Thursday, August 21, 2025

மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!

"இந்தப் படத்தில் மோடிக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பூனாவை சேர்ந்த யோகேஷ் சித்தார்த்தாவும் அவரது மனைவி சுமீதா சித்தார்த்தாவும். அவர்களைப் பாராட்டுவதற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் மோடி. மோடியே தனது வீட்டிற்கு அழைக்கிற அளவுக்கு அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?


யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக  யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம். 

இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். 

பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
 
சல்யூட் டு யூ சார்!"

இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும். 

ஆனால் யு.கே.ஜி அளவுக்கு யோசித்துப் பாருங்கள்,  

"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"

இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!

ஊரான்

Sunday, August 17, 2025

கோனேரி கோனும் கேனக் கிறுக்கன்களும்!

'கோன்' ஐ கோனாராக்கி, 'கோனேரி கோன் கோட்டை'யை மீட்கக் கிளம்பி இருக்கிறான் ஒரு கேனன். இந்த கேனனுக்குப் பின்னால் விசில் அடித்துக் கொண்டே பலநூறு கேனன்கள்.

யார் சொன்னது தமிழ்நாடு முன்னேறி விட்டது என்று? இல்லை இல்லை இது வடநாடுதான் என்பதை தம்பிகள் மீண்டும் மீண்டும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செஞ்சிக்கோட்டை 

செஞ்சிக்கோட்டையை கட்டியதோடு அதை ஆண்ட எத்தனையோ கோன்கள் இருக்கும்போது கோனேரி கோனை மட்டுமே இவன் தூக்கிக் கொண்டு திரிவது ஏன்? 

உலகப் பாரம்பரிய சின்னமாக அண்மைய யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை அது பாட்டுக்குக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், போகிறார்கள். 

இந்தக் கோட்டையை இவன் யாரிடமிருந்து மீட்கப் போகிறான்? வெள்ளைக்காரன் போய்விட்டான் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலை நாள் கொடியேறினார்கள். ஒருவேளை முகலாயர்களோ, ராஜபுத்திரர்களோ,
நாயக்கர்களோ, மராட்டியர்களோ, நவாபுகளோ மாறுவேடம் பூண்டு மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக கோட்டையைக் கைப்பற்றி விட்டார்களா என்ன? 

எவனாக இருந்தாலும் இருபது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு எட்டு மணிக்குக் கோட்டைக்குள் நுழைந்தால் ஐந்து மணிக்கு வெளியே வந்து விட வேண்டும்.‌ தம்பிகள் வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் பாறைகளுக்கு பின்னால் கள்ளுண்டு கவிழ்ந்து கிடக்க வாய்ப்பு உண்டே ஒழிய ஒருவனும் கோட்டைக்குள் இருக்க முடியாது. இந்தத் தம்பிகளை கோட்டையில் இருந்து மீட்கக் குரல் கொடுத்தாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும். 

கோனேரி கோனை மீட்பதற்கான உனது குரலும், அயோத்தியையும் மதுராவையும் வாரணாசியையும் திருப்பரங்குன்றத்தையும் மீட்பதற்காகக் குரல் எழுப்பும் உனது சகலபாடிகளின் குரலும் சங்கமிக்கும் இடம் நாக்பூர்தான் என்பதை தமிழர்கள் உணராத வரை தமிழ்நாடு வடநாடாய் மாறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. 

ஊரான்