தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மிகவும் அசாதாரணமானது. “சனாதனத்தை ஒழிப்போம்” என்ற குரல்கள் ஒருபுறம், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் மறுபுறம் என இரண்டும் தீவிரமாக மோதிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், “சனாதனத்தைப் பற்றி இப்போது பேச வேண்டுமா?” என்ற கேள்வி எழலாம்.
சனாதனம் என்பது வெறும் பழங்கால மத ஏடு அல்ல; அது வருண-சாதி கட்டமைப்பு, வாழ்விடம், தொழில், கல்வி, மற்றும் நீதி நிர்வாகம் என இன்றுவரை நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக ஒழுங்குமுறை. எனவே, அதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
அரசியல் மாற்றமும் சனாதன எதிர்ப்பு முகாமும்
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான அணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருப்பது விவாதங்களை உருவாக்கியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை விமர்சித்த அதே திருமாவளவன், இன்று அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுவது சனாதன எதிர்ப்பு முகாமில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன எதிர்ப்பு என்பது வெறும் தேர்தல் கருவியா அல்லது கொள்கை உரைகல்லா? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.
அறம் மற்றும் தர்மம்: அடிப்படை வேறுபாடு
இந்த விவாதத்தைத் தொடங்கும் முன், ‘அறம்’ மற்றும் ‘தர்மம்’ என்ற இரண்டு சொற்களுக்கு இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் உணர வேண்டும். அறம் என்பது தமிழ் மரபுச் சொல்; தர்மம் என்பது சமஸ்கிருத மரபுச் சொல்.
1.அறநெறி (Ethics): ஒரு மனிதனின் அக மற்றும் புற ஒழுக்கத்தை வலியுறுத்துவது அறம். "மனத்துக்கண் மாசிலன் ஆதல்" (குறள் 34) என்பதே தமிழ் அறத்தின் அடிப்படை. அறம் என்பது காலச் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது. ஏற்கனவே கடைபிடித்த ஒன்று தவறாக இருக்கும் பட்சத்தில், அதை விடுத்து புதிய நல்வழியை வகுத்துக் கொள்வதே அறம். இது தனிமனித மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறது; மாற்றத்திற்கு இடமளிக்கிறது.
2.சனாதன தர்மம் (Sanatana Dharma): ஆனால் சனாதனம் முன்வைக்கும் 'தர்மம்' என்பது மாற்றத்திற்கு அப்பாற்பட்டது. பிறந்த குலத்திற்கு ஏற்ப, வருணத்திற்கு ஏற்ப, சாதிக்கு ஏற்ப மனுதர்மம் வகுத்த விதிகளை மாற்றமின்றி கடைபிடிப்பதே தர்மம் எனப்படுகிறது. இது தவறு என்று பிறரால் சுட்டிக்காட்டப்பட்டாலும், இதை மாற்றிக்கொள்ள வழியே கிடையாது. அதனால்தான் சனாதனம் தன்னை 'என்றும் நிலைத்திருப்பது' (Eternal - அழிவில்லாதது) என்று சொல்லிக்கொள்கிறது. இது மதம் என்கிற நிறுவனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
வள்ளுவத்தின் வழிகாட்டுதலும் சாஸ்திரத்தின் தடையும்
அறநெறி வாழ்க்கை வாழ்வுக்கு ஆக்கம் தரும் என்றும், அதைக் கைவிடுவது கேடு என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார் (குறள் 32). அறவாழ்க்கையின் பயன் இன்பமாகும் (குறள் 39).
ஆனால் சனாதனமோ, "சாஸ்திரம் விதித்ததைச் செய்; எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ அதைத் தட்டிக்கேட்காமல் தவிர்" என்கிறது. நாம் செய்யும் ஒரு செயல் பிறருக்கு என்ன கேடு விளைவிக்கும் என்று கூட அலசிப் பார்க்காமல், சனாதனம் சொல்வதை எப்படிச் சரி என்று ஏற்க முடியும்?
அறம் என்பது பிறருக்குத் தீங்கு ஏற்படாமல் வாழச் சொல்கிறது; தீங்கு ஏற்படுமாயின் அதை மாற்றிக் கொள்ளச் சொல்கிறது. ஆனால், பிறருக்குத் தீங்கு விளைந்தாலும், ‘சாஸ்திரம் சொன்னது’ என்பதற்காக அதை மாற்றாமல் பின்பற்றச் சொல்கிறது சனாதன தர்மம்.
ஏன் மனுதர்ம சாஸ்திரத்தை ஆராய வேண்டும்?
மனித சமத்துவத்திற்கும், பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பிற்கும் இடையிலான இந்த மோதலைப் புரிந்துகொள்ள, மனுஸ்மிருதியை நேரடியாக வாசிப்பதோடு, அது நடைமுறையில் எவ்வாறு இன்றும் நிலவுகிறது என்று அறிய வேண்டியது அவசியம்.
எனவே இந்தத் தொடரில் மனுதர்மத்தின்:
- ஒவ்வொரு ஸ்லோகமும், அதன் நேரடிப் பொருளும்.
- அவை உருவாக்கிய சமூகத் தாக்கம் மற்றும் வரலாற்றுச் சூழல்.
- இன்றைய நவீன மனித உரிமை மற்றும் சமத்துவக் கோணத்தில் அதன் முரண்பாடுகள்.
ஆகியவற்றை விரிவாகப் பார்க்கப் போகிறோம். எது மனிதநேயத்துக்கு ஏற்றது? எது சமத்துவத்திற்கு எதிரானது? என்பதைத் திறந்த மனதோடு விவாதிப்போம்.
சமநீதியையும் மனித சமத்துவத்தையும் தேடும் அனைவரும் இந்த உரையாடலுக்கு வரவேற்கப்படுகிறார்கள்.
தொடரும்…
ஊரான்

1 comment:
வணக்கம் அருமையான பகிர்வு தங்களின் சங்கொலி திக்கட்டும் கேட்கட்டும்
Post a Comment