Sunday, June 23, 2013

நடுத்தர வர்க்கத்தின் பகற் கனவு!

‘உனது தேசத்தை நேசி’ (Love your country) என்ற தலைப்பில் மின்னஞ்சல் செய்தி ஒன்று நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதிலிருந்து .....

“12 மாதங்களுக்கு முன்பு 1 டாலரின் மதிப்பு ரூ.43

12 மாதங்களுக்குப் பிறகு தற்போது 1 டாலரின் மதிப்பு ரூ.58

இதைப் பார்த்து இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து விட்டது என நினைக்கிறீர்களா?

இல்லை!

இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

தற்போது இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நமது நாட்டைப் போலவே பல ஆசிய நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சரியான நடவடிக்கைகள் மூலம் சரி செய்யத் தவறினால், வரும் காலங்களில் மேலும் தீவிரமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நமது நாட்டிலேயே பயிரிடப்பட்டு, தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள், தின் பண்டங்கள், தேயிலை, குளிர் பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சுமார் 30 000 கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய செலாவணித் தொகை நமது நாட்டிலிருந்து வெளியே செல்கிறது.

70 முதல் 80 பைசாவிற்குத் தயாரிக்கப்படும் ஒரு குளிர் பானம் ரூ.9 க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு பெரும் தொகை இலாபமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் மிகக் கொடிய செயல்”.

இப்படி இந்தியாவின் உண்மை நிலை கண்டு கவலை அடைந்துள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நடுத்தர வர்க்கம் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். இதிலிருந்து இந்தியாவை எப்படி மீட்பது? அவர்களே சொல்கிறார்கள்.

“நமது நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும் இந்திய நாட்டுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் நாம் இதைச் செய்யவில்லை எனில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து நாம் பயன்படுத்தும் அதே பொருட்களுக்கு வரும் காலங்களில் கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும்.

நீங்கள் அதற்காக என்ன செய்ய முடியும்?

  1. இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை மட்டுமே வாங்குதல்
  2. இந்த நோக்கத்திற்காக முடிந்த வரை அதிகமானோரை இணைக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் தலைவராக மாற வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நமது நாட்டை பாதுகாக்க இது ஒன்றுதான் வழி. அதற்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றுப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கின்றன.

அதன் பட்டியல் இதோ.

  • கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிராண்டா, ஸ்பிரைட் இவைகளுக்குப் பதிலாக
எலுமிச்சை சாறு, பழச்சாறு, குளிர்ந்த லஸ்ஸி - தயிர் – மோர், இளநீர், மசாலா பால் போன்ற பானங்களைக் குடிக்க வேண்டும்.

  • லக்ஸ், லைஃப்பாய், ரெக்சோனா, லிரில், டவ், பியர்ஸ், லெசான்சி, கேமே, பாமோலிவ் சோப்புகளுக்குப் பதிலாக
சிந்தால் மற்றும் கோத்ரேஜ் நிறுவனத் தயாரிப்புகள், சந்தூர், விப்ரோ சீகைக்காய், மைசூர் சான்டல், மார்கோ, நீம், எவிட்டா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா, சந்திரிகா சோப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், சிபாகா, போர்ஹான்ஸ், மென்டாடெண்ட் பற்பசைகளுக்குப் பதிலாக
நீம், பபூல், பிராமிஸ், வீக்கோ வஐ்ரதந்த்தி, புரூடெண்ட், டாபர், மெஸ்வாக் போன்ற இந்திய பற்பசைகளைப் பயன்படுத்துங்கள்.

  • பல் துலக்க கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், ஓரல்-பி பிரஷ்களுக்குப் பதிலாக
புரூடெண்ட், அஜந்தா, பிராமிஸ் பிரஷ்களைப் பயன்படுத்துங்கள்.

  • பாமோலிவ், ஓல்டு ஸ்பைஸ், ஜில்லெட் கிரீம்களுக்குப் பதிலாக
கோத்ரேஜ், இமாமி சேவிங் கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.

  • முகச்சவரம் செய்வதற்கு செவன்-ஓ–கிளாக், 365, ஜில்லெட் பிளேடுகளுக்குப் பதிலாக
சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா பிளேடுகளைப் பயன்படுத்துங்கள்.

  • முகத்திற்கு பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், வர் டு வர் பவுடர்களுக்குப் பதிலாக
சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிலஸ் போன்ற பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • அனிக்ஸ்பிரே, மில்கானா, எவரி் டே மில்க், மில்க்மெயிட் பால் பவுடர்களுக்குப் பதிலாக
இன்டியானா, அமுல், அமுல்யா பால் பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • ஹாலோ, ஆல்கிளியர், நைல், சன் சில்க், பேன்தீன், ஷாம்புகளுக்குப் பதிலாக
லேக்மி, நிர்மா, வெல்வெட் போன்ற ஷாம்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கைபேசிகளுக்கு ஹட்சுக்குப் பதிலாக
பிஎஸ்என்எல், ஏர்டெல் இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கேஎப்சி, மேக்டோனால்ட்ஸ், பிசா ஹட், எ&டபிள்யூ உணவுப் பொருட்களுக்குப் பதிலாக
தந்தூரி, சிக்கன், இட்லி, தோசை, உப்புமா உணவுகளை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும். அது இந்தியாவை காப்பாற்றும். இன்றே அதற்காக உறுதியாக ஒரு முடிவை எடுப்போம்”.

இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குவதன் மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 30 000 கோடி ரூபாயை தடுத்து நிறுத்தி இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும் எனக் கனவு காண்கின்றனர்.

“நமது நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். ஒவ்வொரு நாளும் சுதந்திரத்திற்கான போராட்ட நாளாகும். பலரை பலி கொடுத்துதான் நாம் சுதந்திரம் வாங்கினோம். நாம் அமைதியாக வாழ்வதற்காகத்தான் அவர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை உலக மயமாக்குவது என்கின்றனர் பன்னாட்டு நிறுவனங்கள். உங்களையும் என்னையும் போன்ற இந்தியர்களுக்கு இது நாட்டை மறுகாலனியாக்குவதாகும். அப்போது காலனியவாதிகள் இந்தியாவை விட்டுச் சென்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் தவறு ஏதும் செய்யமாட்டார்கள். அது பொன் முட்டை இடும் வாத்தாக இருந்தாலும் வெளியெ போகச் சொல்கிறோம்.

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் அரசியல் சுதந்திரம் மட்டும் இருப்பது பயனற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரசியா, தென் கொரியா, மெக்சிகோ போன்ற நாடுகளின் பட்டியல் மிக நீளமானது. அவர்களின் அனுபவங்களிலிருந்தும் நமது வரலாற்றிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டும். உண்மையான இந்தியனாக இருந்து நமது கடமையைச் செய்வோம்”.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது வெறும் வணிக நோக்கம் கொண்டது மட்டுமல்ல அது இந்தியாவை மறுகாலனியாக்குகின்ற நோக்கமாகும் என்பதை நடுத்தர வர்க்கத்தினர் புரிந்து வைத்திருந்தாலும் அதற்கு இந்திய அரசு கடைபிடிக்கும் உலக மயம் – தனியார் மயம் - தாராள மயம் என்கிற கொள்கைகள்தான் காரணம் என்பதை உணரத் தவறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அகலக் கதவைத் திறந்துவிடும் அரசாங்கத்தை தூக்கி எறியாமல் நாடு மேலும் மேலும்  அடிமையாவதை தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் உணர மறுக்கின்றனர். நாடாளுமன்ற வாக்குச்சீட்டு அரசியல் கட்சிகள் அனைத்துமே இக்கொள்கைகளில் ஒன்றுபடுகின்றனர் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்தான்

“இந்தியனாக இரு இந்தியப் பொருட்களையே வாங்கு! என்று சொல்லும் அதே வேளையில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாம். நாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரிகள் அல்ல”. என பல்டி அடிக்கின்றனர்.

மேலும் இவர்களே முன்வைக்கும் கோரிக்கைகளில் கூட இவர்களால் உறுதியாக நிற்க முடியவில்லை. அதனால்தான்

“பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அந்நிய நாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் உங்களால் கைவிட முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்”.

என தங்களால் முடியாது என முடிவு செய்து கொண்டு கடைசியில் ஒரு பொருளையாவது கைவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்.

“விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை பரப்புங்கள். தயை கூர்ந்து இந்தியனாக இருக்க முயலுங்கள். உண்மையான இந்தியன் இதை பரப்ப வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம். இந்தியாவை நேசிப்போம்.”

எனக்கூறி தேசப்பற்றை நெஞ்சு கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமீபத்தில் இமயத்தையே உலுக்கிய பெரு வெள்ளம் போல் ஆர்ப்பரித்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களைக் காக்கும் அரசுகளும் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி சின்னாபின்னமாகி மண்ணில் புதையுண்டு போவார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் போராட்டங்களை கணக்கில் கொள்ளாமல் நடுத்தர வர்க்கம் முன்வைக்கும் சிறு துளி பெரு வெள்ளம் என்கிற “குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்” என்கிற சிந்தனைப் போக்கு மறு காலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும்.

தொடாபுடைய பதிவுகள்:

3 comments:

  1. நடுத்தர வர்க்கம் முன்வைக்கும் சிறு துளி பெரு வெள்ளம் என்கிற “குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்” என்கிற சிந்தனைப் போக்கு ஒப்பாரியாய்தான் முடியும்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான அவசியமான பதிவு. அன்றே சுதேசிக் கொள்கைகளை நம் மூத்தோர் விதைத்த போதும் திருந்தா ஜென்மங்களாய் மீண்டும் பாழுங்கிணற்றில் விழுந்தோம். உள்ளூர் பொருட்களை கொள்முதல் செய்வதே நமது நவீன- சுதேசி இயக்கத்தின் தொடக்கமாய் அமையும். சிறு பொறி சீக்கிரம் பற்ற வைக்கப்பட்டு மளமளவென தேசம் எங்கும் பரவிடும் என விரும்புகின்றேன்.

    ReplyDelete
  3. சீன தயாரிப்புகளையும் இதை போல கைவிடுவதன் மூலம் நிறைய சிறு, குறு தொழில்களையும் காக்க முடியும் என்கிற உண்மையை ஏன் எவரும் சொல்வதில்லை.

    ReplyDelete