Wednesday, July 22, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

சண்டாளர்கள் பறையர்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பறையன் என்ற சொல் மனுஸ்மிருதி தமிழ் மொழி பெயர்ப்பில் இரண்டு இடங்களில்  வருகிறது. (மனு:4:85,86). தீண்டப்படாதவர்கள் அனைவருமே இந்தச் சண்டாளர் என்கிற பட்டியலுக்குள் அடங்கிவிடுகிறார்கள்.

மிக அருவருக்கத்தக்க கழிவுகளை அப்புறப்படுத்திக் கொண்டும், பலதரப்பட்டவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டும், அவர்களின் வீட்டு வாசலில் நின்று உணவு பெறுவதும், தூரத்தில் நின்று கடைகளில் மளிகை சாமான் வாங்குவதும், யாரையும் தீண்டாமலும், யாராலும் தீட்டுப்படாமலும் வாழ்வதுதானே தீண்டப்படாதவனின் நிலை. இத்தகைய ஒரு ஊரை அவன் எப்படி தனது ஊராகக் கருத முடியும் என கேள்வி எழுப்பி தீண்டாமையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டுகிறார் அம்பேத்கர்.

தனது சொந்த அனுபவத்திலிருந்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் தீண்டாமை குறித்த அவரது பதிவுகளில் சில….

வண்டியிலும் தீண்டாமை…

1901 வாக்கில் கோடை விடுமுறையைக் கழிக்க கோரேகானுக்குச் சென்ற போது இவர்கள் தீண்டப்படாத மஹர்கள் (சண்டாளர்கள்) என்பதை அறிந்த மாசூர் ரயில் நிலைய அதிகாரி இவர்கள் மீது காட்டிய அருவருப்பையும், மஹர்களை ஏற்றிச் சென்றால் இழிவாகிவிடும் என்பதற்காக மாசூரிலிருந்து கோரேகானுக்குச் செல்ல வண்டி ஓட்டிகள் வர மறுத்ததையும், நள்ளிரவில் சுங்கச் சாவடியில் தங்கியபோது இவர்கள் மஹர்கள் என்பதால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காததையும் அம்பேத்கர் மிக வேதனையோடு பதிவு செய்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவில் வண்டியில் பயணம் செய்த போது காந்தியை இழிவுபடுத்தியதற்காக வெள்ளைக்காரன் மிது வருகிற  கோபம் அம்பேத்கரை இழிவுபடுத்திய சாதி இந்துக்கள் மீது வராமல் போனது ஏன்?

வகுப்பறையில் தீண்டாமை….

அம்பேத்கருக்கு வயது ஒன்பது. பள்ளி வகுப்பறையில் தகுதி வரிசைப்படி இவர் உட்கார வைக்கப்படவில்லை. இவர் உட்காருவதற்கு என தனி சாக்குப்பை ஒன்று இருக்கும். பள்ளியை சுத்தம் செய்யும் வேலையாள்கூட இந்த சாக்குப்பையை தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்பதால் அதை தொடமாட்டானாம்.

அதே போல குடிநீர்க் குழாயைத் தொடமுடியாது. பள்ளிக்கூட பணியாள் குழாயைத் திறந்தால்தான் இவருக்குத் தண்ணீர் கிடைக்கும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.

முடியில்கூட தீண்டாமை…..

சலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க இவர்களுக்கு வசதி இருந்தாலும் தீண்டத்தகாதவர்களின் துணிகளை சலவை செய்ய சலவையாளர் எவரும் முன்வரவில்லை. இவரது மூத்த சகோதரிதான் இவரது துணிகளைத் துவைத்துக் கொடுத்துள்ளார். அதே போல முடிதிருத்தும் தொழிலாளிகளும் இவருக்கு முடிதிருத்த முன்வராததால் இவரது மூத்த சகோதரியே இவருக்கு  முடிவெட்டுகிற வேலையையும், சவரம் செய்கிற வேலையையும் செய்துள்ளார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தொடரும்.

தொடர்புடைய பதிவுகள்:


தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

3 comments:

  1. நிழலில் கூட தீண்டாமை இருக்கிறது தோழர்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இது குறித்து ஆதாரத்தோடு வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

      Delete
  2. அந்த மாத்திரத்தில் கூறி உள்ளிர்கள்

    ReplyDelete