Showing posts with label லெனின். Show all posts
Showing posts with label லெனின். Show all posts

Wednesday, 5 November 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Saturday, 15 July 2023

பெருந்தலைவர் காமராசர் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?

சங்க காலம், சனாதன காலம் தொடங்கி அதன் பிறகு மன்னர் ஆட்சி, அந்நியர் ஆட்சி எனத் தொடர்ந்து, இன்றைய மக்களாட்சிக் காலகட்டம் வரை பல்வேறு புலவர்களையும், மன்னர்களையும், தலைவர்களையும் நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அவ்வாறு நாம் நினைவு கூறும் போது, அவர்களுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளிட்ட இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை மக்களிடையே உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நினைவு கூர்வதில் ஏதேனும் பொருள் இருக்க முடியும்.

மாறாக, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் என்கிற அளவுக்கு மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களுடைய கருத்துக்கள் எதுவும் மக்களிடையே போய்ச் சேராது; மாறாக அது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகவே கடந்து போகும்.

*****
அனைத்து மதத்தினர், அனைத்துச் சாதியினர், அனைத்துக் கட்சியினராலும் பெருந்தலைவர் என்று போற்றப்படும் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு.கு.காமராசர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்ததோடு, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக காமராசர் அவர்கள் இருந்ததனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் மரியாதையோடு நினைவு கூறுகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு அனைவருக்குமான தலைவர்கள் எல்லாம் தங்களுடைய சாதிக்கான தலைவர்களாக சுருக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் காமராசரையும் நாடாராக சுருக்கி விட்டார்கள். இதை சாதிய அரசியலின் உச்சம் என்றுகூட சொல்லலாம். 

*****
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இசைச்செல்வர் சீனி சம்பத் அவர்களின் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு. முனிரத்தினம் அவர்கள் வந்த பிறகு, அவரும் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்ற, அதன் பிறகு பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மட்டும் காமராசரின் சாதனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய அரசியல் சூழலில், காமராசரைக் கொண்டு சனாதன சக்திகளை சம்மட்டியால் அடிக்கும் வகையில் காமராசரின் நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்யும் போதுதான் அது காமராசருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.





மூணு கதர் வேட்டிச் சட்டைகள் மற்றும் 150 ரூபாய் சொச்சப் பணம்; இதுதான் காமராசர் இறந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்து. காசு பணம் என்று கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் காமராசர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளன்தான்; மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பெரும் தொழிலதிபராக இருப்பவர்களை வாழும் காமராசர் என்று வாய்கூசாமல் மேடையில் புகழும்போது அது காமராசரையே இழிவுபடுத்துவதாக அமைந்துவிடுகிறது. 

*****
மகாரத்தனா ஆலைகளில் ஒன்றான BHEL பாய்லர் ஆலை காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. தவிர, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் (NLC), சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் ஆலை என அரசுத் துறை ஆலைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எண்ணற்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.

1917 லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட சோஷலிச புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறைகளினால் அபார வளர்ச்சி கண்ட ருசிய நாட்டின் கொள்கைகளைத்தான் இந்தியாவிலே நேருவும் கடைபிடித்தார். அதன் தாக்கத்தினால்தான் இந்தியாவில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டன.

12 மகாரத்னா, 12 நவரத்னா, 12 மினிரத்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. உலகமயம் தாராளமயம் தனியார் மையம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் 1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற நடைமுறை அமுலுக்கு வந்தது. 

ஆலைகளை நடத்துவது, அதாவது தொழில் செய்வது ஆட்சியாளர்களின் வேலை அல்ல; ஆட்சியை நடத்துவது அதாவது நிர்வாகம் செய்வது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சனாதனக் கும்பல் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு, வாஜ்பாய் காலத்திலும் அதைத் தொடர்ந்து மோடி காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன அல்லது மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்த எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டது பாஜக அரசு. இப்பொழுது எஞ்சி இருப்பது கோவணம் மட்டுமே, அதாவது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. மீண்டும் ஒரு முறை சங்பரிவாரக் கும்பல் ஆட்சிக்கு வருமேயானால், எஞ்சியிருக்கிற கோவணமும் உருவப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம். 




காமராசர் கடைப்பிடித்து வந்த பசுவதைத்  தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு, சாதியக் கட்டமைப்பைப் பலகீனப் படுத்தும் சோசலிச சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவு உள்ளிட்டவைகளால் காமராசர் மீது ஆத்திரம் கொண்ட சனாதனக் கும்பல் 1967 ஆம் ஆண்டு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்து அவரைக் கொலை செய்த முயன்றது என்பதை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து சங்பரிவாரக் கும்பலை அப்புறப்படுத்தவும், கருத்தியல் தளத்தில் இந்தக் கும்பலுக்கு எதிராகக் களமாடவும் நாம் உறுதி ஏற்பது ஒன்றுதான் காமராசருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஊரான்

Thursday, 17 April 2014

தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!



“இத்தகைய உறவுகளை (அதாவது முற்றிலும் சுயேச்சையான கட்டு திட்டம் ஏதுமற்ற) நாம் இயல்பானவையாக கருத முடியுமா? பதவிக்காலம் முடியும் முன்பாகவே கூட மக்கள் பிரதிநிதிகள், மக்களால் திருப்பி அழைக்கப்படலாம். அவர்கள் எத்து வேலை செய்தால், மக்களை சார்ந்திருக்க மறுத்தால், பாதை விலகிப் போனால், மக்கள் அவர்களை திருப்பி அழைக்கலாம்; அவர்களுக்கு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பலாம்.” 

மேலும் அவர் தொடர்கிறார். 

“நமது அரசியல் சட்டம் அருமையானது. மக்கள் பிரதிநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டிய விசயம் என்ன தெரியுமா? மக்களுக்கு அவர் ஒரு வேலையாள்தான்….மக்கள் அவருக்கு என்ன கட்டளையிட்டுள்ளனரோ, அதன்படி நடக்க கடமைப் பட்டவர்தான். அவ்வாறு இல்லாமல், அவர் பாதை விலகிப் போனால், புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரும் உரிமை மக்களுக்கு உண்டு; பாதை விலகிப் போன பிரதிநிதிகளைப் பொருத்தவரையில், அவரை மூட்டைக் கட்டி வீட்டுக்கு அனுப்பும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. (வெடிச் சிரிப்பும் கை தட்டலும் ஒலிக்கின்றன).
 
அருமையிலும் அருமையானதொரு சட்டமிது. வாக்காளர்களாகிய உங்களுக்கு, வேட்பாளர் என்ற முறையிலான அறிவுரையை நான் கூறுகிறேன். வாக்காளர்களுக்கான இந்த உரிமையை நீங்கள் எப்போதும் மறக்காதீர்கள். பதவிக்காலம் முடியும் முன்னரே, உங்கள் பிரதிநிதியைத் திரும்ப அழைக்கும் உரிமை உள்ளது என்பதை மறக்காதீர்கள். உங்களுடைய பிரதிநிதிகளைக் கண்காணியுங்கள். அவர்கள் மீது உங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துங்கள். பாதை விலகலாம் என்கிற நினைப்பு அவர்களுக்கு வருமானால் அவர்களைக் கழித்துக் கட்டுங்கள். இதற்காகப் புதியத் தேர்தலை நடத்தக் கோருங்கள். நீங்கள் அப்படிக் கோருவீர்களானால், புதிய தேர்தல்களை நடத்துவது அரசின் கடமையாகும். இந்தச் சட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்;. தேவை ஏற்பட்டால் இந்தச் சட்டத்தை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் எனது அறிவுரை”.

இந்த வேட்பாளர் மக்களுக்கு வாக்குறுதி எதையும் தரவில்லை; மாறாக அறிவுரையை மட்டுமே வழங்குகிறார். 

அடுத்து மக்களின் கோரிக்கைகள் பற்றி அவர் பேசுகிறார்.

“உங்களுடைய பிரதிநிதிகளிடமிருந்து பொதுவாக நீங்கள் கோரக்கூடியவை என்ன? எல்லாக் கோரிக்கைகளிலும் அடிப்படையானவையாக, நீங்கள் மிகவும் அவசியமாக கோரக்கூடிய தெரிந்தெடுத்த கோரிக்கைகள் எவை? இவற்றைப் பற்றியதுதான் வேட்பாளராகிய நான் உங்களுக்குக் கூறும் இன்னுமொரு அறிவுரை -  கடைசி அறிவுரை.

மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர்களாக, திராணி உள்ளவர்களாக இருக்க வேண்டுமென மக்கள் தவறாமல் கோர வேண்டும். தமது கடமைகளை ஆற்றுகையில், அரசியல் அற்பர்களின் மட்டத்துக்கு அவர்கள் சரிந்து விடக்கூடாது என்று நீங்கள் அவர்களிடம் கோர வேண்டும். பதவிகளில் இருக்கையில், நமது தலைவரின் இரகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக இருக்க வேண்டுமென நீங்கள் கோர வேண்டும். அரசியல்வாதிகள் என்ற முறையில், நமது தலைவரைப் போலவே, தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கை தட்டல்). நமது தலைவரைப் போலவே,  போராட்டங்களில் அச்சமின்றியும் எதிரிகளிடம் ஈவிரக்கமின்றியும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும்.

விசயங்கள் / நிலைமைகள் சிக்கலாகும்போது, ஏதோ ஆபத்துகள் / நெருக்கடிகள் தோன்றும் போது, நமது தலைவரைப் போலவே பீதி இல்லாமல், பீதியின் சாயல்கூட கிஞ்சித்தும் இல்லாமலிருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கரவொலி). சிக்கலானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், முற்றும் தெளிந்த முறையில் சாதக பாதகங்கள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கவும் வேண்டும். நமது தலைவரைப் போலவே, சான்றாண்மையுடனும் அறிவுக் கூர்மையுடனும் இருக்க வேண்டுமென நீங்கள் கோர வேண்டும். (கை தட்டல). நமது தலைவரைப் போல அப்பழுக்கற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கரவொலி). நமது தலைவர் மக்களை எப்படி நேசித்தாரோ, அதேபோல மக்களை நேசிக்க வேண்டுமென நீங்கள் உங்கள் பிரதிநிதிகளிடம் கட்டாயமாகக் கோரவேண்டும். (கை தட்டல்).”

எல்லா வேட்பாளர்களுமே, நமது தலைவரின் இரகத்தைச் சோந்த பொது வாழ்வினர் என்று நம்மால் கூற முடியுமா? இதை நான் அவ்வளவு உறுதியாகச் சொல்ல மாட்டேன். உலகில் பலவகைப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இது போலவே பலவகைப்பட்ட அரசியல் பிரமுகர்களும் உலகில் உள்ளனர். இவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று உங்களால் அறுதியிட்டுக் கூற முடியாதவர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர். அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா, வீரர்களா அல்லது கோழைகளா என்று உங்களால் சொல்ல முடியாது. அவர்கள் முழு மனதுடன் மக்களுக்கு நிற்பவர்களா என்று உங்களால் சொல்ல முடியாது. இத்தகைய மக்களும் இருக்கிறார்கள், தலைவர்களும் இருக்கிறார்கள். நம்மிடையேயும் இத்தகையவர்கள் காணப்படுகிறார்கள். ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பு ஆடும், ஒவ்வொரு சமுதாயத்திலும் புல்லுறுவிகளும் இருப்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். (வெடிச் சிரிப்பும் கைதட்டலும் அரங்கில் கேட்கின்றன). இப்படி என்னற்ற இரகத்தைச் சேர்ந்த நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதைவிடவும் அரசியல் அற்பர்களாக இருக்கிறார்கள்.”

இப்படி இனங்காண முடியாத, நிச்சயமாகக் கூறமுடியாத இரகத்தினரைப்பற்றி ”தெளிவற்ற இரகத்தினர்; இந்த இரகமோ அந்த இரகமோ, என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத புதிரானவர்கள்". இத்தகைய மனிதர்களையும், பொது வாழ்வினரையும் பற்றிப் பொருத்தமாகக் கூறும் ஜனரஞ்சகமான கூற்றுகளும் உள்ளன. “இரண்டுங் கெட்டான்கள்; இவர்கள் பாம்பும் அல்ல மீனும் அல்ல” என இத்தகையவர்களைப் பற்றி நமது வேட்பாளர் எச்சரிக்கை செய்கிறார்.

மேலும் அவர் தொடர்கிறார்.

“நமது வேட்பாளர்கள் மத்தியிலும், அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் அரசியல் அற்பர்களின் வகையைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று என்னால் நிச்சயமாகவும் உறுதியாகவும் கூறமுடியாது.

எனவே, உங்களுடைய பிரதிநிதிகள் மீது நீங்கள் இடையறாது செல்வாக்கு செலுத்த வேண்டுமென நான் விழைகிறேன்.

தோ்தல்கள் முடிந்தவுடன் வாக்காளர்களின் கடமைகள் முடிந்த விடுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்காலம் முழுவதும் வாக்காளர்களின் கடமைகள் தொடர்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சரியானப் பாதையிலிருந்து மாறிப் போவார்களானால், அவர்களுடைய பதவிக்காலம் முடியுமுன்னரே வாக்காளர்கள் அவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். எனவே, மக்கள் பிரதிநிதிகளை தமது இடையறாத கண்காணிப்பில் வைத்திருப்பது வாக்காளர்களின் கடமையும் உரிமையும் ஆகும்; எந்தச் சூழ்நிலையிலும் பிரதிநிதிகள், அரசியல் அற்பர்களின் மட்டத்துக்கு வீழ்ந்துவிடாமல் வாக்காளர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்; நமது தலைவரைப் போலவே அவர்கள் கட்டாயம் இருந்தே தீரவேண்டுமென்பதை பிரதிநிதிகள் மனதில் பதிய வைக்க வேண்டும். (கை தட்டல்).
 
வாக்காளர்களாகிய உங்களுக்கு வேட்பாளராகிய நான் கூறும் இரண்டாவது அறிவுரை இதுவே!”

(உரத்த மற்றும் தொடர்ச்சியான கரவொலியும் வாழ்த்தொலிகளும் ஒலிக்கின்றன. மேடையிலிருந்து நமது வேட்பாளர் இறங்குகிறார். அனைவரும் எழுந்து அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அரங்கம் முழுக்க வாழ்த்தொலிகள் கேட்கின்றன. “தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!”) 

இந்த வேட்பாளர் வேறு யாருமல்ல. மகத்தான சோவியத் ரஷியாவை கட்டியமைத்த ஸ்டாலின்தான் அந்த வேட்பாளர். சோவியத் அவைக்கு நடைபெற்ற தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட்ட போது டிசம்பர் 11, 1937 ல் மாஸ்கோ மாநகரின் போல்ஷாய் கலையரங்கில் வாக்காளர்களிடையே ஆற்றிய உரையின் சுருக்கத்தைத்தான் நான் இதுவரை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றிய இந்த உரையின் சாரத்தை தற்போது இந்தியாவில் நடைபெறும் 16 வது மக்களவைத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். குடிதண்ணீரைக்கூட வழங்க வக்கற்ற இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகம் கடந்த 66 ஆண்டுகளாக ஏன் இப்படி இருக்கிறது என்பது புரியும். எனவே, நாம் தேட வேண்டியது ஸ்டாலின் அவர்கள் தனது இரண்டாவது அறிவுரையில் நமது தலைவரைப் போல” என சுட்டிக்காட்டும் தலைவர் லெனினைப் போன்ற அரசியல்வாதிகளையும், மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கும் சோவியத் முறையிலான ஆட்சி வடிவத்தையும்தான் என்பது சொல்லாமலேயே விளங்கும். 

முற்றும்.

 
லெனின்              ஸ்டாலின்

தொடர்புடைய பதிவுகள்: 

தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

 விலை ரூ.10
புதிய ஜனநாயகம் வெளியீடு
110, இரண்டாம் தளம்
63, என்.எஸ்.கே.சாலை
கோடம்பாக்கம்
சென்னை - 600 024