Tuesday, July 24, 2012

நாடற்றவர்களா பெண்கள்?

தேர்தல் என்று வந்துவிட்டால் தங்களது சாதிக்காரன் – மதத்துக்காரன்  என்று பார்த்துதான் பெரும்பாலும் மக்கள் வாக்களிக்கிறார்கள். அவனும் வெற்றி பெறுகிறான். ஆனால் தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பதவியைப் பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். இது ஒவ்வொரு தேர்தலிலும் தொடரும் ஒரு அவலம்.

நாட்டின் கீழ்மட்ட பதவிகளிலிருந்து உயர் மட்ட பதவிகளுக்கு வரும் தன் சாதிக்கார நபர்கள் தம் சாதிமக்களுக்கு – மதத்து மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற கருத்தைதான் மக்கள் கொண்டுள்ளனர்.

ஏழ்மை-வறுமை உள்ளிட்ட பொருளாதாரக் கொடுமைகள் ஏழைகள் எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகியோர் சந்திக்கும் வேறுபல கொடுமைகள் இவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்யேகமான பிரச்சனைகள்.

ஒரு தாழ்த்தப்பட்டவன்  ஜனாதிபதி ஆகிவிட்டால் தாழ்தப்பட்டவர்களின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று நம்பினார்கள். நாராயணன்கள் வந்தார்கள். பதவியை அலங்கரித்தார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மட்டும் அப்படியே நீடிக்கிறது. நீடிக்கிறது என்று சொல்வதைவிட மிகக்கேவலமாகி வருகிறது.

ஒரு இஸ்லாமியன் ஜனாதிபதியாக வந்துவிட்டால் இஸ்லாமியர்களெல்லாம் இனி இந்தியாவில் பாதுகாப்பாக வாழ வழி பிறக்கும் என கனவு கண்டார்கள். கலாமும் வந்தார். கனவு காணச் சொன்னார். ஆனால் இஸ்லாமியனின் கனவு மட்டும் கானல் நீராகிப்போனது.

ஒரு பெண் ஜனாதிபதியாகிவிட்டால் பெண்ணினத்திற்கே பெருமை; பெண்கள் இனி தலை நிமிர்ந்து வாழலாம் என நம்பச் சொன்னார்கள். பலர் நம்பவும் செய்தார்கள். பிரதிபா பாட்டிலும் ஜனாதிபதியானார். ஐந்து ஆண்டுகள் நாட்டையும் உலகையும் சுற்றி வலம் வந்தார். இவர் சிறகடித்துப்பறந்து முடித்தபோதுதான் கௌகாத்தியில் 17 வயது பள்ளி மாணவியின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட காலிகள் அப்பெண்ணை இழுத்து வந்து உடைகளைக் களைந்து பாலியல் தொந்தரவு செய்து தாக்குகிறார்கள்.

கடந்த ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல், கணவன் மற்றும் உறவினர்களால் சித்திரவதை, கடத்தி விற்கப்பட்டது உள்ளிட்ட பெண்கள் மீதான குற்றச்செயல்கள்: 2 61 000 எனவும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள்: 42 968 எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

1953 முதல் 2011 வரை கற்பழிப்புகள் 873% அதிகரித்துள்ளன. 22 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடந்துவருகிறது. வரதட்சணைக் கொடுமைக்காக 58 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் எரிக்கப்படுகிறாள்.

கடந்த ஏழு நாட்களில்

ஜீலை 17: தனது வீட்டுச்சுவரை அசிங்கப்படுத்தியதைத் தட்டிக்கேட்ட ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஒடிசாவின் ஐகத்சிங்பூரில் அடித்துக் கொல்லப்படுகிறாள்.

ஜீலை 17: கர்நாடகாவின் பெல்காமில் 33 வயது உஜ்வாலா ஜினப்பாவின் முகத்தில் சிலர் அமிலத்தைக்கொண்டு தாக்குகிறார்கள். அவர் முகம் சிதைந்து போகிறது.

ஜீலை 18: மும்பையில் ரவுடி ஒருவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போது அப்பெண் தப்பிக்கிறாள். ஆனால் அந்த ரவுடி மேலும் இருவரைச் சேர்த்துக்கொண்டு சிவாஜிநகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவளது சகோதரனையும் தாயையும் தாக்குகிறான். மீண்டும் அப்பெண் தப்பிக்கிறாள்.

ஜீலை 20: கோவாவின் பனாஜி நகர் போன்டா காவல்நிலைய பெண்காலரைத் தாக்கியதற்காக சர்வேஷ் நாய்க் என்கிற கான்ஸ்டபிள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜீலை 20: மாவெலி விரைவு ரயில் பேன்ட்ரியில் பணியாற்றும் ஒருவர் பெண் பயணியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததால் கேரளாவின் கொச்சியில் கைது செய்யப்படுகிறார்.


ஜீலை 22: உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திலேயே காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு இளம் பெண்ணை கதறக் கதறக் கொத்திக் குதறியுள்ளனர்.

மேலும்....

முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் ஒரு இஸ்லாமியனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக ரூமிநாத் என்கிற காங்கிரஸ் MLA அசாமின் கரீம்கஞ்ச்சில் ஒரு ஓட்டல் அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பலால் ஜீன் 29 அன்று தாக்கப்படுகிறார்.

2008 ல் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஒரு பப்பிலிருந்து வெளியே வந்த பெண்ணொருத்தியை 70 க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குகிறது. இன்று வரை அத்தாக்குதலுக்கு நீதி கிடைக்கவில்லை.

2009 ஜீன் 24 அன்று பப் ஒன்றில் சில பெண்கள் ஸ்ரீராம்சேனா காலிகளால் தாக்கப்படுகிறார்கள்.

இப்படி பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. பட்டியலிட பக்கங்கள்தான் போதாது.


உலகின் இரண்டாவது மிகப்பெரிய 'ஜனநாயக' நாடான இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கின்றன.

கா(லி)விகளின் கவலை

பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? அவர்கள் உடைதான் என திருவாய் மலர்ந்துள்ளார் மத்தியப்பிரதேச  மத்திய பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா (பா.ஜ.க). குஜராத்தில் பர்தாபோட்ட பெண்களையே கதர வைத்தவர்கள்தான் இப்படிச் பேசுகிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணம் என கூக்குரலிடும் இக்காவிகள் வரதட்சணை உள்ளிட்ட வேறுபல காரணங்களுக்காக பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைப்பற்றி ஏன் பேசுவதில்லை?

பெண்கள் கண்ணியமான உடை அணிவதாலோ, கடுமையான சட்டங்கள் இயற்றுவதாலோ, சட்டத்தை மிகக் கறாராக அமுல்படுத்தும் கண்ணியமான அதிகாரிகள் மூலமாகவோ பெண்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுமா? சதவீதக் கணக்கில் அல்லது புள்ளிவிவரக் கணக்கில் ஒன்றிரண்டு குறையலாமேயொழிய பொதுவாக தாக்குதலின் அளவு குறையப் போவதில்லை.

நாடற்றவர்களா பெண்கள்?

ஒரு பெண் ஜனாதிபதியாக ஐந்து ஆண்டுகள் காலம் தள்ளிய இந்தியாவில்தான் பெண்கள் மீதான இத்தகைய குற்றங்கள் அரங்கேரி வருகின்றன. ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ பிரதீபா என்ன செய்தார்? என்ன செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். குறைந்த பட்சம் பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கல்கள் நடக்கின்றன என்பதாவது தெரியுமா? எப்படித் தெரியும். ஒரு ஐந்தாண்டு காலம் அரசின் செலவில் பாதுகாப்போடு இந்தியாவையும் உலகைத்தையும் தான் விரும்பியவாறு சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பைத் தவிர இந்த ஜனாதிபதி பதவி வேறென்ன செய்திருக்கிறது?

ஒரு பெண் ஜனாதிபதியாக இருந்தென்ன? நம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடொன்றில்லையே!

நன்றி: புள்ளிவிவர ஆதாரங்கள் 23.12.2012 டெக்கான் கிரானிகிள், சென்னை

Sunday, July 22, 2012

உபதேசங்களால் பொறாமை அகலுமா? அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ---இறுதிப் பகுதி.


பைபிளில்  பொறாமை:

“ஈசாக்கு பயிர்த்தொழில் மூலம் நூறு மடங்கு அறுவடை செய்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்த்து பெரும் செல்வந்தராகியதைப்பார்த்து பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். ஈசாக்கின் தந்தை அபிரகாம் காலத்தில் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்துவிட்டனர்.” (தொடக்க நூல்: 26: 12-15)

“சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?” (நீதி மொழிகள்: 27: 4)

‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.” (மாற்கு: 7:21-22)

“வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!” (கலாத்தியர்: 5:26)

”உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்” (யாக்கோபு: 3:14)

”ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;” (பேதுரு: 2 1-3)

திருவிவிலியம் நெடுகிலும் இப்படி பொறாமை பற்றி ஏராளமான வசனங்கள் வருகின்றன. கி.மு 2000 லிருந்து கி.பி 95 வரையிலான காலகட்டத்தில் கிருத்தவம் பரவிய மத்திய தரைக்கடலையொட்டிய நாடுகளில் மக்களிடையே நிலவிய பொறாமை குறித்து நாம் அறிய முடிகிறது. இயேசுநாதரும் அதன்பிறகு வந்த பல்வேறு நற்செய்தியாளர்களும் இப்பொறாமை குணத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு போதித்தனர்; இன்றளவும் போதகர்கள் போதித்து வருகின்றனர்.

குர்ஆனில் பொறாமை

மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும் எனவும், பொறாமை கொள்வது நல்வழிப் பெறுவதையும் தடுத்துவிடும் எனவும், பொறாமை கொள்பவனின் தீங்கைவிட்டு அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுவது குறித்தும் பல்வேறு வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய சமூகத்தில் மக்களிடையே பொறாமை குணம் நிலவியதை குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.

பொறாமை குறித்து விவேகானந்தர்

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்! என்று விவேகானந்தர் குறிப்பிடுவது தற்காலத்திலும் பொறாமை குணம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."

உபதேசங்களால் பொறாமை அகலுமா?

புராண இதிகாச காலந்தொட்டு இன்று வரை பொறாமை குணம் மக்களிடையே வேரூன்றி உள்ளது. இந்து – பௌத்தம் - கிருத்தவம் – இஸ்லாம் உள்ளிட்ட மத போதனைகளாலும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களாலும் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து விரட்ட முடியவில்லை.

பொறாமை குணம் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் உள்ளத்திலிருந்து மட்டும் தானாக உருவாகும் குணம் அல்ல; அது சமூகத்தில் நிலவும் அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உருவாகும் குணமாகும். ஏற்றத்தாழ்வான சமூகம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும். வெறும் உபதேசங்களால் பொறாமை குணத்தை ஒழிக்க முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது; இன்றைய நடைமுறையும் உணர்த்தி வருகிறது. எனவே ஏற்றத்தாழ்வான இச்சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடாகத்தான் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து ஒழிக்க முடியும்.

முற்றும்.