அறநெறி நூல்களும் இந்து மதமும்
உலகில் உள்ள முதன்மை மதங்கள் பலவற்றிற்கும், அவற்றைப் பின்பற்றும் தனிமனிதர்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்களை, அதாவது கடமைகளை வகுத்துத் தர குறிப்பிட்ட ஒற்றை மதநூல் அடித்தளமாக இருக்கிறது. உதாரணமாக, கிறிஸ்தவத்திற்குப் புனித பைபிளும், இஸ்லாத்திற்குத் திருக்குர்ஆனும் வழிகாட்டுகின்றன.
இந்து மதம் ஒரே நிறுவனர் அல்லது ஒற்றை மதநூலை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு அல்ல; பல நூல்கள், மரபுகள், தத்துவப் பிரிவுகளின் தொகுப்பாக உள்ளது. நான்கு வேதங்கள், 18 முதன்மையான தர்ம சாஸ்திரங்கள், 18 புராணங்கள், இரண்டு இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம்), மற்றும் அதன் துணை நூலாக பகவத் கீதை என ஒரு பிரம்மாண்டமான நூல்களின் வரிசையே இந்து மதத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது.
மனுதர்ம சாஸ்திரம்: இந்துக்களின் சட்டம்
இத்தனை நூல்களையும் சாமான்ய இந்துக்கள் படித்து, தாங்கள் செய்ய வேண்டிய அன்றாட வாழ்வியல் கடமைகளைப் (தர்மம் என்றால் கடமை என்று பொருள்) கடைப்பிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே, சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிப் பேசுவதற்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 18 தர்மசாஸ்திரங்களில் ஒன்றுதான் மனுதர்ம சாஸ்திரம். இது வர்ணாசிரம சமூக ஒழுங்கை வகுத்து, இந்துக்களின் வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்பது மிகை அல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் தோன்றிய சைவ, வைணவ நூல்களையும் சனாதன ஆதரவாளர்கள் இந்தப் பட்டியலில் தங்களுக்குச் சாதகமாகச் சேர்த்துக் கொள்கின்றனர். இருப்பினும், சனாதனத்தின் உண்மையான வேர்களை அறிய நாம் இங்கு அலசப் போவது மனுதர்ம சாஸ்திரத்தை மட்டுமே.
வரலாற்று ரீதியான அலசல்களும் கலை மூலமான எதிர்ப்பும்
மனுதர்மம் என்பது நமக்குப் புதிய ஒன்றல்ல. இதற்குக் முன்பே மகாத்மா ஜோதிராவ் புலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற சமூகச் சீர்திருத்தப் போராளிகள், தங்கள் காலத்து நடைமுறைகளோடு பொருத்தி மனுதர்மத்தை ஆழமாக விமர்சித்துள்ளனர். அவர்கள் நடத்திய தத்துவார்த்தப் போராட்டத்திற்குக் காரணம், இந்த மனுதர்மத்தின் வழியே சமூகத்தில் விதைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும், தீண்டாமையும்தான்.
சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் ஒருபுறமிருக்க, கலை வடிவங்களும் இதற்கு எதிராகக் கடுமையான விவாதங்களை முன்வைத்துள்ளன:
- எழுத்து: முல்க் ராஜ் ஆனந்தின் 'தீண்டத்தகாதவன்' போன்ற நாவல்கள்.
- நாடகம்: கே.ஏ. குணசேகரனின் 'பலி ஆடுகள்' போன்ற மேடைப் படைப்புகள்.
- திரைப்படம்: கலைஞரின் வசனத்தில் வெளிவந்த 'பராசக்தி' தொடங்கி அண்மையில் வந்த தெலுங்கின் 'ஷியாம் சிங்கா ராய்' வரை எண்ணற்ற திரைப்படங்கள் சனாதனத்தின் சடங்குகளையும், ஒடுக்குமுறைகளையும் ஆழமாக விமர்சித்துக் காட்டியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு காலத்திலும் தொடரும் சனாதனம்
நாம் இன்று தொழில்நுட்பப் புரட்சி மிக்க செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் சனாதன நடைமுறைகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்த பிறகு, மனுதர்மம் வலியுறுத்தும் சனாதன தர்மத்தை வெவ்வேறு வடிவங்களில், சில பாரம்பரிய சடங்குகள் மற்றும் மத அடையாளங்கள் அரசியல் மற்றும் கலாசார வெளிகளில் அதிகமாக முன்னிறுத்தப்படுகின்றன.
மேலும், இந்திய வம்சாவளி சமூகங்கள் வாழும் பல நாடுகளிலும் சாதி பாகுபாடு குறித்த விவாதங்கள் மற்றும் சட்டப்பூர்வ புகார்கள் எழத் தொடங்கியுள்ளன. சாதியும், தீண்டாமையும் ஏற்றுமதியாகி உலகமயமாகி வருகின்றன.
இத்தகைய சூழலில், சனாதனம் குறித்து ஆழமாகத் தெரிந்து கொள்வது இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது என்று நான் கருதுகிறேன்.
மனுதர்மத்தை வாசிக்கும் பொழுது, அது ஏதோ பழைமையான புத்தகம் போலத் தெரியவில்லை; மாறாக, அன்றாட வாழ்வில் இன்று நாம் கடைப்பிடிக்கும் பல செயல்களுக்கான காரணங்களை அது நமக்குப்புரிய வைக்கிறது. இன்றைய இந்தியச் சமூக அமைப்பை நம் கண் முன்னே நிறுத்துகிறது. என்றோ—கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு—எழுதப்பட்ட ஒரு சட்டம், இன்றும் எப்படி நடைமுறையில் நமது வாழ்வின் ஒரு அங்கமாக, நம் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டாமா?
மனுதர்மத்தின் கட்டமைப்பு
மனுதர்ம சாஸ்திரம் மூல வடிவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அது ஆங்கிலத்திலும் தமிழிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோமாண்டூர் இராமாநுஜாசாரியர் மொழிபெயர்ப்பில் 1919-ஆம் ஆண்டு வெளியான மனுதர்ம சாஸ்திரப் பதிப்பைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது தவிர, திரிலோக சீதாராம் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பும் (அலைகள் வெளியீட்டகம்), பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மனுதர்ம சாஸ்திரம் மொத்தம் 12 அத்தியாயங்களையும், 2685 ஸ்லோகங்களையும் கொண்டது. அதன் கட்டமைப்பு இதோ:
அத்தியாயம் - தலைப்பு - ஸ்லோகங்களின் எண்ணிக்கை:
1. படைப்பியல்: உலகம், உயிர்களின் தோற்றம் …119
2.கல்வியும், கடமைகளும்: ஆசிரியர், மாணவர் …249
3.இல்லறவியல்: திருமணம், இல்லறம், விருந்தோம்பல் …286
4.பொருளியலும் தனிமனித ஒழுக்கமும்: பார்ப்பனர்களுக்கான விதிகளும் மற்றும் பொது விதிகளும்…260
5.உணவு – சுத்தம் – மகளிர்: உண்ணத்தக்கவை, உண்ணத் தகாதவை, தீட்டு-தீட்டுக் கழித்தல், மகளிருக்கு உரியவை …169
6.சன்னியாசம் :...97
7.அரசு நீதி: மன்னனின் கடமை, நாட்டு நிர்வாகம், போர் …226
8.சட்டம் ஒழுங்கு - நீதி நிர்வாகம்: குற்றங்கள், வழக்குகள், தண்டனைகள் …420
9.ஆண் பெண்களின் அறம்: திருமணம், மகப்பேறு, பாகப்பிரிவினை, குற்றங்கள், தண்டனைகள் …336
10.சாதிகள்: தோற்றம், அந்தஸ்து, வாழ்விடம், தொழில்…131
11.கழுவாய் (பிராயச்சித்தம்): விதிகள், வேள்விகள், பாவங்கள், பிழைகள் … 266
12.வினைப்பயன் (கர்ம பலன்): தீ வினை, நல்ல வினை …126
மனுதர்மத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் உண்மையில் என்ன சொல்கிறது? அது சொல்லும் விதிகள் அறிவியல் பூர்வமானதா அல்லது அறிவியலுக்குப் புறம்பானதா? அவை இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாரபட்சம் நிறைந்ததா? என்கிற நோக்கில், நான் அறிந்த வரையில் அவற்றை எளிய தர்க்கத்துடன் அடுத்தடுத்த பகுதிகளில் விளக்க முயற்சிக்கிறேன்.
அத்தியாயம் - I : படைப்பியல்
(தொடரின் அடுத்த பகுதியில் விரிவான ஸ்லோக விளக்கங்களுடன் சந்திப்போம்...)
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment