Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Tuesday, 16 May 2023

கள்ளச்சாராய மரணங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகின்ற ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம்-கஞ்சா விற்பனை, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகள், ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இவை அனைத்தும் அந்தந்த ஊரில் உள்ள திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தெரியும்.

கள்ளச்சாராய மரணங்கள் போன்று தீவிரமான பிரச்சனைகள் நிகழாதவரை அனைவரும் மௌனம் சாதிப்பர். காரணம் மேற்கண்ட விசயங்களில் கட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெறுகின்ற ஆதாயம்தான். உள்ளூர் மக்களுக்கு இவை எல்லாம் ஓரளவு தெரிந்திருந்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஆற்றல்மிக்க உள்ளூர் தலைவர்கள் மேற்கண்ட விசயங்களில் ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளோடு வைத்திருக்கின்ற கள்ளக் கூட்டுதான்.

ஆதாயம் கிடைக்காதவர்கள் மட்டுமே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன் வருகின்றனர். கவனிக்க வேண்டிய விதத்தில் அவர்களை கவனித்தால் அவர்களும் அதன் பிறகு மௌனம் காக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இதுதான் அன்றாட நடைமுறை. 

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதினால் அவர்களும் கையறு நிலையில்தான் உள்ளனர். புரட்சிகர இயக்கங்கள் பலம் பெறாத வரையில் மேற்கண்ட சீர்கேடுகள் தொடரவே செய்யும். நடப்பு அரசியல் விவரங்கள் அவதானிப்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால்  இவர்களும் பல்வேறு குழுக்களாக பிளவுப்பட்டு சிதறுண்டு கிடப்பது மற்றுமொரு அவலம்.

மேலும் இது ஒரு அரசியல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் உள்ளூர் மக்களுக்குக் கிடையாது. மாறாக அதிகாரம் அனைத்தும் அரசு அதிகாரிகளிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். தீர்மானங்களைக் கொண்டு வருகின்ற அதிகாரம் மட்டுமே மக்கள் பிரதிகளுக்கு இருக்கிறது. அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையென்றால் அவை எல்லாம் குப்பை தொட்டியில் வீசப்படும். 

தீர்மானங்கள் கூட மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படுவதில்லை. மாறாக அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் அதனால் எவ்வளவு ஆதாயம் பெற முடியும் என்று அரசியல்வாதிகள் முன்கூட்டியே கணக்குப் போட்டுதான் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

கிராம வார்டு உறுப்பினர் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடமே குவிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட பிரதிநிதிகள் அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாறாக தவறிழைக்கின்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது. அடுத்த தேர்தல் வரை அமைதி காப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

உள்ளூர் அளவில் அனைத்து அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தீட்டுகின்ற திட்டங்களை நிறைவேற்றுகின்றவர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெறுகின்ற வகையில் மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.  இத்தகைய புதிய கட்டமைப்பு மட்டுமே ஒரு ஒழுங்கமைந்த சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும். அதற்காக சிந்திப்பதும் குரல் கொடுப்பதும் ஒன்றிணைவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். நீண்ட கால அடிப்படையில் இது ஒன்றே தீர்வு. 

அதுவரை சும்மா இருப்பதா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா? முடிந்த வரையில் உள்ளூர் அளவில் மக்கள் குழுக்களை கட்டி அமைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலையை பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதுவரை கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட அவலங்கள், துயரங்கள் தொடரவே செய்யும்.

நேர்மையான அதிகாரிகளும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் அரிதாக இருக்கவே செய்கின்றனர். விதிவிலக்காக இவர்கள் மிகச் சொற்பமானவர்களே. கட்டமைப்பு சரியில்லாத போது இந்த ஒரு சிலராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Saturday, 1 November 2014

அப்ரண்டிஸ்களும் ஆயுட்கால அடிமைகளும்!



அன்று அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஓலமிட்டவர்கள் இன்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அயல் நாடுகளை நோக்கி ஓடுகின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடு செய்த நோக்கியாக்கள் கை நிறைய காசு பார்த்துவுடன், நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு விண்ணில் பறக்கின்றனர். அன்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பாதை போட்டு கொடுத்தான் காங்கிரஸ்காரன். இன்று அதே பாதையில் பட்டுக் கம்பளம் விரித்து பாதையை செப்பணிட்டுத் தருகிறான் பாரதிய ஜனதா கட்சிக்காரன். எண்ணூர் பாய்லர் ஆர்டரை ‘பெல்’லுக்கு கொடுத்தது சட்ட விரோதம் என சென்னையிலேயே வழக்கு தொடுக்கிறான் சீனாக்காரன். தாராள மயத்தை தடுக்காவிட்டால் தெரு நாய்கூட நம்மை நோக்கி உச்சா அடிக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? மோடி அரசு போகும் வேகத்தைப் பார்த்தால் இனி ஆலைகளும் நமக்கில்லை; ஆயுள் காப்பீடும் நமக்கில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தொழிற்சாலை ஆய்வாளர்கள், இனி ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆலை முதலாளிகள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் தற்சான்றிதழே போதும் என மகுடி ஊதுகிறார் மோடி.

மின் ஆற்றலை பயன்படுத்தாத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லிருந்து 20 ஆகவும், மின் ஆற்றலை பயன்படுத்தும் நிறுவனங்கள் 20 லிருந்து 40 ஆகவும் உயர்த்திக் கொள்ளவும் மோடி வழிவகை செய்துவிட்டார். இனி இவர்கள் முறையே 19 மற்றும் 39 ஊழியர்களை மட்டுமே நிரந்தரப் பணிகளில் அமர்த்திக் கொண்டு ஏட்டளவில் உள்ள தொழிற்சாலை சட்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும் கேள்வி கேட்பாரின்றி ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டவும் பச்சைக் கொடி காட்டியாகிவிட்டது.

இரவு நேரப் பணிகளில் பெண்களை அமர்த்திக் கொள்ளவும், கடினமான எந்திரங்களில் பெண்களை வேலையில் ஈடுபடுத்தவும் இனி தடை இல்லை என அறிவித்ததன் மூலம் இனி பெண் ஊழியர்களை வரைமுறையின்றி சுரண்டவும் பாதை வகுத்தாகிவிட்டது.

குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை அமர்த்திக்கொண்டு, அதன்பிறகு மிகை நேரப்பணி செய்தால் கூடுதல் ஊதியம்; அதன் மூலம் அதிக ஊதியம் என்கிற ஆசையை காட்டி ஏற்கனவே ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையில் மூன்று மாத காலத்திற்கான மிகை நேரப் பணியை 50 மணியிலிருந்து 100 மணி நேரமாகவும் மற்றும் சில பணிகளில் 75 மணியிலிருந்து 125 மணி நேரமாகவும் மிகைநேரப் பணி நேரத்தை உயர்த்தியதன் மூலம் உழைப்புச் சுரண்டலை  தீவிரப்படுத்தி உள்ளது மோடி அரசு. இனி ஆலைகள் அருகில் இருந்தாலும் ஆறுமாதம் கழித்துதான் வீட்டிற்குப் போகமுடியும். அன்று இந்தியர்கள் பிழைப்பு தேடி கொத்தடிமைகளாக பர்மாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் சென்றதைத்தான் இந்த சட்டதிருத்தங்கள் நினைவு படுத்துகின்றன.

ஏற்கனவே நிரந்தரத் தொழிலில் ஒப்பந்த முறையைப் புகுத்தி, உழைப்பைச் சுரண்ட வழி வகுத்தான் கதர் சட்டைக்காரன். ஆனால் உயிர் வாழ்வதற்காக குறைந்த பட்ச கூலிக்கு உத்தரவாதமாவது செய்து வைத்தான் அவன். இன்று ஆன மட்டும் பயிற்றுனர்களை (Apprentice) பயன்படுத்திக் கொள்ள வழி வகுத்துவிட்டான் காவித்துண்டுக்காரன். இனி உழைப்பாளிகள் அனைவரும் செக்கில் பூட்டப்பட்ட அப்ரண்டிஸ் அடிமைகள்கள்தான். அடிமைகள் துவண்டு போகும் போது அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்க அவ்வப் பொழுது நாவை நனைத்துக் கொள்ள அவர்களுக்கு ஸ்டைபண்டு கொடுப்பார்கள். அதைக்கூட அரசாங்கத்திடமிருந்து முதலாளிகள் ரீபண்டு செய்து கொள்ளலாம். இனி அப்ரண்டிஸ்களுக்கு கால வரையறை ஏதும் கிடையாது. அவர்களின் ஆயுளே இனி பயிற்சிக்கான கால வரையறையாக அமையும். பிறகென்ன? ஈசி சேரில் முதுகை சாய்த்து முட்டைகோஸ் பக்கொடாவை கொரித்துக் கொண்டே “ஐ ஆம் எ பாரத் பாய்! மம்மி, நான் வளர்கிறேனே!” என எலும்பு துருத்தி நரம்பு புடைக்கும் அப்ரண்டிஸ்களை இனி சின்னத் திரையில் காணலாம்.

Saturday, 12 April 2014

தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!

1947 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் தனியாகவும் சில ஆண்டுகள் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பாரதிய ஜனதா கட்சி பிற உதிரிக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பல வண்ணக் கூட்டணி அமைத்து ஜனதாக் கட்சியும் இந்தியாவை ஆண்டுள்ளன.  இடது சாரிகள் நேரடியாக நடுவண் ஆட்சியல் பங்கு கொள்ளவில்லை என்றாலும் சில சமயம் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்சிக்கும் மற்றும் நேரடியாக ஜனதா கட்சி ஆட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இவை தவிர காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அவர்களின் செல்வாக்குக்கு ஏற்ப மாநிலங்களில் மாறி மாறி ஆட்சி நடத்தி உள்ளன. புதிதாகத் தோன்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் சில காலமே ஆட்சி நடத்தினாலும் தற்போது அக்கட்சியில் சேர்பவர்கள் ஒன்று ஏற்கனவே பிற கட்சிகளில் பதவி வகித்தவர்களாகவோ அல்லது அதிகாரிகளாக ஆட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர்களாகவோதான் உள்ளனர். ஆட்சி சுகத்தை ருசிக்காத தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
சுருக்கமாகச் சொன்னால் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியாவை ஆண்டவர்கள்தான். இவர்கள் மாறி மாறி ஆட்சி நடத்தினாலும் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். குடிதண்ணீர் கூட கொடுக்க வக்கற்றவர்கள்தான் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போவதாக கதை அளக்கின்றனர்.
திருப்பூருக்குச் சென்றால் அத்திக்கடவு - அவினாசி என்கிறார்கள். வேலூருக்குச் சென்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் என்கிறார்கள். கரூருக்குச் சென்றால் வெற்றிலை வாரியம் என்கிறார்கள். தெற்கே சென்றால் தென்னை வாரியம் என்கிறார்கள். அங்கே பாலம் - இங்கே பாலம் என்றும், இதோ தொழிற்சாலை அதோ தொழிற்சாலை என்றும் இப்படி ஊர் ஊருக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்குகிறார்கள். இந்தக் கூத்தை கடந்த 66 ஆண்டுகளாக நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர் என்ற முறையில் நாமும் இந்தக் கூத்தின் கதாபாத்திரமாகவும் ஆகிவிடுகிறோம்.
கல்வி, வேலை வாய்ப்பு, குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் நாம் தவித்து வருகிறோம். அடிப்படைத் தேவைகளான உணவு - உடை - வசிப்பிடம் கூட இன்றி வாழும் நிலைதானே இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது. கிராமங்களிலிருந்து சென்னை திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கும், வட மாநிலங்களிலிருந்து தமிழகம் - கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், பீகாரிலிருந்து மராட்டியத்திற்கும் என மக்கள் பஞ்சம் பிழைக்க செல்வதைப் போல அலை அலையாய் இந்தியாவெங்கும் படை எடுக்கிறார்களே! ஏன் இந்த நிலை?

சொந்த மண்ணில் மக்கள் உயிர் வாழவே வழியில்லாத போது இந்தியாவை வல்லரசாக்குவோம் எனவும், 8% வளர்ச்சியை எட்டியே தீருவோம் எனவும் உதார்விடுகின்றன வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள். நாம் எதைக் கேட்கிறோமோ அதைச் செய்ய வக்கில்லை; ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுகளாக வாரி இறைக்க மட்டும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை? என்று இவர்களை கேள்வி கேட்க முடியுமா? இல்லை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இவர்கள் மீது குற்ற வழக்காவது தொடர முடியுமா?
தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்பதை மட்டும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாக்களிக்காமல் இருந்து விட்டால் நாம் நமது கடமையிலிருந்து தவறி விட்டதாக கருதும் அளவுக்கு கடமை உணர்ச்சியோடு இருக்கிறோம். ஆனால் நமது தேவைகளை பூர்த்தி செய்வதுதான் தங்களது கடமை என வெற்றி பெற்றுச் செல்பவர்கள் எவரும் கருதுவதில்லையே, இது அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையிலிருந்து தவறியதாகாதா என நாம் கேட்பதில்லையே ஏன்?
சரி! நாம் என்னதான் செய்வது? தேர்தலில் வாக்களிப்பதா? கூடாதா? தேர்தலில் வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்ததா? தேர்தலுக்குப் பிறகு நமக்கு கடமைகள் ஏதும் கிடையாதா?
எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா? அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

Saturday, 29 March 2014

தமிழகமே திருமங்கலமாக மாறுமா?

கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக  மே,  2007 ல் மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 பேர் பலியானதையும் 7 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையும் சாமான்யர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


மு.க.அழகிரி
“2009 ல் திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, டிவி, சி.டி பிளேயர், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களோடு பணத்தையும் கொடுத்து தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்தவர் அழகிரி” என்றும் அந்த வெற்றியை “திருமங்கலம் பார்முலா” என்றும் ஊடகங்கள் வர்ணித்தன. திருமங்கலம் பார்முலா டில்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமங்கலம் பார்முலா இப்போது தமிழக பார்முலா ஆகியுள்ளது. இந்த பார்முலா குறித்து மக்களுக்குத் தெரியும். வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்று திமுக மறுத்தது. அது உண்மை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் உதவியாளரே இதை ஒப்புக்கொண்டுள்ளார்” என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சங்கரன் கோவில் இடைத் தேர்தலையொட்டி 2011 மார்ச்சில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்  நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “திருமங்கலம் பார்முலாவை இப்போது அ.தி.மு.க தன்வசம் எடுத்துக்கொண்டுவிட்டது” என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூ‌றினார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிவகங்கை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா, தேனி தொகுதியில் போட்டியிடும் .தி.மு.. வேட்பாளர் அழகுசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், மதுரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பன்  ஆகியோர் அழகிரியை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஹெச்.ராஜா
மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்காகவும், திருமங்கலம் பார்முலாவுக்காகவும் அழகிரியை அன்று வசைமாரி பொழிந்தவர்கள்தான் இன்று அவரது காலை நக்கிப் பிழைக்க அவரையே சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார்
இடைத் தேர்தல் மட்டுமன்றி ஊராட்சி - நகராட்சி தொடங்கி சட்மன்ற - நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை இந்த நாட்டில் நடைபெறும் ‘மக்களாட்சித்’ தேர்தல்கள் எதுவாக இருப்பினும் திருமங்கலம் பார்முலாவை பின்பற்றினால் மட்டுமே வெற்றிக் கோட்டை எட்ட முடியும் என்பது வேட்பாளர்களுக்கும் தெரியும்; வாக்காளர்களும் புரிந்தே வைத்துள்ளனர். 16 வது மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையை குறிவைத்து அம்மா காய்களை நகர்த்துவதால் இம்முறை தமிழகமே திருமங்கலமாக மாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாக்காளர்களும் வாய் பிளந்து காத்திருக்கிறார்கள்.

தாங்கள் மட்டும் மானங் கெட்டால் போதாது என்பதால் ஒட்டு மொத்த மக்களையும் மானங்கெட்டவர்களாக மாற்றுவதையே நடைமுறைாயக் கொண்டுள்ள வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளால் நாம் கண்ட பயன் என்ன? இதில் நல்லவர்களைத் தேட வேண்டுமாம்; இல்லையேல் நோட்டாவை நாட வேண்டுமாம். 

நாம் தேட வேண்டியதையும் நாட வேண்டியதையும் பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.