Monday, September 16, 2024

புரட்டாசியில் கவிச்சி தின்றால் கக்கா வராதா?

ஆடி மாத திருவிழாக்களின் போதும், தீபாவளியின் போதும் என மிகச்சொற்ப நாட்களில் மட்டுமே கறி தின்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கம். இவை தவிர ஏரி மீனும், ஆத்து மீனும் சும்மா கிடைக்கும் போது சமைத்தது போக மீதத்தை கருவாடாக்கி ஆண்டு முழுதும் தேவைப்படும் போது கவிச்சி ‌சாப்பிடுவதும்தான் உழவர்கள் மற்றும் உழைப்பாளிகளின் வழக்கமாய் அன்று இருந்தது.

பரபரப்பாய் பயணிக்கும் அரசு
ஊழியர்களும், ஆலைத்
தொழிலாளர்களும் ஓய்வெடுக்க
ஒரு நாள் ஒதுக்கினால், அதையே
கறி நாளாய் மாற்றிக் கொண்டார்கள் இன்று. ஐம்பது கிராம் கறியை மட்டும்தான் செரிமானத்திற்கு உடல் ஏற்றுக் கொள்ளும் என்றாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களின் வயிற்றை குப்பைத் தொட்டிகளாகக் கருதிக்கொண்டு கறி-முட்டை-மீன் என கிலோ கணக்கில் வயிற்றில் கொட்டுவதை இன்று
வாடிக்கையாக்கிக் கொண்டது நடுத்தர வர்க்கம். இதில் சாராயத்தை வேறு ஊற்றி ஊறவைப்பவர்கள் அதிகரித்து விட்டதால் சாதாரண ஞாயிறுகளிலேயே கவிச்சிக்கு ஏக கிராக்கிதான்.

தற்போது புரட்டாசி நெருங்குவதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை கறிக்கடைகளிலும், மீன் கடைகளிலும் பெரும் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் ஆயிரம் ரூபாய் ஆனாலும் வாரிச் சென்றார்கள். கிடைப்பதை எல்லாம் ஒரே நாளில் வயிற்றில் கொட்டிவிட்டால், அது ஒரு மாதத்திற்கு அங்கேயே தங்கி இருக்குமா என்ன? ஏன் இந்தப் பதட்டம்? ஏன் இந்த அவசரம்? இனிமேல் கறியோ மீனோ கிடைக்காதா? கிடைக்கும், ஆனால் திங்கக் கூடாதாம். ஏன்? புரட்டாசி புனித மாதமாம். கவிச்சி கூடாதாம். இந்து மத சாஸ்திரம் சொல்கிறதாம். இதை நம்பித்தான் நம் மக்களும்  புரட்டாசியில் கவிச்சியை தவிர்க்கிறார்கள்.

சனிக்கிழமைதோரும் ஒரு பொழுது விரதம் இருந்து, பட்டை நாமம் போட்டு அந்தப் பெருமாளை வணங்குவது இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.

புரட்டாசி மாதத்தில் கவிச்சியை பாய் திங்கிறான், கிருத்தவன் திங்கிறான். ஆனால் இந்து மட்டும் திங்கக் கூடாதாம். ஏன், ஒரு இந்து புரட்டாசியில் கவுச்சித் தின்னால் கக்கா வராதா என்று கேட்டால் அதற்கு ஒரு அறிவியல் விளக்கம் கொடுத்து நம்மை புல்லரிக்க வைக்கிறார்கள் சாஸ்திர அஞ்ஞானிகள்.

தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடையிலான ஒரு இடைக்காலம்தான் புரட்டாசி மாதம். பகலிலே, 'பொன்னுருகக் காயும், மாலை இரவு நேரங்களில் மண்ணுருகப் பெய்யும்' என்பார்கள். சுற்றுச் சூழல் கேடுகளின் விளைவால் நிகழும் பருவகால மாற்றங்களால் பழமொழிகளே இன்று பழங்கதைகளாய் மாறிவருகின்றன.

புரட்டாசியில் வெயில் அதிகமாக இருக்கும், அதனால் கவிச்சி திங்கக்கூடாது என்கிறான் ஒருவன். இது மழைக் காலம், அதனால் கவிச்சி கூடாது என்கிறான் மற்றொருவன். இப்படி ஆளாளுக்கு புரட்டாசியில் ஏன் கவிச்சி கூடாது என்பதற்கு அறிவியல் வியாக்கியானம் செய்து நியாயப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால், கடும் கோடையான சித்திரையிலும், கடும் மழைக்காலமான ஐப்பசியிலும் கவிச்சித் திங்கிறோமே என யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

வட இந்திய இந்துவுக்கும் இந்தப்
புரட்டாசி பொருந்துமா? அவர்கள் கவிச்சித் திங்காத மாதம் ஏதேனும் உண்டா? புரட்டாசி அவனுக்குப் பொருந்தும் என்றால் அவர்களது தட்பவெப்பம் வேறாக இருக்கும் போது அவனுக்கு எப்படி புரட்டாசி பொருந்தும் எனக் கேட்பதற்கு நமக்குத் தோன்றுவதில்லை. பக்தி
வந்தால்தான் பத்தும் பறந்து போகுதே! பிறகு அறிவு மட்டும்
மண்டையில் குடியிருக்குமா என்ன?

எங்கே புனிதம் பேசப்படுகிறதோ
அங்கே தீட்டும் பேசப்படுகிறது‌ என்று பொருள். அதனால்தான் புரட்டாசியைப் புனிதம் என்றான், ஆடியை, மார்கழியைப் பீடை என்றான். கவிச்சியையும் அவன் தீட்டு என்று கூறி, கவிச்சித் தின்போரை இழிவானவர்களாகச் சித்தரித்தான். இதெல்லாம் அவாளின் ஏற்பாடு என்பதைத் தவிர இதில் ஒரு வெங்காயமும் இல்லை.

சிங்கம் புலி போன்ற சில விலங்குகளைப் போல் எல்லா மனிதர்களுக்கும் ஒரு காலத்தில் புலால் மட்டுமே உணவாக இருந்தது. புலால் உணவு போதுமானதாக இல்லாததால் பயிரிடுதலைக் கற்றுக்கொண்டு மரக்கறி உணவுக்கும் தன்னை
பழக்கப்படுத்திக் கொண்டான் மனிதன். விலங்குகளால் அது இயலாது போனதால் இன்னமும் சில விலங்குகள் புலால் உணவை மட்டுமே நம்பி வாழ்கின்றன.

அதுவரை நாடோடிகளாக வாழ்ந்த மனிதன், உழவுத் தொழில் வளர்ந்த பிறகு, நிலைத்து வாழத் தொடங்கினான். மக்களை நெறிப்படுத்தக் கருத்துக்களையும் நிறுவனங்களையும் உருவாக்கிக் கொண்டான். இதன் வளர்ச்சிப்
போக்கில் புலால் உண்பதை பாவம் என்று கருதினான். அது மக்களிடையே செல்வாக்கு பெற்ற போது, அதுவரை உழவுத் தொழிலை மேற்கொள்ளாமல் புலால் உணவை உண்டு வந்த
நாடோடிக் கூட்டமான ஆரியக் கூட்டம், தானங்கள் மூலம் நிலங்களையும் தானியங்களையும் தனதாக்கிக் கொண்டு, சைவ
உணவுக்குத் தன்னை மாற்றிக்
கொண்டது.

நிலத்தைப் பறிகொடுத்தவர்கள்
கூலியானார்கள். நிலமற்ற கூலி
ஏழைகளுக்கு தானிய உணவு
பற்றாக்குறை ஏற்பட்டதால் கறி
உணவை நோக்கி அவர்கள்
தள்ளப்பட்டனர். செத்த மாடுகளை உரித்து உப்புக் கண்டம் போட்டு பாதுகாத்து வைத்து, உணவுத்
தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்பட்டனர். உப்பு கண்ட
நாற்றம் தங்களை தாக்காமல்
இருக்க அவர்களை ஊருக்கு வெளியே கிழக்கு பக்கமாக குடியிருக்குமாறு பணித்தனர். அப்படித்தான் சேரிகள் உருவாக்கப்பட்டன.

புரட்டாசி புனிதத்தோடு தொடர்புடையது. புனிதம் தீண்டாமையோடு தொடர்புடையது. எனவே, புரட்டாசியில் கறி திங்கக் கூடாது என்பது தீண்டாமையோடு தொடர்புடையது. நேற்று வரை கறி தின்றவன், புரட்டாசியில் திங்கவில்லை என்றால் அவன் தீண்டாமையைக் கடைபிடிக்கிறான் என்று பொருள்.

எனவே, வீடுகள் தோறும் கவிச்சி மணம் கமழட்டும். கமழும் இந்தக்
கவிச்சி வாடையில் புரட்டாசி புனிதம் புகைந்து போகட்டும்.

ஊரான்

Sunday, September 15, 2024

அருந்ததியர் உள் ஒதுக்கீடு: ஆதரவும், எதிர்ப்பும்!

அருந்ததியர்களுக்கான 3% உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி,  பட்டியல் சாதியினர் இரு கூறாகப் பிளவுபட்டு, உள் ஒதுக்கீடு ஆதரவு-எதிர்ப்புக் கூட்டங்ளையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றனர். 

உள் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கக் கூடாது மற்றும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பைக் கொண்டு வரக்கூடாது என்று மட்டும்தான் தாங்கள் பேசுவதாகவும், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் திருமா தெளிவுபடுத்தினாலும், 

அருந்ததியர்கள் தனியாக 3% இட ஒதுக்கீட்டைப் பெறுவதோடு,  பட்டியல் சாதியினருக்கான 15% இட ஒதுக்கீட்டிலும் போட்டி போட முடியும், ஆனால், அருந்ததியினருக்கான 3% இட ஒதுக்கீட்டில் பள்ளர், பறையர் பிரிவினர் போட்டியிட முடியுமா என பறையர், பள்ளர் சாதிகளைச் சார்ந்தவர்கள் வாதம் செய்கின்றனர். 


இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும்,
பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரே அதிகார மையங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். 
இட ஒதுக்கீட்டுக்கான முழுமையான பலனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மக்கள் பெறுவதில் பெரும் பின்னடைவு இன்றும் நிலவுகிறது.

சாதியப் படிநிலையில் ஆகக் கீழே உள்ள பிரிவினர், கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கி இருப்பதனால், அவர்களை கைதூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு. 

இதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய, கிருத்துவர்கள் என மக்கள் வகைப்படுத்தப்பட்டாலும், அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை  மொத்தம் உள்ள இடங்களில் மேற்கண்ட பிரிவினருக்கு
69% இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 31% உயர் சாதியினர் உள்ளிட்ட எல்லா சாதியினருக்குமான பொதுப்பட்டியலாக வரையறுக்கப்பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டில் பயன்பெறுகின்ற அனைவருமே இந்தப் பொதுப் பட்டியலிலும் போட்டியிட்டு இடங்களைப் பெற முடியும். 

இதனால் இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், அருந்ததியர்கள்,
பட்டியல் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர்
என பலரும் இடங்களைப் பெறுவதால் உண்மையிலேயே அவர்கள் பெறுகின்ற பிரதிநிதித்துவம் 
இட ஒதுக்கீட்டைவிட அதிகமாகவே இருக்கிறது. 

இதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் பட்டியல் சாதிகளிலேயே ஆகக் கடை கோடியாக இருக்கின்ற அருந்ததியர்களும் பட்டியல் சாதியினருக்கான பொதுப் பிரிவிலும் (15%) போட்டியிடலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ள ஒரு பிரிவினரை கை தூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இது போன்றதொரு உரிமை பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து, தனியாகப் பிரிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கிடையாது. அதாவது  பிற்படுத்தப்பட்டோருக்கான 30 % இட ஒதுக்கீட்டை பொதுப் பட்டியலாகக் கருதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதில் போட்டியிட முடியாது.

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் பொது பட்டியலுக்குள் வரக்கூடாது என்று பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் சொல்வதற்கும், பட்டியல் சாதி என்கிற பொதுப் பிரிவில் அருந்ததியர்கள் வரக்கூடாது என்று பள்ளர், பறையர் உள்ளிட்ட பிரிவினர் சொல்வதற்கும் பாரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

மேற்கண்ட வாதங்களை முன்வைத்துதான், பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்  சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்று வகைப்படுத்தி தங்களுக்கென தனியாக 10% இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பழங்குடி பிரிவைச் சார்ந்த இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கும் எவரும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது என்பது ஒரு வரலாற்று பிழை.

ஒரு காலை இழந்தவனுக்கு கொடுக்கப்படும் சலுகையும், இரண்டு கால்களையும் இழந்தவனுக்குக் கொடுக்கப்படும் சலுகையும் ஒன்றாக இருக்க முடியாது. இரண்டு கால்களை இழந்தவனுக்கு சற்று கூடுதலாகத்தான் சலுகை வழங்க வேண்டும்‌. அப்பொழுதுதான் அவன் மேலெழுந்து வர முடியும். 

இதே அளவுகோலின்படிதான், சாதியப்படிநிலையில் ஆகக் கடைக்கோடியில் உள்ள பிரிவினருக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் அவர்கள் பொதுப்பட்டியலிலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் மிகவும் கீழ் நிலையில் உள்ளவர்களை கைதூக்கி விடுவதற்கு ஏற்ற சமூக நீதிக் கோட்பாடாக இருக்க முடியும்.

சாதியப்படிநிலையில்
பள்ளர் மற்றும் பறையர் சாதியினருக்குக் கீழாக உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினர்தான் அருந்ததியர் என்பதை மறுக்க முடியுமா? 

சாதியப்படிநிலையில் ஆகக் கீழ் நிலையில், வஞ்சிக்கப்படுகின்ற மக்களுக்கு கூடுதல் சலுகை கொடுத்து அவர்களை கை தூக்கி விடுவதும், குறிப்பிட்ட அளவு அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றம் காணும் வரை மேற்கண்ட இட ஒதுக்கீட்டைத் தொடர்வதும்தான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். 

மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கும் போதுதான், சாதிய இடஒதுக்கீடு தொடர்பான சாதியப் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானதாக இருக்கிறது. இட ஒதுக்கீடு கோருபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஒன்றிய அரசை நிர்பந்தம் செய்கின்ற போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டி உள்ளது.

தற்போதைய சமூக கட்டமைப்பில் இட ஒதுக்கீட்டின் மூலமாக எல்லா மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னேறிவிட முடியாது என்கிற கள எதார்த்தத்தையும் நாம் மறந்து விடக்கூடாது. 

சில பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு இட ஒதுக்கீடு பிரிவுக்குள்ளும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே இட ஒதுக்கீடு சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் என்று அந்தந்தப் பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், பொருளாதார வரம்பைக் கொண்டு வர வேண்டும் என்றுகூட போர்க்கொடி உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் மறுதலித்து விட முடியாது. இத்தகைய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டம் என்கிற வடிவத்தை நோக்கிகூட நகருவதற்கான வாய்ப்புகளும் உருவாகக்கூடும்.

குறிப்பு: கிடைக்கின்ற தரவுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களில் இருந்து எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். மாற்றுக் கருத்து உடையவர்கள் தாராளமாக விவாதிக்கலாம். ஒத்தக் கருத்தை நோக்கி பயணிப்பதற்கு அது உதவும்.

ஊரான்

Monday, September 9, 2024

மொய்: காசைவிட எழுத்து வலிமையானது!

மொய் எழுதலாமா?

"மொய்" - அது திரும்ப அடைக்கப்பட வேண்டிய கடன். கடனை அடைக்கவில்லை என்றால் பிறகு பிணக்குதான்.

எனவே,

"மொய் எழுதாதீர்கள். 'எழுதியதை எழுதுங்கள்'. காசைவிட எழுத்து வலிமையானது".

கடந்த நாற்பது ஆண்டுகளாக, திருமணங்களில் எழுத்தைத் தவிர வேறெதையும் நான் எழுதியதில்லை. 
யாருக்கு தியானம் தேவை?

எங்கே தியானம் போதிக்கப்படுகிறதோ அங்கே சனாதனம் புகுத்தப்படுகிறது என்று பொருள். இப்பொழுது யோகாவையும் சனாதனம் உள் வாங்கிக் கொண்டது.

அறிவாளிகளுக்கு தியானம் தேவைப்படாது. உழைப்பாளிகளுக்கு யோகா தேவைப்படாது. இவை இரண்டும் யாருக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
***

ஞானம்: முட்டாள்களின் பிதற்றல்

ஞானம் என்றாலும், அறிவு என்றாலும் ஒன்றுதான். முன்னது சமஸ்கிருதம், பின்னது தமிழ். 

ஒரே பொருளைத் தரக்கூடிய சொற்களுக்கிடையில் வேற்றுமையைக் கற்பித்து மக்களை மயக்கும் மாயவித்தைக்கு ஒரு சிலர் மயங்கவும் செய்கின்றனர். 

அறிவு எனும் அழகு தமிழ் இருக்க ஞானம் எனும் சனாதன நச்சு எதற்கு? அறிவை விழுங்கு, ஞானத்தை துப்பு.
***

வினை தீர்ப்பவனா? வினை விதைப்பவனா?

விநாயகன் உள்ளிட்ட இந்து மதக் கடவுள்கள் அனைத்தும் பொதுமக்களின் ஆன்மிகத் தேவைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் வருவாய்க்காக உருவாக்கப்பட்டவை. 

இது புரியாதவரை, புதிய புதிய கடவுள்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டேதான் இருப்பார்கள். 
பொதுமக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
***

விநாயகர் சதுர்த்திக் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதனால் சுற்றுச் சூழல் கெடாதா?

***
ஆன்மீகத்தால் யாருக்கு ஆதாயம்?

ஆன்மீகத்தால் அல்லல் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சமூக நீதிதான் மக்களை உய்விக்கும் என்ற திராவிடக் கருத்தியலை தமிழர்கள் நம்புகிறார்கள். பொதுவுடமைதான் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வல்லது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள். 

இங்கே, யார் வேண்டுமானாலும், திராவிடக் கருத்தியலை கரிச்சுக் கொட்டலாம். கம்யூனிசத்தை வசை பாடலாம். ஆனால், ஆன்மீகத்தை மட்டும் எவரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். என்னங்கடா உங்க நியாயம்?

திராவிடக் கருத்துக்களால், கம்யூனிசக் கோட்பாடுகளால் பலன் அடைபவர்கள் பாமரர்கள். ஆனால், ஆன்மீகத்தால் பலன் அடைபவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே? இது ஏன் உனக்கு உரைக்கவில்லை?

***
அவாள்களுக்கு 'ஆன்மீகம்' ஒரு 'வணிகப் பொருள்!' 
'ஆன்மீகம்' அருவமானது. அதற்காக நீ பணத்தை இழக்கிறாய். அவன் பணத்தை ஈட்டுகிறான்.

***
கடவுள் இருக்கிறது என்று நம்புகிற அனைவருமே மன நோயாளிகள்தான். மனநோயாளிகளின் நாடு எப்படி முன்னேறும்?

***
இந்த உலகில் யார் இருக்கலாம்?

இந்த உலகில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் இருக்கலாம். இவர்கள் இந்த உலகின் நவீன கால சிற்பிகள்.

ஆனால், இந்த உலகில் புரோகிதர்கள், குருக்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என்ற போர்வையில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கக் கூடாது. காரணம் இவர்கள் மனித குலத்தின் அழிவுச் சக்திகள்.

ஊரான்

குறிப்பு: கடந்த மூன்று நாள் முகநூல் பதிவுகள்