Wednesday, November 16, 2011

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் குடி போதையில் இரு சக்கர வண்டி ஓட்டிச் சென்றபோது சாலையில் முன் சென்ற மிதி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்டு முதலில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, விபத்தின் தீவிரம் கருதி பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க்பட்டார். தலையில் அடிபட்டுள்ளது என்றாலே ஸ்கேன் உள்ளிட்ட முக்கியமான பரிசோதனைகளைச் செய்யாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும்.

தலையில் அடிபட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்று நாட்களுக்கு பரிசோதித்த பிறகே அச்சப்படும்படியான பாதிப்பு இல்லை என்கிற முடிவுக்கு மருத்துவர்களால் வரமுடிந்தது. இதற்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவானது. உறவினர்களின் ஆதரவு இருந்ததால் மிகச் சாதாரண ஒப்பந்தத் தொழிலாளியால் இத்தகைய சிகிச்சையை பெற முடிந்தது. நாற்பது ரூபாய்க்கு அடித்த குவார்ட்டரால் நாற்பதாயிரமும் போச்சு,  நாற்பதாண்டு காலம் ஈட்டிய நற்பெயரும் போச்சு.

ஓட்டுநர் உரிமமும் வண்டிக்கான காப்பீடும் முறையாக இருந்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்குத் செலவான தொகையை பெற்றுவிட முடியும். வண்டியில் ஏற்பட்ட சேதாரத்துக்கும் இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தபோது இவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் தங்களது அறிக்கையிலும் அதைக் குறிப்பிட்டுவிட்டதால் இழப்பீடு தொகை பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. இப்படி இழப்பீடு தொகை பெற முடியாமல் பொனவர்கள் மிகச் சிலரே.

இழப்பீடு கிடைக்காது என்பதால் இந்த விபத்துக்கு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு சில காரணங்களுக்காக பல விபத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பதிவாகும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

உயிரைக் காக்கும் தலைக்கவசம்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகிறார்கள். தலையில் பலத்த காயம் அடைபவர்களில் சுமார் 70%  பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். தலைக்கவசம் அணிந்தால் இதில் பாதிபேர் உயிர் பிழைக்க முடியும் என்றாலும் அதை பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். சுயநினைவு உள்ளவர்களே தலைக்கவசத்தை அலட்சியப் படுத்தும் போது போதைக்கு அடிமையானவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

வார இறுதி நாட்களிலும், பிறந்த நாள் - திருமணம் போன்ற மகிழ்சிக்குரிய நாட்களிலும்,  சாவு - காரியம் உள்ளிட்ட துயர நிகழ்ச்சிகளிலும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதும், அதிலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் (முன்பு ‘ரவுண்ட்ஸ்’ என்று சொன்னதை இப்போது ‘கட்டிங்’ என்று சொல்கிறார்கள்), தற்போது வழக்கமாகி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு மது குடிப்பவர்களில் இளைஞர்களுக்கு மட்டுமே இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகமாம்.

“ஜாலிக்காக” தொடங்கும் இந்தக் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல “உனக்கு நான் சளைத்தவன் அல்ல” என்ற போட்டா போட்டியில் மொடாக் குடியில் போய் நிறுத்துகிறது.  சுமார் 30 முதல் 40  வயதுப் பெண்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மருத்துவரை நாடிவருவதும் அதிகரித்துள்ளது. வசதிபடைத்தோர், குறைந்த வருவாய் மற்றும் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுத் தனியாக வாழும் பெண்கள் என மூன்று வகையான பெண்கள் இதில் அடங்குவர். அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தின் அபாய அறிகுறி இது.

சாலை பயங்கரவாதத்தால் பலியாவோர்

சாலை விபத்துகளால் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு பலியாவோர் எண்ணிக்கை 130000  என உலக சுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது. இது சீனாவைவிட அதிகமாம். 

தேசிய நெடுஞசாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் இந்தியச்சாலைகளின் நீளம் சுமார் 33 இலட்சம் கிலோமீட்டர்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்தான். பெருப்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதாவது சுமார் 194754 கிலோமீட்டர் நீளச்சாலைகளில் ஆண்டுக்கு 130000  பேர் மடிகின்றார்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் இறக்கிறார் என்றாகிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக – இதில் இளைஞர்களே அதிகம் - கடந்த ஆண்டு கோவையில் மட்டும் பதிவான வழக்குகள் 2003. இந்த ஆண்டில் 4000 ஆக அதிகரித்துள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தெரிவித்துள்ளார். பெரும்பாலான விபத்துகள் குடி போதையினால் நடந்தாலும் ஆயுள் காப்பீடு பெறவேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்படுகின்றன.

வாகனங்களின் சீற்றத்தால் குருதியில் தோய்ந்து மரணக்காடாய் இன்று காட்சியளிக்கின்றன இந்தியச் சாலைகள்.

ஒவ்வொரு விளைவிற்கும் (effect) பல காரணிகள் இருக்கக்கூடும்.  அதன் காரணிகளைக் கண்டறிந்து முக்கியக் காரணிகளில் தொடங்கி ஒவ்வொன்றாகக் களையும் போதுதான் தவறுகளைத் தவிர்க்க முடியும். ஐப்பானிய அறிஞர் இஷிகாவாவின் மீன் எலும்புக்கூடு வரைபட (fish bone diagram or ishikawa diagram) அணுகுமுறை இதைத்தான் வலியுறுத்துகிறது.

சாலை விபத்துகள் எதனால்?

சாலை விபத்துக்கள் அதிகரிக்கக் காரணம் என்ன? பராமறிக்கப்படாமல் இருக்கும் சாலைகளாலா? பராமரிக்கப்படாத வாகனங்களாலா? அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி கண்டுபிடித்த தரம் குறைந்த ‘பிரேக் ஒயர்’ போன்ற உதிரிப்பாகங்களாலா? குடி போதையில் வாகனம் ஓட்டுவதாலா? வாழ்க்கைத் துன்பங்களைச் சோகமாகச் சுமந்து கொண்டு கவனக் குறைவாய் வாகனம் ஓட்டுவதாலா? எதிர்பாராத ஒன்று தனக்குக் கிடைத்ததால் ஏற்பட்ட களி மகிழ்ச்சியில் (ecstasy) தன்னை மறந்து வாகனம் ஓட்டுவதலா? தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதாலா? சாலை விதிகளை மீறுவதாலா? சாலையில் திரியும் விலங்குகளாலா?

சாலை பாதுகாப்பு வாரங்கள் கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு சாலை விதிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. மதுக் குடியர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் விபத்துகள் குறைந்த பாடில்லை. அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படியானால் விபத்துகளுக்கு முக்கிய பங்காற்றும் காரணிகள்தான் எவை?

சாலை விபத்துகளின் ஊற்றுக்கண்

எனது பார்வையில் இங்கே சொல்லப்பட்ட அனைத்துமே காரணிகளாக இருந்தாலும் இரண்டு காரணிகளே பிரதான பங்காற்றுகின்றன. ஒன்று குடி போதையில் வண்டி ஓட்டுவது. அடுத்தது பராமரிக்கப்படாத மற்றும் விரிவுபடுத்தப்படாத சாலைகள். இவைகளைச் சரி செய்யாமல் பெரிய அளவில் சாலை விபத்துகளைக் குறைத்துவிட முடியாது. பராமரிக்கப்படாத சாலைகளுக்கு பொறுப்பு அரசாங்கம்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கட்டடப் பொறியியில் பிரிவில் பணியாற்றியப் பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளர் வேலை கிடைத்தது. இரண்டு இடத்திலும் ஒரே ஊதியம்தான் என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலால் – நிறைய சம்பாதிக்கலாமே - பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பொறுப்பேற்கிறார். இரண்டாவது நாளிலேயே திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாட்கள் போல சிலர் இவரது அலுவலகத்துக்கு வந்து ஒப்பந்த வேலைகள் முடிந்ததாக கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்கின்றனர். இவரோ வேலைகள் நிறைவேறியதை சோதிக்காமல் கையெழுத்திட முடியாது என்கிறார். அவர்கள் கொடுத்த நெருக்குதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி ‘அப்பப்பா… இந்த வேலையே வேண்டாம்’ என உதறித்தள்ளிவிட்டு மீண்டும் விரிவுரையாளர் பணிக்குத் திரும்புகிறார். சாலை பராமறிப்பிற்கு ஒதுக்கப்படும் தொகை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களால் இப்படி சுருட்டப்படும் போது  சாலைகள் மட்டும் எப்படி செம்மையாக இருக்கும்?

நெடுஞ்சாலைகளில் தாகம் தீர்க்கத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, போதை ஏற்றிக் கொள்ள மதுக்கடைகளும் மோகம் தீர்க்க முந்தானைகளுமே விரிக்கப்பட்டுள்ளன. மோகம் தீர்ப்பதால்தான் சாலையோர ஓட்டல்களெல்லாம் மோட்டல்களாக பெயர் மாற்றம் பெற்றனவோ!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் டாஸ்மாக் மதுவின் மதிப்பு மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ1924 கோடிக்கு மது விறபனையாகி சாதனைபடைத்துள்ளது. தமிழகத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி பேர். இதில் குழந்தைகள், சிறுவர்கள் என பாதி பேரைக் கழித்துவிட்டால் மீதி 1½ கோடி ஆண்களில் 80% பேர் அதாவது சுமார் ஒரு கோடி ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு குடி மகனும் மாதத்திற்கு சுமார் 2000 ரூபாயை குடிக்காக செலவழிக்கிறான் என்றாகிறது. கள்ளச் சந்தையில் விற்பனையாகும் மது இதில் சேராது.  மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதேயொழிய குறைந்த பாடில்லை. இப்போது உயர்ரக மதுக்கடைகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

வீதி எங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு மக்களை போதையில் ஆழ்த்தினால் விபத்துகள் ஏன் நடக்காது? இங்கே குடிப்பவன் குற்றவாளியா? ஊற்றிக் கொடுக்கும் சிப்பந்தி குற்றவாளியா? கடைவிரித்து விற்பவன் குற்றவாளியா? விற்பனைக்காக உற்பத்தி செய்யும் முதலாளி குற்றவாளியா? இவை எல்லாம் முறையாக நடப்பதை உறுதி செய்யும் அதிகாரி குற்றவாளியா? மதுக்கடைகளை நடத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் குற்றவாளியா? அரசுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் குற்றவாளியா? குடியின் ஊற்றுக்கண் எது? அரசாங்கமா அல்லது குடிப்பவனா?

“குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்கிற உபதேசங்களெல்லாம் எடுபடுகிறதா என்ன? வள்ளுவன், காந்தியின் உபதேசங்களையே உதாசீனப் படுத்தியவன் அரசின் அறிவுரைகளால் மட்டும் மாறிவிடுவானா? உபதேசங்களால் மாற்றங்கள் நிகழாது. குடியின் ஊற்றுக்கண்ணை அகற்றாதவரை சாலைகளில் மரண ஓலங்கள் மறையாது.

4 comments:

  1. அனைத்தும் அவசியமான விபரங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் தானே திருந்தினால்தான் உண்டு.

    யாரோ சொன்னார்கள்.ரோட்டில் செல்லும் ஒரு கண் பார்வையற்றவருக்கு கூட இதுவரை சாலை விபத்துகள் நடந்ததில்லையாம்.

    ReplyDelete
  2. எவ்வளவுதான் பாதுகாப்பா போனாலும குடிகாரன்களாலும் அதிவேககதாநாயகர்களாலும் விபத்து நேர்வதை தவிர்க்கமுடியவில்லை

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete