Showing posts with label பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம். Show all posts

Wednesday, 18 September 2019

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!


பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்த சமூகம் இன்று அவரை ஒரு மக்கள் தலைவராக பார்ப்பது மட்டுமல்ல அவரது தொண்டு இனியும் தேவை என 69 சதவிகித மக்கள் விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. எதனால் பெரியாரை பெரும்பாலான மக்கள் இன்று விரும்புகின்றனர்? மக்களிடையே பக்தி முத்தி விட்டது என்பதற்காகவா? மூடநம்பிக்கை அதிகரித்து விட்டது. அதிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவா? கடவுள் பக்தி கொண்ட மக்களும் ஏன் பெரியாரை நேசிக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மக்களை இழிவு படுத்தும் பார்ப்பனியம் பெரியாருக்குப் பிடிக்காது. பார்ப்பனியத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியதால் பெரியாரைப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களின் சுயமரியாதைக்குக் குரல் கொடுத்ததால் மக்களுக்குப் பெரியாரைப் பிடிக்கிறது. காரணம் மிக எளிமையானதுதானே! பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனியமும், ஆர்.எஸ்..எஸின் கொள்கைகளும், பாரதிய ஜனதாக் கட்சியில் நடைமுறையும் வேறு வேறு அல்ல என்பதை மக்களுக்குப் புரிய வைத்தவர் மோடி. இன்று பெரியாரை மக்கள் நேசிக்க முக்கியக் காரணம் மோடி. இதற்காக மோடிக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு, அதுவும் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு திட்டம், வேலை தேடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கோபத்தைக் கொண்டு வந்துள்ளது. பெரியார் இருந்திருந்தால் இதை அனுமதித்ருப்பாரா என்று மக்களை எண்ண வைத்துள்ளது.

படிப்பு வாசனையே இல்லாத கிராமத்து விவசாயி மகன் பள்ளிக்கூடத்தில் நுழைந்து ‘அ’ ‘ஆ’ வில் தட்டுத் தடுமாறி,  A, B, C, D  யில் விழுந்து எழுந்து, உயர் நிலை - மேல்நிலையை உற்சாகத்தோடு தாண்டி, அதன் பின் பட்டணம் சென்று பட்டயத்தையும் பட்டத்தையும் பெறும் போது நெஞ்சு நிமிர்த்திய காலம் இனி ஐந்திலும் எட்டிலும் வடிகட்டவிருப்பதால் நிகழ் காலம் கடந்த காலமாகிவிடுமோ என அஞ்சுகிறான். எட்டப்பர்களை எட்டி உதைக்க இன்று பெரியார் இல்லையே என ஏங்குகிறான் இளைஞன்.

விற்பனை வரியே கூடாது என அன்று குரல் கொடுத்த பெரியார் இன்று இருந்திருந்தால் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பால் வாழ்விழந்த தொழிலாளி மோடியின் விலா எலும்பை தன் கைத்தடியால் பதம் பார்த்திருப்பாரே என எண்ணுகிறான்.

டெல்லி எருமைப்பாலை குடித்தவனெல்லாம் இங்கே பானி பூரியில் வயிற்றைக் கழுவும் போது, தாய்ப்பால் குடித்து தலைநிமிர்ந்த தமிழனை நாசமாக்க எத்தணிக்கும் நாக்பூர் நாதாரிகளை நார் நாராய் கிழித்துத் தொங்கவிட அந்தக் கிழவனைத் தேடுகின்றான் தமிழன்.

ஹைட்ரோ கார்பன், மீதேன், ஷெல் கேஸ், எட்டு வழிச்சாலை, கூடங்குளம், ஸ்டெர்லைட் என அடுக்கடுக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மோடி கும்பலைப் பொடிப் பொடியாக்க ஒரு பெரியார் தேவை எனத் தேடுகின்றான் எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஓர் எளிய தமிழக மகன்.

கல்வி வேலை வாய்ப்பில் பெண்களை இன்றளவும் இழிவுபடுத்தி அவர்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாமியார் கூட்டத்தை இடித்துரைக்க அந்தக் கிழக்காளையைத் தேடுகிறாள் இக்கால இளம் பெண்.

வழிபாட்டு உரிமையில் பக்தனையே இழிவுபடுத்திய பார்ப்பனியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால்தான் வழிபாட்டிடங்களில் இன்றும் பார்ப்பனர்களால் தான் இழிவுபடுத்தப்படும் போது அவன் தன் சுயமரியாதை காக்க பெரியாரைத் தேடுகிறான். அதனால்தான் பக்தனுக்கும் பெரியார் தலைவனாய் உயர்ந்து நிற்கிறார்.

சுடு காட்டுக்கு வழியில்லை, ஆணவப் படுகொலை என தொடரும் தீண்டாமைக்கு எதிராகக் களமாட, சாதி ஒழிய மீண்டும் பெரியார் வேண்டும் என விழையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு பெரியார்.

பொதுவுடைமை முறையைத் தவிர வேறு எந்த முறையாலும் மக்களின் துயரங்களைப் போக்க முடியாது என அறுதியிட்டு உறுதியாச் சொன்னதனால் உழைப்பாளர்களுக்கும் பெரியார் தலைவராய் உயர்ந்து நிற்கிறார்.  

ஆம். இன்று சனாதனிகளைத் தவிர, நம் அனைவருக்கும் பெரியார் தேவை. சாணியில் கேக் வெட்டி பெரியாரை இழிவுபடுத்துவதாகக் கருதி அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது பார்ப்பனியத்துக்குr; சோரம் போன ஒரு கூட்டம். ஆனால் தமிழகமோ அணிதிரண்டு பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை குதூகலத்தோடு கொண்டாடுகிறது.

இராணிப்பேட்டை ‘பெல்’ வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசர் வட்டம், தனது 23 ஆவது சந்திப்பில் கரத்தரங்க நிகழ்வாக பெரியாரின் 141 ஆவது பிறந்த நாள் விழாவை 17.09.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

தோழர் வே.இந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் ஜெயக்கொடி வரவேற்புரை நிகழ்த்தினார். பெண் விடுதலையும் பெரியாரும் என்ற தலைப்பில் உரையாற்றிய தோழர் கிருபா, பெண் விடுதலைக்கு பெரியார் முன்வைத்த கருத்துக்களையும் அவர் முன்னெடுத்த போராட்டங்களையும் தொகுத்துரைத்தார். பெரியார் சொன்னபடி ஒரு பெண்ணாக தன்னால் அவர் சொன்னதை கடைபிடிக்க முடியாத சமூகச் சூழலே இன்றும் நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டி இதை மாற்றியமைக்க பெரியார் பாதையில் அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதை வலியுத்தினார்.

சாதி ஒழிப்பில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் பேசிய தோழர் கு.விஜயகுமார், பெரியார் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரியாரின் போராட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். பொதுவுடைமையை நேசித்த பெரியார் என்ற தலைப்பில் பேசிய தோழர் பொன்.சேகர் தனது உரையில் பொதுவுடைமையின் தேவை குறித்து பெரியார் பேசிய எழுத்துகள் மற்றும் உரைகளிலிருந்து பெரியார் பொதுவுடையை பெரிதும் நேசித்தவர் என்பதை நிறுவினார். இறுதியில் தோழர் ப.நீலகண்டன் நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. பெல் ஊழியர்கள் குடும்பத்தோடு திரளாகக் கந்து கொண்டு சிறப்பித்தனர். 


















முன்னதாக 17.09.2019 அன்று காலை இராணிப்பேட்டை 'பெல்' நிறுவன வாயிலில் பெரியார் 141 ஆவது பிறந்த நாள் முக்கியத்துவம் குறித்த பிரசும் 'பெல்' ஊழியர்களிடம் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டது.

'பெல்' இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் (OBC) சார்பில் 'பெல்' வாயிலில் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.







 
தொடர்புடைய பதிவுகள்

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்







 

Saturday, 9 April 2011

தேர்தல் கலேபரத்தில் புதைந்து போன தீண்டாமைக் கொடுமை!



"ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை.

திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.


கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்."
தினமணி : 08.04.2011

மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டிய தீண்டாமைக் கொடுமை இது.

மார்க்சிஸ்டுகளின் ஆட்சியில் இது நடந்துள்ளது. திருமா உள்ளிட்ட எல்லோரும் தேர்தல் வேட்டைக்குச் சென்றுவிட்டதால் பார்ப்பனப் பத்திரிக்கை மூலம்தான் இந்தப் பார்ப்பனியக் கொடுமையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் கலேபரத்தில் இத்தீண்டாமைக் கொடுமை புதைந்தே போனது. 

அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.க்கே இந்த நிலைமை. ஏற்கனவே ஜெகஜீவன்ராமுக்கு இதேதான் நடந்தது. 

இங்கே அறையைக் கழுவி விட்டவர்கள் பார்ப்பனர்களாக இருக்க முடியாது. மிகச் சாதாரண ஊழியர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இதை அவர்களாகவே செய்தார்களா? யார் அவ்வாறு செய்யச் சொன்னது? இதில் பார்ப்பனர்களின் பங்கு என்ன? தலித்துகளை எப்பொழுதும் கேவலமாக நடத்தும் பார்ப்பனரல்லாத பிற சாதியினரின் பங்கு என்ன? 

அறையைக் கழுவுவது வழக்கமான ஒன்றுதான் எனக் காரணம் கூறி சமாதானப் படுத்தினாலும் அதற்கு சாணம் தெளித்து கழுவ வேண்டிய அவசியம் என்ன? தலித் அல்லாத பிற சாதியினர் ஓய்வு பெறும் போதும் இவ்வாறு செய்யப்படுகிறதா?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்வதற்கான அடிப்படை பார்ப்பனியம் என்கிற வர்ணாசிரம கோட்பாட்டில் இருக்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமா இத்தகைய வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடைபிடிக்கிறார்கள்? பார்ப்பனியத்தை தங்களது அன்றாட வாழ்வின் நெறிமுறையாக கடைபிடிக்கும் அனைவருமே இதைச் செய்யக் கூடியவர்கள்தான்.

இன்றும்கூட கிராமங்களில் ஒரு தலித் தன்னை தொட்டுவிட்டதால் தீட்டுப் பட்டுவிட்டது என்பதற்காக தலையில் தண்ணீர் தெளித்தோ அல்லது முழுக்குப்போட்டோ தீட்டுக் கழிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

வர்ணாசிரம கோட்பாட்டை உருவாக்கிய பார்ப்பனர்கள் மட்டுமே இதில் குற்றவாளிகள் என முத்திரை குத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. இது தி.க.வீரமணி அணுகுமுறை. இதில் குற்றத்தைத் தூண்டிய பார்ப்பனர்கள் மற்றும் குற்றத்தைச்செய்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் என பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் அனைவருமே குற்றவாளிகள்தான்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகச்சாமி தமிழில் பாடியதற்காக மேடை தீட்டுபட்டு விட்டதாகக் கூறி மேடையை கழுவி விட்டார்கள் தில்லைவாழ்ப் பார்ப்பனர்கள்.

ம.க.இ.க வினர் நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தின் போது, சூத்திரர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டதால் தீட்டுப்பட்டு விட்டது எனக்கூறி, 108 குடங்களில் தண்ணீா ஊற்றிக் கழுவி, மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தார்கள் திருவரங்கப் பார்ப்பனர்கள். 

பார்ப்பனியக் கோட்பாட்டை உருவாக்கி அதைப் பாதுகாக்கும் வேலையை பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள். இது நம்மை இழிவு படுத்தும் செயல் என பிற சாதிக்காரனும் நினைப்பதில்லை. இது தீண்டாமையின் ஒரு வடிவம் என அவன் கருதுவதுமில்லை. இதுதான் பார்ப்பனியத்தின் -  பார்ப்பனர்களின் பலம்.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்கள் மூலம்தான் கடைபிடிக்கப்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தை கடைபிடித்து அதைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஒரு குழந்தை பிறந்த உடனே அதன் பிறந்த நாளையும், நேரத்தையும் வைத்து ஜாதகம் எழுதத் தொடங்குவதிலிருந்து, அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து மடிந்து சுடுகாடு சென்ற பிறகும் நடக்கும் காரியம் வரை பார்ப்பனியத்தைக் கடைபிடிக்காதவர்களே கிடையாது. பார்ப்பனியம் கோலோச்சுவதற்கு நீர்பாய்ச்சி, உரமிட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்களே.எனவே பார்ப்பனியத்தை அன்றாட வாழ்க்கை நடை முறையிலிருந்து தூக்கி எறியாமல் இது போன்ற அவலங்களை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.