Showing posts with label ST. Show all posts
Showing posts with label ST. Show all posts

Monday, 16 December 2024

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. - 13

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. 

இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டதைப் போல, 

தமிழ் நாட்டில், அருந்ததியருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான பள்ளர், பறையர் சாதி மக்களின் கோபம், 

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து (MBC) வன்னியர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதி மக்களின் கோபம், 

மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட தனி EWS ஒதுக்கீட்டுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் கோபம், 

மேலும்,

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்குத் தனி ஒடுக்கீடு கோரி, 

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட்டுகளுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

என நாடெங்கிலும் ஒவ்வொரு சாதியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


தற்போது இந்தியாவில் உள்ள எல்லாச் சாதியினரும், வகுப்புவாரி அடிப்படையிலும், EWS  அடிப்படையிலும் இட ஒதுக்கீடு 
பெற்று வரும் சூழலில், எதற்காகத் தற்போது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுகின்றனர்?

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அளவிலும் சாதிகளுக்கிடையில் சமனற்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. 

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (MBC) உள்ள  கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதிகளோடு ஒப்பிடும் பொழுது நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளின் கல்வி பொருளாதார சமூகநிலையும் சமமானதல்ல. இவர்கள் அனைவரையும் ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால், இந்தத் தொகுப்பிலேயே உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ள நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 

அதேபோல, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள கொங்கு வெள்ளாளர், நாயுடு, ரெட்டி, முதலியார், வன்னியர், கள்ளர், மறவர் போன்றச் சாதிகளின் கல்வி பொருளாதார சமூக நிலையும் சமமானதல்ல. கொங்கு வெள்ளாளர், முதலியார் ஆகியச் சாதிகளோடு ஒப்பிடும் போது வன்னியர்களுக்கான வாய்ப்பும்; நாயுடு, ரெட்டி போன்றச் சாதிகளோடு ஒப்பிடும் பொழுது கள்ளர், மறவர் சாதிகளுக்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பட்டியல் சாதி வகுப்பில் உள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று சாதிகளும் கல்வி பொருளாதார சமூக நிலையில் சமமாக இல்லை. விகிதாச்சார அடிப்படையில் தங்களுக்கு உரிய பங்கைப் பட்டியல் வகுப்பிலிருந்து 
அருந்ததியர்களால் பெற முடிவில்லை. ஆகையால்தான் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததியர்கூட தனி ஒரு சாதி அல்ல. அதுவும் சில சாதிகளை உள்ளடக்கிய ஒரு வகுப்புதான் (Category). உள் ஒதுக்கீடு வந்த பிறகு, அருந்ததியர் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு குறித்து இப்போதைக்குப் பிரச்சனை எதுவும் எழவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவர்களுக்கிடையில்கூட, இட ஒதுக்கீடு தொடர்பாகப் பிரச்சனைகள் வரக்கூடும். 

அப்படியானால், வகுப்புவாரி விதாச்சாரப் பிரதிநிதித்துவ கோரிக்கை (Class based reservation) என்பது, சாதிவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கையாக
(Caste based reservation) உருவெடுத்து வருகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள் குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்
















Thursday, 5 December 2024

பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு: அம்பேத்கர் துரோகம் இழைத்தாரா? - 5

சென்னை மாகாணத்தில்,   ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் 
பிற்படுத்தப்பட்டோருக்கு
கல்வியிலும் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை, ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டில்அடுத்த சில மாதங்களிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். உச்சநீதிமன்றமும் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பை உறுதி செய்தது

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாக திருத்தப்பட்டு, விதி 15(4) உட்பிரிவின் கீழ் சென்னை மாகாணத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இருந்து வந்த
இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

அம்பேத்கர்

ஆதிதிராவிட மக்களுக்கு 1943 இல் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4) இன் கீழ் உறுதி செய்யப்பட்டதால், விடுதலைக்குப் பிறகும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்தது. 1935 இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அரசமைப்புச் சட்டம் 16(4) இல் கூறப்பட்டுள்ள "எந்த ஒரு பிற்பட்ட வகுப்பும்" (any backward class) என்பதை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் 1951 இல் தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலும் (SC) பழங்குடியினருக்கான (ST) பட்டியலும் தயாரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

அப்படியானால் தனது சாதி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொண்டு, இதர பிற்பத்தப்பட்ட மக்களுக்கு (OBC) அம்பேத்கர் துரோகம் இழைத்து விட்டாரா? அப்படித்தானே OBC பிரிவு மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையா? 

"எந்த ஒரு பிற்பட்ட வகுப்பு" என்பதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினர் அடங்குவர். இவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகுதான் அது SC / ST என்று அறியப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர, சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் யாருமே இல்லையா? இருக்கிறார்கள் அவர்கள்தான் இன்று இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் என்று அழைக்கப்படும் OBC (Other Backward Class) மக்கள். 

இந்தச் சட்டப்பிரிவிலேயேஇதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான இட ஒதுக்கீட்டையும் அம்பேத்கர் உறுதி செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் இவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய 1953 இல் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான "முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின்" அறிக்கையை  பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், 25 ஆண்டுகள் கிடப்பில் போட்டது காங்கிரஸ் அரசு. கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் இது குறித்து கவலைப்பட்டதாகவும் 
தெரியவில்லை

1976-77 இல் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவிய போது, கல்வியில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்ட போது, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கக் கோரி 1978 இல் பிரதமர் இந்திரா காந்திக்கு ஆனைமுத்து அவர்கள் கடிதம் எழுதினார்

பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்கனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கும் பொழுது, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று தானும் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், இப்புரிதல் பிழையானது என்றும் ஆனைமுத்து அவர்கள் பதிவு செய்கிறார்

அரசமைப்புச் சட்டம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு 
அம்பேத்கர் வழங்கிய 
இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்த ஆட்சியாளர்களும் முன்வரவில்லை; அதைச் சரியாகப் புரிந்து கொண்டு
நடைமுறைப் படுத்தக்கோரி அரசியல்  கட்சிகளும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கங்களும் கோரவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டத்திலேயே வழங்கிய அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று செயல்பட்டு வந்த / செயல்பட்டு வரும் அரசியல்வாதிகளை (அன்று காங்கிரசைச் சார்ந்த பலரும் இன்று பாஜகவை சேர்ந்த பலரும் இதில் அடங்குவர்) தங்களது தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது ஒரு நகை முரண். 

மத்திய மாநில அரசுகளில் பிற்பட்டோருக்கு 60% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள், 1978 இல் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்த விவரம் ஆனைமுத்து அவர்களின் பார்வைக்கு வந்தபிறகு, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, டெல்லி சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 
அரசமைப்புச் சட்டப்படி உள்ள இடஒதுக்கீடு உரிமை குறித்து விவாதிக்கிறார்

காகா கலேல்கர் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று 1977 தேர்தலில் ஜனதா கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, 1978 மார்ச்சில் பீகாரில் பெருங்கிளர்ச்சி தொடங்கப்பட்டிருந்தது

1978 இல் பீகாரின் 32 மாவட்டங்களில் பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் பங்கேற்று, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஆனைமுத்து. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பீகாரில் 1978 அக்டோபரில் நடைபெற்ற பாட்னா சிறை நிறப்புப் போராட்டத்தில் பத்தாயிரம் பேர் சிறைப்பட்டனர்

கலேல்கர் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஆனைமுத்து அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியபோது, அந்தப் பரிந்துரை 20 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று நிராகரித்து விட்டார் பிரதமர் மொரார்ஜி தேசாய்

1978 இறுதியில் பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது பீகார் அரசு. அதை எதிர்த்து உயர் சாதியினர் செய்த கிளர்ச்சி நிலவிய சூழலில், கலேல்கர் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, கோரிக்கையை திசை திருப்பும் நோக்கில், இரண்டாவது பிற்பட்டோர் குழுவை, 1978 டிசம்பரில் மொராஜி தேசாய் அமைத்தார். அதுவே மண்டல் குழுவானது

அடுத்து என்ன நடந்தது?

தொடரும் 

ஊரான்

Sunday, 15 September 2024

அருந்ததியர் உள் ஒதுக்கீடு: ஆதரவும், எதிர்ப்பும்!

அருந்ததியர்களுக்கான 3% உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி,  பட்டியல் சாதியினர் இரு கூறாகப் பிளவுபட்டு, உள் ஒதுக்கீடு ஆதரவு-எதிர்ப்புக் கூட்டங்ளையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றனர். 

உள் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கக் கூடாது மற்றும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பைக் கொண்டு வரக்கூடாது என்று மட்டும்தான் தாங்கள் பேசுவதாகவும், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் திருமா தெளிவுபடுத்தினாலும், 

அருந்ததியர்கள் தனியாக 3% இட ஒதுக்கீட்டைப் பெறுவதோடு,  பட்டியல் சாதியினருக்கான 15% இட ஒதுக்கீட்டிலும் போட்டி போட முடியும், ஆனால், அருந்ததியினருக்கான 3% இட ஒதுக்கீட்டில் பள்ளர், பறையர் பிரிவினர் போட்டியிட முடியுமா என பறையர், பள்ளர் சாதிகளைச் சார்ந்தவர்கள் வாதம் செய்கின்றனர். 


இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும்,
பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரே அதிகார மையங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். 
இட ஒதுக்கீட்டுக்கான முழுமையான பலனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மக்கள் பெறுவதில் பெரும் பின்னடைவு இன்றும் நிலவுகிறது.

சாதியப் படிநிலையில் ஆகக் கீழே உள்ள பிரிவினர், கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கி இருப்பதனால், அவர்களை கைதூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு. 

இதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய, கிருத்துவர்கள் என மக்கள் வகைப்படுத்தப்பட்டாலும், அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை  மொத்தம் உள்ள இடங்களில் மேற்கண்ட பிரிவினருக்கு
69% இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 31% உயர் சாதியினர் உள்ளிட்ட எல்லா சாதியினருக்குமான பொதுப்பட்டியலாக வரையறுக்கப்பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டில் பயன்பெறுகின்ற அனைவருமே இந்தப் பொதுப் பட்டியலிலும் போட்டியிட்டு இடங்களைப் பெற முடியும். 

இதனால் இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், அருந்ததியர்கள்,
பட்டியல் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர்
என பலரும் இடங்களைப் பெறுவதால் உண்மையிலேயே அவர்கள் பெறுகின்ற பிரதிநிதித்துவம் 
இட ஒதுக்கீட்டைவிட அதிகமாகவே இருக்கிறது. 

இதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் பட்டியல் சாதிகளிலேயே ஆகக் கடை கோடியாக இருக்கின்ற அருந்ததியர்களும் பட்டியல் சாதியினருக்கான பொதுப் பிரிவிலும் (15%) போட்டியிடலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ள ஒரு பிரிவினரை கை தூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இது போன்றதொரு உரிமை பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து, தனியாகப் பிரிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கிடையாது. அதாவது  பிற்படுத்தப்பட்டோருக்கான 30 % இட ஒதுக்கீட்டை பொதுப் பட்டியலாகக் கருதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதில் போட்டியிட முடியாது.

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் பொது பட்டியலுக்குள் வரக்கூடாது என்று பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் சொல்வதற்கும், பட்டியல் சாதி என்கிற பொதுப் பிரிவில் அருந்ததியர்கள் வரக்கூடாது என்று பள்ளர், பறையர் உள்ளிட்ட பிரிவினர் சொல்வதற்கும் பாரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

மேற்கண்ட வாதங்களை முன்வைத்துதான், பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்  சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்று வகைப்படுத்தி தங்களுக்கென தனியாக 10% இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பழங்குடி பிரிவைச் சார்ந்த இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கும் எவரும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது என்பது ஒரு வரலாற்று பிழை.

ஒரு காலை இழந்தவனுக்கு கொடுக்கப்படும் சலுகையும், இரண்டு கால்களையும் இழந்தவனுக்குக் கொடுக்கப்படும் சலுகையும் ஒன்றாக இருக்க முடியாது. இரண்டு கால்களை இழந்தவனுக்கு சற்று கூடுதலாகத்தான் சலுகை வழங்க வேண்டும்‌. அப்பொழுதுதான் அவன் மேலெழுந்து வர முடியும். 

இதே அளவுகோலின்படிதான், சாதியப்படிநிலையில் ஆகக் கடைக்கோடியில் உள்ள பிரிவினருக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் அவர்கள் பொதுப்பட்டியலிலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் மிகவும் கீழ் நிலையில் உள்ளவர்களை கைதூக்கி விடுவதற்கு ஏற்ற சமூக நீதிக் கோட்பாடாக இருக்க முடியும்.

சாதியப்படிநிலையில்
பள்ளர் மற்றும் பறையர் சாதியினருக்குக் கீழாக உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினர்தான் அருந்ததியர் என்பதை மறுக்க முடியுமா? 

சாதியப்படிநிலையில் ஆகக் கீழ் நிலையில், வஞ்சிக்கப்படுகின்ற மக்களுக்கு கூடுதல் சலுகை கொடுத்து அவர்களை கை தூக்கி விடுவதும், குறிப்பிட்ட அளவு அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றம் காணும் வரை மேற்கண்ட இட ஒதுக்கீட்டைத் தொடர்வதும்தான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். 

மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கும் போதுதான், சாதிய இடஒதுக்கீடு தொடர்பான சாதியப் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானதாக இருக்கிறது. இட ஒதுக்கீடு கோருபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஒன்றிய அரசை நிர்பந்தம் செய்கின்ற போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டி உள்ளது.

தற்போதைய சமூக கட்டமைப்பில் இட ஒதுக்கீட்டின் மூலமாக எல்லா மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னேறிவிட முடியாது என்கிற கள எதார்த்தத்தையும் நாம் மறந்து விடக்கூடாது. 

சில பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு இட ஒதுக்கீடு பிரிவுக்குள்ளும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே இட ஒதுக்கீடு சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் என்று அந்தந்தப் பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், பொருளாதார வரம்பைக் கொண்டு வர வேண்டும் என்றுகூட போர்க்கொடி உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் மறுதலித்து விட முடியாது. இத்தகைய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டம் என்கிற வடிவத்தை நோக்கிகூட நகருவதற்கான வாய்ப்புகளும் உருவாகக்கூடும்.

குறிப்பு: கிடைக்கின்ற தரவுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களில் இருந்து எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். மாற்றுக் கருத்து உடையவர்கள் தாராளமாக விவாதிக்கலாம். ஒத்தக் கருத்தை நோக்கி பயணிப்பதற்கு அது உதவும்.

ஊரான்