Showing posts with label பசு. Show all posts
Showing posts with label பசு. Show all posts

Tuesday, 25 July 2023

வெண்ணெய்க் கூட்டம்!

'டிராக்டர்களின்' பயன்பாட்டால்
ஏர் மாடுகள் 
அற்றுப் போயின!
ஏர் கலப்பைகளும் 
காட்சிப் பொருளாயின.

இனவிருத்திக்காக 
எங்கோ,
சில காளைகள் மட்டுமே 
வாட்டமாய் வளர்க்கப்படுகின்றன!
எஞ்சிய காளைகள் 
கறிக்குப் பலியாக
பசுக்கள் மட்டுமே 
பராமரிக்கப்படுகின்றன
பாலுக்காக!

அன்று,
தவிடும் புண்ணாக்கும்
தவிர்க்க முடியா தீவனமாய்!
இன்று,
SKM, கௌ கேர் - என
சந்தையில்
எண்ணற்ற தீவனங்கள் 
கல்லா கட்ட!

என்னதான்,
பசும்புல்லும் 
வைக்கோலும்
வயிற்றை நிரப்பினாலும்
காய்ந்த
மொறுமொறுப்பான
மல்லாட்டக் (1) கொடிகளே
மாடுகளின் 
மனங்கவர்ந்த தீனியாகும்!

கல்லக்காயைப் (1) பறித்தெடுத்து 
இலைகள் உதிராமல்
கொடிகளைப் (செடிகளை)
பக்குவமாய்க் காய வைத்து - பின்
போராக்கி
உச்சியிலே பர்தா (2) போட்டு 
மூடுகின்றான்
மழையில் நனையாமல்
பாதுகாக்க!



அடிக்கும் காற்றில் 
பர்தாவும் 
பறக்காமல் இருக்க - சேலையால்
இருக்கமாய் 
இழுத்துக் கட்டி 
காக்கின்றான் போரை,
கரந்த பாலை 
அப்படியே
நமக்களிக்கும்
நம்மவன்!

ஆனால்,
பசுக்களுக்கு - ஒரு 
புல்லும் புடுங்காத
வெண்ணெக் கூட்டமொன்று
'கோமாதா பாரத்மாதா'வென 
ஓயாமல் ஓலமிட்டு 
இந்தியத் தாய்களைத் 
துகிலுரித்துக் கெக்கலிக்கும் 
கேடுகெட்ட 'தேசமடா' இது!

ஊரான்

குறிப்பு: 

1. வேர்க் கடலையை, கல்லக்கா (கடலைக் காய்), மல்லாட்ட (மணிலாக் கொட்டை) என்றழைப்பது ஊர்வழக்கு. 

2. மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாலின் அல்லது வைக்கோல் போட்டு போரை மூடுவார்கள். அதைத்தான் இங்கே பர்தா எனக் குறிப்பிட்டுள்ளேன். 

தொடர்புடைய பதிவுகள்

Saturday, 15 June 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!.......இறுதிப் பகுதி

அதிகாலை மூன்று மணி. சொந்தமெல்லாம் வந்தாச்சு. பசுவும் கன்றும் வண்டியிலே வந்து இறங்கியாச்சு. கணவனும் மனைவியும் வேட்டி புடவை அலங்காரத்துடன் முகூர்த்தத்திற்குத் தயார். ஆம். கணவனும் மனைவியும் இங்கே மீண்டும் ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எதுக்கு இதெல்லாம்? உஷ். வாயை மூடு!

எல்லாப் பொருளும் தயாரா என மீண்டும் ஒரு முறை சோதிக்கிறான். ஏதாவது ஒன்று குறைந்தாலும் இந்த நேரத்தில் எங்கே போய் தேடுவது என்பதைவிட அது இல்லாமல் பூஜை செய்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்ச உணர்வு அவனை துரத்துகிறது. பதட்டமடைகிறான். மணி நான்கு ஆகியும் ஐயர் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஐயர் வந்த பாடில்லை. மேலும் படபடப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவுட் ஆப் கவரேஜ் என்றது அலை பேசி. பதட்டம் மேலும்கூட அக்கம் பக்கம் நிற்பவர்கள்கூட யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேர்த்து விறு விறுத்துப் போனது. ஒரு வழியாக ஐந்து மணிக்கு ஐயர் வந்த போது பெரு மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அக்கினி வளர்க்க செங்கற்களை அடுக்கி அடுப்பை தயார் செய்தார் ஐயர். அடுத்து வாழை இலையை விரித்து அரிசியைப் பரப்பி கழுத்துள்ள பித்தளைக் குவலையை வைத்து அதன் மேல் தேங்காயை குத்தி நிறுத்தி வெற்றிலையோடு குறுக்கும் நெடுக்குமாக நூலால் கட்டுப் போட்டார். நீங்கள் எல்லாம் நூலுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது அவர் போட்ட கட்டு. எடுபிடி வேலைகளுக்கு ஒரு அப்ரண்டிஸ் ஐயரும் உடன் வந்து ஐயரின் ‘தொழிலை’ கச்சிதமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.

ஹோம குண்டத்தில் தீ மூட்டினார் ஐயர். தவக்ளா தளதளா தவக்ளா தளதளா என ஐயர் மந்திரம் சொல்ல அதையே இவனும் சொல்ல முயற்சிக்க அடுத்த மந்திரத்திற்குத் தாவினார் ஐயர். அவன் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. இவன் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் எவருக்கும் புரியாத ஒரு பாஷையில் மந்திரத்தை ஓதி ஆறு மணக்கு ஹோமத்தை முடித்தார். காலை 4-6 மணிதான் ஹோமத்திற்கான நேரம். அதை மீறினால்….பிறகு அண்டகாசுரன்தான்.

பசு கன்று இரண்டையும் வீட்டின் உள்ளே ஓட்டி வந்தனர். சாணியும் போடவில்லை. மூத்திரமும் போக வில்லை. ஏற்கனவே வண்டிப் பயணத்தின் போதே எல்லாவற்றையும் கழிந்திருக்கும் போல. வெளியில் கட்டச் சொல்லி வாயில் எதை எதையோ திணித்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஜோடியாக அமர்ந்தனர். இருவருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தார். இதற்குள் ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது. மீண்டும் பசுவையும் கன்றையும் புட்டத்தில் குத்திக் கொண்டே உள்ளே ஓட்டி வந்தனர். சாணி-கோமியம் கான்டிராக்ட் கண்டிஷன் என்பதால் இவற்றைத் தருவது  மாட்டு ஏஜென்டின் கடமை. அய்யய்யோ! மாடு என்று சொல்லி விட்டேனே! ஏதேனும் தோஷம் வந்து விடுமோ! இதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டுமே!. ஐயருக்கான அடுத்த கலெக்சன் ரெடி.

மணி ஏழை நெருங்கும் நேரம். புட்டத்தில் குத்துன குத்தில் தர்..தர..தர..தர் என பசுவிடமிருந்து கோமியம் கொட்ட அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டனர். கோமியத்தோடு தட்தட்டென சாணம் போட ஏதோ பொண்டாட்டி பிரசவித்ததைப் போல பூரிப்படைந்தான் வீட்டுக்காரன். வீடு முழுக்க கோமியம் தெளிக்க முகூர்த்தமும் சரியாய் 7 மணிக்கு முடிந்தது. 6-7 மணிதான் முகூர்த்த நேரம். இதையும் மீறக்கூடாது என்பது பார்ப்பான் வகுத்த விதி. மீறினால்…. அண்டகாசுரன்தான். வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்களே. அது இதுதானோ!

வந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது. அட இவ்வளவு காலையிலேவா? என கேட்கக் கூடாது. வாஸ்து பசியோடு காத்துக் கிடக்கிறானல்லவா.
ஒரு வழியாய் கிரகப் பிரவேசம் பேஷா முடிந்தது.

ஏதோ வீட்டைக் கட்டினோமா. குடி போனோமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு பூஜை புனஸ்காரங்கள்? இங்கே இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று பசுமாட்டை வீட்டிற்கு உள்ளே ஓட்டி வருவது. மற்றொன்று வீடு முழுக்க கோமியம் தெளிப்பது. இவை இரண்டும் தீட்டுக் கழிப்பு நிகழ்வுகள். புது வீட்டில் எதற்காக தீட்டுக் கழிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் சண்டாளர்கள் அதாவது பறையர்கள் இருக்கலாம். வீடு வேலை நடக்கும் போது இவர்களில் யாராவது அங்கு வந்து போயிருக்கலாம். அப்படி அவர்கள் வந்து போனதினாலே வீடு அசுத்தமாகி விட்டது. அதாவது தீட்டாகி விட்டது. இதற்காகத்தான் இந்த நிகழ்வுகள். எனவே மேற்படி முறையில் புது மனை புகு விழா நடத்துவது என்பது ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வே!

இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு வகுத்து வைத்த சட்டம். மனு சொல்கிறான்.

“வீடு முதலானவற்றிற்கு சண்டாளச் சாதிகளால் அசுத்தம் நேரிட்ட போது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணையெடுத்தப்பாற் போடுதல், பசு மாட்டையொருநாள் வசிக்கும்படி செய்தல் இவ்வைந்தினாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது”   (மனு 5-124)

மேற்கண்ட முறையில் கிரகப் பிரவேசம் செய்வது தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு வன் கொடுமை. அதற்காக இதை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளரையும் செய்து வைத்த ஐயரையும் ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது?

இன்று இந்தப் பூசை புனஸ்காரங்களை சண்டாளர்களே செய்வதுதான் ஆகக் கொடுமையிலும் கொடுமை.

முற்றும்.

ஊரான்

குறிப்பு: 1. சண்டாளன் என்பவன் தீண்டத்தகாத பறையன் என்கிறான் மனு. சூத்திர ஆணுக்கும் பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன் (மனு 10-30)

2. மனு 5-124 மிக ஆழமான, நுட்பமான பொருள் கொண்டது. அதை நடைமுறையில் இன்றும் நாம் காண முடியும். இது குறித்து வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இந்தக் கட்டுரைத் தொடர் நண்பர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக தயார் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, 13 October 2015

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஓரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தை ஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன் அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதே போல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமே அதற்காகப் போராட முன்வருவான்.

ஆனால் இன்று இந்து மதக் கோட்பாடுகளை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் போர்வையில் போராடும் நபர்களுக்கு உண்மையில் இந்து மதக்கோட்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொன்னப் போனால் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராகத்தான் போராடுகிறார்கள்.

இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உணவு பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது? இறைச்சி உணவை அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவை தடை செய்ய வேண்டும் என இவர்கள் கூப்பாடு போடுவதன் உள்நோக்கம் என்ன? இந்து மத சமய நூல்களை இவர்கள் என்றைக்காவது புரட்டி இருப்பார்களா? இவர்கள் உண்மையிலேயே பசுவைப் பாதுகாக்கத்தான் போராடுகிறார்களா? இல்லை மாட்டிறைச்சியை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா?

இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

“மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான்”. (மனு: 5-35)

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

இப்படி இறைச்சிக் கொழுப்பின், குறிப்பாக மாட்டிறைச்சிக் கொழுப்பின் வழவழப்பு புராணங்களின் பக்கங்களில் வழிந்தோடுகிறது.

புராணங்களில் வழிந்தோடும் இந்தக் கொழுப்பை தனது வாலால் வழித்து மறைக்கப் பார்க்கின்றன சங்பரிவார வானரங்கள்

காலம் கடந்து விட்டதால் இனி வானரங்கள் ஒரு போதும் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதே வேளையில் ஒட்டு மொத்த மனிதர்களையும் வானரங்களாக மாற்ற முயல்வதை வேடிக்கை பார்ப்பது கோழைத்தனம்.

“பழைய இந்து சமய சடங்குகளின்படி மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல!” என்கிறார் சுவாமி விவேகானந்தர். (விவேகானந்தர் தொகுப்பு; பகுதி:3, பக்கம்: 536)

வெறும் இந்துவாக வாழ்வதை விட – நல்
இந்துவாக வாழ்வதே மேல்!.
------------
தொடர்புடைய பதிவுகள்:

ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?


Saturday, 10 October 2015

‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

2015, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொலைக்காட்சி விவாதத்தின் போது “பசு வேறு! மாடு வேறு!” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

ஒரே குழப்பம். தொலைக்காட்சி விவாதத்தை நடத்திய நெறியாளர், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றவர்கள்,  என்னைப் போன்று அந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாடுகளைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கிற அனைவருக்குமே ஒரே குழப்பம்தான்.

மனதில் ஏற்படுவதுதானே குழப்பம். உடலில் பிரச்சனை என்றால் சில சமயம் கை வைத்தியமே போதுமானது. ஆனால் மனக் குழப்பம் என்றால் மன நல மருத்துவரைத்தான் நாட வேண்டும். இல்லையேல் சென்னை கீழ்பாக்கமோ, வேலூர் பாகாயமோ கதி எனக் கிடக்கவேண்டியதுதான்.

குழப்பம் (confusion) வந்தாலே ஒரு மனிதன் நோயாளி ஆகிறான் என்கிறார் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வித்தல்காஸ் என்கிற ஹோமியோபதி அறிஞர்.

மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி சிறந்த மருத்துவம் என்கிறார்கள். அதனால் சின்தசிஸ் ரெப்ரட்டிரியை (மருந்து காண உதவும் களஞ்சியம்) புரட்டினேன். அதில் ”மாடு வேறு! பசு வேறு!” என்கிற குழப்பத்திற்கு நேரடியான ரூப்ரிக் (நோய்க்குறி) இல்லாததால் மனக்குழப்பம் (confusion of mind) என்கிற பொதுவான ரூப்ரிக்கில் மருந்து தேடினேன். இந்த ரூப்ரிக்கில் ஏபியஸ் கனாடென்சிஸ் (abies canadensis) முதல் ஜிங்கம் பாஸ்பாரிகம் (zincum phosphoricum) வரை சுமார் ஐநூறு வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனித்துவமான குறி இருந்தால் மட்டுமே சரியான மருந்தைத் தேர்வு செய்வது சாத்தியமானது என்பதை ஹோமியோபதி மருத்துவமுறை சொல்கிறது. இந்த நிலையில் தனித்துவமான குறி இல்லாத போது ஒரு பொதுக்குறியைக் கொண்டு இந்த ஐநூறு மருந்துகளில் சரியான மருந்து ஒன்றை தேர்வு செய்வது இயலாத செயல் என்பதால் மீண்டும் வித்தல்காசின் உதவியை நாடினேன்.

எவன் ஒருவன் தெளிவாக (clarity) இருக்கிறானோ அவன் நோயற்றவன். அதாவது அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். உடல் நலம் (health) குறித்து வித்தல்காஸ் கொடுத்த இந்த விளக்கத்தைப் பரிசீலித்தேன். மாடு-பசு குறித்தத் தெளிவு எனக்கு ஏற்பட்டுவிட்டால் குழப்பம் நீங்கி நான் நலமாகிவிடுவேன்; எனக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது.

அதனால் தெளிவைத் தேடினேன். நர்மதாவின் தமிழ் அகராதியைப் புரட்டினேன். பசு என்றால் பாலுக்காக வீட்டில் வளர்த்திடும் எருமை அல்லாத மாட்டினத்தின் பெண் விலங்கு; எருமை அல்லாத மாட்டினத்தினைக் குறிக்கும் பொதுப் பெயர் என பொருள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அது என்ன ‘எருமை அல்லாத’? இங்கே எருமை என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டுமே பசு என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருமை என்றால் நீளமான வளைந்த கொம்பையும், கரிய நிறத்தையும், தடிமனான தோலையும் உடைய மாடு வகை. (எம தருமனின் வாகனம் எருமை ஆகும் - ஏண்டா எருமை! படிக்காம எங்கேடா போய் சுத்திக்கிட்ட வர்ற?)

பசு மற்றும் எருமை ஆகிய இரு விளக்கங்களிலும் ‘எருமை அல்லாத மாட்டினம்’ என்றும் ‘மாடு வகை’ என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. எனவே மாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால்தான் பசுவைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

மாடு என்றால் விவசாய வேலைகளுக்கும் வண்டி இழுத்தல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படும் ஆண் விலங்கையும், பாலைத் தரும் பெண் விலங்கையும் குறிக்கும் பொதுப் பெயர்.

என்ன? ஏதாவது விளங்கியதா? மீண்டும் குழப்பமா? பால் கொடுப்பது பசு. ஏர் இழுப்பது எருது. இது என்ன புதுசா எருது? இப்பொழுது எருது என்றால் என்னவென்று தெரிந்தால்தான் பசுவைப் பற்றியும் மாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருது என்றால் காளை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது போதுமானதல்ல. எருது என்றால் வண்டியில் பூட்டிப் பிரயாணம் செய்யவும், வயலில் உழுதிடவும் பயன்படும் காயடிக்கப் பெற்ற ஆண் மாடு. காளை என்றால் இளமைப் பருவத்தில் இருக்கும் இனவிருத்திக்கான காயடிக்கப்படாத ஆண் மாடு.

அப்படியானால் எருமை வகையில் பால் கொடுக்கும் பெண் எருமையை என்னவென்பது? அது பசு வகையில் சேராதா? வண்டி இழுக்கவும் மற்றும் ஏர் உழவு செய்யவும் பயன்படும் ஆண் எருமையை என்னவென்பது? பெண் எருமையை எருமைப் பசு என்றும் ஆண் எருமையை எருமைக்கிடா என்றும் சொல்லலாமா? மொத்தத்தில் இவைகளும் மாடுகள்தானே?

ஆவின் பாலில் இருக்கும் ‘ஆ’வும் பசுதான். ‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா? 

மொத்தத்தில் பசு, எருது, காளை, எருமை எல்லாமே மாடுகள்தான். நாட்டு மாட்டில் பால் கொடுக்கும் பசு உண்டு. ஏர் உழும் எருது உண்டு. இனவிருத்திக்கு பயன்படும் காளை உண்டு. எருமை மாட்டிலும் பால் கொடுக்கும் எருமைப் பசு உண்டு. ஏர் உழும் எருமைக் கிடா உண்டு.

நாட்டு மாடோ! எருமை மாடோ! இரண்டு வகை மாடுகளுமே மனிதனுக்குச் செய்கின்ற சேவைகள் ஒன்றுதானே. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? நாட்டுப் பசுவை மட்டும் புனிதம் என்பது நன்றிகெட்டச் செயல் அல்லவா?

உழவன் என்னவோ இவைகளுக்கு ஒரே மரியாதையைத்தான் தருகிறான். ஆனால் ‘ஆ’வை ‘கோ’வாக்கிய  சில தயிர் வடைகள்தான் புனிதம் - புண்ணாக்கு என பீற்றித் திரிகின்றனர். 
பசு

காளை

எருது

எருமை பசு

எருமை கிடா

ஏர் உழும் எருமை




தொடர்புடைய பதிவு:

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!


Saturday, 9 March 2013

கணவனே குழந்தையாய்.....

தாய்ப்பசு தனது கன்றை ஈன்றவுடன் அதன் மீது படிந்துள்ள சளி போன்ற சவ்வு உள்ளிட்ட கழிவுகளையும் மற்ற பிற அழுக்குகளையும் தனது நாவாலேயே நக்கி நக்கி சுத்தப்படுத்துவதைப் பார்க்கும் போது ஒரு சிலருக்கு வேண்டுமானால் அது அருவறுப்பாகத் தோன்றலாம். தத்தித் தத்தித் தள்ளாடி கன்று வளர்ந்து தானாகவே தன்னை பராமரித்துக்கொள்ளும் வரையில் இந்த அரவணைப்பு தொடர்கிறது. வளர்ந்த கன்று மூப்படைந்து தள்ளாடும் போது தாய்ப்பசுவின் அரவணைப்பை எதிர்பார்க்க முடியாது.
தாயின் மடியிலிருந்து வெளியே வரும் நம்மை ஒரு மருத்துவச்சியோ அல்லது ஒரு செவிலியரோதான் முதலில் சுத்தப்படுத்துகிறார்கள். அதன் பிறகு நாமும் தவழ்ந்து தவழ்ந்து தள்ளாடி தள்ளாடி எழுந்து நடந்து வளர்ந்து நம்மை நாமே சுயமாய் செயல்படும் அளவுக்கு நாம் வளரும் வரை நமது தாய் நம்மை பராமரிக்க என்னமாய் பாடுபடுகிறாள்!
குழந்தையின் மலமோ - மூத்திரமோ, சளியோ – வாந்தியோ அது எதுவானாலும் தாயின் மடியில் போனாலும், தரையில் போனாலும் அக்கழிவுகளை தனது கழிவுகளாகக் கருதுவதால்தான் இவைகள் ஒரு தாய்க்கு அருவறுப்பை ஏற்படுத்துவதில்லை.  அதனால்தான் ஓராயிரம் முறை போனாலும் தயக்கம் ஏதுமின்றி தனது கைகளாலேயே அனைத்தையும் அள்ளி சுத்தம் செய்கிறாள். கைகளால் தொடுவதால் தொற்று வந்து வந்துவிடுமோ என அவள் அஞ்சுவதில்லை. அதற்காக கையுறை எதையும் அணிந்து கொள்வதுமில்லை.
குழந்தையின் ஒழுகும் மூக்குச்சளியை பார்த்துவிட்டு மற்றவர் தங்களது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளும் போது, தாய் மட்டும் தனது குழந்தையின் ஒழுகும் மூக்குச் சளியை தனது வலது கையின் – இடது கை வாட்டப்படாது என்பதால் – கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் இரண்டையும் ஒரு சேர மூக்கின் மீது அணைத்தார்போல மிருதுவாய் அழுத்தி சளியை வழித்து தூர எரிந்துவிட்டு தனது முந்தானையால் துடைத்துக் கொள்வாளே அவள் அல்லவோ தாய்!
எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால் கருவுற்று ஒரு குழந்தைக்குத் தாயாகி அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றோரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாத குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயது குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்.
அந்தக் குழந்தையின் மூக்குச் சளி ஒரு பிஞ்சுக் குழந்தையின் சளி. அதில் நாற்றம் அவ்வளவாக இருக்காது. ஆனால் இந்தக் குழந்தையின் மூக்குச் சளியோ - மூக்குச் சளி மட்டுமல்ல, தொண்டைச் சளி மார்ச்சளியும் சேர்ந்த முற்றிய நாற்றமடிக்கும் கெட்டிச் சளி. அந்தக் குழந்தையின் சளியை துணியால் துடைத்தாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் கோழை கலந்த கட்டி கட்டியாய் கொத்துக் கொத்தாய் கொட்டும் சளியை நீருள்ள கிண்ணம் ஒன்றிலோ அல்லது ‘கேரி பேக்கிலோ’ பிடிக்க வேண்டும். தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட சளியை வெளிக்கொணர இந்தக் குழந்தை படும் அவஸ்தையைப் பார்க்கும் போது அது ஸ்டிக்டா பல்மோனாரியாவை1 நினைவு படுத்தும். சளியை வெளிக் கொணர இக்குழந்தை தொண்டையை காறும் போது எழும் ஓசை பிறருக்கு படு பயங்கரமாய் இருக்கும். அதைக் கேட்க சகியாமல் தங்களது காதுகளை பொத்திக் கொள்வார்கள். அருகில் இருந்தால் சளியைப் பார்க்க சகிக்காது என்பதால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
அந்தக் குழந்தையின் மலமோ பால் வாடையுடன் கூடிய இளகிய மலம். அதிகம் நாற்றம் இருக்காது. இந்தக் குழந்தையின் மலமோ நாற்பட்டுப்போனதால் மூக்கையே துளைக்கும் துர்நாற்றம் கொண்டிருக்கும். அந்தக் குழந்தையின் மலத்தை தண்ணீர் விட்டு அலம்பினாலே துணியில் ஒட்டிக் கொண்டவைகூட சுலபமாய் நீங்கிவிடும். ஆனால் இந்தக் குழந்தையின் மலம் துணியில் அப்பிக் கொண்டால் அதை நீக்க கட்டை துடைப்பம் வேறு தேவைப்படும். மலம் வருவது முன்கூட்டியே தெரிந்தால்கூட அண்டர்பேடையாவது(under pad) வைக்கலாம் - துடைக்கும் வேலை சற்றே சுலபமாகும். என்ன செய்ய? இந்தக் குழந்தைக்குத்தான் மலம் வருவதே தெரியாதே! அந்தக் குழந்தையின் குதத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அலம்பினாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் குதத்தை பஞ்சைக் கொண்டு பதமாய் துடைக்க வேண்டும்.
அந்தக் குழந்தையின் மூத்திரம் வெது வெதுப்பாய் இருக்கும். ஆடைகள் நனைந்தாலும் சிறிது நேரத்தில் உலர்ந்துவிடும். வாடையும் மறைந்து விடும். ஆனால் இந்தக் குழந்தையின் மூத்திரத்தில் பல்வேறு உப்புகளின் மூலக்கூறுகள் கலந்திருப்பதால் ஆடைகள் உலர்ந்தாலும் நாற்றம் மட்டும் மறையாது.
அந்தக் குழந்தையின் உடுப்புகள் அனைத்தும் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போய் அலசிப்போட தாயால் முடியவில்லை என்றால் ஆயாக்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குழந்தையின் துணிகள் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போனால் அலசிப் போட எந்த ஆயாவையும் நாட முடியாதே!
அந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடு (metabolism) வளர்ச்சிக்குரியது. குழந்தை வளர வளர தாயின் பாரம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். ஆனால் இந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடோ அழிவை நோக்கியது. தடியூன்றும் வயதில் இந்தத் தாயின் பாரம் கூடிக் கொண்டே போகும்.
அந்தக் குழந்தைக்கு பற்கள் இன்னும் முளைத்திருக்காது. சாதத்தைப் பிசைந்து உருட்டி வாய் கொள்ளுமட்டும் திணித்தாலும் குழந்தை அதை விழுங்கி விடும். ஆனால் இந்தக் குழந்தையின் பற்களோ இற்றுப் போனவை. சாதத்தைப் பிசைந்தால் மட்டும் போதாது, அதைக் கஞ்சியாக்கி ஒவ்வொரு மொடக்காக வாயில் மெல்ல மெல்ல ஒரு மேசைக் கரண்டி கொண்டு ஊட்ட வேண்டும்.
அந்தக் குழந்தைக்கு உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டு புரை ஏறினால் தலையில் தட்டலாம். ஆனால் இந்தக் குழந்தைக்கு கஞ்சி உள்ளே செல்லாமல் விக்கினால் தலையில் தட்டக்கூடாது. நெஞ்சுக்கூட்டை  மென்மையாய் வருடி விட வேண்டும்.அந்தக் குழந்தைக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எல்லா வகையான உணவுகளையும் வலுக்கட்டாயமாக ஊட்டலாம் – அந்தக் குழந்தை வளர வேண்டுயதல்லவா? ஆனால் இந்தக் குழந்தைக்கு எது பிடிக்கிறதோ - எது ஒத்துக் கொள்கிறதோ அதை மட்டும்தான் உண்ணக் கொடுக்க வேண்டும் – இந்தக் குழந்தை வாழ வேண்டியதல்லவா?
அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் மார்போடு அணைத்து கதகதப்பைக் கொடுப்பாள் தாய். ஆனால் இந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் பாராசெட்டாமோலைத் தவிர வேறெதையும் இந்தத் தாயால் தரமுடியாதே! இந்த பாராசெட்டாமோலைக்கூட தொண்டைக்குள்ளே தள்ள இந்தத் தாய் படாத பாடு பட வேண்டும். வாயில் ஊற்றப்படும் தண்ணீர், மாத்திரை போடுவதற்கு முன்பே உள்வாங்கிவிடும். வாயில் போடப்பட்ட மாத்திரை உமிழ் நீரில் ஊரி அதன் கசப்புத் தன்மையால்  குபுக்கென்று வெளியே வந்து விழும். எப்பாடு பட்டாவது பாராசெட்டாமோலை திரும்ப வாய்க்குள் தள்ளிவிடுவாள் இந்தத்தாய்.
அந்தக் குழந்தைக்கும் சில சமயம் வாயிலிருந்து எச்சில் வழியும். அதை துணி கொண்டு அழுத்தித் துடைப்பாள் தாய். இந்தக் குழந்தைக்கு எச்சில் வழியாது -  கொட்டிக் கொண்டே இருக்கும். அதை அழுத்தித் துடைத்தால் உதட்டுத் தோலும் சேர்ந்தே பிய்ந்து வரும் என்பதால் உதட்டை மென்மையான துணி கொண்டு ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும் – அதுவும் அடிக்கடி.
அந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் அந்தத் தாய்க்குத் தாய் வந்து உதவி செய்வாள். ஆனால் இந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் எந்தத் தாயை இவர் நாடுவார் பாவம்! ஒரு வேளை தான் பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் அவ்வப்போது இந்தத் தாய்க்கு உதவிக்கரமாவது நீட்ட முடியும்.
அந்தக் குழந்தை இவ்வுலகில் பிரவேசித்தவுடன் ஓய்வு தேவைப்படும் போது தாயின் மடியில்தான் தலை வைத்து உறங்குகிறது. இந்தக் குழந்தைகூட தாயின் மடியில்தான் தலைவைத்து ஓய்வை நாடுகிறது - இவ்வுலகை விட்டுச் செல்லும் போது.
கடந்த பதினான்கு ஆண்டுகளாக கடுமையான நுரையீரல் (COPD) பாதிப்பால் மூச்சுவிட மிகவும் சிரமத்திற்குள்ளாகியும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்பால் பெருஞ்சுரப்பி (prostate gland) கோளாரினால் மூத்திரக் குழாய் சுருக்கப்பட்டதனால் மூத்திரம் வெளியேறுவதற்காக சிறுநீர் இறக்குங் குழாயை (SPC catheter) சுமந்து கொண்டு, தனது இறுதி காலத்தில் நடக்கவும் முடியாமல் தரையில் ஒரு குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து இறுதியில் அசைய முடியாமல் படுக்கையிலேயே கிடந்த எனது தந்தைதான் இந்தக் குழந்தை. எனது தாய்தான் இந்தத்தாய்.
இந்தக் குழந்தைதான் மார்ச் 2, 2013 சனிக்கிழமை அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது.
எனது தந்தை பொன்முடி

இப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து ‘போய்த் தொலையாதா’ என சிலர் எண்ணும் இக்காலத்தில்தான், தனது பச்சிளம் குழந்தையை பறிகொடுத்தவளைப் போல கண்கள் குளமாகி விக்கித்து நிற்கிறாள் எனது தாய்!
-------------------------------------------------------------
1. தொண்டைக் குழியில் ஒட்டிக் கொண்ட சளியை வெளிக் கொணர பெரிதும் பயன்படும் ஹோமியோபதி மருந்து
2. நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருப்பவர்கள் மலம் கமிக்கும் போது பயன்படுத்தப்படும் பஞ்சு நிரப்பப்பட்ட ஒரு வகை துணி 
தொடர்புடைய பதிவு: 

எனது தந்தையின் இறுதி மூச்சு!

Monday, 19 March 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2

எங்கு நோக்கினும் பொறாமை

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை. 

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை. 

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை. 

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது. 

ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை. 

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை. 

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை. 

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை. 

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை. 

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். 

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை. 

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை. 

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை. 

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை. 

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

விளைச்சல் - கால்நடைகள் - குழந்தைப்பேறு - படிப்பு - வேலை வாய்ப்பு - பதவி உயர்வு - சொந்த வீடு - அழகு - காதல் - திறமை - விளையாட்டு என எதுவாக இருந்தாலும் இது வரை ஏதும் இல்லாதிருந்தவன் இனி இவைகளைப் பெற்றுவிடக்கூடாது அல்லது தன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இருக்கக்கூடாது அல்லது தன்னைவிட அடுத்தவனிடம் அதிகமாகிவிடக்கூடாது என்று பார்க்கிற மன நிலையையே மனிதன் வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே அடுத்தவன் என்பது முதலில் தனது உறவுக்காரர்களையும்; அதற்கடுத்து, அக்கம் பக்கத்தில் வாழ்வோரையும்; அதற்கடுத்து, பணியிடத்தில் உள்ளோரையும்; அதற்கடுத்து, நண்பர்களையும்; அதற்கடுத்து, அடுத்தத் தெரு - அடுத்த ஊர் - அடுத்த மாநிலம் - அடுத்த நாட்டினரையும் குறிக்கும். இந்த வரிசைக்கிரமத்தில்தான் இவர்களின் பொறாமையின் உக்கிரமும் அமைகிறது.

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு, மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை. 

பாமரன் முதல் படித்தவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது. 

பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை. 

பொறாமை என்று வந்துவிட்டால்…… 

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார். 

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்! 

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைக்குக்கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. 

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது. 

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

உள்ளத்தில் பொறாமை எண்ணம் மேலோங்குவதால் சண்டைகளும் சச்சரவுகளும் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. 'நியாயமாக' இருப்பதாகக் கருதிக் கொள்ளும் சிலரிடமும், அறிந்தோ - அறியாமலோ சில சமயங்களில் அவர்களிடமும் பொறாமை குணம் வெளிப்படத்தான் செய்கிறது.ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போது தோன்றியது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

தொடரும்....

தொடர்புடைய பதிவு:
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1
http://hooraan.blogspot.in/2012/03/1.html

Friday, 24 December 2010

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!

”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.

"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை  மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்."- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.

இச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.

நகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.

ஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள்? இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே.  பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா? வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்? இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள். 

சென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் "புளூ கிராஸ்" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் "புளூ கிராஸ்"  காலியாகிவிடுமே!

இங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.

ஊரான்.