Thursday, November 10, 2011

பாலும் பசுவதையும்!

”தமிழகத்தில் பசு வதையைத் தடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் இந்து வழக்குரைஞர்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்”

”வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க வழக்குரைஞர்கள் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்”

புதன் கிழமை (09.11.2011) அன்று வேலூரில் ”இந்து வழக்குரைஞர் முன்னணியை” தொடங்கி வைத்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

ஏதோ ஒரு கட்சிக்காரன் வந்தான். ஒரு சங்கத்தைத் தொடங்கினான், என்று இதை மிகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

குஐராத்தில் பசுவதை தடைச்சட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. பசுவைக் கொன்றால் சிறைவாசம் உறுதி. ஏற்கனவே இருந்த ஓராண்டு சிறை தண்டனையால் பசுக்கொலையை தடுக்க முடியவில்லையாம். அதனால் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக்கிவிட்டார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போதே மசோதா தயாராகிவிட்டது. இதை செயல்படுத்தக் கோரி போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறார்கள் இந்து மதவெறியாளர்கள்.

எது வதை?

இந்து முன்னணி, பாரதிய ஐனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மத அமைப்புகள் மட்டும் பசு வதையைத் தடுக்க முணைப்பு காட்டுவதேன்? பசு இந்துக்களின் தெய்வமாகக் கருதப்படுவதாலா? அல்லது உயிர் வதைக் கூடாது என்பதாலா? பசுவைக் கொல்லக் கூடாது என்பவர்கள் ஏன் எருது வதையை எதிர்ப்பதில்லை?

கொல்வது மட்டும்தான் வதையா? கொடுமைப்படுத்துவது, இம்சிப்பதெல்லாம் வதையில் சேராதா? “ஏண்டா போட்டு வதைக்கிற?” என்றுதானே நம்மை மற்றொருவர் இம்சிக்கும் போது கேட்கிறோம். எனவே வதை என்பதை இம்சித்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாமே!

உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா.

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?

காந்தியும் ஆட்டுப் பாலும்

“பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மீகமானதேயாகும்” என்று காந்தி கடைபிடித்த ஆன்மீகம் கருதி பசு வதை கூடாது என்கிறார்களா?

“எருமைகளின் (அவைகளும் பசுக்கள்தானே) மடிகளிலிருந்து கடைசி சொட்டுவரையிலும் பாலைக் கறந்து விடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன; மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை.” என்று காந்தி சொன்னாரே அத்தகைய கொடுமை கூடாது என்பதால் பசுவதை கூடாது என்கிறார்களா?

“நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது” என்று மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கடைசி வரை பசுவின் பாலைத் தொடவில்லை காந்தி. “சத்தியாகிரகப் பேராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்து வந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடு இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது” என்று காந்தி உயிருக்காக சத்தியத்தைக் கைவிட துணிகிறார்.

“நான் விரதம் எடுத்துக் கொண்ட போது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல, இவைகளெல்லாம்அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது”  என காந்தி பின்னாளில் சத்தியத்தைக் கைவிட்டார்.

காந்தியின் பல்டி

“அதனால்தான் நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, … பசுப்பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது.  பசுப்பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம்” என்று காந்தி பின்னாளில் பால் பண்ணைகளுக்காக குரல் கொடுக்கிறார். உயிரே போனாலும் பரவாயில்லை என்று பசுவின் பாலைத் தொடாதவர் பிறகு யாருக்காக பால்பண்ணைகளை அமைக்கக் கோருகிறார்?

காந்தியின் இந்த தலைகீழ் மாற்றம் ஏன் நடந்தது? யாருக்காக நடந்தது? இங்கேதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அடங்கியுள்ளது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உட்கொண்டார்கள், அதுவும் பசு மாமிசம்தான் அவர்களின் பிரியமான உணவு என்பதற்கான ஆதாரங்கள் வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் காணக்கிடந்தாலும் இன்று மட்டும் அவர்கள் பசுவை ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? விவசாயம் தெரியாது, மந்திரம் ஓதி பிழைப்பதைத்தவிர வேறு வேலைகள் எவுதும் தெரியாது. எப்படி பிழைப்பது?  எதைத்தின்பது? என்கிற இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலைத் தேர்வு செய்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பால் இல்லாமல் அவர்கள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏழ்மையும் மாட்டுக்கறியும்

மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பியிருக்க வேண்டும். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக அறியப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு பொதுவில் இந்துக்களின் தெய்வமாகக் விரிவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதில்தான் காந்தியும் வீழ்ந்திருக்க வேண்டும்.

இது ஏதோ அனுமானம் அல்ல. பழைய வரலாற்றின் எச்சங்களை இன்றும் காண முடியும். இன்று பால் இல்லாமல் பிறர் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் பார்ப்பனர்களால் உயிர் வாழ முடியாது. எனவே பார்ப்பனர்களின் தேவையிலிருந்து எழுந்ததுதான் பசுப்பாதுகாப்பு. மாட்டுக்கறி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் உணவாக இன்றும் நீடிப்பது வரலாற்றின் எச்சம்தானே!

இராம.கோபாலனின் உள்நோக்கம்

பசுவதையை உண்மையியே எதிர்ப்பவர்கள் என்றால் ஒரு கல்லூரி நிர்வாகத்தால் (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html) பசுக்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்? எதிர்த்து ஏன் கேள்வி கேட்கவில்லை? பணக்காரன் பசுவைக் கொன்றால் பரவாயில்லை. ஆனால் ‘பறையன்’ பசுவைக் கொள்வதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘பறையனாவது’ மடி வற்றிய பசுவைத்தான் கொள்கிறான். ஆனால் இங்கே பணக்காரன் பால்சுரக்கும் பசுக்கைளையல்லவா கொன்றிருக்கிறான்.

தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கெடுவதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் இதைவிட மிக மோசமாக இராணிப்பேட்டையில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பண்மடங்கானது. இராணிப்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள திருமலை கெமிக்கல்ஸ் (இது ஒரு பார்ப்பனருக்குச் சொந்தம்), அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள புளியந்தாங்கல், புளியங்கண்ணு, அவரக்கரை, இராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள ஏரி குளங்களை பாழாக்கியதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கி விவசாயத்திற்கும், குடிப்பதற்றும் பயன்படாத நிலைக்கு ஆளாக்கிவிட்டன. இத்தகைய நீரைக் குடிக்கும் பசுக்கள் உள்ளிட்ட கால் நடைகளும் இனம் புரியா நோய்களுக்கு ஆளாகி இறந்து போகின்றன. இங்கேயும் பசுக்கள் கொல்ப்படுகின்றன. இவை எல்லாம் இராம கோபாலனுக்குத் தெரியாதா என்ன?. இத்தகைய ஆலைகளால்தான் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்களில் உலகிலேயே இராணிப்பேட்டை இரண்டாம் இடத்தில் உள்ளது.


மேற்கண்ட இரு கோரிக்கைகளிலும் மக்கள் நலன் என்பதைவிட இஸ்லாமியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியிலிருந்து வைக்கப்பட்டதும் அதையொட்டி மத மோதலுக்கு வித்திடுவதும்தான் இராம.கோபாலனின் நோக்கமாக இருக்கமுடியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தோல் ஆலைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதைவிட பசுக்கள்/மாடுகள் இஸ்லாமியர்களுக்காகவே வெட்டப்படுகின்றன என்பதும்தானே இவர்களது வாதம்.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்த நிறுத்த கோரிக்கை வைக்கும் இராம் கோபாலன், திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்திருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும். இந்து முன்னணியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

2 comments:

  1. தான் ஊன் பெருக்க தான் பிரித்து ஊனுண்பான் என்னும் வள்ளுவன் வழி என் வழி, பசுவதை தடுக்க வேண்டும் என்றால் அனைத்து உயிர்களை கொள்வதையும் தான் தடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்.. நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் உண்மையே, இருந்தாலும் பிராமணன் ஒரு காலத்தில் இளம் கன்றுக்குட்டியின் மாமிசத்தை விரும்பி உண்டான் என்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அநேகமாய் பெரிய விவாதம் ஆகவும் இது ஆகலாம்...

    ReplyDelete
  2. திருடனை திருட்டுப்பயலே என்று திட்டினால் ,ஆமாம்
    நான் திருடன்தான் என்றா ஒத்துக்கொளவான்.ஒத்துக்கொள்ளவே மாட்டான். நான்
    திருடியதை நீ பாத்தியாடா என்பான்.திருடனே,இப்படி
    என்றால் ஆதியில் அவர்கள் மாட்டுக்கறி தின்றதையா
    ஒத்துக்கொள்ளப்போகிறார்கள்.

    ReplyDelete