாட்களில் நான் கல்லக்கா பறித்தேன். முல்லை, கனகாம்பரம் எடுத்தேன். மண்டிக் கிடந்த காய்ந்த சரகுகளை அப்புறப்படுத்தி வாழை மரங்களை மிடுக்காக்கினேன்.
இவையெல்லாம் நான் சிறு வயதில் செய்த வேலைகள்தான் என்பதனால், வயது மூப்பால் களைப்பு தெரிந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. விவசாயிகளின் அன்றாட வேலைகளில் இவை ஒரு சிறு பகுதிதானே?.
எனது தாத்தாவுக்கு ஊருக்குள் பழைய வீடு ஒன்றிருந்தது. நாள் பட்டதால் அது சிதைந்து சிதிலமடைந்து இன்று வெறும் மனையாய் காட்சியளிக்கிறது. அதனால் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கொல்லையில், 10×12 அளவில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட ஒரே அறை கொண்ட வீட்டில்தான் நீண்ட காலம் ஐந்து பேர் கொண்ட எனது தங்கை குடும்பம் வசித்து வந்தது.

.jpeg)


.jpeg)




