Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Thursday, May 29, 2025

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

அக்டோபர் 7, 2019 அன்று எழுதிய கட்டுரை. மீள் பதிவு.
****
ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.









மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.












“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

Tuesday, August 29, 2023

கேரளாவை உலுக்கிய ஐயங்காளியின் மாட்டு வண்டிப் போராட்டம்!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளம்!

கேரளா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாயர் டீ கடை, மூனாறு உள்ளிட்ட எழில் மிகு தேயிலைத் தோட்டங்கள், கொச்சி உள்ளிட்ட அழகிய கடற்கரை நகரங்கள், நேந்திரம் சிப்ஸ், கதக்களி, மகாபலி, ஓணம், அன்றைய ராதா-அம்பிகா முதல் இன்றைய கும்கி லட்சுமி மேனன் வரையிலான கேரள நாட்டிளம் பெண்டிர், இறுதியாக முல்லைப் பெரியார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, ஐயங்காளி!

உங்களுக்குத் தெரியுமா! நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை புலையர்கள் தூய்மையான ஆடைகளை உடுத்தக் கூடாது; கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைத்தவிர வேறு துணி ஆடைகளையோ, தங்கநகை ஆபரணங்களையோ அணியக்கூடாது; திருவனந்தபுர நகர வீதிகளில் நுழையவோ நடக்கவோ கூடாது; மாட்டு வண்டிகளில் (அன்றைய பிளஷர் கார் போல!) பயணம் செய்யக் கூடாது; பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலக் முடியாது என்ற நிலைதான் இருந்தது. கேரளாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகளில், ஒரு சில தீண்டத்தகாத சாதிகளில் ஒன்றுதான் புலையர் சாதி.
 
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்று கல்வியில், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில், அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

 
மாட்டு வண்டிப் போராட்டம்

1893 ஆம் ஆண்டு ஒரு நாள் வெள்ளை வெளேர் சட்டையுடன், தோள்மீது படிந்த துண்டு மற்றும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சாட்டையைச் சுழற்றியவாறு திருவனந்தபுரம் வீதிகளில் மாட்டு வண்டியில் கம்பீரமாய் ஒருவன் பயணம் செய்கிறான். நாயர் சாதி ஆண்களும், பெண்களும் மட்டுமே பயணிக்கக் கூடிய காலத்தில், நாயர் அல்லாத முப்பது வயதே ஆன இளைஞன் ஒருவன் பயணிக்கிறான்.
 
பொது வெளியில் எங்கெல்லாம் புலையர் சாதி மக்கள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு தனது நடைபயணத்தைத் தொடங்குகிறான் 1863 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28  அன்று பிறந்த ஐயங்காளி என்ற போராளி.
 
1898 இல், அரளமூடு சந்தையை நோக்கி பலராமபுரம் சாலியர் தெருவில் நடைபயணம் நுழைந்த போது, தடையை மீறி புலையர்கள் உள்ளே நுழைவதா? என‌ ஆத்திரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தத் தாக்குதல் புலையர்களால் முறியடிக்கப்பட்ட பிறகே, பொதுப் பாதையை அவர்களால் பயன்படுத்த முடிந்தது.
 
இதன் விளைவாக சாலியர் கலவரம் என்றழைக்கப்படும்  இந்தப் போராட்டம் திருனந்தபுரத்தை ஒட்டி உள்ள கழக்கூட்டம், கனியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவுகிறது.
 
பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு, ஐயங்காளி அவர்கள் மேற்கொண்ட இந்தப்போராட்டத்தின் விளைவாக 1900 ஆம் ஆண்டு முதல், புலையர்கள் பொது இடங்களில் நடப்பதற்கான சூழ்நிலை உருவானது.

கல்விக்கான போராட்டம்
 
ஐயங்காளி அவர்களின் போராட்டம் இதோடு நிற்கவில்லை. புலையர்கள் கல்வி பயில பொதுப்பள்ளிகளில் அவர்களை சேர்க்கக் கோரி அரசிடம் முறையிடுகிறார். ஒரு முறை மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறார். பிறகு, தானே புலையர்களுக்கான பள்ளி ஒன்றைத் திறக்கிறார். ஆதிக்கச் சாதியினர் இதைக் கடுமையாக எதிர்த்ததோடு, முதல் நாளே அவரது பள்ளியை எரிக்கின்றனர்.
 
பொதுப் பள்ளியில் புலையர்களை சேர்க்கவில்லை என்றால், ஆதிக்கச் சாதியினரின் நிலங்கள் தரிசாக விடப்பட்டு, அதில் களைகள் மட்டுமே முளைக்கும் என்கிற போர்ப் பிரகடனத்தை அறிவிக்கிறார் ஐயங்காளி.
 
அதுவரை, புலையர்களின் உழைப்பில் உண்டு வாழ்ந்த ஆதிக்கச் சாதிக் கும்பல் அரண்டு போகிறது. இதன் விளைவாக புலையர்களை பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதற்கான அரசாணை ஒன்றை ஆங்கிலேய‌ அரசு வெளியிடுகிறது. இதற்கும் ஆதிக்கச் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், 1910 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் அரசாணைகளை வெளியிட்ட பிறகே, புலையர்கள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
 
புலையர்கள்பொதுச் சாலைகளைப் பயன்படுத்த, தூய்மையான ஆடைகளை அணிய, பொதுப் பள்ளிகளில் கல்வி பயில, “கல்லுமல சமரம் என்று அழைக்கப்படும் பேரெழுச்சி 1915 இல்  நடைபெற்றது.

தூய ஆடை அணியக்கோரி போராட்டம்
 
கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைக் தவிர துணி உள்ளிட்ட வேறு ஆடைகளை புலையர் பெண்கள் அணியக்கூடாது என்றிருந்த தடையை உடைக்க, அவற்றையும் தூக்கி வீசுங்கள் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுக்கிறார் ஐயங்காளி. இதை அறிந்த ஆதிக்கச் சாதியினர் புலையர்கள் நடத்திய கூட்டத்தில் தாக்குதல் நடத்தியதோடு, புலையர்களின் வீடுகளையும் தீயிட்டு எரிக்கின்றனர். இதற்கு எதிராக, பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொள்கிறார் ஐயங்காளி.

மகாத்மா ஐயங்காளி
 
மகாத்மா காந்தி கேரள மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பாகவே, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை விழிப்புணர்வு செய்ததில் ஒரு அழியாத் தடத்தை ஏற்படுத்தியதால்தான், ஐயங்காளி, மகாத்மா ஐயங்காளிஎன அழைக்கப்படுகிறார். அதன்பிறகுதான் காந்தி மகாத்மாவாகிறார்.
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 முதல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் திருவிதாங்கூர் அசெம்ளிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் ஐயங்காளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
ஐயங்காளியை தவிர்த்துவிட்டு கேரள வரலாற்றை எழுத முடியாது. அதனால்தான் திருவனந்தபுரத்திலுள்ள பழை விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹால்பெயர், மகாத்மா ஐயங்காளி ஹால்என 2019 முதல் அழைக்கப்படுகிறது. கேரள ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம், 2010 முதல் ஐயங்காளி பெயரில் அழைக்கப்படுகிறது. 1980 இல் ஐயங்காளி அவர்களின் சிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
 
எந்த சனாதன சக்திகள் ஐயங்காளிகளை அன்று அடக்கி ஒடுக்க முனைந்ததோ, அதே சனாதன சக்திகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, இன்று, ஐயங்காளிகளுக்குப் புகழாரம் சூட்டுகிறார். எச்சரிக்கை! சனாதன மீட்டுருவாக்கம் நடைபெறும் இன்றைய சூழலில் ஓராயிரம் ஐயங்காளிகள் இன்று தேவைப்படுகிறார்கள்! சனாதனிகளை வீழ்த்த!
 
ஊரான்
 
THE PRINT ஆங்கில ஏட்டில் Keshav Padmanabhan அவர்கள் எழுதிய‌ ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை.

https://theprint.in/theprint-profile/ayyankalis-bullock-cart-ride-changed-caste-dynamics-in-kerala/1734496/?amp

Monday, February 3, 2020

காந்தியும் பூணூலும்!

ஒருமுறை காந்தி கங்கையில் நீராடிவிட்டு வரும்பொழுது அவர் தலையில் உச்சிக்குடுமியும் உடம்பில் பூணூலும் இல்லாததைப் பார்த்து “இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ள நீங்கள் பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள், ஒவ்வொரு இந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்று ஒரு சன்னியாசி கேள்வி எழுப்புகிறார்.

முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர்.
“சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால் மற்றவர் இனத்துக்கு மாத்திரம் அதை போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

“இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் எல்லாம் போய் அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் விஷயங்களும் நீங்கிய பிறகு இந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்பட முடியும். ஆகையால் பூணூல் போட்டுக் கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது.”

“அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின் அப்போது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். இந்து சமயத்தை மேம்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை.”

ஆம்! ஒருவன் பூணூல் அணிந்து கொள்வது, தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதற்கான அடையாளம்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்வதும் இத்தகைய குணாம்சம் உடையதே! எனவே, பூணூல் அணிந்து கொள்வதும், பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்வதும் வேறு வேறு அல்ல.

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை என்ற நூலிலிருந்து.

ஊரான்

Saturday, March 14, 2015

அரை டிரவுசர்களால் 'லோல்'படும் இந்தியா! - 1

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலே போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
  1. காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தன்
  2. கோட்சேவுக்கு கோவில்
  3. காந்தியைக் கொன்ற டிசம்பர் 30 ல் கோட்சேவின் திரைப்படம் வெளியீடு
  4. காந்தி பிறந்த நாளில் குப்பை கூட்டுதல் – காந்தியைப் பெருமைப்படுத்தவா?
  5. இந்தியாவை இராமணின் பிள்ளைகள் ஆள வேண்டுமா? இல்லை முறைகேடாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா?
  6. பகவத் கீதை தேசிய நூலாக்கப்படும் – பிறப்பால் ஏற்றத்தாழ்வை பாதுகாக்கவா?
  7. அடுத்த கல்வி ஆண்டு (2015-16) முதல் 5ம் வகுப்பிலிருந்து பகவத் கீதை – அரியானா அரசு
  8. கிருஸ்துமஸ் தினத்தில் வாஜ்வாய்க்கு பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் – பரிசுகள்: ஏசு பிறந்த நாளை மறக்கடிக்கவா?
  9. இந்திராகாந்தி பிறந்த நாளில் – கக்கூஸ் கட்டுதல்: காங்கிரசை பெருமைப்படுத்தவா?
  10. வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது – இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள்?
  11. சமஸ்கிருத வாரம் – பிணத்திற்கு உயிரூட்டும் முயற்சி – உயிரோடு இருக்கும் பிற தேசிய இன மொழிகளை புதை குழிக்கு அனுப்பவா?
  12. சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் – குருநாதனுக்கே ஆப்பு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?
  13. அரசுசார் நிறுவனங்கள்: சமூக வலைதலங்களில் இந்திப் பயன்பாடு: இந்தி மட்டும் தெரிந்தவன் ஏற்கனவே பானி பூரி விக்கிறான். மற்ற மொழிக்காரனெல்லாம் அவன் கடையில் டம்ளர் கழுவலாம்?
  14. நதிகளும், நகரங்களும் புனிதமாக்கப்படும்: புனிதம் பேசினால்தானே தட்டிலே தட்சணை விழும்.
  15. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களை  இந்து மதத்திற்கு மாற்றும் - வீடு திரும்பல் (கர்வாப்சி): அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகளையும் இந்தியாவிற்கு கர்வாப்சி செய்தால் பாரத தேஷம் ஷேமமாக இருக்கும்.
  16. மதமாற்ற தடைச்சட்டம் – குறிப்பாக இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க: விழுகின்ற தட்சணை குறையக் கூடாதல்லவா?
  17. இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான். சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது. அம்பிகளைத் தவிர வேறு யாருமே சிறுபான்மையினர் அல்ல.
  18. கச்சத் தீவு - தமிழக மீனவர் பிரச்சனை – மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என பா.ஜ.க வினர் பேச்சு – செயற்கைக் கோள் உதவியுடன் கம்ப்யூட்டரிலேயே மீன் செல்லும் பாதையைக் கண்டறிந்து சிலோன்காரன் கடலில் ஒரு கல்லை தூக்கிப் போட்டு மீன்களை இந்தப்பக்கமாக அச்சமூட்டி வரவைத்து மீன்களை அள்ளிக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
  19. காவிரி நீர் / முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு தீர்வு கேட்டால் நதிகள் தேசிய மயம் என போகாத ஊருக்கு வழி சொல்லுதல்; இல்லை எனில் மௌனம் சாதித்தல்
  20. ராஜபக்சே வெற்றி பெற மோடி வாழ்த்து – பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா!
  21. திருக்குறளுக்கு வட இந்தியாவில் விழா – வள்ளுவனையும் மனுவின் மற்றொரு அவதாரமாக்கவா?
  22. மனுதர்மத்தை நிலைநாட்டிய ராஜ ராஜ சோழனுக்கு 1000 மாவது சதய விழா:  உச்சிக் குடுமிகளை வாழவைத்தவனாயிற்றே!
  23. நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி – நிதி ஒதுக்கீடு: அமெரிக்காவுக்கு அடிவருட.
  24. கூடங்குளம் விரிவாக்கம் – அந்நியனின் அணுக் கழிவுகளை நம் தலையில் கொட்டத்தான்!
  25. அணு ஒப்பந்தம் - அமெரிக்கா நிவாரணம் தராது
  26. மீத்தேன் வாயு எடுக்க அனுமதி – கும்பகோணமே கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்த பிறகு தஞ்சையாவது! நஞ்சையாவது!
  27. அம்மா வழக்கு: மேல்முறையீடு - விரைந்து முடிக்க முனைதல்: முக்கிப் பார்த்தார்கள். பரிவாரங்களுக்கு ஸ்ரீரங்கன் கொடுத்ததோ ஆட்டுப் பீக்கைதான். ஆட்டுப் பீக்கை எப்ப விட்டையாவது. இப்போதைக்கு கோமாதாவின் கோமியமே போதும் என நினைத்ததாலோ!
தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சி: எதற்காக?

இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கிப் படித்து வந்த நான் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் சென்னை புத்தகக் கண்காட்சியை எட்டிப் பார்க்கிறேன். சென்ற ஆண்டு நான் சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த நூல்களில் கால் பங்கு நூல்களைக்கூட இன்னும் படித்து முடிக்கவில்லை. எனவே வாங்கியதைப் படித்துவிட்டு பிறகு மேற்கொண்டு வாங்கலாம் என நினைத்திருந்தேன். எனவே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எழுத்தாளர்கள் பாமரன், கமலாலயன், கவிஞர் சல்மா, பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் ஆகியோர் பங்கு கொண்ட புத்தகக் கண்காட்சி பற்றிய கலந்துரையாடலைப் பார்த்த பிறகு இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென முடிவெடுத்தேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்திலிருந்து

8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும், மக்கள் புத்தகங்களுக்காக செலவிடுவதில்லை, வீடுகளில் படிப்பதற்கு தனி அறை கிடையாது, நூல்களைப் படிப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை, இலக்கியம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை, எழுதியது விற்பனையாகாத போது எழுத்தாளன் சோர்ந்து விடுகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சல்மா.

“பதிப்பாளனும் ஒரு வியாபாரிதான். புத்தககங்கள் விற்பனையாகாமல் முடங்கிப் போனால் போட்ட முதலை எடுக்க முடியவதில்லை. தீவிர இலக்கியங்கள் விற்பதற்கு புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவுகின்றன” என்கிற கண்காட்சியின் வியாபார நோக்கத்தை தெளிவு படுத்தினார் காந்தி கண்ணதாசன்.

“கோடிகளில் நூல்கள் விற்பனையாகி என்ன பயன்? எத்தகைய நூல்கள் விற்பனையாகின்றன என்பதே முக்கியம். ஆன்மீக - நியூமராலஜி போன்ற நூல்கள் அதிகம் விற்பனையாகி என்ன பயன்? நூல்களின் உள்ளடக்கமே இங்கு முக்கியம். சரியான நூல்கள் கோடிகளில் விற்பனையாகி இருந்தால் இந்நேரம் புரட்சியே நடந்திருக்கும். ஒரு எழுத்தாளன் மக்களோடு இருக்கும் போது விற்பனை ஒரு பிரச்சனையே இல்லை.  நான் எழுதிய 12 நூல்களும் தேங்கியதே இல்லை” என்பதைச் சொன்னதோடு “சிங்கிள் டீ, லைட் டீ தெரியும், ஆனால் ராயல்டி பற்றி தெரியாது” என பதிப்பகத்தாரின் மோசடிகளையும் போட்டுடைத்தார் பாமரன்.

கேரளத்தைப் போல, சில மேலை நாடுகளைப் போல தமிழகத்தில் நூல்களுக்கு - குறிப்பாக இலக்கியங்களுக்கு அதிக வரவேற்பில்லை என்பதே இந்த விவாதத்தில் மையமாக உணர்த்தப்பட்டது.

இந்த விவாதத்தைப் பார்த்த பிறகு ஒருவன் எதற்காக இவர்கள் எழுதும் நூல்களை வாங்க வேண்டும், எதற்காப் படிக்க வேண்டும் என்கிற கேள்விதான் என்னுள் எழுந்தது. இதற்கான விடையைத் தேடினேன். 2011 ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி கீழைக்காற்று நூல்வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரை நினைவுக்கு வர உரையின் நூல் வடிவத்தை எடுத்துப் படித்தேன்.

எதற்காக?

அதன் பிறகு மேலும் சில ஐயங்கள் என்னுள் எழுந்தன. எதற்காக எழுத்தாளன் எழுத வேண்டும் ஓவியன் எதற்காக வரைய வேண்டும்? கவிஞன் எதற்காகப் பாடல் எழுத வேண்டும்? பாடகன் எதற்காகப் பாட வேண்டும்? பேச்சாளன் எதற்காக சொற்பொழிவாற்ற வேண்டும்? நடிகன் எதற்காக நடிக்க வேண்டும்? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.

வாசகனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, பாடகனோ, பேச்சாளனோ, நடிகனோ இவர்கள் தங்களின் இன்பத்திற்காகவோ, இரசனைக்காகவோ, பொழுது போக்கிற்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ,  இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவோ என சிலவற்றிற்காகத்தான் வாசிக்கவும், எழுதவும், வரையவும், பாடவும், பேசவும், நடிக்கவும் செய்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.

ஒரு விவாதத்திற்காக ஒரு நுலைப் படிப்பதற்குப் பதிலாக தான் இந்தியா டுடே படித்துக்கொண்டிருந்ததை இன்பத்துக்காகப் படிக்கிறேன் என்பதை ஒரு தோழர் உணர்த்தியதாக மருதையன் தனது உரையிலே சுட்டிக்காட்டுகிறார். நான்கூட நோக்கமின்றி நிறைய படிக்கிறேன். அப்படிப் படிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. இத்தகைய இன்பத்திற்காகப் படிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதே உண்மை.

இன்பத்திற்காக, இரசனைக்காக, பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக, புகழ் பெறுவதற்காக, இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஒருவன் செய்கிற செயல் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்லை.

கடமை

படிப்பது, எழுதுவது, பாடுவது, வரைவது, நடிப்பது, பேசுவது இவைகளை ஒரு கலைஞன் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் பாதுகாத்து வருகிற அல்லது அவற்றிற்கு காரணமாக இருக்கிற இச்சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர நடைமுறையாக இருக்க வேண்டும்.

புத்தகக் கண்காட்சியின் பிரமிப்பைக் காணவே நான் இந்த ஆண்டு கண்காட்சிக்குச் சென்று வந்தேன். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பகவத் கீதைகளோ, விவேகானந்தரின் போதனைகளோ, காந்தியின் சத்திய சோதனைகளோ, கல்கியின் பொன்னியின் செல்வன்களோ, யோக - தியானக் கலைகளோ, உடல் நல - ஆரோக்கிய நூல்களோ, சுயமுன்னேற்ற நூல்களோ, நியூமராலஜி - பக்தி இலக்கியங்களோ அல்லது உயிர்மை - காலச்சுவடுகளின் 'தீவிர' இலக்கியங்களோ சமூகத்திற்குத் தேவையான பாரதூரமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை. மற்றொருபுறம் சமூகத்தில் கேடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்களும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் - பெண்ணடிமைத்தனத்தையும் அடித்து வீழ்த்துகிற ஆற்றலைத் தரும் பெரியாரின் பேச்சும் - அம்பேத்கரின் எழுத்துக்களும், அதிகரித்து வரும் ஆதிக்கச் சாதிவெறி கொட்டத்தை முட்டி மோதி வீழ்த்த “ஆயிரம் காலம் அடிமை என்றாயே அரிசனன்ணு பேரு வைக்க யாரடா நாயே” போன்ற கோவனின் எழுச்சியூட்டும் பாடல்களும், பன்னாட்டுச் சுரண்டலுக்கு வழிவகுத்து வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி வரும் இந்திய நாட்டை மீட்டெடுக்க பகத்சிங்கின் பேச்சும் - எழுத்துக்களுமே இன்றைய தேவை.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யலாம் என்பதை கண்டறியவும் அவற்றை மக்களிடையே எடுத்துச் செல்லவும் துணைபுரிகின்ற நூல்களாகத் தேடிப்பிடித்து வாங்கி வந்துள்ளேன்.

ஒருவன் தன் இரசனையை, பொழுது போக்கை, பொருள் ஈட்டுவதை, புகழ்பெறுவதைத் தாண்டி தனக்கான பிரதி பலன் எதையும் எதிர்பாராத சமூகத்தில் மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் இன்பத்தைக் காணவேண்டும். அதுதான் நிறைவான இன்பமாக இருக்க முடியும்.