Friday, April 29, 2011

கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!


வேலூர்
கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!
First Published : 29 Apr 2011 10:39:31 AM IST


”வேலூர், ஏப். 28: நவீன ரக ஆயுதங்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக்களுக்கு பயந்து கொசு வலைக்குள் பதுங்குகின்றனர்.
வேலூர் பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸார் ஆகியோரைக் கொண்ட 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எப் வீரர்களிடம் ராக்கெட் லாஞ்சர்கள், ஒரே நேரத்தில் 100 ரவுண்டுகள், 200 ரவுண்டுகள் சுடக் கூடிய நவீனரக ஆயுதங்கள் உள்ளன.
கொசு தொல்லை அதிகரிப்பு:
இந்நிலையில், தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் இங்கு கொசுமருந்து அடிக்கபட்டுள்ளது. இருந்தபோதும், கொசுத் தொல்லை தொடர்கிறது.
தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர் காவலர்கள். இதையடுத்து, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.”
-------------------------------------------------------------------------------
தினமணியில் வந்த இந்தச் செய்தியைப் படித்து பலரும் சிரித்திருப்பார்கள். "ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில்" என்று படித்தால் யார்தான் சிரிக்க மாட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் கொசு மருந்து அடித்தார்களாம். ஆனாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையாம். அதனால் தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர். 
30 நாள் தொல்லைக்கே இப்படி அஞ்சி நடுங்கினால் 365 நாட்களுக்கும் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கும் நாங்கள் எங்கே சென்று பதுங்குவது? இந்தக் கேள்வியை இதுவரை தினமணிகூட கேட்டதில்லையே.

கொசுத் தொல்லையைப் பற்றிய விரிவான ஒரு அலசல் இதோ:
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

Wednesday, April 27, 2011

மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?

சமீபத்தில் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப்பைக் கொண்டு எனது இதயத்துடிப்பை பார்த்தார்கள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியைக் கொண்டு இரத்த அழுத்தத்தையும் அளந்தார்கள். வெப்பமானியைக் (thermometer) கொண்டு உடல் வெப்பத்தை அளந்தார்கள். இந்தக் கருவிகளே அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளை பரிசோதிப்பதில் முதற்கட்டமாக மிக முக்கியப் பங்காற்றுகின்றன. 

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அது மிகவும் ஆபத்தானது. அதே போல உடலின் வெப்பம் குறைந்து ஜில்லிட்டுப்போனாலோ அல்லது அனல் போல உடல் கொதித்தாலோ அதுவும் மிகவும் ஆபத்தானது. எனவே இரத்த அழுத்தத்தையும் உடல் வெப்பத்தையும் கண்டிப்பாக துள்ளியமாக மதிப்பிட வேண்டும். 

சென்னையில் உள்ள மற்றோரு பிரபல மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு இரத்த அழுத்தம் 140/100 mm Hg இருப்பதாகச் சொன்னார். ஆனால் 2000 ம் ஆண்டு முதல் சமீப காலம் வரை உள்ளுர் மருத்துவர்கள் பரிசோதித்த போது சராசரி அளவிலேயே அதாவது 130-120/90-80 mm Hg என்கிற அளவிலேயே இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். இரத்த அழுத்தத்தைக் கணிப்பதில் இவ்வளவு மாறுபாடுகள் இருந்தால் ஒருவரின் உடல் நிலை சரியாகத்தான் உள்ளதா அல்லது மேலும் நலிவடைந்துள்ளதா என்பதை எப்படி அறியமுடியும்?

மதிப்பாராய்தல் (Calibration): 

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்ற ஒரு பொருளின் அளவைச் சரிபார்க்க வெர்னியர் காலிப்பர், மைக்ரோமீட்டர் போன்ற பல்வேறு அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். தொடர் பயன்பாட்டின் காரணமாக இக்கருவிகள் பழுதடைந்தாலோ அல்லது தேய்ந்து போனாலோ தவறான அளவைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பழுதான கருவிகளைக் கொண்டு ஒரு பொருளை தயாரித்தால் அப்பொருள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. எனவேதான் அளவீட்டுக் கருவிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள குறிப்பிட்ட கால இடைவெளியில் (periodically) அக்கருவிகளின் செயல்திறனை (capability / performance) பரிசோதிக்கிறார்கள். இதற்கு மதிப்பாராய்தல் (calibration) என்று பெயர்.

தயாரிப்பு முதல் பயன்பாடு வரை ஒவ்வொரு கருவியையும் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு தர அளவுகள் (Standards - like IS & ISO) உருவாக்கப்பட்டுள்ளன. கருவிகளை மதிப்பாராய்வு செய்வதெற்கென்றே மதிப்பாராய்வுக் கூடங்கள் (Calibration Laboratories) செயல்பட்டுவருகின்றன.  இவ்வாய்வுக் கூடங்களை தணிக்கை (audit) செய்வதற்கு தேர்வாய்வு மற்றும் மதிப்பாராய்வு ஆய்வுக்கூடங்களுக்கு தரச்சான்றளிக்கும் தேசியக் குழுமம் (NABL-National Accreditation Board for testing  and calibration Laboratories) ஒன்று செயல்பட்டு வருகிறது.

சொந்தமாக மதிப்பாராய்வுக் கூட வசதி இல்லாதவர்கள் NABL அங்கீகாரம் பெற்றுள்ள ஆய்வுக்கூடங்களில் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளை மதிப்பாராய்வு செய்து கொள்ள வேண்டும். எங்கே மதிப்பாராய்வு செய்யப்பட்டது, அடுத்த மதிப்பாராய்வு எப்பொழுது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டை (calibration stickers) ஒன்று அந்தக் கருவியில் ஒட்டப்பட்டிருக்கவேண்டும. 

பொறியியல் பொருளுற்பத்தி (Engineering Products)  சார்ந்த துறையில் பெரும்பாலான ஆய்வுக்கூடங்கள் தர அளவுகளை கடைபிடிப்பதோடு NABL - ன் தணிக்கைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. NABL - ன் தணிக்கைக்கு உட்படாத நிறுவனங்கள்கூட சர்வதேச மற்றும் தேசிய தர அளவுகளை (National and International standards) கடைபிடிக்கின்றன. இல்லை என்றால் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவது கடினம். அதனால்தான் நமது மிதி வண்டியிலோ அல்லது வாகனங்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்களிலோ பயன்படுத்தப்படும் பாகங்கள் பழுதடைந்தால் வெளிச்சந்தையில் சுலபமாக வாங்கி மாற்றிக் கொள்ளமுடிகிறது. 

கருவிகளை மதிப்பாராய்வு செய்யும் ஊழியர்கள் மற்றும் கையாளும் ஊழியர்கள் திறமையானவர்களாக இல்லை என்றால் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு போதிய படிப்பும் பயிற்சியும் உள்ளதா என்பதை தர அளவுகள் (standards) வலியுறுத்தும் அதே வேளையில் அவற்றை ஆய்வு செய்வதற்கான அதிகாரமும் NABL  க்கு உண்டு.

பொறியியல் துறை மட்டுமல்ல உணவுப் பொருட்கள், குடிநீர், சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மேற்கண்ட வரைமுறைகள் பொருந்தும். ஆனால் நடைமுறையில் எல்லாத்துறைகளிலும் இவை கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதே நமது கவலை.

மருத்துவக் கருவிகளுக்கு  மதிப்பாராய்வு (Calibration) செய்யப்படுகிறதா?:

இப்பொழுது எனது மருத்துவ மனை அனுபவத்துக்கு வருவோம். இரத்த அழுத்தத்தை MD படித்த மருத்துவரால் மட்டுமே சரியாக் கணிக்க முடியும் என 140/100 mm Hg எனக் கணக்கிட்ட மருத்துவர் கூறினார். MBBS படித்தவரால் சரியாக கணிக்க முடியாது என்றும் அமுத்தம் திருத்தமாகக் கூறினார். MBBS  மருத்துவராலேயே முடியாது என்றால் பெரும்பாலும் செவிலியர்கள்தானே இரத்த அழுத்தம் பார்க்கிறார்கள். எது சரி, எது தவறு என்று எப்படி கணிப்பது? எதை நம்புவது? நமக்கு குழப்பம் வரத்தானே செய்கிறது.

இரத்த அழுத்தம் பார்க்கப் பயன்படுத்தப்படும் கருவியும், இதயத் துடிப்பை பரிசோதிக்கும் ஸ்டெதாஸ்கோப்பும் கொடுக்கும் முடிவுகள் சரியானவைதானா? இவற்றில் பயன்படுத்தப்படும் இரப்பர்க் குழாய்களின் ஆயுள் எவ்வளவு? காலப்போக்கில் இந்த இரப்பர்க் குழாய்கள் அதன் செயல்திறனை இழக்காதா? காய்ச்சலை அளவிடும் தெர்மாமீட்டர் காட்டும் அளவு சரியானதுதானா? குறிப்பிட்ட கால இடைவெளியில் அவைகள் மதிப்பாராய்வுக்கு (calibration) உட்படுத்தப்படுகின்றனவா? உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் (guarantee) கொடுத்தாலும் அதைமட்டுமே நம்பி நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது சரிதானா? இப்படி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய ஐயம் எழுவது இயல்புதானே!

கேள்வி கேளுங்கள்!:

"நாம் (Metrologist - இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள்) எல்லோரும் ஒரு நாள் குற்றத்தின் பகுதியாக இருக்கப் போகிறோம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிட ஒரு இரத்தமாதிரியை பத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பினால் பத்துவிதமான முடிவுகள் வருகின்றனவே. நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதே. பிற பரிசோதனைக் கூடங்களைக் கட்டுப்படுத்தும் நமது கடப்பாடு இங்கு மட்டும் இல்லாமல் போனதேன்?"

"உலோகங்களின் அளவை மைக்ரோகிராம் அளவில் அளக்கிறோம். தலை முடிக்கு அடிக்கும் டையில் காரீய அமிலம் (lead acetate) எவ்வளவு இருக்கிறது என்று தெரியுமா? 1.5 மைக்ரோகிராம் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். ஆண்கள் கருப்பு வண்ணத்தில் டை அடித்துக் கொண்டால் பெண்கள் பல வண்ணங்களில் டை அடித்துக் கொள்கிறார்கள். வண்ணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டையில் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவும் மாறுபடும். டை அடிக்கும் இளைஞன் ஒருவன் இறந்த போனான். ஏன் தெரியுமா? அவனது இரத்தத்தில் 60 மைக்ரோ கிராம் ஈயம் கலந்திருந்தது. இது எத்தனை பேருக்குத் தெரியும்?"

"நோய் எதுவாக இருந்தாலும் எல்லா வகையான பரிசோதனைகளையும் செய்த பிறகுதானே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வருகிறார்கள்.  மருத்துவ மனைகளில் உள்ள கருவிகள் அனைத்தும் மதிப்பாராய்வுக்கு (calibration) உள்ளாகின்றனவா? "

"மருத்துவக் கருவிகளின் வடிவமைப்பு, நிர்மானம், செயல்திறன் மற்றும் அவைகள் செயல்பாட்டுக்கு உகந்தவைகளா என்பது பரிசோதிக்கப் படுகின்றனவா? இந்தக் கருவிகளின் முடிவுகள் (results) தேசிய மற்றும் சர்வதேச தர அளவுகளுடன் (standards) தொடர்புடையவைகளா (traceability)?"

"உலோகங்கள், எடுத்துக்காட்டாக வெள்ளி, அதன் உள்ளீடு மாறக்கூடியதல்ல. ஆனால் உயிரி மாதிரிகள் (bio samples) மாற்றத்துக்கு உள்ளாகுபவை. இந்த மாதிரிகளை பத்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதித்தால் அதன் முடிவுகள் எந்த அளவுக்கு ஒத்துப் போகின்றன?"

"உடல் வெப்பத்தை அளக்கும் வெப்பமானி (thermometer) மதிப்பாராய்வு (calibration) செய்யப்பட்டதா என ஒரு மருத்துவ மனையில் கேட்டேன். வெப்பமானியின் வில ரூ.80,  ஆனால்  மதிப்பாராய்வுக் (calibration) கட்டணம் ரூ.800. அதனால் மதிப்பாராய்வு செய்வதில்லை. உடைந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது புதிதாய் ஒன்றை வாங்கி உடைந்து போனதில் இருந்த ஸ்டிக்கரை எடுத்து புதியதில் ஒட்டிக் கொள்வோம், இல்லை என்றால் அங்கீகாரம் கிடைக்காதே என்று மிகச்சாதாரனமாக பதில் அளித்தார்கள்."

"கண்களை பரிசோதிக்கிறோம். பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் குறிப்பிட்ட தரத்தில்தான் உள்ளனவா? இக்கருவிகளின் முடிவுகள் ஏற்புடையவைதானா? இதற்கெல்லாம் என்ன கட்டுப்பாடு? இவற்றை எல்லாம் கட்டுப் படுத்த வேண்டாமா?"

"உடற்கூறியலின் (physiological range) அளவு குறித்து உயிரியல் வேதியியலாளர்கள் (biochemist), நுண் உயிரியியலாளர்கள் (microbiologist) மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் (clinical analyst) ஆகிய இவர்களுக்கிடையில் பரிசோதனை முடிவுகளில் 'ஏற்கத்தக்க அளவு' குறித்த புரிதலும் ஒற்றுமையும் இருக்கிறதா?"

"பரிசோதனைக் கூடங்களுக்கு தர அங்கீகாரம் வழங்கும் NABL  அமைப்பு நெருக்குதல் கொடுத்ததன் விளைவாக தற்போது சுமார் 800 கூடங்கள் மட்டுமே தணிக்கைக்கு (audit) உட்படுத்தப்பட்டுள்ளன. "

"நாடெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் உள்ள கருவிகள் கொடுக்கும் முடிவுகள் நம்பகத் தன்மை உள்ளவைதானா? இந்த சோதனைக் கூடங்களில் உள்ளவர்களுக்கு முறையான் பயிற்சி அளிப்பது நமது கடமை அல்லவா?"

"அளவீட்டியலாளர்களுக்கு (Metrologist) உயிரி மருத்துவ அறிவியல் (Bio Medical Science) இன்று சவாலான ஒன்றுதான்."

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற "அளவீட்டியலின் இன்றைய முன்னேறிய நிலை" (National Conference on Advances in Metrology) என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் ஒரு அறிவிலாளர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. அவர் ஒரு விஞ்ஞானியைப் போல இதை முன்வைக்கவில்லை. ஒரு போராளியைப் போல பொங்கி எழுந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவரது உரையில் கோபம் கொப்பளித்தது.

அவரது கோபம் நியாயமானது. விவரம் தெரிந்ததால் அவருக்குக் கோபம் வருகிறது. மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என்பதால் மருத்துவத்துறை மக்களின் உயிரோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. மனித உயிர் என்ன உலோகத்தைவிட மலிவானதா?

Wednesday, April 13, 2011

காணிக்கை இல்லை என்றால் காரியம் கைகூடாது!

தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. பொதுவாக கோவில் திருவிழா என்றால் தெய்வங்களுக்கு மக்கள் விழா எடுப்பார்கள். ஆனால் இந்தத் திருவிழாவில் மக்கள்தான் தெய்வங்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள். இந்தத் தெய்வங்களை வணங்கி விழா எடுத்தவர்கள் அரசியல் பக்தர்கள்.

கோவில்களில் ஆரத்தி எடுக்கும் வரை கைகூப்பினால் போதும். ஆரத்தியை தொட்டு விட்டு முடித்துக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் திருவிழாவில் காலையில் கூப்பிய கைகளை இரவு பத்து மணிக்குத்தான் எடுக்க முடியும். 

கோவில்களில் மனதுக்குள்ளேயே தெய்வத்திடம் முறையிட்டால் போதும். ஆனால் இங்கே உரத்த குரலில்தான் முறையிட வேண்டும். பக்தனால் முடியவில்லை என்றால் 'ஏஜெண்டுகளை'வைத்துக் கொண்டு முறையிடலாம். கோவில்களில் முறையீடு 'சீரியசாக' இருக்கும். இங்கே 'காமெடி' கலந்து முறையிட்டால்தான் முறையீடு சுலபமாக  தெய்வங்களைச் சென்றடையும். 

கோவில்களில் தெய்வங்கள் கருவறைக்குள் இருக்கும். பக்தர்கள் வெளியே நிற்பார்கள். தேர்தல் திருவிழாவில் ஆசி வழங்கும் (வாக்களிக்கும்)தெய்வங்கள் தெருவில் நிற்கவேண்டும். பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள்.

கோவில்களில் மூலவர் ஒருவர்தான். பாதுகாப்பிற்கு முனியன், கருப்பசாமி, ஆஞ்சனேயன் என ஒருசில பாதுகாவலர்கள் மூலவரைச் சுற்றியோ அல்லது எல்லையிலோ வேல் கம்போடு நிற்பார்கள். இங்கே பக்தர்கள் (வேட்பாளர்கள்) ஒரு சிலரே. தெய்வங்களோ (தொகுதி வாக்காளர்கள்) இலட்சக் கணக்கில். அங்கே தெய்வத்துக்கு பாதுகாப்பு. இங்கே பக்தர்களுக்கு பாதுகாப்பு.

அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கு கோவில்கள் ஏராளம். பக்தன் விரும்பினால் புதிதாக ஒரு கோவிலை கட்டிக் கொள்ளலாம். கோவிலை யார் கட்டினாலும் ஆகம விதிகளே அங்கு ஆட்சி செய்யும். அதன்படி கீழ் சாதியினர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படும். ஆனால் தேர்தல் திருவிழாக் கோவில்களில் சாதியைக் காட்டி உள்ளே செல்வதை தடுக்க முடியாது. உள்ளே செல்ல அடையாள அட்டை போதுமானது.

தமிழக தேர்தல் திருவிழாவில்:

மொத்தக் கோவில்கள்: 234

மொத்த பக்தர்கள்: 2 748

ஆண் பக்தர்கள் : 2612
பெண் பக்தர்கள் : 136

மொத்த தெய்வங்கள் :  4 71 16 687

ஆண் தெய்வங்கள் :  2 37 04 802
பெண் தெய்வங்கள் :  2 34 10 716
இதர தெய்வங்கள்: 1 169

ஆசி வழங்கும் கருவறை மையங்கள் : 54 314

கோவிலில் பக்தர்கள் தனக்காக மட்டுமன்றி எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்வார்கள். இங்கே தேர்தல் திருவிழாவில் பக்தன் தனக்காக வேண்டிக்கொள்ளும் அதே நேரத்தில் பிற பக்தர்களை ஒழித்துக் கட்டவும் வேண்டிக் கொள்கிறார்கள்.

கோவிலுக்குச் செல்லும் பக்தன் இறுதி வரை பக்தன்தான். ஆனால் தேர்தல் திருவிழாவில் பக்தனுக்கு தெய்வங்களின் ஆசி கிடைத்துவிட்டால் ஆண்டவனாக மாற முடியும். நேற்றுவரை தெய்வங்களாக இருந்த வாக்காளர்கள் இனி பக்தர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்தத் திருவிழா வரும்வரை காத்திருக்க வேண்டும்.

கோவில்களில் தெய்வத்தின் ஆசி பெற ஐயர் மூலம் முறையிட வேண்டும். அவர்தான் அங்கே ஆண்டவனின் 'ஏஜெண்ட்'. தேர்தல் திருவிழாவிலும் ஏஜெண்டுகள் உண்டு. இவர்கள் அல்லக்கைகள் எனப்படும் பக்தர்களின் 'ஏஜெண்டுகள்'.

கோவில்களிலும் காணிக்கை செலுத்தினால்தான் காரியம் நடக்கும். காணிக்கையை உண்டியலிலோ ஆராதனைத் தட்டிலோ போடலாம். தட்டிலே போட்டால் ஐயருக்கு மகிழ்ச்சி. 'அப்பிளிகேஷன்' உடனே 'பார்வாடு' செய்யப்படும். உண்டியலில் போட்டால் மனு கிடப்பில் போடப்படும். 

தேர்தல் திருவிழாவிலும் இப்பொழுதெல்லாம் தெய்வங்களுக்கு காணிக்கை உண்டு. அல்லக்கை 'ஏஜெண்டுகளே' இங்கே காணிக்கையை எடுத்து வருவார்கள். கோவில்களில் காணிக்கையை வெளிப்படையாக செலுத்தலாம். ஆனால் இங்கே இரவில் அதுவும் மின் வெட்டு இருட்டில்தான் காணிக்கை செலுத்த வேண்டும். 

தற்போதைய நிலவரப்படி காணிக்கை 200 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டதாம். அல்லக்கைகள் தங்களின் திறமைக்கேற்ப ஐப்பதோ நூறோ 'கமிஷனாக' எடுத்துக் கொண்டு மீதியைத்தான் தெய்வங்களிடம் சேர்த்தார்களாம். மன வருத்தத்தோடு ஒரு பெண் தெய்வம் என்னிட்ம் புலம்பித் தீர்த்தது. 

அங்கோ காணிக்கை செலுத்துவோரின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படும். இங்கோ காணிக்கை செலுத்தினால் கம்பி எண்ண வேண்டும்.

அங்கே தீர்த்தம் தெளித்து ஆசி வழங்குவார்கள். இங்கே பொத்தானை அழுத்தி ஆசி வழங்கவேணடும். அங்கே ஆசி பெற்ற பக்தன் ஆயுள் முழுக்க பக்தன்தான். இங்கே ஆசி பெற்ற பக்தன் இனி ஆண்டவனாய் அவதாரம் எடுப்பான். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவன்தான் ஆண்டவன். நேற்று வரை தெங்வமாய் இருந்த வாக்காளன் இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பக்தனாய் இருக்க வேண்டும். இதுதான் இங்கே ஆகம (ஜனநாயக தர்மம்) விதி. 

கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி பெறுவார்கள். இங்கே தெய்வங்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி வழங்கினார்கள்.

ஒரு இளம் பெண் தெய்வம் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்தது. இப்பொழுதுதான் முதன் முறையாக ஆசி வழங்கினாராம். ஆசி வழங்கும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியதில் பெரு மகிழ்ச்சி அடைந்தாராம். ஆதே நேரத்தில் இந்த ஆசி வழங்கும் செயல் 'த்திரிலிங்காக' இருந்ததாம். பயமாகவும் இருந்ததாம். இருக்காதா பின்ன. ஆசி வழங்கும் அதிகாரம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா?

ஆண்டவன் எப்பொழுதும் கருவறையிலேயே இருப்பதால் கோவில் திறந்திருந்தால் ஐயர் மூலமும், பூட்டியிருந்தால் நேரிடையாகவும் ஆசி கேட்டு முறையிடலாம். ஆனால் இங்கே ஆண்டவனாய் அவதாரம் எடுத்தவர்களை பார்க்கவே முடியாது. இந்த ஆண்டவன் சென்னைக்கும், டெல்லிக்கும் சொகுசு வாகனங்களில் பறந்து கொண்டிருப்பான். அல்லக்கைகள் மனது வைத்தால்தான் ஆண்டவனை தரிசித்து ஆசி பெற முடியும்.

தெய்வத்தின் (வாக்காளன்)  ஆசி கிடைக்க பக்தன் (வேட்பாளர்) செலுத்தும் காணிக்கை; வேண்டுதல் நிறைவேற கோவில் தெய்வத்துக்கு செலுத்தும் காணிக்கை;காரியம் கைகூட இனி புதிதாய் அவதாரம் எடுக்கும் ஆண்டவனுக்கும் காணிக்கை. 

Saturday, April 9, 2011

ஒரு தரம்... ரெண்டு தரம்...!

ஏலம் விடும் அதிகாரி டாம்பீகத்தோடு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் அவரது பணியாட்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். 

ஏலம் எடுப்பதற்கான போட்டி தொடங்குகிறது. ஏல நிபந்தனைப்படி முன்பணம் (deposit) கட்ட வேண்டும். யார் யார் முன்பணம் கட்டி, ஏல நிபந்தகைளின்படி தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என ஏல அதிகாரி அறிவிக்கிறார்.

ஏலத்தை வேடிக்கை பார்க்கவும், ஏலத் தொகையை அள்ளிச் செல்லவும் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஏலம் தொடங்குகிறது. குறைந்தபட்ச ஏலத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படாததால் முதன் முறையாக ஏலத்தில் பங்கேற்கும் ஒருவர் எழுந்து... 

"பத்து ரூபாய்" என்கிறார். 

எல்லோரும் கொல்லென சிரிக்கிறார்கள். பாவம் இன்றைய ஏல நிலவரம் இவருக்குத் தெரியாது போல.

ஏலம் தொடர்கிறது.

"நூறு" 

"ஐநூறு"

"ஆயிரம்"

"வேட்டி" 

"சேலை"

"ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி"

"முதியோர்களுக்கு ஆயிரம்" 

"கல்யாணத்திற்கு இருபதாயிரம்"

"கற்பிணிகளுக்கு பத்தாயிரம்"

ஒருதரம்

ரெண்ட தரம்....

கூட்டத்தில் மௌனம்.

"மூக்குத்தி"

"சைக்கிள்"

"கேஸ் ஸ்டவ்"

"கலர் டி.வி"

"ரெண்டு ஏக்கர் நிலம்"

"வீட்டு மனை"

"வீடு"

"பம்பு செட்"

ஒருதரம்...

ரெண்ட தரம்...

இதெல்லாம் பழைய ஏலத்தில் கேட்டதுதானே என கூட்டத்தில் ஒரு வித சலிப்பு.


"முப்பத்தைந்து கிலோ அரிசி"

"மூணு பவுன்"

"மிக்சி"

"கிரைண்டர்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

கூட்டத்தில் ஆரவாரம் ஏதும் இல்லை. இன்னும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் போல.

"ஆட்டுக் குட்டி"

"கன்னுக் குட்டி"

"பன்னிக் குட்டி"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

விவசாயிகள் நெளிகிறார்கள். சற்றே சலசலப்பு. 

"செல்போன்"

"லேப்டாப்"

கூட்டத்தில் உற்சாகம் ஏறுகிறது

"மோட்டார் பைக்"

"ஹீண்டாய் கார்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

ஏலம் சூடுபிடிக்கிறது. இன்னும் முடியவில்லை.

ஏலத் தொகை ஏற ஏற மக்கள் எகிறிக் குதிக்கிறார்கள். எல்லாம் இவர்களுக்குத்தானே. ஏல நிபந்தனையே அதுதானே!

ஏலம் விடுவது ஏப்ரல் 13 ந் தேதி வரை நீடிக்கும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்டல் வசூல் மற்றும் தோப்பு மகசூலை எடுத்துக் கொள்வதற்கான ஏலம். அதற்காக தமிழகத்தை 234 கூப்புகளாகப் பிரித்து ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

சாதாரண ஏலத்தில் இரகசிய கூட்டணி அமைத்துதான் எதிரிகளை ஓரங்கட்டிவிட்டு ஏலம் எடுப்பார்கள். ஆனால் எப்படியாவது ஏலத்தை எடுத்தாக வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தல் ஏலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.  கூட்டணிக்குள் நுழைய முடியாதவர்கள் 'சீச்..சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக பாவம் ஏலத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். 

புளியந்தோப்பு, மாந்தோட்டம், தென்னந்தோப்பு, நாள் சந்தை, வாரச்சந்தை, வண்டி நிறுத்தம் (வண்டி ஸ்டாண்டு), பேருந்து நிலைய, இரயில் நிலைய கழிவறைகள் என ஏலத்தில் பல வகைகள் உண்டு. ஏலத் தொழில் என்பது 'லாரி புக்கிங் ஆபிஸ்' போல; ஒரு நாற்காலியும், ஒரு மேசையும் இருந்தால் போதுமானது. உட்கார்ந்த இடத்திலேயே காசு பார்க்கலாம். எனவே கடுமையானப் போட்டி இருக்கும் இத்தொழிலில் வெட்டு, குத்து, கொலைகள் எல்லாம் சர்வ சாதாரணம்.

உள்ளுர் அளவில் இந்தத் தொழிலில் கொட்டை போட்டவர்கள் படிப்படியாக முன்னேறி, மாநில அளவில் நடக்கும் ஏலத்தொழிலில் நுழைந்து, பிறகு அனைத்து இந்திய அளவில் ஏலம் எடுக்கும் அளவுக்கு உயருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏலம் என்பதால் சற்று நிதானத்துடன்தான் ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஏலம் தொடங்கிய பிறகு இத்தொழில் அணல் பறக்கும் போட்டியாக மாறிவிடும்.

ஏலம் எடுப்பவனுக்கு ஏலத் தொகையை சொல்லிச் சொல்லியே தொண்டை கம்மிப் போவதால் ஏலத் தொகையை பிரபலப் படுத்த இந்த முறை ஏராளமான அல்லக்கைகளை இறக்கியிருக்கிறார்கள். அவர்களுக்குக்கூட இப்பொழுதே தொண்டை கம்மி விட்டது. இருந்தாலும் இதில் வடிவேலு எல்லோரையும் முந்திக் கொண்டு சக்கை போடு போடுகிறாராம்.

உள்ளுர் அளவில் ஏலம் எடுப்பவனுக்கு ரூபாய் நோட்டுகளை எண்ணத் தெரிந்திருந்தால் போதும். அதற்கும் மேலே ஒரு 'பாக்கெட் நோட்டில்' அதைக் குறித்துக் கொள்ளுகின்ற அளவுக்கு 1, 2, 3 ..... என எழுதத் தெரிந்திருந்தால் போதும். இது இந்தத் தொழிலுக்குப் போதுமான தகுதிகள். இந்தத் தகுதிகளை வைத்துக் கோண்டே சில இலட்சங்களை ஏன் கோடிகளைக்கூட எடுத்து விடலாம். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது தொழில் இரகசியம். 

இலட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று எம்.பி.எ (MBA) படிக்கிறார்கள். ஐ.ஐ.டி (IIT) போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து மிக உயர்ந்த பட்டங்களைப் பெறுகிறார்கள்.  வேண்டுமானால் இவர்களால் சில இலட்சங்களை சம்பளமாகப் பெறமுடியும். ஆனால் அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். சுறுக்கமாகச் சொன்னால் இந்த சில இலட்சங்களுக்காக இவர்களை 'பெண்டு' எடுத்தவிடுகிறார்கள் முதலாளிகள்.

ஆனால், தேர்தல் ஏலத்தில் பத்தாம் வகுப்பு தேறினாலும், தேறாவிட்டாலும் பரவாயில்லை. உங்களால் கோடிகளை சுலபமாக ஈட்டமுடியும். ஐ.ஐ.டி படித்து இலட்சங்களில் சம்பாதிப்பவனைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஏலத்தில் கோடிகளைக் கண்டவனை ஊர் ஊருக்குக் காண முடியும். நம்ப முடியவில்லை என்றால் இதோ சில 'சாம்பில்கள்'.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.வளர்மதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 3.35 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் சமூக சேவை.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.தனசேகரன் பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 7.39 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 64.45 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் 'ரியல் எஸ்டேட்' மற்றும் விவசாயம்.

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 5.77 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

ஏலச் சந்தையில் ஏலம் எடுக்கப் போட்டியிடும் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட இந்த வகையைச் சார்ந்தவர்களே.

படித்தவர்கள், விவரமானவர்கள், முன்அனுபவம் உள்ளவர்கள் இந்தத் தேர்தல் ஏலத்தில் கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் படிக்காமலேயே கோடிகளைச் சம்மாதிக்கும் திறமை ஒரு 'பெஞ்ச் மார்க்கிங்தானே!'

இது நவீன கால ஏலம். ஏலத் தொகையை உயர்த்தினால் மட்டும் போதாது. ஏலத் தொகையில் திருப்தியடைந்து,யாருடைய ஏலத்தொகையை அதிகமானோர் விரும்பிப் பெறுகிறார்களோ அவரே ஏலத்தை எடுத்தவர் என அறிவிக்கப்படுவார்.

ஏலச்சீட்டில் நம்பி பணம் கட்டிவிட்டு ஏமாற்றிவிட்டான் என்று "குய்யோ முறையோ" எனக் கூச்சலிடுவதைப் போல இங்கே கூச்சலிட முடியாது. ஏலம் எடுத்தவன் நிபந்தனைப்படி ஏலத் தொகையை ஏமாற்றாமல் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறானே.

ஏலம் எடுத்தவன் கோடிகளில் புரள்கிறானே என பிறகு ஒப்பாரி வைக்கக் முடியாது. ஏலத்தில் ஏய்ப்பவன் மற்றும் ஏமாறுபவன்,  இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.அவனுக்கு அதிகம் என்பதைத் தவிர ஆதாயம் இருவருக்கும்தானே. பிறகு ஏன் ஆதங்கம்?

நீங்கள் தோட்டத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்.மண்ணின் மைந்தனாகக்கூட இருக்கலாம். அதெல்லாம் ஏலம் முடியும் வரைதான். ஏலம் முடிந்து ஏலத் தொகையையும் நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு உங்கள் தோட்டத்தில் நுழைய உங்களுக்கே அனுமதி கிடையாது. ஏலம் எடுத்தவனிடம் மண்டியிட்டால்தான் வீணாய்ப் போகும் முருங்கைக் கீரையைக்கூட கொஞ்சம் கிள்ளி வரமுடியும். அதுவும் சும்மா கிடைக்காது. ஐந்தோ பத்தோ வெட்ட வேண்டும்.

சொந்தத் தோட்டத்தை ஏலத்தில் பறிகொடுத்துவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்தவனிடம் இப்படி கை ஏந்தப் போகிறார்களோ நம் மண்ணின் மைந்தர்கள்?

-------------------------------------------------------------------------------------------------------------தொடர்புடைய பதிவு:

ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?

http://hooraan.blogspot.com/2011/01/blog-post_19.html

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா? தெக்கத்தியானா?


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_29.html

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

கேப்டன் கேடட் ஆன கதை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

யாருக்கும் வெட்கமில்லை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html



தேர்தல் கலேபரத்தில் புதைந்து போன தீண்டாமைக் கொடுமை!



"ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை.

திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.


கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்."
தினமணி : 08.04.2011

மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டிய தீண்டாமைக் கொடுமை இது.

மார்க்சிஸ்டுகளின் ஆட்சியில் இது நடந்துள்ளது. திருமா உள்ளிட்ட எல்லோரும் தேர்தல் வேட்டைக்குச் சென்றுவிட்டதால் பார்ப்பனப் பத்திரிக்கை மூலம்தான் இந்தப் பார்ப்பனியக் கொடுமையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் கலேபரத்தில் இத்தீண்டாமைக் கொடுமை புதைந்தே போனது. 

அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.க்கே இந்த நிலைமை. ஏற்கனவே ஜெகஜீவன்ராமுக்கு இதேதான் நடந்தது. 

இங்கே அறையைக் கழுவி விட்டவர்கள் பார்ப்பனர்களாக இருக்க முடியாது. மிகச் சாதாரண ஊழியர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இதை அவர்களாகவே செய்தார்களா? யார் அவ்வாறு செய்யச் சொன்னது? இதில் பார்ப்பனர்களின் பங்கு என்ன? தலித்துகளை எப்பொழுதும் கேவலமாக நடத்தும் பார்ப்பனரல்லாத பிற சாதியினரின் பங்கு என்ன? 

அறையைக் கழுவுவது வழக்கமான ஒன்றுதான் எனக் காரணம் கூறி சமாதானப் படுத்தினாலும் அதற்கு சாணம் தெளித்து கழுவ வேண்டிய அவசியம் என்ன? தலித் அல்லாத பிற சாதியினர் ஓய்வு பெறும் போதும் இவ்வாறு செய்யப்படுகிறதா?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்வதற்கான அடிப்படை பார்ப்பனியம் என்கிற வர்ணாசிரம கோட்பாட்டில் இருக்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமா இத்தகைய வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடைபிடிக்கிறார்கள்? பார்ப்பனியத்தை தங்களது அன்றாட வாழ்வின் நெறிமுறையாக கடைபிடிக்கும் அனைவருமே இதைச் செய்யக் கூடியவர்கள்தான்.

இன்றும்கூட கிராமங்களில் ஒரு தலித் தன்னை தொட்டுவிட்டதால் தீட்டுப் பட்டுவிட்டது என்பதற்காக தலையில் தண்ணீர் தெளித்தோ அல்லது முழுக்குப்போட்டோ தீட்டுக் கழிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

வர்ணாசிரம கோட்பாட்டை உருவாக்கிய பார்ப்பனர்கள் மட்டுமே இதில் குற்றவாளிகள் என முத்திரை குத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. இது தி.க.வீரமணி அணுகுமுறை. இதில் குற்றத்தைத் தூண்டிய பார்ப்பனர்கள் மற்றும் குற்றத்தைச்செய்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் என பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் அனைவருமே குற்றவாளிகள்தான்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகச்சாமி தமிழில் பாடியதற்காக மேடை தீட்டுபட்டு விட்டதாகக் கூறி மேடையை கழுவி விட்டார்கள் தில்லைவாழ்ப் பார்ப்பனர்கள்.

ம.க.இ.க வினர் நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தின் போது, சூத்திரர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டதால் தீட்டுப்பட்டு விட்டது எனக்கூறி, 108 குடங்களில் தண்ணீா ஊற்றிக் கழுவி, மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தார்கள் திருவரங்கப் பார்ப்பனர்கள். 

பார்ப்பனியக் கோட்பாட்டை உருவாக்கி அதைப் பாதுகாக்கும் வேலையை பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள். இது நம்மை இழிவு படுத்தும் செயல் என பிற சாதிக்காரனும் நினைப்பதில்லை. இது தீண்டாமையின் ஒரு வடிவம் என அவன் கருதுவதுமில்லை. இதுதான் பார்ப்பனியத்தின் -  பார்ப்பனர்களின் பலம்.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்கள் மூலம்தான் கடைபிடிக்கப்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தை கடைபிடித்து அதைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஒரு குழந்தை பிறந்த உடனே அதன் பிறந்த நாளையும், நேரத்தையும் வைத்து ஜாதகம் எழுதத் தொடங்குவதிலிருந்து, அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து மடிந்து சுடுகாடு சென்ற பிறகும் நடக்கும் காரியம் வரை பார்ப்பனியத்தைக் கடைபிடிக்காதவர்களே கிடையாது. பார்ப்பனியம் கோலோச்சுவதற்கு நீர்பாய்ச்சி, உரமிட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்களே.எனவே பார்ப்பனியத்தை அன்றாட வாழ்க்கை நடை முறையிலிருந்து தூக்கி எறியாமல் இது போன்ற அவலங்களை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. 

Tuesday, April 5, 2011

என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்!

நண்பா,

நீயும் உனது குடும்பத்தாரும் நலமா?

கடந்த சில நாட்களாக இங்கு எல்லாமே குழப்பமாகவே உள்ளது. கண்களை திறந்தாலும், மூடினாலும் பிணங்களைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு நாளைக்கு 48 மணி நேரம் எனக்கருதி 20 மணி நேரம் உழைத்தால்தான் துன்பத்திலிருந்து மக்களை மீட்டு உதவ முடியும்.

எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. பங்கீட்டு (ration) முறையில் வழங்கினாலும் கிட்டத்தட்ட உணவும் இல்லாத நிலைதான். அகதிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறோம்.

புகுசிமா (Fukushima) அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் தற்போது இருக்கிறேன். நான் நிறையவே உனக்குச் சொல்ல வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எழுதினால் நெருக்கடியான காலங்களில் மனித உறவுகளும் நடத்தைகளும் பற்றிய ஒரு நாவலாக அது அமையக்கூடும்.

இங்கு மக்கள் அமைதியாக இருக்கின்றனர். அவர்களது நடத்தையும் நேர்மையும் சிறந்து விளங்குகிறது. தற்போது இங்கு எதுவும் மோசமாக இருக்கவில்லை; இன்னும் ஒரு வார காலத்தில் போதுமான பாதுகாப்பு கொடுத்து நிலைமையை ஒழுங்குபடுத்தவில்லை என்றால் அதற்கான உத்தரவாதத்தை என்னால் தரமுடியாது.

அவர்களும் மனிதர்கள்தானே. பசியும் தாகமும் நேர்மையை வீழ்த்திவிட்டால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும்.வான் வழியாக உணவையும், மருந்தையும் அரசாங்கம் அளித்து வந்தாலும் அது சிறிதளவு உப்பைப் பெருங்கடலில் போடுவதற்கு ஒப்பாகும்.

நண்பா! இதோ ஒரு உயிர்த் துடிப்பான சம்பவம். 'மனிதனாக நடந்து கொள்வது எப்படி?' என என்னைப் போன்ற வளர்ந்தவர்களுக்கு ஒரு ஜப்பானியச் சிறுவன் கற்றுத் தந்த பாடம்.

உணவு வழங்கவிருக்கும் ஒரு அறக்கட்டளை நிறுவனத்துக்கு உதவி செய்ய நேற்று இரவு ஒரு சிறிய இலக்கணப் பள்ளிக்குச் (grammar school) சென்றிருந்தேன். பாம்பு போல் நீண்டிருந்த வரிசையில் ஒரு சிறுவனைக் கண்டேன். அவன் டி-சட்டையும் காற்சட்டையும் அணிந்திருந்தான்.

அப்பொழுது குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. வரிசையின் கடைசியில் அச்சிறுவன் நின்றிருந்தான். அவன் வரும் போது உணவு தீர்ந்து விடுமோ என்ற கவலை எனக்கு. அவனிடம் பேசினேன். நில நடுக்கம் ஏற்பட்ட போது அவன் பள்ளியில் இருந்ததாகக் கூறினான். இப்பகுதியிலேயே பணிபுரியும் அவனது தந்தை மகிழுந்துவில் (car) அப்போது வந்திருக்கிறார். அவனது தந்தையை மகிழுந்தோடு சுனாமி அள்ளிச் சென்றதை மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து தான் பார்த்ததாகச் சொன்னான்.

அவனது தாயைப் பற்றிக் கேட்டேன். கடற்கரையையொட்டி அவர்களது வீடு இருந்ததால்,  அவனது தாயும் தங்கையும் தப்பித்திருக்க முடியாது என்றான். அவனது உறவினர்களைப் பற்றி கேட்ட போது தலை குனிந்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

சிறுவன் குளிரில் நடுங்கினான். எனது 'போலிஸ் ஜாக்கெட்டை' அவனுக்குப் போர்த்தினேன். எனக்கு கொடுக்கப்பட்ட பங்கீட்டு (ration) உணவுப் பை கீழே நழுவிய போது அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். "நீ வரிசையில் வரும் போது உணவு தீர்ந்துவிடும். நான் ஏற்கனவே உணவு உட்கொண்டு விட்டேன். நீ ஏன் எனது பங்கை பெற்றுக் கொள்ளக்கூடாது?" என்று கேட்டேன்.

தலை வணங்கி நான் கொடுத்த உணவுப் பையை பெற்றுக் கொண்டான். அவன் உடனே உணவு உட்கொள்வான் என நினைத்தேன். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.உணவுப் பையை எடுத்துக் கொண்டு வரிசையின் மறுமுனைக்குச் சென்று விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மொத்த உணவோடு நான் கொடுத்த உணவையும் சேர்த்துவிட்டான்.

நான் அதிர்ந்து போனேன். "நீ ஏன் சாப்பிடாமல் அங்கே சென்று சேர்த்தாய்?" எனக் கேட்டேன். "என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர். நான் சேர்த்த அந்த உணவையும் பிறருக்கு சமமாக விநியோகிக்கலாமே" என பதிலளித்தான்.

என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டதாக அவர்கள் பேசியதை என்னால் கேட்க முடிந்தது.

நல்லவற்றிற்கு தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் ஒரு சிறுவனை உருவாக்கிய மக்களும் சமூகமும் உயர்ந்தவர்கள்தானே.

நன்று! உனக்கும்,உனது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த சுற்றுப் பணி மீண்டும் தொடங்குகிறது. 

ஹா மின் தான்
Ha Minh Thanh

குறிப்பு: ஜப்பானுக்குப் புலம் பெயர்ந்து அங்கு காவலராகப் (police) பணிபுரியும் வியட்நாமைச் சேர்ந்த ஹா மின் தான் (Ha Minh Thanh) தனது நண்பனுக்கு எழுதிய கடிதம் இது. 

Published on Shanghai Daily.com 
(http//www.shanghaidaily.com/)
http://www.shanghaidaily.com/article/?id=467066&type=opinion

 தமிழில்: ஊரான்.

Saturday, April 2, 2011

துன்பக் கடலில் துவளும் இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம். பல அலுவலகங்களில் ஊழியர்கள் பிற்பகல் விடுப்பில் சென்றுவிட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. போட்டி மும்பையில் நடப்பதால் மகாராட்டிர அரசு விடுமுறை அறிவித்து விட்டது. அரை இறுதியில் பாக்கிஸ்தானை வீழ்த்தியதால் நேற்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது இந்தியா. அந்த மகிழ்ச்சித் தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்க முதலில் மட்டை விளாசிய இலங்கை அணி 274 ஓட்டங்களைக் குவித்தது. 

ஆட்டத்தைப் பெரிய திரையில் பார்த்துவிட்டு இடைவேளையின் போது வீட்டுக்கு வந்த எனது மகன் "என்ன.. செம அடி அடிச்சிடானுங்க!"  என்றான். ஏதோ இவனே அடிவாங்கி வந்ததைப் போல இருந்தது அவனது ஈனக் குரல். அப்போதைக்கு அதுதான் இந்தியனின் குரலுமாகும்.

பிறகு நான் கடைவீதிப் பக்கம் சென்று வந்தேன். ஒரு சில கடைகளில் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து சிலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இந்தியா மட்டை விளாசிக் கொண்டிருந்த நேரம். அனைவரும் ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. காரணம் அப்பொழுது சேவாக் ஆட்மிழந்த நேரம்.  

இலங்கை அடித்த 'செம அடியிலிருந்து' மீள்வதற்குள் தொடக்கத்திலேயே சேவாக் வீழ்ந்தால் தாங்கவா முடியும்? அதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினாலும் இந்தியாவை வங்கக் கடலில் மூழ்கடித்தது இலங்கை . பாக்கிஸ்தானை வீழ்த்திய போது உயர் இரத்த அழுத்தத்தில் இருந்த இந்தியன், இலங்கையிடம் வீழ்ந்தபோது குறைந்த இரத்த அழுத்தத்திற்குச் சென்றுவிட்டான். உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தில் உள்ளவனை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.

இலங்கையிடம் வீழந்ததால் இந்தியாவே இன்று இழவு வீடாய் காட்சியளிக்கிறது. நாளை விடுமுறை என்பதால் காரியத்தையும் முடித்துவிடலாம். ஒரு நாள் விடுப்பு மிச்சம். விளையாட்டை தனிமனித உணர்வாய் பார் என்ற போது கேட்டானா? விளையாட்டை நாட்டுப் பற்றோடு இணைத்தான். இன்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்.

இலங்கை அதிக ஓட்டங்கள் அடித்த போது, அடி தன்மீது விழுந்ததாக எண்ணினான். வலி தாங்க முடியாமல் அசைவற்று நின்றான். இலங்கை வீரர்களால் இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே! 

அன்று, முல்லி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழன் கொல்லப்பட்ட போது துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. சோகம் கவ்வவில்லை. இலங்கையிடம் இந்தியா  வீழ்ந்ததால் வருந்திய இந்தியன், இலங்கை சிங்களக் காடையர்களால் தமிழ்ப் பெண்கள் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்ட போது வருந்தவில்லை? ஈழத்தில் வீழ்ந்தவன் இலங்கைத் தமிழன், வேற்று நாட்டுக் காரன், அவனுக்காக எப்படி வருந்த முடியும் என எதிர் கேள்வி கேட்டு சமாதானப்படுத்தலாம். 

ஆனால் 'இந்திய' மீனவன் சிங்களக் காடையர்களால் அன்றாடம் கொல்லப் பட்டாலும் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீரையாவது சிந்தியிருக்கிறானா? சிந்தமாட்டான். கொல்லப்படுபவன் தமிழனாயிற்றே. தமிழனைத்தான் இந்தியன் என்று "இந்திய - இந்தியன்" ஏற்றுக் கொள்வதில்லையே. 'மதராசி' என்றுதானே அழைக்கிறான். 'மதராசி' கொல்லப்பட்டால் இந்தியனுக்கு எப்படி கண்ணீா் வரும்? தமிழனாய்ப் பிறந்து இந்தியனாய் வாழும் இந்தியத் தமிழனும், இந்த இந்தியனின் பட்டியலில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதுதான் இந்திய மீனவன் மீது இந்தியன் கொண்டிருக்கும் 'தேசப்பற்று'.

ஒன்று மட்டும் புரிகிறது. எவன் வீழ்ந்தால் எனக்கென்ன? கிரிக்கெட்டில் மட்டும் இந்தியா விழக்கூடாது என்பதே இந்தியனின் இலட்சியம். இந்த இலட்சியம் பெருமூளையிலிருந்து பிறக்கவில்லை. இது சில ஆண்டுகளாகவே போதை ஊசி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு சிறுமூளை ஏற்படுத்தியிருக்கும் 'நாட்டுப் பற்றுப்'போதை. போதை தெளிய வேண்டுமானால் பளிச் பளிச்சென பச்சைத் தண்ணீரைக் கொண்டு முகத்தில் அடிப்பது போல "எதையாவது" கொண்டு இரு கன்னத்திலும் மாறி மாறி அறைய வேண்டும்.  இல்லை என்றால் கிரிக்கெட்டின் நாட்டுப்பற்று போதையும் தெளியாது. கிரிக்கெட்டில் இந்தியா வீழும் போது வரும் சோகமும் குறையாது. அது வரை இந்தியா துன்பக் கடலில் துவளுவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

குறிப்பு: இந்தியனின் உணர்வை வெளிக்கொணரவே இப்பதிவு.

Friday, April 1, 2011

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தியா!

இன்று காலை அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை நேரம், அலுவலக நாள் என்பதால் எப்போதும் போல கூட்டம் நிரம்பி வழிந்தது. கைபேசியின் ஒலிபெருக்கிகளை காதில் திணித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை இரசிக்கும் இளைஞர்கள் கையில் வழக்கத்திற்கு மாறாக தினகரன் நாளேடு. அதிலும் விளையாட்டுச் செய்தி போடப்பட்டிருந்த பக்கத்தில் இலயித்திருந்தார்கள்.

அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இனி விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்பதால் சென்னையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள அன்றாடம் தொடர் வண்டியில் பயணிப்பவர்கள். மொத்தமாக தொடர் வண்டி இருக்கைகளை தங்களது சக உழைப்பாளி நண்பர்களுக்காக 'முன்பதிவு' செய்து கொள்ளும் 'தவறைத்' தவிர இவர்கள் எதார்த்தமான உழைப்பாளிகள். நாம் முன்கூட்டியே சென்றாலும் நமக்கு முடியாத போதுகூட இவர்களால்  இடம் கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் எனக்கு உண்டு.

காலையில் சுறுசுறுப்பாகச் செல்லும் இவர்கள் பகல் முழுதும் முதலாளிகளால் கசக்கி பிழியப்பட்டு மாலையில் துவண்டு வரும் போது அவர்களுக்கு நாம் இடம் தரவேண்டும் எனத் தோன்றும். 

இப்படி பிழைப்புக்காக சென்னை செல்வோரில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படிக்காதவர்கள், பத்தாம் வகுப்பு, +2,  அல்லது தொழில் நுட்ப பட்டயம் (diploma) என ஏழைகளால் படிக்க முடிந்த படிப்பை மட்டுமே படித்தவர்கள். இவர்களால் இதற்கும் மேலே படிக்காமல் போனதற்கு அவர்களுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அல்ல.சிறந்த கல்விக் கூடங்களும், ஆசிரியர்களும் இல்லை என்பதும், சிறந்த கல்விக் கூடங்களில் பயில்வதற்கான பொருளாதார வசதியின்மையுமே காரணங்களாகும்.

இன்று தொடர் வண்டியில் பயணித்த அத்தனை பேரும் கிரிக்கெட்டைப் பற்றிதான் பேசிக்கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு வீரரின் பெயரரும் அத்துப்படி. முதல் ஓவரை யார் வீசியது? ஒவ்வொரு ஓவரையும் வீசியது யார்? முதல் பந்தில் எத்தனை ஓட்டங்கள்? யார் எடுத்தது? பந்து எந்தத் திசையில் அடிக்கப்பட்டது? மட்டையாளர் என்ன தவறு செய்தார்? பந்து வீச்சாளர் செய்த தவறு என்ன? குறிப்பாக இந்திய தரப்பு வீரர்களின் அத்தனை அசைவுகளும் அத்துப்படி.

அது மட்டுமல்ல இதற்கு முன்பு இவ்விரு அணிகளும் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். சச்சின் சதத்தை நழுவ விட்டதற்காக பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டாலும் இந்தியாவின் வெற்றி அதை சாதாரணமாக்கிவிட்டது. கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் அலசிய இவர்களின் அசாத்திய நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனேன்.

வெறும் புலனறிவு மட்டுமே இத்தனை விவரங்களை அளிக்கிறது என்றால் அடுத்தடுத்த கட்டங்களில் அறிவை வளர்க்கும் போது இவர்களின் திறமை வியக்கவல்லதாக அமையும். அந்த வகையில் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் உணர முடிந்தது.

ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இவ்வளவு விவரங்களும் அத்துப்படியானது எப்படி? ஆனால் படிக்கும் காலத்தில் பாடங்களை திரும்பப் திரும்பப் படித்தாலும், எழுதிப் பார்த்தாலும், அடிக்கடித் தேர்வுகள் வைத்தாலும் படிப்பு மட்டும் அத்துப்படியாக வில்லையே! ஏன்? முன்னதில் இருக்கும் ஈடுபாடு பின்னதில் இல்லை என்பதும், இதற்கு நமது கல்வி முறையில் உள்ள குறைபாடுகளுமே காரணங்களாக இருக்குமேயன்றி  'அவாளெல்லாம்' சொல்வது போல நம்மவர்களுக்கு அறிவு குறைவு, படிப்பு வராது என்பதல்ல காரணம்.

ஆனால் அவாளெல்லாம் இன்னமும் நம்மைப்பற்றி அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  "திராவிடவாளுக்கெல்லாம் புத்தி கிடையாது". இது சுப்பரமணியசாமி சமீபத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த நேர்காணலுக்காக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உதிர்த்தது. இதை யாரேனும் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. காரணம் ஒரு கண்டனக் குரல்கூட இதுவரை எழவில்லை.

நான் பயணித்தது கடற்கரை விரைவுத் தொடர் வண்டி. அது கொரட்டூரில் நிற்காது என்பதால் ஆவடியில் இறங்கி அடுத்த தொடர் வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு அருகில் ஒரு இளைஞரும், எதிரில் இரு இளைஞர்களும் வந்து அமர்ந்தனர். இவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. மாறாக அன்றைய தேர்வுக்காக தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கேள்வி பதில்களும் இவர்கள் மருந்தியல் (pharmacology) தொடர்பான தேர்வுக்காகச் செல்கிறார்கள் எனபதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. 'டர்மெரிக்கின்' பயன்பாடு, 'ஓப்பியத்தின்' பயன்பாடு என இவர்களின் பரிமாற்றம் இருந்தது. தோலைப் பாதுகாக்கவும், கிரிமி நாசினயாகவும் 'டர்மெரிக்' பயன்படுகிறது என ஒரு மாணவர் சொன்னதைக்கூட மற்றோரு மாணவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. "நான் புத்தகத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

பாடங்களைப் பற்றி முழுமையான தெளிவு இவர்களிடம் இல்லை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ஆறு மாத கால படிப்பை இந்த அரைமணி நேர இரயில் பயணத்தல் ஈடு செய்து விடலாம் என அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார்கள். அல்லது நேற்றைய கிரிக்கெட் இந்த பரபரப்புக்கு ஒரு விதத்தில் காரணமாய் இருக்கக்கூடும்.

ஒரே ஒரு முறை பார்த்த கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களும் அங்கே அத்துப்படி. ஆறுமாத காலம் படித்த படிப்பின் மிகச்சாதாரண விவரங்கள்கூட இங்கே குழப்பமாய் இருக்கிறது. அங்கே கிரிக்கெட்டோடு உறவாடுகிறார்கள். அனைத்தும் அத்துப்படியாகிறது. அது போல படிப்பு தொடர்பானவற்றில் உறவாடுவதில்லை. அதனால் புரிவதில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புற உலகோடு நாம் கொண்டிருக்கும் உறவு மிக் பெரிய அளவில் பங்காற்றுகிறது. இந்த இடைவெளிதான் பாடத்தில் தெளிவின்மைக்குக் காரணம்.

காலை நேர கிரிக்கெட் மகிழ்ச்சி, தொடர் வண்டியில் மட்டுமல்ல வீடு முதல் அலுவலகம் வரை எங்கும் இருந்திருக்கும். இன்று இந்தியா மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருக்கும். தங்கள் அலுவலகத்தில் பெரிய திரை அமைத்து கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை தனது நண்பர்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொண்டார் ஒருவர். கிரிக்கெட் ஏற்படுத்தும் 'ஓப்பிய' போதை அவ்வளவு விரைவில் குறையாது. ஆனால் கிரிக்கெட்டால் நேற்று குறைந்த உற்பத்தி இன்று இரட்டிப்பாகும் என்பது முதலாளிக்குத் தெரியும்.

குறிப்பு: 31.03.2011 அன்றைய தொடர் வண்டிப் பயண அனுபவம்.