Thursday, July 24, 2025

நீத்தாரை நினைவுகூற நீ கொடுப்பது 'திதி'யா? இல்லை 'நிதி'யா?

நீர்நிலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் திதி கொடுப்பதற்காக இன்று குவிந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்தச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இன்று (24.07.2025)

நீர்நிலைகளுக்குச் சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, முன்னோர்களுக்குப் படையல் போட்டு அவர்கள் அதை உண்ண வருகிறார்களா என வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவதைவிட,

வீட்டிலேயே உறவினர்களை அழைத்து மறைந்த முன்னோர்களின் பிறந்த நாளிலோ அல்லது இறந்த நாளிலோ அவர்களின் நல்ல அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி திதிக்கு நிதியாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அறுசுவை உணவு உண்டால் நம் வயிறும் மனமும் நிறையுமே? 

மக்கள் மாற வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டும் புரிகிறது. வீட்டிலேயே படையல் போட்டுக்கொண்டால் நிதி பெறுவோர் சும்மா விடுவார்களா என்ன? வீட்டில் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விட்டால் அதையேக் காரணமாகக் காட்டி அச்சமூட்டி உங்களை நீர்நிலைகளை நோக்கி ஓட வைப்பார்கள். அதற்குப் பயந்து நீயும் நீர்நிலைகளை நோக்கி திதி கொடுக்க, 'சாரி' நிதி கொடுக்க ஓடினால் அந்த AI கூட உன்னைப் பார்த்துக் கெக்களிக்கும். 

'கற்றதனால் ஆய பயன்யென் கொல்', இந்தக் குறளில் கடவுளை வணங்காவிட்டால் நீ கற்ற கல்வியினால் என்ன பயன் என்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே வாலறிவனைக் கடவுளாக்கி விட்டார்கள். 

என்னைப் பொருத்தவரை இங்கே வாலறிவன் கடவுள் அல்ல, உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர். அவர்களைக் கைவிடாமல் உயிரோடு இருக்கும் போது பராமரி; இறந்த பிறகு அவர்களின் நல்ல பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல். அதற்காகவே அவர்களை பராமரி, வணங்கு, நினைவு கூறு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

உயிரோடு இருக்கும்போது வாலறிவன்களை வதைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சிறைப்படுத்தி அவர்கள் இறந்த பிறகு திதி கொடுப்பதால் என்ன பயன்? ஒருசிலர் பணம் கறக்க செய்த இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு வாலறிவன்களை உண்மையாகவே மதிக்கக் கற்றுக் கொள்வதே உனது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
 
இனியும் நீர்நிலைகளை நோக்கி ஓடாதே! வாலறிவன்கள் உனது வீட்டிலும் உனது நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்கள். உனது பெற்றோர்களாகிய வாலறிவன்களுக்கு மரியாதை செலுத்த இடைத்தரகர்கள் எதற்கு? 

'திதி' என்ற பெயரில் 'நிதி' கொடுப்பதை உடனே நிறுத்து! இது கட்டளை! பெரியாரின் கட்டளை!

ஊரான்

Wednesday, July 9, 2025

பிண்டங்கள் ஜாக்கிரதை!

நேற்றுவரை ஏதோ சமூக நீதிக்காக அதிமுக செயல்பட்டது போலவும் அது இன்று எடப்பாடி போன்றோரால்  மதிப்பிழந்து போனதாகவும் சிலர் அங்கலாய்க்கின்றனர். சனாதனத்திற்கு எதிரான சிந்தனை கொண்டுள்ள ஒரு சில பகுத்தறிவு அதிமேதாவிகளும் இதில் அடங்குவர் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.  

சனாதன எதிர்ப்பில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலைஞரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சோ போன்ற பார்ப்பன 'அறிவாளி'களால் உருவாக்கப்பட்டதுதான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுகவை பாதுகாத்து வந்தனர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியானத் தலைவர்களாக இருந்ததனால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.

பிண்டம்

ஏற்கனவே பெரியார், அண்ணா இருவரின் திராவிடக் கருத்தியல் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்களை நம்பவைப்பதற்காகவே திராவிடத்தையும் சமூக நீதியையும்  அரிதாரமாக அதிமுக அன்று பூசிக் கொண்டது என்பதைத் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை திராவிடம் மற்றும் சமூக நீதிக்கும் அதிமுகவுக்கும் எள்ளவும் தொடர்பில்லை. ‘திராவிடம்னா என்னன்னு படிச்சவங்களதான் கேட்கணும்’ என்று எடப்பாடி போட்டுடைத்த அன்றே அதிமுகவின் திராவிடம் அம்பலத்தில் ஏறியது. 

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பிழைப்புவாத தற்குறிகள் மட்டுமே. பதவி சொத்து சுகத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டதில்லை. பதவிக்காக இவர்கள் மேசைக்கடியில் தவழ்ந்த காட்சிகளை தமிழகமே பார்த்து கெக்களித்தது. சசிகலாவிடமே இப்படி என்றால் ஜெயலலிதாவிடம் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுகவோ கலைஞர் வழியிலான ஸ்டாலினை வீழ்த்துவதற்கான ஆற்றலை இழந்துவிட்டதால் அது இனிமேலும் பார்ப்பனர்களுக்குத் தேவைப்படாத ஒரு அழுகிய பிண்டம். எனவே, தேவையில்லாத இந்தப் பிண்டத்தை அறுத்தெறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிண்டத்தை ஒட்ட வைப்பதற்கு பார்ப்பனர்கள் முயல்கின்றனர். 

தாதுபுஷ்டி லேகியம் எல்லாம் கொடுத்து வத்திப்போன ‘பாட்சா’வின் பிண்டத்திற்கு பசை ஏற்ற பலமுறை முயன்றார்கள். ஆனால் அது பளபளப்பாவதற்குப் பதிலாக கடைசியில் உப்புகண்டமாய் உலர்ந்து போனது. 

வேறு பிண்டம் எதுவும் அப்போதைக்குக் கிட்டவில்லை. வேறு வழி இல்லாததால், தமிழ்நாட்டில் குறைப் பிரசவத்தால் நைந்து கிடக்கும் தங்களின் ‘டிமோ’ வின்  பிண்டத்திற்கு நாலுகால பூசை செய்து வேதமந்திரம் ஓதி 'அரோகரா' போட்டு உசுப்பிக்க முயல்கின்றனர். அதற்காக அக்காவையும் ஆட்டுக்குட்டியையும் இறக்கி வேலி தாண்டி மேய்ந்து வந்தாலாவது நைந்துபோன பிண்டத்தில் குருதி ஏறும் என்று எதிர்பார்த்தனர். வேலி தாண்டி ஆடு மேய்ந்ததே ஒழிய பிண்டம் பிதுங்கியதாகத் தெரியவில்லை. அக்காவும் எம்பி எம்பிப் பார்த்தது. எதிரில் இருந்தவர்களுக்கோ 'போடிய'த்திற்கு மேலே பரட்டைதான் தெரிந்ததே ஒழிய பிண்டம் தெரியவில்லை. 

குறைப் பிரசவம்  குறைப் பிரசவம்தான். நோஞ்சான் நோஞ்சான்தான். நைந்து போனது நைந்து போனதுதான். 

இனி இதை நம்பிப் பயனில்லை என்பதனால் கொஞ்சம் தசைப் பிடிப்பான மினுமினுப்பான ஒரு பிண்டத்தைக் கண்டெடுத்து புறவாசல் வழியாக பாலும் பழமும் ஊட்டி உசுப்பேற்றி வருகின்றனர். ஊட்டம் அதிகம் கிடைப்பதனால் இந்த சதைப் பிண்டமும் ‘கில்லி’யாய் துள்ளாட்டம் போட்டு வருகிறது. 

‘கில்லி’கள் திரையில் ஜொலிக்கலாம் ஆனால் நிஜத்தில்…?

பார்ப்போம்! 2026க்குப் பிறகு வேறு ஒரு பிண்டம் அவர்களுக்குத் தேவைப்படலாம்!

பிண்டங்கள் ஜாக்கிரதை!

ஊரான்

Tuesday, July 8, 2025

நூறு நாள் வேலை! ஆள் பற்றாக்குறை! அல்லாடும் அரசியல் கட்சிகள்!

‘நூறு நாள் வேலை கிடைக்கவில்லையா,  கவலையை விடுங்கள், நான் தருகிறேன்' என்று நூறு நாள் வேலையை கோவை வடவள்ளியில் இன்று எடப்பாடி அவர்கள் திறந்தவெளி வேனில் நின்று கொண்டே தொடங்கி வைத்திருக்கிறார். 


இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை, ஏற்கனவே மதுரை முருகன் மாநாட்டின் மூலமாக பாஜக தொடங்கி வைத்திருக்கிறது. திமுகவும் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில்தான் பயணிக்க வேண்டும். மற்ற கட்சிகளால் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துவது சற்றே சிரமம்தான். 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிகிற வரை இந்த நூறு நாள் வேலை தொடரும் என்பதனால் வரும் நாட்களில் இந்த வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அச்சம் இருக்காதா பின்ன? ஒரே நாளில் ஒரே இடத்தில் வேலை செய்வதற்கு இரண்டு மூன்று கட்சிகள் முண்டியடித்தால் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடுமே?

இந்த வேலைத் திட்டத்தில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், வேலை நடைபெறும் இடங்களில் அல்லக் 'கைகள்' நீளும் என்பதனால், அது இளம் பெண்களுக்கு  பாதுகாப்பற்றது என உளவுத்துறை  கருதுவதனால், நரைகண்ட ஔவைகளை மட்டுமே இந்த வேலைக்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறை தரப்பிலிருந்து நூறு நாள் வேலைத் திட்ட ஏஜெண்டுகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 

வேலை செய்வதற்காக ஆறு ஏரி குளங்களுக்கோ வாய்க்கா வரப்புகளுக்கோ, மண்வெட்டி கொடுவா அறுவா அன்னக்கூடை என எதுவும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 
இந்த வேலை பெரும்பாலும் நகரங்களில் விஸ்தீரனமான வீதிகளிலும் மைதானங்களிலும் நடைபெறும் என்பதனால்
கொஞ்சம் மினுமினுப்பாகவே செல்லலாம்.  'வாழ்க' என கோஷமிட்டு கைதட்ட வேண்டும். இதுதான் உங்கள் ஒரே வேலை.

நூறு நாள் வேலை நடைபெறும் இடத்திற்கும் நீங்களாகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களாக வந்து வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் வேலை முடிந்து திரும்பும்போது சில மையங்களில் பிங்க் கலர் பஸ் வருவதற்காகக் காத்திருக்க வேண்டி நேரிடலாம். 

வேலையைத் தொடங்கி வைக்க விரைப்பான காலருடன் மினிஸ்டர் ஒயிட் முதலாளிமார்கள் மேடை ஏறுவார்கள். அவர்கள் மேடை ஏறி, எதற்காக இந்த நூறு நாள் வேலை என்பதைப் பற்றிக் கதைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் நைசாக அந்த வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேட வேண்டும். அதற்கு ஏற்ப நீங்கள் எந்த லொகேஷனில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

இரண்டு மணி நேர வேலைக்காக ஒரு சோத்துப் பொட்டலத்துடன் 500 ரூபாய் வரை பேட்டாவும் கிடைக்கும். ஏஜெண்டுகளின் கருணை உள்ளத்தைப் பொறுத்து சோத்துப் பொட்டலம் சில சமயம் கலவை சாதத்தையும் தாண்டி  சிக்கன் பிரியாணியாகக்கூட  இருக்கக்கூடும்.

இன்று அவர்கள் கொடுக்கும் பொட்டலத்தை நீங்கள் மடியில் கட்டினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் உங்களைப் பொட்டலம் கட்டுவார்கள்!

ஊரான்
08.07.2025