Thursday, July 4, 2013

மனு இன்னும் மடியவில்லை!

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தற்போது ஓசூரில் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த G.சுரேஷ் (வயது:30) தனது மனைவி s.சுதாவுடன் (வயது:23) ஊருக்கு வருகிறார். திருவிழாவிற்காக ஏற்கனவே இவரிடமிருந்து வசூல் செய்திருந்த ரூ.1500 ஐ விழா நடத்துவோர் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.

திருவிழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாய் வந்திருந்தவருக்கோ இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இவர் மீள்வதற்குள் இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரை விட்டு நீக்கி வைப்பதாகவும், இவர்கள் கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கவும்,
 ஊர்க்காரர்கள் இந்தக் குடும்பத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும்  தடை விதித்து கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பெழுதுகிறது சாதிவெறிக் கும்பல்.

கந்துவட்டிக்காரன், திருட்டுத் தொழில் செய்பவன், சாராயம் காயச்சுபவன், பாலியல் பலாத்காரம் செய்பவன், லஞ்ச ஊழல் பேர்வழிகள் உள்ளிட்ட சமூக விரோதிகள் கொடுக்கும் காசு இவர்களுக்கு கசப்பதில்லை. ஆனால் G.சுரேஷ்  கொடுத்த காசு மட்டும் ஏன் கசக்கிறது?

வன்னியரான G.சுரேஷின் மனைவி தாழ்த்தப்பட்டவராம். அது இப்பொழுதுதான் தெரியவந்ததாம். பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கு இதுதான் காரணமாம். வன்னிய சாதி வெறியர்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள பிற உயர்சாதியினர் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தத் தம்பதியர் வயதுக்கு வந்தவர்கள்தானே? அதாவது சாதிவெறியர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் 'மைனர்கள்' இல்லைதானே? "காதலுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; 'செட்டப்' திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என கூப்பாடு போடும் பா.ம.க வினரோ அல்லது அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் இணைய எழுத்தாளர்களோ இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?

ஆணோ! பெண்ணோ! அது தாழ்த்தப்பட்ட நபராக இருந்தால் அவர்கள் பிற உயர்சாதியினரை காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என்பதுதான் சாதி வெறியர்களின் சமூக நீதி. நாயக்கன் கொட்டாய் சம்பவமும், வேப்பமரத்தூர் சம்பவமும் இதைத்தான் உணர்த்துகிறது.

இதே சுரேஷ் ஒரு செட்டியார் பெண்ணையோ அல்லது ஒரு முதலியார் பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் திருவிழாவிற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அப்பொழுது மட்டும்  சுரேஷின் காசு இனித்திருக்கும். இப்பொழுது மட்டும் கசப்பதற்குக் காரணம் ஒரு தீண்டத்தகாதவளை திருமணம் செய்து கொண்டதால் சுரேசும் அவனது காசும் தீட்டுப் பட்டுவிட்டது. இதுதான் சாதி வெறியர்களின் மன ஓட்டம்.

இது அப்பட்டமான வன் கொடுமை. இது குறித்து சுதா புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன்  மற்றும் கிராம பெருசு (நாட்டாமை) பெரியசாமி உள்ளிட்ட 22 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு  செய்து  அரூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர்  விசாரணை செய்து வருகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கள் நுழையவும் பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் சாதி வெறியர்கள் தடை விதித்து வருவதைத்தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று ஒரு வன்னியனையே கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் வன்னிய சாதி வெறியர்களே தடை விதித்துள்ளார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை சுரேஷ் திருமணம் செய்து கொண்டதால் அவரும் தீண்டத்தகாதவராகி விட்டார். 

தத்ததமது சாதிகளுக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனு சாஸ்திரம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இதையும் மீறி அன்று  கலப்பு திருமணங்கள் நடைபெறவே செய்தன. இதை மனுவால் தடுக்க முடியவில்லை. அதனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகளை தனி ஒரு சாதியாக்கினான் மனு. இத்தகைய புதிய சாதிகளை சாதியப் படிநிலையில் மேலும் கீழான சாதிகளாக்கினான்.

இங்கே G.சுரேஷ் - s.சுதா இருவருக்கும் இன்னும் வாரிசு உருவாகவில்லை.ஆனால் வாரிசு உருவாவதற்கு முன்னரே வன்னியனாகப் பிறந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காகவே அவனைத் தீண்டத்தகாதவனாக்கி மனுவையே விஞ்சி விட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்: THE HINDU, June 24, 2013

18 comments:

  1. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக,........... jaட்டியாக..... bull shit cast!!!

    we are Humans living in 21st century.....

    Treat everyone as only Humans not as வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக......

    ReplyDelete
  2. ஒருவன் எப்பொழுது சாதியை துறக்கிறானோ அப்பொழுதுதான் அவன் மனிதனாக முடியும். அது வரை அவனை எப்படி ”Treat everyone as only Humans”.....?

    ReplyDelete
  3. சாதி ஒழிய வேண்டுமா?மனுதர்மம் ஒழிய வேண்டும். பார்பானும் ஒழிய வேண்டும். இதை ஒழிக்க வர்க்கம் வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. மனு தர்மம் மக்களிடையே ஒரு பண்பாடாகவே பதிந்து விட்டது. இதற்கான அடிப்படை இந்து மதத்தில் இருக்கிறது. மக்களை மதமற்றவர்களாக - சாதியற்றவர்களாக மாற்றுவதன் மூலம்தான் சாதிக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.

      Delete
  4. சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். அதே நேரத்தில் தங்களிடம் ஒருவித விரத்தியும் தெரிகிறது.

      சாதி மறுப்பு பேசுவோரும் சாதியை முற்றாக துறந்தோறும் மிக சொற்பமே. இந்த சொற்பமானவர்கள் புரட்சிகர அமைப்புகளில் மட்டுமே இருக்கிறனர். மற்ற இயக்கங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கக்கூடும். இந்தச் சூழலில் விரத்தியடைவதற்குப் பதிலாக சாதியற்றோர் - மதமற்றோர் என்கிற புதியதொரு மக்கள் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இத்தகைய சமூகம் வளர்த்தெடுக்கப்படாதவரை இளவரசன்-திவ்யா போன்றோருக்கு பாதுகாப்பளிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. அதை களப்பணிகளின் மூலம்தான் சாதிக்க முடியும்.

      Delete


  5. இன்னமும் வட மாவட்டங்களில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகள் என்று நிறுத்தப்படுமோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. புரட்சிகர அமைப்புகள் வளர்ந்தால் மட்டுமே இது போன்ற கொடுமைகள் நிறுத்தப்படும்.

      Delete
    2. தென் மாவட்டங்களில் இது போல் நடப்பதில்லையா? புரட்சிகர அமைப்புகள் வளர்ந்தால் அது கட்ட பஞ்சாயத்து பேசி இருபுறமும் பணம் பறிக்கவே முயலும். 80 மற்றும் 90களில் புரட்சிகர அமைப்புகளின் கை வடமாவட்டங்களில் தான் ஓங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (பெரியாரிசம், கம்யுனிசம் & நக்சல்கள்).

      மாற்றங்கள் எதுவும் உடனடியாக ஏற்படும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். 80களில் இருந்த அளவு சாதியின் தீவிரம் தற்போது மக்களிடம் குறைந்தே உள்ளது.

      சில அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைபுகலாலேயே மீண்டும் சமீப காலங்களில் தலைதூக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் கண்டிப்பாக புதிய தலைமுறை மக்களால் முறியடிக்கப்படும். இந்த சமயத்தில் நடந்த போராட்டங்களின் மக்கள் ஆதரவு குறைந்து காணப்பட்டதை எடுத்துகொள்ளலாம்.

      ஆனால் முற்போக்குவாதி என சொல்லிக்கொண்டு ஒரு சார்பாக பரப்புரை மேற்கொள்ளும் சிலரது உள்நோக்கம் சாதி அழிய கூடாது என்பது போல் இருபது தான் வேதனை. இவர்கள் சாதியம் பேசி அரசியல் செய்பவர்களை விட கேவலமாகவே தெரிகிறார்கள்.

      Delete
  6. தனிப்பட்ட முறையில் அவரவர் மனதில் மனமாற்றம் உருவாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெருவாரியான மக்களிடம் மனமாற்றம் நிகழ வேண்டுமானால் சமூக மாற்றத்திற்கான களப்பணிகள் மூலம் மட்டுமே சாத்தியம். களப்பணிகள் இல்லாத மனமாற்றம் மிகச் சுருங்கியதாகவே இருக்கும்.

      Delete
  7. யாரு ஏத்தான் கொப்பன் ஏத்தான்-னு எல்லாப் பழியையும் மனுமேல் போட்டுவிடுகிறீர்கள். நீங்கள் உட்பட இவர்கள் யாருக்காவது மனு குறித்து ஏதாவது தெரியுமா. மொத்த மனுவையும் படித்துவிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக அன்று, கருத்து கூறுங்கள். அல்லாவைக் குறித்து இப்படிச் சொல்ல தைரியம் உண்டா உங்களுக்கு. டங்குவார் அறுந்துவிடும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி. நாகர்கோவிலில் தனது சகோதரி கணவன் இந்து என்பதற்காக அவனைக் கொன்றார்கள் முஸ்லீம்கள். அதைத் தட்டிக்கேட்ட இந்து இயக்கத் தலைவரையும் வெட்டினார்கள். நீங்கள் வெட்டுப்பட தயாரில்லாதபோது ஏன் தட்டிக் கேட்கப் போகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வேண்டுமானால் மனுவைப்பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் இங்கே மனுவை ஒரு முறைக்கு நூறு முறை - அதுவும் தமிழிலும் ஆங்கிலத்திலும் - அதன் மூலப் பிரதிகளை படித்துவிட்டுதான் எழுதுகிறோம்.

      நமது முதுகில் உள்ள அழுக்கைப் பற்றி கேள்வி எழுப்பினால் அடுத்தவன் முதுகைப்பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். அடுத்தவன் முதுகைப் பற்றி பேசுவதற்கு முன் நமது முதுகை ஒரு முறை திரும்பிப் பார்க்கலாமே.

      இணையம் வரை வந்து கருத்து சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள நீங்கள் மனுவை ஒரு முறை படித்து விட்டு வாருங்கள். அதன் பிறகு வேண்டுமானால் எதை எதை மனு எவ்வாறு சொல்லியுள்ளான். அவை எப்படி மக்களின் மனங்களில் குடி கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.

      Delete
  8. யாரு ஏத்தான் கொப்பன் ஏத்தான்-னு எல்லாத்துக்கும் மனுதான் காரணம் என்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது. யாருக்காவது மனு என்ன சொன்னார் என்பது தெரியுமா என்பது தெரியவில்லை. மனுவைப் படித்துவிட்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக அன்று, முழுவதுமாக, கருத்து கூறுவது நல்லது.

    நாகர்கோவிலில் தனது சகோதரி இந்துவைத் திருமணம் செய்ததற்காக இஸ்லாமிய சகோதரனே அவளது கணவனைக் கொன்றான். அதைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய கேட்டதற்காக இந்துத் தலைவர் எம்.ஆர்.காந்தி வெட்டப்பட்டார். நீங்கள் மனுவை வம்புக்கிழுத்ததுபோல் அல்லாவை, நபியை வம்புக்குழுக்கவா போகிறீர்கள். டங்குவார் அறுந்துவிடும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டிதானே.

    ReplyDelete
    Replies
    1. மேலே உள்ள பதில்தான் இதற்கும்!

      Delete
  9. அன்புள்ள ஊரான்,
    சாதி என்ற வார்த்தைக்கு உயர்ந்த தாழ்ந்த போன்ற அடைமொழிகளை சேர்ப்பது மக்களிடையில் சமத்துவம் வேண்டுவோருக்கு அழகல்ல.
    இதுபோன்ற பேதம் கற்பிக்கும் அடைமொழிகளை பயன்படுத்தாமலேயே நாம் சொல்லவந்ததை சொல்லமுடியும். அதற்கு சில வழிகள் உள்ளன. அப்படி சொல்ல முடியவில்லை என்ற நிலை ஏற்படுமானால், அதை நாம் சொல்லாமல் விடுவதே வெற்றிக்கான பாதை.
    விரிவான பதிவு விரைவில்.

    ReplyDelete
  10. //ஏற்கனவே இவரிடமிருந்து வசூல் செய்திருந்த ரூ.1500 ஐ விழா நடத்துவோர் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.//

    This is a great opportunity. The returned money can be put in useful ways and he is freed from these 'thandach chelavukal' in future also. These 'thiruvilas' of caste groups do not contribute to the united society in any way. On the other hand, they perpetuate the caste groups and segregations. so it is better for the right minded people to escape from these types of bondages.

    //பொது நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கவும்//
    This has to be resisted.

    //ஊர்க்காரர்கள் இந்தக் குடும்பத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது //
    The pair don't have to worry. Interaction with bad/indifferent people does not contribute to ones wellbeing. They are better off without their interference. They can still live there as we are more secular than past. As the last resort, they can shift the residence.


    If it is possible for you to meet this pair, please meet them and convey my opinion above to them.

    ReplyDelete
  11. Dear hooran,

    You could have written this post with using the word 'Manu' or related sentences. Why i say is, we have to make this idea obsolete, by not using it in our records. This is the first step to lay this ghost to rest. I hope you understood my point.

    ReplyDelete