Sunday, April 28, 2024

மரம் வளர்த்தால் வெயில் குறையுமா?

இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் என்னவோ சற்று அதிகம்தான். தற்காப்பு நடவடிக்கைகளாக ஆலோசனைகள் குவிக்கின்றன. வெளியிலே போகக்கூடாது என்கிறார்கள். போகாமல் எப்படி பிழைக்க முடியும்?

அதைக் குடி, இதைக் குடி என்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் எங்கே போவார்கள். வெளியில் தண்ணீர் கூட இப்பொழுது இலவசமாகக் கிடைப்பதில்லையே?

மரங்கள் வெட்டப்பட்டதால்தான் வெயில் அதிகம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்படுகிறது.


அடுப்பெரிக்க எரிவாயு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, காட்டோரக் குடில்களில்கூட விறகுகளைத் தொடுவதில்லை; வேலிக்கருவையைக்கூட சீந்துவதில்லை.

மாட்டு வண்டிகளும், ஏர் கலப்பைகளும், கூரை வீடுகளும் அற்றுப்போனதால் அதற்காகவும் மரங்கள் சாய்க்கப்படுவதில்லை.

கதவுகள் ஜன்னல்களில்கூட உலோகங்களும்,  நெகிழிகளும் இடம் பிடித்துக் கொண்டதால் மரங்களின் பயன்பாடுகளும் குறைந்துவிட்டன.

சொல்லப் போனால் கடந்த 20-30 ஆண்டுகளில் ஆற்றோரங்களிலும், வயல் மேடுகளிலும், ஏரி ஓரங்களிலும், காடுகளிலும்,  மலைகளிலும் மரங்கள் என்னவோ அதிகமாகத்தான் வளர்ந்துள்ளன. 

அப்படி இருக்க, மரங்கள் பற்றாக்குறைதான் வெப்பத்திற்குக் காரணம் என்பது ஒரு யூகமாகத்தான் சொல்லப்படுகிறதோ என ஐயம் எழுகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்த மாவட்டங்களில்கூட வெயில் வெளுத்து வாங்குகிறதே? எனவே, அறிவியல் ஆய்வுக் உட்படுத்தி, கடும் வெப்பத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.

வரும் மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் முடிந்தவரை நம்மை நாம் தற்காத்துக் கொள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு செவிபடுப்போம். அதே வேளையில் இப்புவியைக் காப்பதற்கான வழிகளையும் தேடுவோம். 

 ஊரான்