Friday, December 24, 2010

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!

”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.

"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை  மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்."- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.

இச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.

நகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.

ஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள்? இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே.  பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா? வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்? இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள். 

சென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் "புளூ கிராஸ்" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் "புளூ கிராஸ்"  காலியாகிவிடுமே!

இங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.

ஊரான்.



Tuesday, December 21, 2010

" ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?


அன்புள்ள வலைப்பூ வாசகர்களே!

25.11.2010 அன்று "வினவு" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

ஊரான்.

---------------------------------------------------------------------------------------------

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”

“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

ஊரான்.

Thursday, December 16, 2010

நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!

குழந்தைகளின் கை, கால் விரல் நகங்களுக்கு பல வண்ணப் பூச்சுப்பூசி (nail polish) அழகு பார்ப்பதுண்டு. ஆனால் இன்று இதுவே பெண்களிடம் அழகுக் கலை கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. பளபளக்கும் பல வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்களின் நகப்பூச்சுகள் சந்தையில் குவிந்துள்ளன. பெண்களின் அழகை அதிகப்படுத்த நகப்பூச்சுகள் அவசியம் என பலவாறாய் நம்பச் செய்து வணிகத்தைப் பெருக்கும் போட்டா போட்டி சந்தையில் நிலவுகிறது. அழகாய்த் தோன்றினால் தன்னம்பிக்கை பிறக்குமாம். அதற்காகத்தான் அழகுக் கலையே இன்று ஒரு படிப்பாக உருவெடுத்துள்ளது.

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருவதால் பெண்களையும் போகப் பொருளாகப் பார்க்கும் சிந்தனைப்போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஆண்களின் போகப் பொருள்தான் பெண் என பறைசாற்றும் வகையில்தான் சில பெண்களின் அழகுணர்ச்சி அமைந்துள்ளது. கால் விரல் நுனியிலிருந்து உச்சஞ்தலை மயிர் விரை அலசி ஆராய்ந்த பிறகே பெண் அழகானவளா என முடிவு செய்யும் ஆண்களும் அதிகரித்துவிட்டனர். தான் அழகானவள் என்று ஆண்களிடம்  தனது அழகை நிலைநாட்ட முயல்வது மட்டுமல்ல உன்னைவிட நானே அழகு என்று பிற பெண்களோடு ஒப்பிட்டு தன்னை உலக அழகியாக கருதும் மனநிலைக்கும் சில பெண்கள் ஆளாகி உள்ளனர்.

நகம் நம் அகத்தின் முகம்பார்க்கும் கண்ணாடி என்பார்கள். ஒருவரின் நகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே அவரின் ஆரோக்கியத்தை அளவிட முடியும். 
  • வெள்ளை நிற நகம் (nails: white) 
  • நகத்தில் வெண்புள்ளிகள் (nails: white:spots)  
  • கருப்பு நிற நகம் (discoloration-blackness)
  • நீல நிற நகம் (nails: bluness)
  • சாம்பல் நிற நகம் (nails: gray)
  • சிவப்பு நிற நகம் (nails: red)
  • கருஞ்சிவப்பு நகம் (nails: red: black)
  • மஞ்சள் நிற நகம் (nails: yellow) 
  • ஊதா நிற நகம் (nails: purple)
  • வெளிறிய நீல நிறமான நகம் (nails: livid)
  • சொரசொரப்பான நகம் ((roughness: fingernails)
  • உலர்ந்த நகம் (dryness: fingers: nails: about) 
  • கடினத்தன்மையுள்ள நகம் (nails: hardness)
  • நகத்தில் வீக்கம் (inflammation-fingers-nails) 
  • நகத்தில் நமைச்சல் (itching:fingernails)
  • நகம் மரத்துப் போதல் (nails: numbness, tingling-fingers-nails)
  • நகத்தின் மென்மைத் தன்மை (soft nails)
  • தடித்த நகம் (thick-nails)
  • மெலிந்த நகம் (thin nails)
  • நகத்துக்கடியில் ரத்தக்கட்டு (nails: blood settled under nails)  
  • ஒளியிழந்த (nails: dark)
  • உணர்ச்சியற்ற நகம் (horny.fingernails)
  • எளிதில் உடையக்கூடிய நகம் (brittle nails)
இப்படி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? உடலியக்கச் செயல்பாட்டில் எற்படும் கோளாறுகளே நகத்தில் குறிகளாத் தோன்றுகின்றன. நகப்பூச்சு பூசி இவைகளை மறைத்துவிட்டால் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிய முடியும்?

உடலியக்கச் செயல்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டால் முதலில் அவை நம் உடலின் வெளிப்பகுதியில், அதாவது நம் உடலின் முக்கியத்துவமற்ற பகுதிகளில் குறிகளாக வெளிப்படுகின்றன. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் உடலியக்கச் செயல்பாட்டுக் கோளாறுகள் முதலில் நகம், முடி, தோல் ஆகிய பகுதிகளில்தான் வெளிப்படும். இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மூடி மறைத்தாலோ, மருத்துவம் பார்க்காமல் விட்டாலோ உள்ளுக்குள் ஏற்பட்ட கோளாறு மேலும் முற்றி அதற்கடுத்த முக்கிய உறுப்புகளை நோக்கி வளரும். இதுதான் உயிர்வாழ்தலின் உடலியக்க விதி. (survival mechanism). இதைத்தான் ஹோமியோபதி மருத்துவம் தெளிவு படுத்துகிறது.

நகப்பூச்சு போடும் பெண்களே! நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்வதாகக் கருதி நகங்களில் மேல்பூச்சுப்பூசி நோய்களை மறைத்து உள்ளமுக்குகிறீர்கள். பின்னாலிலே வரும் பெரு நோய்க்கு வழி ஏற்படுத்துகிறீர்கள்.

ஊரான்.



  

Saturday, December 11, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ----- இறுதிப் பகுதி

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைவதும், இனப்பெருக்கம் செய்வதும் உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). இதற்காக மனித இனம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதான் திருமணம். இந்த ஏற்பாட்டிற்கு எவை அவசியமானதோ அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. இதற்கு மேலும் செய்யக்கூடியவை பொருள் விரயத்தையும், காலவிரயத்தையும் மட்டுமே விட்டுச்செல்கின்றன. இந்தப் பொருள் விரயமே பின்னால் மிகப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது. 

குடும்ப வாழ்க்வைத் தொடங்கிய பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமானது. உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பெற்று பிள்ளை குட்டிகளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாக வாழ்வதற்குத்தான் "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ" வாழ்த்துகிறார்கள் போலும். 

ஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.  

அடிப்படைத் தேவைகளுக்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். கட்டுப்படியாவதில்லை. நம்மை ஆளும் அரசுதான் நமது வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகும். சரியான அரசு இல்லை என்றால் மக்களின் வாழ்வு அதோ கதிதான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசு தோன்றுவதற்கு முந்தைய ஆதிகால சமூக வாழ்க்கையில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் வாழ்ந்து வந்தான். அரசு பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய சமூகத்தில் அரசுக்கு வெளியே தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது.

எந்தத் தொழிலை நாம் தேர்வு செய்தாலும், அந்தத் தொழிலின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசுதான். இதற்கு ஏற்பதான் அத்தொழிலில் நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைப்பவர்கள் ஓரளவு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திண்டாடுகிறார்கள். விவசாயம், நெசவு உள்ளிட்ட எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் இல்லை. படிக்க வசதியில்லை. படித்தாலும் வேலையில்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விக்கிற விலைவாசியில் எதைத்தான் வாங்க முடியும்?. நேற்று தாராபுரத்தில் கத்தரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இவைகள்தானே நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகள். 

பிள்ளைப் பேறு அவரவர் உடலியற்கூறு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இன்று பொருள் ஈட்டும் நடவடிக்கையே மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவனை மலடாக்கி வருகிறது. பிறகு பிள்ளைப் பேறுமட்டும் எப்படி நல்லபடியாக அமையும்?.

உணவுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால மனிதன் பலப்பல நோய்களுக்கு ஆளாகிறான். பிறகு எப்படி நலமோடு வாழமுடியும்?.

வரதட்சணைக் கொடுமை, மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகளால் வரும் தொல்லைகள், ஆண் வாரிசு இல்லை என்றால் அதற்குக் காரணம் ஆண்தான் என்றாலும் அதற்காக பெண்ணையே குற்றவாளியாக்கும் இந்தச் சமூக மடைமைத்தனம் என பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள். இவையும் இன்றைய சமுதாயத்தின் பொருள் உடைமை வெறியின் விளைவேயன்றி வேறல்ல. 

ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் துன்பங்களோடும் துயரங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஜாதகமா அல்லது அரசின் செயல்பாடுகளா? இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா? அல்லது நாம் கடைபிடிக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இத்துன்பங்களைத் துரத்துமா?


முற்றும்.

ஊரான்

Friday, December 10, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்.....4

ஜாதகப் பொருத்தங்களும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களும் திருப்தியளிக்கும் பட்சத்தில் திருமணம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்வதும் என்கிற சம்பிரதாய நடவடிக்கை. இதற்கு நாள், நேரம், கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டிழந்த பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. 

போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா என அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கை மட்டும் நனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ? செல்லும் போது மூன்று, ஐந்து அல்லது ஏழு பேர் என்கிற ஒற்றைப்படையில்தான் செல்ல வேண்டும்.இரட்டைப்படையில் செல்லக்கூடாது. சென்றால் என்னவாகும் என்று யோசிக்கக்கூட யாருக்கும் தைரியம் கிடையாது.

அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு கை நனைக்கச் செல்வது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்திற்கு குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை-சொந்த கார் இல்லை என்றால் வாடகைக்காவது வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது! இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் கட்டாயம் தேங்காய் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக -கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ-எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR -நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொள்வார்கள்! 

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் போது பெண் வீட்டார் பெண்ணை அலங்காரம் செய்து அனைவர் முன்பும் நிறுத்துவார்கள். இதற்கு தனி அழகுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவதும் உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பெண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த அலங்காரமெல்லாம், பையன் வீட்டு படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. 

விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும். சுவரில் தொங்கும் ஒரு காலண்டரைப் பார்த்து தோராயமாக திருமணத்திற்கு ஒரு தேதியையும் தீர்மானித்துக் கொள்வார்கள். 

அடுத்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது யார்? திருமணத்தை நடத்துவது யார்? என்பது தீர்மானிக்கப்படும். சாதி வழக்கம், ஊர் வழக்கம் என்ற பெயரில் இவை தீர்மானிக்கட்பட்ட காலம் போய் திருமணத்தை பெண்வீட்டார் தலையில் கட்டுவதுதான் இன்றைய வழக்கம். இது ஒரு சம்பிரதாயமாகவும் மாறிவருகிறது.

நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா! நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்படி என்று வாய் பிளக்க வேண்டும்.

அடுத்து ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி திருமண நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR-நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், பஞ்சாங்கப்படி முகூர்த்த நாள் மாதத்தில் ஒரு சில நாட்கள்தானே. பிறகு எப்படி ஒரே நாளில் பல திருமணங்களை இருக்கின்ற ஒரு சில மண்டபங்களில் நடத்த முடியும்? மண்டபம் மட்டுமல்ல, புரோகிதரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.

அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப்  பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டால் சாதிப் பட்டம்-கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா., கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் அவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர்- கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!

மணப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.

சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி  இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது-எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்-குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பசிக்கு சோறு போடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவை, ஐயிட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே. அதற்காகத் தான் இவ்வளவும்.

முன்பெல்லாம், சோறு, சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒரு சிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணாக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்;  பிரம்மாண்டமான மணமேடை. பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் இதில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்ன வேண்டும். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது-பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும். புற்களையும் தழைகளையும் அள்ளி தெளித்து முடிந்தால் வெண்புறாக்களை மேடையில் மேயவிட்டு வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டு கச்சேரி நடத்தி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்கள். நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

மணமேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது. 

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.

காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி இச்சம்பிரதாயங்களும் சடங்குகளும் மாறுபடும்.

மொய்யில்லாமல் கல்யாணமா? மாமன் வைக்கும் மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து-கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமால் திண்டாடுவதும் தனிக்கதை. ஏற்கெனவே எழுதின மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்பத் தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

இந்து மதம் சார்ந்த திருமணம் குறித்தே இங்கு கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இசுலாமிய, கிருத்துவ மதத் திருமணங்களில் சில மாறுபட்டும் சில கூடுதலாகவும் சில குறைவாகவும் அமையக் கூடும். 

மணவீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து வகையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து அனைவரையும் மகிழ்வித்துத்தான் பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமணத்திற்குப் பிறகு, தங்களது வாழ்வில் மணமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்ன பிற நடவடிக்கைகளும் இவர்களுக்கு உதவுகிறதா என்பதே நம்முடைய கேள்வி. 

தொடரும்...

ஊரான்.

Wednesday, December 8, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்---3

நமது 'முன்னோர்கள்' திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்தார்களாம். 

நமது முன்னோர்கள்தான் தற்குறிகளாச்சே? அவர்கள் எப்படி நன்கு சிந்தித்து...ஆராய்ந்து வகுத்திருக்க முடியும்? அதுவும் சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்தார்களாம். கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். அந்த கதையாயில்ல இருக்கு.

இங்கே முன்னோர்கள் என்பது பார்ப்பனர்களைத் தவிர வேறுயாருமில்லை என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?.

இந்த பொருத்தங்களில் ஆறு பொருந்தினாலே போதுமாம். திருமணத்திற்கு தடை ஏதுமில்லையாம். சரி. ஜாதகத்தை நம்புகிறவர்கள் இந்த பொருத்தங்களை மட்டும்தான் பார்க்கிறார்களா?. வேறு பொருத்தங்களைப் பார்ப்பதில்லையா?

நடைமுறையில் மக்கள் பார்க்கும் பொருத்தங்களே முதன்னையானதாகவும் இறுதியானதாகவும் அமைகின்றன. திருமணம் நடைபெறுவதற்கும், நடைபெறாமல் போவதற்கும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களே பிரதானமாக அமைகின்றன.

 நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்கள்:

  • பையன் கருப்பா-சிவப்பா? ஆளு நெட்டையா-குட்டையா? ஊத்தப்பல்லா- நல்லப்பல்லா?   கூர் மூக்கா-சப்ப மூக்கா? கண் நல்ல கண்ணா-மாறு கண்ணா?  நடை, பாவனை, குரல்.....ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்-குடும்பப் பாங்கான-இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது. 
  • வசதி-வாய்ப்பு எப்படி? பையன் என்ன வேலை செய்கிறான்? கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா,  உட்கார வச்சி சோறு  போடுவானா?அதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவு? அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா? வீடு நில புலம் சொத்து,  அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என  வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா? மொத்தத்தில் ஒரே பையனா? சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு?. நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே என்பதை உறுதி செய்து கொள்வது. இவைகள் பெண் வீட்டார் பார்க்கும் பொருத்தம். இவற்றை உறுதி செய்து கொணட பிறகே அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.
  • பெண் நல்ல சிவப்பா 'கலரா' இருக்க வேண்டும்.  ஐஸ்வர்யா ராய் போல-இப்போதைய கனவுக்கன்னி யாரோ? இது பையனின் எதிர்ப்பார்ப்பு. இதற்குமேல், பையனை பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள் எதிர்பார்ப்புகள் தனி. கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். 
  • உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில் அமைந்து விட்டால் அடுத்து பார்ப்பது பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது.எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். சொத்து பத்து ஏராளம் என்றால் உருவம்-வடிவம் விசயத்தில் 'அட்ஜஸ்ட்'  செய்து கொள்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று கருதினர். மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள். காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று.
  • மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிற அடுத்த பொருத்தம் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? வீட்டு வேலை தெரியுமா? என்பது. சாதாரண வீட்டுப் பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது....மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.
  • வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. வெளி ஊரில் வேலை என்றாலும் வேலையை விடக்கூடாது,  மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.
  • அடுத்து வரதட்சணை. நகை பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா? கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? டூ வீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மண்டபத்தில் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.
ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது: 
  • சாதி-குலம் கோத்திரத்தை உறுதி செய்வது. 
  • சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா? 
  • பையனுக்கு பீடி சிகரெட்டு, தண்ணி- கிண்ணி, சீட்டு, பொம்பள-கிம்பள இத்தியாதி-இத்தியாதி என ஏதாவது பழக்கம் உண்டா?  இது பெண் வீட்டார் பார்க்கும் உளவு வேலை. 
  • பெண் நல்லவளா? 'கற்பு' விசயத்தில் பெண் 'கெட்டுப்' போயிருந்தால் அவள் வாழ்வு அதோ கதிதான்.  ஆனால் ஆண் இந்த விசயத்தில் கெட்டவனாயிருந்தாலும் அது ஒரு பெரிய விசயமல்ல. ஒரு பெண் ஆண்களுடன் இயல்பாகப் பழகினால் அது குற்றம், பெண்ணோட அப்பன் எப்படி என்பதைவிட பெண்ணோட தாயார் எப்படி?  இது குடும்ப கைளரவத்திற்கு அவசியமாம். இது பையன் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.
CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் நம்ம ஒற்றர்களிடம் பயிற்சி எடுத்தால் டெரரிஸ்டுகளைப் பின்னிப் பெடலெடுக்கலாம்.

ஆக மேற்கண்ட பொருத்தங்களே நடைமுறையில் திருமணங்களைத் தீர்மானிக்கின்றன. பிறகெதற்கு ஜாதகப் பொருத்தம்? பார்ப்பனர்கள் பொருக்கித் தின்னத்தான்.

தொடரும்......

ஊரான்.

Friday, December 3, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்----2


மணப்பொருத்தம் பார்ப்பவர்கள் முதலில் பார்ப்பது பத்துப் பொருத்தம்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட நாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்தி ஒரு வரன் அமைந்து விட்டால் எப்படியாவது இதைமுடித்துவிட வேண்டும் என்று பெரும்பாடு படுகிறார்கள்.

பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் ஜாதகத்தைத்தான் முதலில் பரிமாறிக் கொள்கிறார்கள்.அவரவருக்குத் தெரிந்த புரோகிதரிடம் ஜாதகத்தைக் காட்டுகிறார்கள். புரோகிதர் தனக்குத் தெரிந்த வரையில் ஜாதகத்தைப் பார்த்து எத்தனைப் பொருத்தம் பொருந்துகிறது என்பதையும், திருமணம் செய்யலாமா கூடாதா என்பதையும், பொருத்தத்தில் சிலவற்றை 'அட்ஜஸ்ட்' செய்துகொள்ள என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார். புரோகிதர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இது கம்ப்யூட்டர் யுகமாயிற்றே. பிறந்த நேரத்தையும் பிறந்த நாளையும் கொடுத்தால் ஜாதகம் 'ரெடி'.

புரோகிதர் ஜாதகமானாலும், கம்ப்யூட்டர் ஜாதகமானாலும் ஒரு துண்டுச்சீட்டில் பத்து கட்டங்களை வரைந்து நடுவில் ஒர பெரிய கட்டத்தையும் போட்டு சில கட்டங்களில் கேது, சந்திரன், ராகு, சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், சனி என போடுகிறார்கள்.சில கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்களைக்கூட சேர்ந்தார்போல போடுவதுண்டு. நடுவில் உள்ள பெரிய கட்டத்தில் ராசியையும் நட்சத்திரத்தையும் போடுகியார்கள்.சில கட்டங்களை காலியாகவும் விடுகிறார்கள். கேட்டால் ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள் அதற்காகத்தான சில கட்டங்களை காலியாக திறந்து வைத்திருக்கிறார்களோ!.  

படிக்காத பாமரானாலும் சரி, பி.எச்.டி பட்டம் வாங்கிய முனைவரானாலும் சரி, இந்த துண்டுச்சீட்டுதான் இவர்களின் வாழ்கையை தீர்மானிக்கும் 'அத்தாரிட்டி'. இந்த துண்டுச்சீட்டை படிக்கவோ, படித்துவிட்டு விளக்கம் சொல்லவோ அண்ணா பல்கலைக்கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலோ பயின்றவனால்கூட முடியாது. விளங்காது. அவ்வளவுதான். வான் வெளியில் அதிநவீன ராக்கெட்டுகள் விட்டபிறகும்கூட கிரகங்களைக் கணிப்பதில் விஞ்ஞானிகள் திண்டாடுகிறார்கள் ஆனால் கையளவு கட்டத்தில் நம்ம ஊர் புரோகிதன்-அதான் 'அஞ்சாம்கிலாஸ்'கூட தாண்டாதவன்-கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.

அப்ப யாருக்கு விளங்கும்?. பார்ப்பன குடும்பங்களில் சிறு வயதுமுதலே பள்ளிப்படிப்பு மண்டையில் ஏறாத சில மரமண்டைகளை "இவனுக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பு வராது, இவன் படித்தவிட்டு இஞ்சினிராகவோ, டாக்டராகவோ, ஏன் ஒரு குமாஸ்தாவாகவோக்கூட வரமுடியாது. இவனுக்கு ஏத்தது புரோகிதம்தான்” என முடிவு செய்து அவனை இத்தொழிலுக்கு இறக்கிவிடுகிறார்கள். நாம் என்ன செய்கிறோம்? ஆடு மாடு மேய்க்க அனுப்புகிறோம். அவர்கள் புரோகிதம் பார்க்க அனுப்புகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த 'அதி உயர்ந்த' தொழிலில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது. இங்கும் ஆண் ஆதிக்கம்தான். படிப்பு வராத பார்ப்பனப் பெண்கள் முருக்கு சீடைதான் சுட வேணடும்.

இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள்தான் கிரகங்களின் நடமாட்டத்தைக் கணித்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். இந்த அதிபுத்திசாலிகளுக்கு சில இடங்களில் ஏக கிராக்கி ஆகிவிடுகிறது. இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலிலும் புரோகிதர்களுக்கு ஏக கிராக்கியாம். புரோகிதர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இடங்களில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளிலிலும் இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் 'சைடுபிசினஸ்ஸாக' இத்தொழிலில் இறங்கி உள்ளார்கள்.

 திருமணத்திற்கான பத்துப் பொருத்தங்கள்:

நமது முன்னோர்கள் திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்துள்ளனர். நாளடைவில், அவற்றில் முக்கிய பொருத்தங்களாக 10 மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை:

1. தினப்பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்.
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்.
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்

இவை ஒரு பஞ்சாங்கத்தில் படித்தது. புரோகிதருக்கு புரோகிதர் இது மாறுபடலாம். 

தொடரும்....

Tuesday, November 30, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா?

படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள். 

எட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.

ஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள். 

ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம். 

ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி   சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும்தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன. 

எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா? உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது? 

மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா?  சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இவற்றைப் பற்றி அலசலாமா?

தொடரும்.....

ஊரான்.

Tuesday, November 23, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-3

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?  உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும். இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள்-நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும். அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே! இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா? கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை  மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா? முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா! பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன? பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?


முற்றும்.

ஊரான்.





Monday, November 22, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-2

முகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும் போக்கவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அனால், இதுவே மாநாடுகள்- பேரணிகள் என்றால் அது விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காக திட்டித் தீர்ப்பார்கள்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி,  காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக் காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி,  எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது. புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம்  படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல்பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும், இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது. இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?


தொடரும்........




Saturday, November 20, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?

சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கனிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.

எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.

தொடரும்........

Wednesday, November 10, 2010

பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்சிக்குச் சென்றிருந்தேன். இனிமையான மாலைப் பொழுது. நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட பாட்டுக்கச்சேரி - அதாங்க 'ஆர்க்கெஸ்ட்ரா'-அரங்கையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. தாளமும் பாட்டும் தனித்தனி 'ட்ராக்குகளில்' ஓடிக்கொண்டிருந்தன. சுட்டுப் போட்டாலும் சுருதி சேராது போலும். பாடியவர்களும் ஈடுபாட்டோடு பாடவில்லை. கருவிகள் எழுப்பிய ஒலியோ அனைவரின் காதுகளையும் கிழித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இது போன்ற விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை பாட்டுக் கச்சேரிகள் தட்டிப் பறிக்கின்றன.

கிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளை இப்பாட்டுக் கச்சேரிகள் நம்மைப் பேசவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, அவை ஏற்படுத்தும் நாசகார ஒலி நமது காதுகளைக் கிழித்துத் தலைவலியை உண்டாக்குகின்றன. பாட்டுக் கச்சேரிகள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு 100 டெசிபெல்லுக்கும் மேலாகத்தான் இருக்கும். ஒலியின் அளவு 60 டெசிபெல்லுக்கு மேலே இருந்தால் நமது உடல் நலத்தை பாதிக்கும் என்பது மருத்துவ உலகம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள உண்மை. மெல்லிய காதுச் செவிப்பறைகளைச் சேதப்படுத்தும் இந்நாசகார ஒலி மூக்கு, தொண்டை உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் வெகுவாகப் பாதித்து உடல் நலிவை உண்டாக்குகிறது.

இசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கும் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்.

சரி, இசைக்கணக்குதான் சரியில்லை. ஏதாவது பயனுள்ள செய்தியாவது இக்கச்சேரிகள் மூலம் சொல்லப்பட்டால் கொஞ்சம் காது கிழிபடுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். திருமண வரவேற்பு மட்டுமல்ல; கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் 'ஆர்க்கெஸ்ட்ராக்களில்' அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் அறைக்கிறார்கள். மாவு அறைப்பவர்களும் (பாடுபவர்கள்) எந்திரங்களும்தான் (இசைக்கருவிகள்) வேறுபடுகின்றன. வேறென்ன சொல்ல.

ஊரான்.

Tuesday, November 2, 2010

எதார்த்தத்தை நோக்கி....

மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்தில்லாமல் யாரேனும் இவ்வுலகில் இருக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறுபட்ட கருத்து இருப்பதாலேயே கருத்து மோதல்கள், அதையடுத்து சண்டை- சச்சரவுகள் எற்படுகின்றன. எல்லா விசயங்களிலும் மாறுபட்ட கருத்து என்றால் எப்போழுதும் சண்டை- சச்சரவுகள் மோதல்கள்தான். கருத்தொற்றுமைக்கேற்ப சண்டை- சச்சரவுகள், மோதல்களின் அளவு குறையுமேயன்றி அவைகள் இல்லாமல் இருப்பதில்லை.

சமூக வாழ்க்கையில் ஒவ்வொறு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் கருத்து வேறுபாடுகள் நிரந்தரமானவைகளா? தீர்க்கவே முடியாதவைகளா?

கணவன்-மனைவி, பெற்றோர்கள்-பிள்ளைகள், மாமனார்/மாமியார்- மருமகள்/மருமகன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இப்படி குடும்ப உறவுகளுக்கிடையில் சண்டை- சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோரைக் காண்பது அரிது. 

நண்பர்கள், அலுவலக ஊழியர்கள், அக்கம் பக்கம் வாழ்வோர், சங்கங்கள், கட்சிகள், மன்றங்கள், உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள், போராளிகள் என பொதுவில் எல்லோர் மத்தியிலும் கருத்து முரண்பாடுகள் நிலவுவதைக் காணலாம். ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிப்போர் மத்தியிலும் இதைக் காணமுடியும். தான் சொல்வதே சரி என வாதிடும் குணம் பெரும்பாலும் மக்களிடையே காணப்படுகிறது. 

முரண்படுவதை ஒரு குற்றமாகப் பார்ப்பதா அல்லது அது அறியாமையின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்வதா? சாதாரண மக்களிடம் நிலவும் பல்வேறு வகையான மாறுபட்ட கருத்துக்கள் அவர்களின் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை. எனவே அறியாமையிலிருந்து விடுவிப்பது ஒன்றே ஒத்த கருத்துக்கு வழிவகுக்கும். 

ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் உணர்ந்ததனைத்தும், பேசுவதனைத்தும் உண்மையானவை, எதார்த்தமானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. (People not talk about the world, but about their perception). 

ஆங்கிலத்தில் delusion என்றொரு சொல் உண்டு. delusion என்றால் wrong perception of the reality என்று பொருள். அதாவது உள்ளதை உள்ளபடியே உணராமல் மருட்சியாக உணர்வதை திரிபுணர்வு என்று கூறலாம். இவ்வாறு உணர்வது ஆரோக்கியமான நிலை அல்ல. மாறாக உள்ளதை உள்ளபடியே அதாவது தெளிவாக (clarity) உணர்வதுதான் ஆரோக்கியமான நிலை.

எப்பொழுது அனைவரும் எதார்த்தத்தை, உண்மையை திரிபின்றி அறிகிறோமோ, உணர்கிறோமோ அப்பொழுதுதான் கருத்து வேறுபாடுகள் இருக்காது. கருத்து வேறுபாடுகள் நீடிப்பது வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தடையானதல்லவா; எனவே கருத்து வேறபாடுகளைக் களைய இடையராது முயல வேண்டும். 

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை எனும் வழிமுறைகளின் மூலம் முயன்றால் உண்மையை, எதார்த்தத்தைக் கண்டறிய முடியும். இயற்கை விதிகளின், மனித உறவுகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிலவாது. பூமி உருண்டை என்கிற இயற்கை விதியை இன்று யாரேனும் மறுக்க முடியுமா?  இது எப்படி சாத்தியமானதோ அதே போன்று அனைத்தையும் அறிய முயன்றால் எதார்த்தத்தை, உண்மையை எட்டுவது எளிது.


ஊரான்.




Thursday, October 28, 2010

விளையாட்டு இரசனைக்கானதா?


டில்லியில் 19-வது காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்தாலும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால்  ஊழல் முறைகேடுகள் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டில் எனக்கு ஈடுபாடு இருப்பதால் பொதுவாக விளையாட்டுப் போட்டிகளை கூர்ந்து கவனிப்பது வழக்கம். அதன்படி காமன்வெல்த் போட்டிகளில் ஒரு பகுதியான மகளிர் டென்னிஸ் போட்டியில் ரோடியோனோவை வென்று சானியா மிர்சா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தை நழுவவிட்டார். இந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும், சானியா ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் ஒரு வித "தேசப் பற்று" இழையோடியதை மறுப்பதற்கில்லை. விளையாட்டிலும் தேசப்பற்று தேவைதானா என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

விளையாட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமேற்றுகிறது. நோய் வராமல் தடுக்கவும்,  நோயுற்றவர்களை நலப்படுத்தவும், வாழ்நாளை நீட்டிக்கவும், உடல் வலியின்றி வாழவும் விளையாட்டும் உடற் பயிற்சியும் உதவுகிறது. 

உழைப்பு மட்டுமே உடலுக்கு வலு சேர்க்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சித்தாள், கொத்தனார் உள்ளிட்ட உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்களின் உழைப்பின் மூலமே உடலுக்கு வலு சேர்த்துக் கொள்கின்றனர். உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட மூளை உழைப்பாளிகளுக்கு ஒப்பீட்டளவில் நோய் வர வாப்புள்ளது. எனவே உடற்பயிற்சியும் விளையாட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது.

கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி உள்ளிட்ட சில குழு விளயாட்டுகளில் உள்ளத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தனிநபர் விளையாட்டைவிட குழு விளயாட்டுகளில் கூடுதலான பயிற்சி உள்ளத்திற்கு கிடைக்கிறது. இலக்கை அடைவதற்கு சிந்தனையை சிதறவிடாமலும், அணியின் பிற வீரர்களைப் பயன் படுத்தும் கூட்டுழைப்பின் (team work) அவசியத்தையும் பயிற்றுவிக்கிறது. ஆயிரம் நாட்கள் தியானப்பயிற்சி செய்தாலும் கிடைக்காத மனதை-சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது விளையாட்டு. 

விளையாட்டைப் பார்ப்பதென்பது அதன் நுணுக்கங்களை அறிந்து எது தமக்கு ஏற்ற விளையாட்டோ அதைத் தெரிவு செய்து விளையாடுவதன் மூலம் ஒருவர் தனது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக இருக்க வேண்டும். 

விளையாட்டில் பிரபலமானால் 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், அரசு வேலையோ அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையோ கிடைக்கும், அதிகமாகப் பிரபலமாகி விட்டால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்து மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. அணியில் இடம் பிடிக்க முறைகேடுகள் செய்வதற்கும் தயங்குவதில்லை. ஐ.பி.எல் போன்ற நிறுவனங்கள் விளையாட்டை வணிகமயமாக்கி வருகின்றன. விளையாட்டை இரசணைக்கானதாக மாற்றி வருகின்றனர்.

விளையாட்டில் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை. கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகன் சச்சினின் சத சாதனை-கிரிக்கெட்டில் வீசப்படுகிற ஒவ்வொரு பந்தும் எடுக்கிற ஒவ்வொரு ரன்னும் சாதனைதானே-உசைன் போல்ட்டின் ஓட்டப்பந்தய சாதனை, ஒரே நேரத்தில் 20 பேருடன் சதுரங்கம் ஆடும் ஆனந்தின் சாதனை, கால்பந்தாட்டத்தில் பீலேயின் சாதனை இப்படி சாதனைகளுக்குப் பஞ்சமேது. புகழ், பொருள் என்கிற சுயநலத்தை மட்டுமே வளர்க்கின்ற, பிற எதற்கும் பயன்படாத இது போன்ற சாதனைகளால் என்ன பயன்?

நாடுகளுக்கி்டையே போட்டிகள் நடைபெறும் பொழுது ஒருவித தேச வெறி திட்டமிட்டே வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்கு நம்மை அறியாமலேயே நம்மிடம் நிலவும் ஒருவித 'தேசப்பற்று' இடமளிக்கிறது. 

சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவோரை பாராட்டும் பக்குவமும் பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதில்லை. தனது நாட்டுக்காரன், மாநிலத்துக்காரன், மாவட்டத்துக்காரன், ஊர்க்காரன், மதத்துக்காரன், சாதிக்காரன், சொந்தக்காரன், நண்பன் வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது.

உள்ளத்திற்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் சாதனமாகத்தான் விளையாட்டைப் பார்க்க வேண்டும். பிறர் விளையாடுவதைப்பார்த்து நாமும் விளையாட்டில் பங்கேற்று நமது உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்ளவேண்டும். விளையாட்டு இரசனைக்கானதல்ல. அது உடல் நலத் தேவைக்கானது.

ஊரான்.