Sunday, June 23, 2013

நடுத்தர வர்க்கத்தின் பகற் கனவு!

‘உனது தேசத்தை நேசி’ (Love your country) என்ற தலைப்பில் மின்னஞ்சல் செய்தி ஒன்று நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதிலிருந்து .....

“12 மாதங்களுக்கு முன்பு 1 டாலரின் மதிப்பு ரூ.43

12 மாதங்களுக்குப் பிறகு தற்போது 1 டாலரின் மதிப்பு ரூ.58

இதைப் பார்த்து இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து விட்டது என நினைக்கிறீர்களா?

இல்லை!

இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

தற்போது இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நமது நாட்டைப் போலவே பல ஆசிய நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சரியான நடவடிக்கைகள் மூலம் சரி செய்யத் தவறினால், வரும் காலங்களில் மேலும் தீவிரமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நமது நாட்டிலேயே பயிரிடப்பட்டு, தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள், தின் பண்டங்கள், தேயிலை, குளிர் பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சுமார் 30 000 கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய செலாவணித் தொகை நமது நாட்டிலிருந்து வெளியே செல்கிறது.

70 முதல் 80 பைசாவிற்குத் தயாரிக்கப்படும் ஒரு குளிர் பானம் ரூ.9 க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு பெரும் தொகை இலாபமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் மிகக் கொடிய செயல்”.

இப்படி இந்தியாவின் உண்மை நிலை கண்டு கவலை அடைந்துள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நடுத்தர வர்க்கம் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். இதிலிருந்து இந்தியாவை எப்படி மீட்பது? அவர்களே சொல்கிறார்கள்.

“நமது நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும் இந்திய நாட்டுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் நாம் இதைச் செய்யவில்லை எனில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து நாம் பயன்படுத்தும் அதே பொருட்களுக்கு வரும் காலங்களில் கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும்.

நீங்கள் அதற்காக என்ன செய்ய முடியும்?

  1. இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை மட்டுமே வாங்குதல்
  2. இந்த நோக்கத்திற்காக முடிந்த வரை அதிகமானோரை இணைக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் தலைவராக மாற வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நமது நாட்டை பாதுகாக்க இது ஒன்றுதான் வழி. அதற்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றுப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கின்றன.

அதன் பட்டியல் இதோ.

  • கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிராண்டா, ஸ்பிரைட் இவைகளுக்குப் பதிலாக
எலுமிச்சை சாறு, பழச்சாறு, குளிர்ந்த லஸ்ஸி - தயிர் – மோர், இளநீர், மசாலா பால் போன்ற பானங்களைக் குடிக்க வேண்டும்.

  • லக்ஸ், லைஃப்பாய், ரெக்சோனா, லிரில், டவ், பியர்ஸ், லெசான்சி, கேமே, பாமோலிவ் சோப்புகளுக்குப் பதிலாக
சிந்தால் மற்றும் கோத்ரேஜ் நிறுவனத் தயாரிப்புகள், சந்தூர், விப்ரோ சீகைக்காய், மைசூர் சான்டல், மார்கோ, நீம், எவிட்டா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா, சந்திரிகா சோப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், சிபாகா, போர்ஹான்ஸ், மென்டாடெண்ட் பற்பசைகளுக்குப் பதிலாக
நீம், பபூல், பிராமிஸ், வீக்கோ வஐ்ரதந்த்தி, புரூடெண்ட், டாபர், மெஸ்வாக் போன்ற இந்திய பற்பசைகளைப் பயன்படுத்துங்கள்.

  • பல் துலக்க கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், ஓரல்-பி பிரஷ்களுக்குப் பதிலாக
புரூடெண்ட், அஜந்தா, பிராமிஸ் பிரஷ்களைப் பயன்படுத்துங்கள்.

  • பாமோலிவ், ஓல்டு ஸ்பைஸ், ஜில்லெட் கிரீம்களுக்குப் பதிலாக
கோத்ரேஜ், இமாமி சேவிங் கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.

  • முகச்சவரம் செய்வதற்கு செவன்-ஓ–கிளாக், 365, ஜில்லெட் பிளேடுகளுக்குப் பதிலாக
சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா பிளேடுகளைப் பயன்படுத்துங்கள்.

  • முகத்திற்கு பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், வர் டு வர் பவுடர்களுக்குப் பதிலாக
சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிலஸ் போன்ற பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • அனிக்ஸ்பிரே, மில்கானா, எவரி் டே மில்க், மில்க்மெயிட் பால் பவுடர்களுக்குப் பதிலாக
இன்டியானா, அமுல், அமுல்யா பால் பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • ஹாலோ, ஆல்கிளியர், நைல், சன் சில்க், பேன்தீன், ஷாம்புகளுக்குப் பதிலாக
லேக்மி, நிர்மா, வெல்வெட் போன்ற ஷாம்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கைபேசிகளுக்கு ஹட்சுக்குப் பதிலாக
பிஎஸ்என்எல், ஏர்டெல் இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கேஎப்சி, மேக்டோனால்ட்ஸ், பிசா ஹட், எ&டபிள்யூ உணவுப் பொருட்களுக்குப் பதிலாக
தந்தூரி, சிக்கன், இட்லி, தோசை, உப்புமா உணவுகளை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும். அது இந்தியாவை காப்பாற்றும். இன்றே அதற்காக உறுதியாக ஒரு முடிவை எடுப்போம்”.

இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குவதன் மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 30 000 கோடி ரூபாயை தடுத்து நிறுத்தி இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும் எனக் கனவு காண்கின்றனர்.

“நமது நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். ஒவ்வொரு நாளும் சுதந்திரத்திற்கான போராட்ட நாளாகும். பலரை பலி கொடுத்துதான் நாம் சுதந்திரம் வாங்கினோம். நாம் அமைதியாக வாழ்வதற்காகத்தான் அவர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை உலக மயமாக்குவது என்கின்றனர் பன்னாட்டு நிறுவனங்கள். உங்களையும் என்னையும் போன்ற இந்தியர்களுக்கு இது நாட்டை மறுகாலனியாக்குவதாகும். அப்போது காலனியவாதிகள் இந்தியாவை விட்டுச் சென்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் தவறு ஏதும் செய்யமாட்டார்கள். அது பொன் முட்டை இடும் வாத்தாக இருந்தாலும் வெளியெ போகச் சொல்கிறோம்.

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் அரசியல் சுதந்திரம் மட்டும் இருப்பது பயனற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரசியா, தென் கொரியா, மெக்சிகோ போன்ற நாடுகளின் பட்டியல் மிக நீளமானது. அவர்களின் அனுபவங்களிலிருந்தும் நமது வரலாற்றிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டும். உண்மையான இந்தியனாக இருந்து நமது கடமையைச் செய்வோம்”.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது வெறும் வணிக நோக்கம் கொண்டது மட்டுமல்ல அது இந்தியாவை மறுகாலனியாக்குகின்ற நோக்கமாகும் என்பதை நடுத்தர வர்க்கத்தினர் புரிந்து வைத்திருந்தாலும் அதற்கு இந்திய அரசு கடைபிடிக்கும் உலக மயம் – தனியார் மயம் - தாராள மயம் என்கிற கொள்கைகள்தான் காரணம் என்பதை உணரத் தவறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அகலக் கதவைத் திறந்துவிடும் அரசாங்கத்தை தூக்கி எறியாமல் நாடு மேலும் மேலும்  அடிமையாவதை தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் உணர மறுக்கின்றனர். நாடாளுமன்ற வாக்குச்சீட்டு அரசியல் கட்சிகள் அனைத்துமே இக்கொள்கைகளில் ஒன்றுபடுகின்றனர் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்தான்

“இந்தியனாக இரு இந்தியப் பொருட்களையே வாங்கு! என்று சொல்லும் அதே வேளையில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாம். நாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரிகள் அல்ல”. என பல்டி அடிக்கின்றனர்.

மேலும் இவர்களே முன்வைக்கும் கோரிக்கைகளில் கூட இவர்களால் உறுதியாக நிற்க முடியவில்லை. அதனால்தான்

“பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அந்நிய நாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் உங்களால் கைவிட முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்”.

என தங்களால் முடியாது என முடிவு செய்து கொண்டு கடைசியில் ஒரு பொருளையாவது கைவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்.

“விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை பரப்புங்கள். தயை கூர்ந்து இந்தியனாக இருக்க முயலுங்கள். உண்மையான இந்தியன் இதை பரப்ப வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம். இந்தியாவை நேசிப்போம்.”

எனக்கூறி தேசப்பற்றை நெஞ்சு கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமீபத்தில் இமயத்தையே உலுக்கிய பெரு வெள்ளம் போல் ஆர்ப்பரித்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களைக் காக்கும் அரசுகளும் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி சின்னாபின்னமாகி மண்ணில் புதையுண்டு போவார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் போராட்டங்களை கணக்கில் கொள்ளாமல் நடுத்தர வர்க்கம் முன்வைக்கும் சிறு துளி பெரு வெள்ளம் என்கிற “குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்” என்கிற சிந்தனைப் போக்கு மறு காலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும்.

தொடாபுடைய பதிவுகள்:

Sunday, June 9, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்