ஒரு காலத்தில் உடைகள் என்பவை வெறும் கௌரவம் மட்டுமல்ல, அவை மிகவும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய சொத்துகளாகவும் இருந்தன. பள்ளிச் சிறுவர்களுக்கு டவுசர்கள், விவசாயிகளுக்கு பட்டாபட்டி - வேட்டிகள் இவைதான் அன்றைய நடைமுறை. ஆனால், அதே பள்ளிச் சிறுவர்கள் கூட வயலில் தாய் தந்தையருக்கு உதவி செய்யச் செல்லும்போது, டவுசரை கழற்றி வைத்துவிட்டு கோவணத்தோடுதான் உதவுவார்கள்.
உழைக்கும் விவசாயிகளுக்குக் கோவணம் என்பது அன்றாடத் தேவை. காசு கொடுத்து வாங்கும் வேட்டிகள் இரும்புப் பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படும்; அது வெளியில் எங்காவது செல்லும்போது மட்டுமே பயன்படும். பட்டாபட்டி வயல் வேலை இல்லாத நேரங்களில் அணியக் கூடியது. பயன்படுத்தாத போது இது கூட கொடியில் பத்திரமாக தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உழைப்பின் சின்னமான கோவணம் மட்டும் எரவானத்தில் சொருகப்பட்டு ஏளனமாகப் பார்க்கப்படும்.
காலப்போக்கில் வேட்டி இத்துப் போகும்போது, அது கரித்துணியாகவோ அல்லது கோவணமாகவோ உருமாறும். ஆனால், அந்த உருமாற்றத்திற்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. கரித்துணி சில நாட்களும், கோவணம் சில வாரங்களும் மட்டுமே தாக்குப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அது எதற்கும் பயன்படாது என்ற நிலை வரும்போது, அதன் நிறம் சிவப்பாக இருந்தாலும் சரி, நீலமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நிறமாயினும் அது குப்பைத் தொட்டிக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.
உழைப்பின் வியர்வையைத் தாங்கிய துணிகள் அவை எந்த நிறமாயினும் கூட அவற்றிற்கு ஒரு மரியாதை இருந்த காலம் போய், இன்று சந்தையைப் பொருத்தே நிறங்களும் தங்கள் மதிப்பைப் பெறுகின்றன.
எனக்குப் பிடித்ததும் சிவப்பும் நீலமும்தான். அதற்காக கோவணம் ஆன பிறகு உச்சிமுகர முடியுமா?
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
.jpeg)
No comments:
Post a Comment