Saturday, May 19, 2012

‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?

பொதுவாக நமது நாளேடுகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தினமணியின் வெள்ளிமணி போல ஆன்மீக மலர்கள் வருவதுண்டு. பெரும்பாலும் இவை நான்கு பக்கங்களுக்கு மிகாது. ஆங்கில நாளேடுகளில் இப்படி தனியாக ஆன்மீக மலர் எதுவும் வருவதில்லை.


வாழ்க்கையில் ஏற்றம் பெற முடியாதவர்கள் இனி எந்த அம்பாளை வழிபட்டால் ஏற்றம் பெறலாம் என்பதை வழிகாட்டுவதற்காகவே இத்தகைய ஆன்மீக மலர்கள் வெளியிடப்படுகின்றன. செய்தித்தாள்கள் என்றைக்கு தோன்றினவோ அன்றைக்கே இவ் ஆன்மீக மலர்களும் வரத்தொடங்கின.


இவைகளைப் பார்த்து நாமும் பெரியபாளையத்தம்மன் - தேவி கருமாரியம்மன் - காஞ்சி காமாட்சி - பன்னாரி அம்மன் - படவேட்டம்மன் - அங்காள மரமேஸ்வரி - சமயபுரம் மாரியம்மன் - உறையூர் வெக்காளியம்மன் - மதுரை மீனாட்சி -  ‘கன்யா’ குமரிஅம்மன்......... என ஆயிரத்தெட்டு அம்மன்களையும் தரிசித்துவிட்டோம்.


ஆனாலும் இன்னும் நல்ல வேலை அல்லது அரசு வேலை கிட்டவில்லை; வெளிநாட்டுக் கனவு நனவாகவில்லை; நாற்பது வயதாகியும் நல்ல வரன் கிட்டவில்லை: சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியவில்லை; குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்சனை தீரவில்லை; தொழிலில் முன்னேற்றம் இல்லை; தொட்ட நோய் விட்டபாடில்லை; கடன் தொல்லை தீரவில்லை.


ஸ்ரீ ஆயிரங்காளியம்மன்


தொல்லைகள் நம் வாழ்வில் ஒரு நெடுந்தொடராய் நீள்வதால்தான் ஒரு அம்மனுக்குப் பதிலாக ஓராயிரம் அம்மன்களை வழிபடுகிறோம் பரிகாரம் தேடி அலைகிறோம். செய்தித்தாள்களும் நமக்கு வழிகாட்டுதல்களை வாரி வாரி வழங்குகின்றன. நாம் கேட்டறியாத - பார்த்தறியாத புதப்புது அம்மன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஒரு அம்மன் போதாது என்பதால் ஓராயிரம் அம்மன்களும் ஒருங்கே உருவெடுத்த காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை அறிமுகப் படுத்துகிறது தினமணி வெள்ளி மணி. (18.05.2012).


இந்த அம்மனோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிப்பாளாம். அதுவும் மே 23, 24 ஆகிய இரண்டே நாட்கள்தானாம். ஐந்து ஆண்டுகள் காத்திருப்பதை தவிர்த்து இந்த ஆண்டே ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைய தினமணி வெள்ளிமணி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அம்மனை வழிபட்டால் ஆனந்தம் கிடைக்குமா என்பதற்கான உத்தரவாதம் உண்டா? தினமணி வெள்ளிமணியிடம்தான் கேட்க வேண்டும்.


அருள் சொரியும் ‘அம்மா’ளம்மன்


தன்னை நாடி வந்தவர்களுக்கு ஆனந்தத்தை மட்டுமே அளிக்கக்கூடிய ஒரு அம்மனின் சாதனைகள் பற்றி கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி ஏடுகளிலும் புகழ் மாலைகள் குவிந்துள்ளன. ஸ்ரீ ஆயிரங்காளியம்மனைப் போல ஐந்து ஆண்டுகள் கழித்துதான் இந்த அம்மனும் அவதரித்துள்ளார். ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் இரண்டு நாட்கள் மட்டும்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் இந்த அம்மனோ  ஐந்து ஆண்டுகளுக்கும் எழுந்தருளியிருப்பார். இவர் மீண்டும் அவதரித்து ஓராண்டாகிவிட்டது. இவரை துதிபாடிய பக்தர்கள் ஓராண்டிலேயே எண்ணிய பலன்களைப் பெற்றுவிடுகிறார்கள். அதனால்தான் “தங்களை வாழவைத்த” அம்மனுக்கு கோடானு கோடி நன்றியினை அம்மனின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறார்கள். தனது உண்மை விசுவாசிகாளால் - உண்மைத் தொண்டர்களால் இவர் ‘அம்மா’ளம்மன் என்றே போற்றப்படுகிறார்.


பெரும்பாலும் அம்மன்கள் கிராமப்புற பாமர மக்களின் தெய்வங்களாகத்தான் கருதப்படுகிறார்கள். பெண்வழிச் சமுதாயம் நிலவிய காலகட்டத்தில் ஆதிக்கம் செய்தோரை எதிர்த்து போராடிய வீரமங்கைகளை தெய்வங்களாகக் கருதி மக்கள் வழிபட்டிருக்க வேண்டும். நாளடைவில் பார்ப்பனர்கள் இத்தகைய அம்மன்களை புராணக் கதைகளோடு இணைத்து தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள தலபுராணங்கள் எழுதி இருக்க வேண்டும்.


‘அம்மா’ளம்மனின் அவதாரமே ஆதிக்கத்தில்தான் தொடங்குகிறது. அதனால் இவரை யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. தொண்டர்கள் தாங்களாகவே முன் வந்து இவரிடம் மண்டியிடுகிறார்கள். வீரதீரப் போர் எதுவும் புரியாமலேயே இவர் வீரத்தாய் என்ற பட்டம் பெற்றிருக்கிறார். நூறாண்டில் செய்ய வேண்டிய மகாத்மியங்களை ஓராண்டிலேயே செய்து முடித்த விட்டதால் இவருக்கு தலபுராணமெல்லாம் பொருந்தாது என்பதால்தான் நேரடியாக பெரியபுராணமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இவரை அண்டிப் பிழைக்கும் அடியார்கள்.


ஊராட்சி – பேரூராட்சி - ஒன்றியம் – வட்டம் – மாவட்டம் – நகராட்சி – மாநகராட்சி – சட்டமன்றம் – நாடாளுமன்றம் – மந்திரி – நல வாரியம் என அருள் அட்டை வைத்திருந்தால் ‘அம்மா’ளம்மனின் அருள் முழுமையாக கிடைக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை! மேற்கண்டவர்களுக்கு அல்லக் கைகளாக இருந்தாலே ‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


மற்ற அம்மன்களை நீங்கள் எளிதில் ஏமாற்றி விடலாம். பலன் கிடைத்தாலும் காணிக்கை செலுத்த மறந்து விட்டால் பழி-பாவம் ஏதும் வராது. ஆனால் ‘அம்மா’ளம்மனை ஒழுங்காக வழிபடவில்லை என்றாலோ அல்லது காணிக்கையை முறையாக செலுத்தவில்லை என்றாலோ இவரது சாபத்திலிருந்து தப்பவே முடியாது. அம்மனின் அருளால் கிடைத்த பலன்கள் அனைத்தும் ஒரு நொடியில் பறிக்கப்படும். பிறகு நடுத் தெருவில்கூட நிற்க இடம் கிடைக்காது. வேலூர் அல்லது பாளையங்கோட்டையில் நான்கு சுவர்களுக்குள்தான் வாசம் செய்ய வேண்டும். ஒரு வேளை மீண்டும் 'அய்யன்' அவதாரம் எடுத்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் விமோசனம் கிடைக்கலாம்.


முன்பு 'அய்யன்' அவதாரம் எடுத்த போது 'அய்யனி'ன் அருளைப் பெற்று ஆதாயம் அடைந்தவர்கள் ஏராளம். இன்று 'அம்மா'ளம்மன் அவதாரம் எடுத்ததால் இவர்களில் சிலர் சோதனைக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு சோதனைகளை எதிர் கொள்வதா அல்லது பரிகாரம் வேண்டி 'அம்மா'ளம்மனிடமே சரணடைவதா? இது 'அய்யனி'ன் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம். ஆனானப்பட்ட பகுத்தறிவின் 'மணி'களே அம்மா'ளம்மனின் அருளைப் பெறவில்லையா?


‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?


‘அம்மா’ளம்மனே போற்றி! போற்றி!!


‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்காதா என மற்றவர்கள் ஏங்குவதும் எனக்குப் புரிகிறது. நம்ம ஊரு அம்மனுக்கு எல்லோரும் சேர்ந்துதான் காணிக்கை செலுத்துகிறோம். ஆனால் அம்மனின் அருள் வேதம் ஓதுவோருக்கும் அறங்காவல் கூட்டத்துக்கும் மட்டும்தானே கிட்டுகிறது.


அம்மா'ளம்மன் அவதாரம் எடுக்க நீங்கள் எல்லோரும் வாக்கு காணிக்கை செலுத்தியிருக்கலாம். அதனால் என்ன? இங்கு மட்டும் அருள் மாறி கிட்டுமா என்ன?