நீர்நிலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் திதி கொடுப்பதற்காக இன்று குவிந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்தச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இராமேஸ்வரத்தில் இன்று (24.07.2025)
நீர்நிலைகளுக்குச் சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, முன்னோர்களுக்குப் படையல் போட்டு அவர்கள் அதை உண்ண வருகிறார்களா என வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவதைவிட,
வீட்டிலேயே உறவினர்களை அழைத்து மறைந்த முன்னோர்களின் பிறந்த நாளிலோ அல்லது இறந்த நாளிலோ அவர்களின் நல்ல அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி திதிக்கு நிதியாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அறுசுவை உணவு உண்டால் நம் வயிறும் மனமும் நிறையுமே?
மக்கள் மாற வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டும் புரிகிறது. வீட்டிலேயே படையல் போட்டுக்கொண்டால் நிதி பெறுவோர் சும்மா விடுவார்களா என்ன? வீட்டில் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விட்டால் அதையேக் காரணமாகக் காட்டி அச்சமூட்டி உங்களை நீர்நிலைகளை நோக்கி ஓட வைப்பார்கள். அதற்குப் பயந்து நீயும் நீர்நிலைகளை நோக்கி திதி கொடுக்க, 'சாரி' நிதி கொடுக்க ஓடினால் அந்த AI கூட உன்னைப் பார்த்துக் கெக்களிக்கும்.
'கற்றதனால் ஆய பயன்யென் கொல்', இந்தக் குறளில் கடவுளை வணங்காவிட்டால் நீ கற்ற கல்வியினால் என்ன பயன் என்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே வாலறிவனைக் கடவுளாக்கி விட்டார்கள்.
என்னைப் பொருத்தவரை இங்கே வாலறிவன் கடவுள் அல்ல, உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர். அவர்களைக் கைவிடாமல் உயிரோடு இருக்கும் போது பராமரி; இறந்த பிறகு அவர்களின் நல்ல பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல். அதற்காகவே அவர்களை பராமரி, வணங்கு, நினைவு கூறு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
உயிரோடு இருக்கும்போது வாலறிவன்களை வதைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சிறைப்படுத்தி அவர்கள் இறந்த பிறகு திதி கொடுப்பதால் என்ன பயன்? ஒருசிலர் பணம் கறக்க செய்த இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு வாலறிவன்களை உண்மையாகவே மதிக்கக் கற்றுக் கொள்வதே உனது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
இனியும் நீர்நிலைகளை நோக்கி ஓடாதே! வாலறிவன்கள் உனது வீட்டிலும் உனது நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்கள். உனது பெற்றோர்களாகிய வாலறிவன்களுக்கு மரியாதை செலுத்த இடைத்தரகர்கள் எதற்கு?
'திதி' என்ற பெயரில் 'நிதி' கொடுப்பதை உடனே நிறுத்து! இது கட்டளை! பெரியாரின் கட்டளை!
ஊரான்
No comments:
Post a Comment