Saturday, September 17, 2011

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா?

"திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.

எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும்.  திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது "இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, "ஸ்ரீயை நமஹ' என்றோ, "மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்."

17.09.2011 தினமணி வெள்ளிமணியில் குமரன் என்பவர் "பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்? என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.


"திலகம்,பொட்டு,குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,  இறை வழிபாட்டின் ஓர் அங்கம்"


மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை என்பது மட்டுமே இங்கே முழு உண்மையாக இருக்க முடியும். இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதுகூட முழு உண்மை அல்ல.  பொட்டு இல்லாமல் இருந்தால் அமங்கலி என இழிவாகப் பார்ப்பதால்தான் சமூகத்திற்குப் பயந்து பல பெண்கள் ஏதாவது ஒரு பொட்டை வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்ளும் போதுகூட தன்னுடைய முகத்திற்கும், நிறத்திற்கும், அன்று உடுத்தியிருக்கின்ற உடைக்கும், காலில் அணிந்திருக்கும் செருப்புக்கும் பொருத்தமான ஒரு பொட்டைத்தான் பலரும் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் 'ஸ்டிக்கர்' பொட்டுகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பொட்டில் பொதிந்திருக்கும் இன்றைய அழகியலின் உளவியல்.
அதனால்தான் முகங்களிற்கு ஏற்ற பொட்டு, எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு அதாவது சதுர முகம், வட்ட வடிவ முகம், முக்கோண வடிவ முகம், இதய வடிவ முகம் என முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டை தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.


நெற்றியில் எட்டனாவை ஒட்டியதைப் போல வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள் பட்டிக்காட்டின் அடையாளங்கள். உற்றுப்பார்த்தாலும் தெரியாத 'ஸ்டிக்கர்' பொட்டுகள் நவீன காலப் பெண்களின் அடையாளங்கள். இன்றையப் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டுமா என்ன?

நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் நெற்றிப் பொட்டை குளிர்விப்பதற்கும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுப்பதற்கும் தீய சக்திகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும்  தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காப்பதற்கும் பொட்டு பயன்படுகிறது என்பது உண்மையானால் இத்தகைய நன்மைகள் கிடைப்பது நல்லதுதானே. பிறகு ஏன் விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது என இச்சமூகம் தடை போடுகிறது. விதவைகள் மட்டும் இத்தகையப் பயன்களைப் பெறக்கூடாதா?

வெள்ளிமணி கட்டுரை பற்றி " விதவைகளை ஏன் குங்குமம் இடக்கூடாது என்று அவர்களை ஓரங்கட்டுகின்றோம்?"  என்று கார்த்தி என்ற வாசகர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

பொட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் சாதனைகள் எதையும் செய்வதில்லையா? அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா? எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள்? நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் பொட்டு முக்கியப் பங்காற்றுகிறது என்பது உண்மையானால் இந்துப் பெண்கள்தானே, அதுவும் பொட்டு வைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள்தானே அறிவின் உச்சாணியில் இருக்க வேண்டும். 

பொட்டு வைப்பதால் இவ்வளவு பயன் என்றால் ஆண்களும் அதுபோல வைத்துக் கொள்வதில்லையே ஏன்? இந்து மதத்தின் 'பெருமையை' மேலை நாடுகளில் பறைசாற்றிய விவேகானந்தர்கூட பொட்டோடு இருக்கும் படத்தைக் காணமுடியவில்லை. அவர் நெற்றியில் பொட்டு இல்லை என்பதால் அவரிடம் பக்தி இல்லை என்று பொருளாகிவிடுமா?
தீய எண்ணங்கள் எழாமல் பொட்டு பாதுகாக்கிறதாம்.இதை ரஞ்சிதாக்களிடமும் நித்தியாநந்தாக்களிடமும்தான் கேட்க வேண்டும்.

இந்து மதத்தின் அடையாளமாக மட்டுமே தோன்றிய பொட்டு இன்று அழகியலின் ஒரு கூறாக மாறிவிட்டது. பொட்டு வைத்துக் கொண்டால் நீ அழகாய் இருக்கிறாய் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அந்தப் பொட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். பொட்டு உனக்கு நல்லா இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த கணமே அந்தப் பொட்டு குப்பைத் தொட்டியில் ஒட்டிக் கொள்கிறது. இதற்கு மேலே பொட்டில் ஒரு வெங்காயமும் இல்லை.

மதம் மாறிய கிருத்தவர்களிடம் இந்து மதத்தின் எச்சங்கள் இருப்பதால்தான் அவர்களிடமும் பொட்டு இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

பொட்டு கலைந்துவிட்டால் தாலிக்கு ஆபத்து என்று சொல்லித்தான் பொட்டைப் பாதுகாத்து வருகிறார்களே தவிர பொட்டில் இருக்கும் அதி உயர்ந்த 'அறிவியல் உண்மைகளால்' அல்ல. பேருந்துகளில் ஏற்படும் நெரிசலும், சென்னைப் புழுக்கமும் சேரும் போது கெட்டியாய் ஒட்டிய 'ஸ்டிக்கர்' போட்டுகளே காணாமல் போகும் போது குங்குமப் பொட்டின் கதி என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்! சென்னையில் ஆகப் பெரும்பான்மையான பெண்கள் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் விதவையாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாறி வரும் சமூகச் சூழலில் பண்பாட்டு விழுமியங்கள் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. "அய்யய்யோ பொட்டு போச்சே" என ஒப்பாரி வைப்பதாலோ அல்லது அதற்கு அறிவியல் சாயம் பூசுவதாலோ அவற்றை பாதுகாக்க முடியாது. பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமங்கலி - சுமங்கலி என மாதர்தம்மை இழிவு செய்யும் பொட்டு இருக்க வேண்டிய இடம் நெற்றியல்ல,  குப்பைத் தொட்டி.

2 comments:

  1. சிறந்த ஆக்கம் பாராட்டுகள் பகுத்தறியும் பக்குவத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர் அதாவது வறட்டுத்தனமாக பொட்டு வைத்து கொள்வது என வந்து விட்ட இந்த காலத்தில் பொட்டு வைத்து கொள்வது பற்றியும் நமது தமிழரின்பழைய அடையாளமான வர்ம புள்ளிகள் இதை முறைப்படி சில மூலிகைகள் கொண்டு பண்படுத்த தெளிவான சிந்தனை கொடுக்கும் என்கிறது இதையே உங்களின் கட்டுரைகளும் காட்டுகிறது பாராட்டுகள் தொடர்க..

    ReplyDelete