Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, May 25, 2014

உயிரோடு விளையாடும் ‘ரயில் நீர்’!



நண்பரின் மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி இருக்கும். அவரது மனைவி - மகள் மற்றும் மருமகன் ஆகிய நான்கு பேரும் அரியலூரிலிந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்கின்றனர். அது கோடை காலம். எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அடுத்த இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அவரது மருமகன் இரண்டு காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி குடிநீர்க் குழாயைத் தேடுகிறார்.

அவர்கள் பயணம் செய்தது எஞ்சினை ஒட்டி இருந்த இரண்டாவது பெட்டி. எனவே நடைமேடையில் பின்னோக்கி சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி குடிநீர்க் குழையை அடைந்த போது அங்கே ஏற்கனவே நான்கு - ஐந்து பேர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் கடைசியாக இவர் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டு திரும்புவதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கிவிட்டது.

அருகிலுள்ள பெட்டியிலேயே இவர் ஏறி இருக்கலாம். பாசஞ்சர் இரயிலில் அப்படி ஏறினால் தான் பயணம் செய்த பெட்டிக்குச் செல்ல முடியாது. தண்ணீர் பிடிக்கப் போனவரைக் காணவில்லையே என உடன் வந்தவர்களும் தவித்துப் போவார்கள் என்பதால் இரண்டு கைகளிலும் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஓடி வரும் போது நடைமேடையைத்தாண்டி இவர் பயணித்த பெட்டி நகர்ந்து விட்டது. நடைமேடையின் முடிவில் இருந்த சாய்வான பகுதியை கவனிக்காமல், ஓடி வந்த வேகத்தில் இடறி விழுந்ததில் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் சிக்கி அவ்விடத்திலேயே மாண்டு போகிறார்.

இச்சம்பத்தை நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சி என் கண் முன்னால் நடந்தது போல பத்து ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தாகம் தீர்ப்பதற்காக ஐந்து மாத கர்ப்பினி மனைவியை நிரந்தரமாய் தவிக்கவிட்டுவிட்டு ஒரு உயிர் பலியாகிப் போனது.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றும் நாம் எண்ணுவதில்லையா? அப்படிகூட அவர் நினைத்திருக்கலாம். காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் சிறிய இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில்லையே! இன்று வேண்டுமானால் “ரயில் நீர்” பாட்டில்களில் கிடைக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லையே.

நான் ஒவ்வொரு முறை தொடர் வண்டியில் பயணிக்கும் போதெல்லாம் இச்சம்பவம் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தேன். ஒரு இருபது நிமிட நேரம்தான் நடந்திருப்பேன். காலை நேரம் என்றாலும் கோடை காலம் என்பதால் இருபது நிமிட பயணத்திலேயே நா வறண்டு விட்டது. இந்தத் தொடர் வண்டி நிலைய நடைமேடையில் உள்ள குழாயில் எப்பொழுதுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நல்ல தண்ணீர் கிடைப்பதுகூட இரயில்வே நிர்வாகத்தின் முயற்சியினால் அல்ல; அருகிலுள்ள நடுவண் அரசின் குடியிருப்பு நிர்வாகத்தின் தயவினால்தான். குடியிருப்பு நிர்வாகத்திற்கு நன்றி கூறி குழாயைத் திறந்து வயிறு முட்ட குடித்தேன். பாட்டில் எதுவும் கைவசம் இல்லாததால் வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை; தொடர் வண்டி நிலையத்திலும் தண்ணிர் பிடிக்க முடியவில்லை.

படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஸ்லீப்பர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு எஸ்-5 பெட்டியில் ஏறினேன். உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சியை தொடர் வண்டிக்குள் இருந்த நாற்றம்  பறித்துக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து  கேரள மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் மிக நீண்ட தூர தொடர் வண்டி அது. இந்த வண்டியில் எப்பொழுதுமே இந்த நாற்றம் இருக்கும். வண்டியை சுத்தம் செய்யாமல் நாட்கணக்கில் இயக்கினால் நாறாமலா இருக்கும்?

சுமார் ஒன்றரை மணி நேர பயணம். காலை நேர தண்ணீர் தாகத்தை அடக்கிக் கொண்டேன். திருமண மண்டபத்திற்கு சென்ற உடனே காலை உணவு. தண்ணீர் தாகத்தையும் தீர்க்க முடிந்தது. இரயிலிலேயே தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கலாமே என கேள்வி எழுவது இயல்புதான். ஒன்றரை மணி நேரத்திற்கு 15 ரூபாயை செலவழிக்க வேண்டுமா என்கிற எண்ணம்தான்.

திருமணம் முடிந்து 11 மணிக்குத் திரும்பும் போதும் இரயில் பயணம்தான். பகல் நேரப் பயணம், தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மண்டப டைனிங் ஹாலில் தேடினேன். பாட்டில்கள் தீர்ந்துவிட்டன என்றனர். வெறுங்கையோடு திரும்பினேன். 11.30 மணிக்கு தொடர் வண்டி வந்தது. அதே ஸ்லீப்பர் முறையில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி எஸ்-3  பெட்டியில் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நண்பகல் ஆனதால் வெப்பம் வாட்டியது. காலையில் சாப்பிட்ட பொங்கலும் கடும் வெப்பமும் இரண்டும் ஒன்று சேர எனது நாக்கு தண்ணிருக்காக ஏங்கியது. சிக்கனம் பார்த்தால் சீக்காகி விடுவொம் என்பதால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். வீடு போய்ச் சேரும் வரை இந்த ஒரு லிட்டர் தண்ணீரை வைத்தே சமாளிப்பது என முடிவெடுத்து அவ்வப்பொழுது தொண்டையை நனைத்துக் கொண்டு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு ஐந்து மணி நேர இரயில் பயணத்திற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீருக்கு 30 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. ஜார்கண்டிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் கேரளா மற்றும் தமிழகத்திற்கு நாட்கணக்கில் பயணம் செய்யும் போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? பொரியையும் மிக்சரையும் கலந்து நான்கு வாய்ப்பிடி அளவு மென்று தின்று தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறப்பி காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும் வட இந்தியர்களே இன்று மிக அதிகமாக தொடர் வண்டிகளில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ஏழை எளிய மக்களால் தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழிக்க முடியுமா? ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது இருக்கிற பாட்டில்களை அள்ளிக் கொண்டு குடிநீர்க் குழையை தேடிப்பிடித்து பாட்டில்களை நிரப்பிக் கொண்டு ஓடோடி வந்து மூச்சிறைக்க இவர்கள் வண்டியில் ஏறுவதைப் பார்க்கும் போது நண்பரின் மருமகன் மரணம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Thursday, January 19, 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

Wednesday, November 16, 2011

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் குடி போதையில் இரு சக்கர வண்டி ஓட்டிச் சென்றபோது சாலையில் முன் சென்ற மிதி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்டு முதலில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, விபத்தின் தீவிரம் கருதி பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க்பட்டார். தலையில் அடிபட்டுள்ளது என்றாலே ஸ்கேன் உள்ளிட்ட முக்கியமான பரிசோதனைகளைச் செய்யாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும்.

தலையில் அடிபட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்று நாட்களுக்கு பரிசோதித்த பிறகே அச்சப்படும்படியான பாதிப்பு இல்லை என்கிற முடிவுக்கு மருத்துவர்களால் வரமுடிந்தது. இதற்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவானது. உறவினர்களின் ஆதரவு இருந்ததால் மிகச் சாதாரண ஒப்பந்தத் தொழிலாளியால் இத்தகைய சிகிச்சையை பெற முடிந்தது. நாற்பது ரூபாய்க்கு அடித்த குவார்ட்டரால் நாற்பதாயிரமும் போச்சு,  நாற்பதாண்டு காலம் ஈட்டிய நற்பெயரும் போச்சு.

ஓட்டுநர் உரிமமும் வண்டிக்கான காப்பீடும் முறையாக இருந்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்குத் செலவான தொகையை பெற்றுவிட முடியும். வண்டியில் ஏற்பட்ட சேதாரத்துக்கும் இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தபோது இவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் தங்களது அறிக்கையிலும் அதைக் குறிப்பிட்டுவிட்டதால் இழப்பீடு தொகை பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. இப்படி இழப்பீடு தொகை பெற முடியாமல் பொனவர்கள் மிகச் சிலரே.

இழப்பீடு கிடைக்காது என்பதால் இந்த விபத்துக்கு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு சில காரணங்களுக்காக பல விபத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பதிவாகும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

உயிரைக் காக்கும் தலைக்கவசம்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகிறார்கள். தலையில் பலத்த காயம் அடைபவர்களில் சுமார் 70%  பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். தலைக்கவசம் அணிந்தால் இதில் பாதிபேர் உயிர் பிழைக்க முடியும் என்றாலும் அதை பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். சுயநினைவு உள்ளவர்களே தலைக்கவசத்தை அலட்சியப் படுத்தும் போது போதைக்கு அடிமையானவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

வார இறுதி நாட்களிலும், பிறந்த நாள் - திருமணம் போன்ற மகிழ்சிக்குரிய நாட்களிலும்,  சாவு - காரியம் உள்ளிட்ட துயர நிகழ்ச்சிகளிலும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதும், அதிலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் (முன்பு ‘ரவுண்ட்ஸ்’ என்று சொன்னதை இப்போது ‘கட்டிங்’ என்று சொல்கிறார்கள்), தற்போது வழக்கமாகி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு மது குடிப்பவர்களில் இளைஞர்களுக்கு மட்டுமே இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகமாம்.

“ஜாலிக்காக” தொடங்கும் இந்தக் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல “உனக்கு நான் சளைத்தவன் அல்ல” என்ற போட்டா போட்டியில் மொடாக் குடியில் போய் நிறுத்துகிறது.  சுமார் 30 முதல் 40  வயதுப் பெண்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மருத்துவரை நாடிவருவதும் அதிகரித்துள்ளது. வசதிபடைத்தோர், குறைந்த வருவாய் மற்றும் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுத் தனியாக வாழும் பெண்கள் என மூன்று வகையான பெண்கள் இதில் அடங்குவர். அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தின் அபாய அறிகுறி இது.

சாலை பயங்கரவாதத்தால் பலியாவோர்

சாலை விபத்துகளால் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு பலியாவோர் எண்ணிக்கை 130000  என உலக சுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது. இது சீனாவைவிட அதிகமாம். 

தேசிய நெடுஞசாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் இந்தியச்சாலைகளின் நீளம் சுமார் 33 இலட்சம் கிலோமீட்டர்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்தான். பெருப்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதாவது சுமார் 194754 கிலோமீட்டர் நீளச்சாலைகளில் ஆண்டுக்கு 130000  பேர் மடிகின்றார்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் இறக்கிறார் என்றாகிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக – இதில் இளைஞர்களே அதிகம் - கடந்த ஆண்டு கோவையில் மட்டும் பதிவான வழக்குகள் 2003. இந்த ஆண்டில் 4000 ஆக அதிகரித்துள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தெரிவித்துள்ளார். பெரும்பாலான விபத்துகள் குடி போதையினால் நடந்தாலும் ஆயுள் காப்பீடு பெறவேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்படுகின்றன.

வாகனங்களின் சீற்றத்தால் குருதியில் தோய்ந்து மரணக்காடாய் இன்று காட்சியளிக்கின்றன இந்தியச் சாலைகள்.

ஒவ்வொரு விளைவிற்கும் (effect) பல காரணிகள் இருக்கக்கூடும்.  அதன் காரணிகளைக் கண்டறிந்து முக்கியக் காரணிகளில் தொடங்கி ஒவ்வொன்றாகக் களையும் போதுதான் தவறுகளைத் தவிர்க்க முடியும். ஐப்பானிய அறிஞர் இஷிகாவாவின் மீன் எலும்புக்கூடு வரைபட (fish bone diagram or ishikawa diagram) அணுகுமுறை இதைத்தான் வலியுறுத்துகிறது.

சாலை விபத்துகள் எதனால்?

சாலை விபத்துக்கள் அதிகரிக்கக் காரணம் என்ன? பராமறிக்கப்படாமல் இருக்கும் சாலைகளாலா? பராமரிக்கப்படாத வாகனங்களாலா? அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி கண்டுபிடித்த தரம் குறைந்த ‘பிரேக் ஒயர்’ போன்ற உதிரிப்பாகங்களாலா? குடி போதையில் வாகனம் ஓட்டுவதாலா? வாழ்க்கைத் துன்பங்களைச் சோகமாகச் சுமந்து கொண்டு கவனக் குறைவாய் வாகனம் ஓட்டுவதாலா? எதிர்பாராத ஒன்று தனக்குக் கிடைத்ததால் ஏற்பட்ட களி மகிழ்ச்சியில் (ecstasy) தன்னை மறந்து வாகனம் ஓட்டுவதலா? தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதாலா? சாலை விதிகளை மீறுவதாலா? சாலையில் திரியும் விலங்குகளாலா?

சாலை பாதுகாப்பு வாரங்கள் கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு சாலை விதிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. மதுக் குடியர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் விபத்துகள் குறைந்த பாடில்லை. அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படியானால் விபத்துகளுக்கு முக்கிய பங்காற்றும் காரணிகள்தான் எவை?

சாலை விபத்துகளின் ஊற்றுக்கண்

எனது பார்வையில் இங்கே சொல்லப்பட்ட அனைத்துமே காரணிகளாக இருந்தாலும் இரண்டு காரணிகளே பிரதான பங்காற்றுகின்றன. ஒன்று குடி போதையில் வண்டி ஓட்டுவது. அடுத்தது பராமரிக்கப்படாத மற்றும் விரிவுபடுத்தப்படாத சாலைகள். இவைகளைச் சரி செய்யாமல் பெரிய அளவில் சாலை விபத்துகளைக் குறைத்துவிட முடியாது. பராமரிக்கப்படாத சாலைகளுக்கு பொறுப்பு அரசாங்கம்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கட்டடப் பொறியியில் பிரிவில் பணியாற்றியப் பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளர் வேலை கிடைத்தது. இரண்டு இடத்திலும் ஒரே ஊதியம்தான் என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலால் – நிறைய சம்பாதிக்கலாமே - பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பொறுப்பேற்கிறார். இரண்டாவது நாளிலேயே திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாட்கள் போல சிலர் இவரது அலுவலகத்துக்கு வந்து ஒப்பந்த வேலைகள் முடிந்ததாக கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்கின்றனர். இவரோ வேலைகள் நிறைவேறியதை சோதிக்காமல் கையெழுத்திட முடியாது என்கிறார். அவர்கள் கொடுத்த நெருக்குதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி ‘அப்பப்பா… இந்த வேலையே வேண்டாம்’ என உதறித்தள்ளிவிட்டு மீண்டும் விரிவுரையாளர் பணிக்குத் திரும்புகிறார். சாலை பராமறிப்பிற்கு ஒதுக்கப்படும் தொகை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களால் இப்படி சுருட்டப்படும் போது  சாலைகள் மட்டும் எப்படி செம்மையாக இருக்கும்?

நெடுஞ்சாலைகளில் தாகம் தீர்க்கத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, போதை ஏற்றிக் கொள்ள மதுக்கடைகளும் மோகம் தீர்க்க முந்தானைகளுமே விரிக்கப்பட்டுள்ளன. மோகம் தீர்ப்பதால்தான் சாலையோர ஓட்டல்களெல்லாம் மோட்டல்களாக பெயர் மாற்றம் பெற்றனவோ!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் டாஸ்மாக் மதுவின் மதிப்பு மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ1924 கோடிக்கு மது விறபனையாகி சாதனைபடைத்துள்ளது. தமிழகத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி பேர். இதில் குழந்தைகள், சிறுவர்கள் என பாதி பேரைக் கழித்துவிட்டால் மீதி 1½ கோடி ஆண்களில் 80% பேர் அதாவது சுமார் ஒரு கோடி ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு குடி மகனும் மாதத்திற்கு சுமார் 2000 ரூபாயை குடிக்காக செலவழிக்கிறான் என்றாகிறது. கள்ளச் சந்தையில் விற்பனையாகும் மது இதில் சேராது.  மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதேயொழிய குறைந்த பாடில்லை. இப்போது உயர்ரக மதுக்கடைகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

வீதி எங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு மக்களை போதையில் ஆழ்த்தினால் விபத்துகள் ஏன் நடக்காது? இங்கே குடிப்பவன் குற்றவாளியா? ஊற்றிக் கொடுக்கும் சிப்பந்தி குற்றவாளியா? கடைவிரித்து விற்பவன் குற்றவாளியா? விற்பனைக்காக உற்பத்தி செய்யும் முதலாளி குற்றவாளியா? இவை எல்லாம் முறையாக நடப்பதை உறுதி செய்யும் அதிகாரி குற்றவாளியா? மதுக்கடைகளை நடத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் குற்றவாளியா? அரசுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் குற்றவாளியா? குடியின் ஊற்றுக்கண் எது? அரசாங்கமா அல்லது குடிப்பவனா?

“குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்கிற உபதேசங்களெல்லாம் எடுபடுகிறதா என்ன? வள்ளுவன், காந்தியின் உபதேசங்களையே உதாசீனப் படுத்தியவன் அரசின் அறிவுரைகளால் மட்டும் மாறிவிடுவானா? உபதேசங்களால் மாற்றங்கள் நிகழாது. குடியின் ஊற்றுக்கண்ணை அகற்றாதவரை சாலைகளில் மரண ஓலங்கள் மறையாது.

ஊரான்

Tuesday, December 21, 2010

" ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?


அன்புள்ள வலைப்பூ வாசகர்களே!

25.11.2010 அன்று "வினவு" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

ஊரான்.

---------------------------------------------------------------------------------------------

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”

“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

ஊரான்.

Tuesday, November 30, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? -1

இன்று படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளன. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றிவரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனை எத்தனையோ மாற்றங்கள். 

எட்டுமுழ வேட்டிகளும், பதினாறுகஜம் புடவைகளும் பெட்டிக்குள் முடக்கிவிட்டன. பாரம்பரியம் என்று சொல்லி இன்று அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.

ஆனால், ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள். 

ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம். 

ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கே செல்லாமல், பழைய சடங்குகள் சம்பிரதாயங்களைக் கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும், பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும்தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும், சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன. 

எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குள்ளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் எஞ்சி நிற்கும்.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா? உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது? 

மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா? சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இவற்றைப் பற்றி அலசலாமா?

தொடரும்.....

ஊரான்

Saturday, November 20, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?

சென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.

19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.  

கணிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.

எங்கள் மூவருக்கோ படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.

அவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.

தொடரும்........