Tuesday, April 6, 2021

பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஏழு தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களில் குறைந்தது 10% பேர் அல்லது 100 பேர்-இதில் எது குறைவோ அந்த அளவுக்கு-அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக 500 தொழிலாளர்கள் எனில் 50 பேரும் அல்லது 1000 தொழிலாளர்கள் எனில் 100 பேரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தொடக்கத்தில் மேற்கண்ட நிபந்தனைகளின்படி ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அச்சங்கம் தொடர்ந்து அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தொழிற்சங்கப் பதிவை தக்க வைத்துக் கொள்ள முடியும். (விதி 6, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 

ஒரு நிறுவனத்தில் ஒரு சங்கம் மட்டுமே இருந்தால், அந்தச் சங்கம் கூட்டுபேர உரிமை பெற முடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குமேயானால், எந்தச் சங்கம் 51 சதவீதத்திற்கு மேல் தொழிலாளர்களின் ஆதரவு பெற்றுள்ளதோ, அச்சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் கூட்டுபேர உரிமையில் பங்கெடுக்க முடியும். எந்த ஒரு சங்கமும் 51 சதவீதத்திற்கு மேல் ஆதரவு பெறவில்லை என்றால் 20 சதவீத ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் கூட்டபேர கவுன்சில் ஒன்றை நிர்வாகமே ஏற்படுத்தும். (விதி 14, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).


அரசியல் சட்டம் வழங்கியுள்ள சங்கமாகச் சேரும் உரிமையை நேரடியாக பறிப்பதோடு, அங்கீகாரம் பெற்ற ஒரு சங்கம் நிர்வாகத்தின் எடுபிடிச் சங்கமாக செயல்படும் சூழலில், புதியதோர் மாற்றுச் சங்கம் அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைத்து விடுகின்றன மேற்கண்ட பிரிவுகள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொழிலாளர்களைப் பழிவாங்குவதில் எதேச்சதிகாரமாக செயல்படும் நிர்வாகங்களை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கான நிலை ஆணைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு நிலை ஆணைகள் சட்டம் பொருந்தும் என்றிருந்த பழைய சட்டத்தைக் குப்பைத் தோட்டியில் வீசிவிட்டு இனி 300 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிலை ஆணைகள் பொருந்தும் என சட்டத்தைத் திருத்தி உள்ளது மோடி அரசு. (விதி 28-29, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

'நீம்' தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஏற்ப சட்டம் திருத்தப்பட்டுள்ளதால் இனி நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 300 பேருக்கும் குறைவாகவே வைத்துக் கொள்வார்கள். அனைத்து வகையான தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அந்த நிறுவனத்துக்கு நிலை ஆணைகள் தேவையில்லை என்கிறார் மோடி. இதன் மூலம் முதலாளிளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு இனி அளவே இருக்காது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  நிலை ஆணைகள் சட்டத்தின் மூலம் நிவாரணம் கோருவதற்கான அரைகுறை உரிமைகளையும் பறித்துக் கொண்டுவிட்டது பாஜக அரசு.


மாதிரி நிலை ஆணைகள் ( Model Standing Orders)


300 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு மாதிரி நிலை ஆணைகள் (Model Standing Orders) ஒன்றை வெளியிட்டுள்ளது நடுவண் அரசு. இதன்படி நிரந்தரத் தொழிலாளர்கள் (Permanent), தற்காலிகத் தொழிலாளர்கள் (Temporary), பயிற்சியாளர்கள் (Apprentices), தகுதிகாண் தொழிலாளர்கள் (Probationers), பதிலிகள் (Badlies) மற்றும் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்புத் தொழிலாளர்கள் (Fixed Term Employment) என தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது இந்தச் சட்டம். (விதி-3: மாதிரி நிலை ஆணைகள்)


நான்கு சட்டத் தொகுப்புகளும் பயிற்சியாளர்களுக்குப் (Apprentices) பொருந்தாது என ஏற்கனவே சொல்லிவிட்டு அவர்களை மாதிரி நிலை ஆணைகள் பட்டியலில் சேர்த்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.


படித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் ‘செட்டில்’ஆகி விடலாம் என இனி யாரும் கனவுகூடக் காண முடியாது. பொறியியல் பட்டதாரியானாலும், முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் இனி குறிப்பிட்ட காலப் பணிக்கான வேலைவாய்ப்பு மட்டுமே கிடைக்கும். ஆறு மாதமோ, ஓர் ஆண்டோ அல்லது மூன்று ஆண்டுகளோ என கால அளவு நிர்ணயிக்கப்பட்டால், கால இலக்கு முடிந்த பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே ‘பெல்’ போன்ற மத்திய அரசு நிறுவனங்களே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட கால வேலை முடிந்த பிறகு வேறு ஒரு வேலை தேடி ஓட வேண்டும். ஒருவேளை உணவுக்காக பிச்சைக்காரர்கள் தட்டேந்தி வீடு வீடாக ஓடுவதைப் போல படித்தவர்கள் இனி வேலை தேடி ஓட வேண்டும். மாற்று வேலை கிடைக்க ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆகலாம். அதுவரை உயிரோடு இருந்தால் அடுத்த வேலைக்குப் போகலாம். இல்லையேல் எமதர்மன் உங்களை எடுத்துக் கொள்வான்.  


குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது. மலிவான தொழிலாளர் சந்தைக்கு வழிவகுப்பதோடு வாழ்க்கை நிலையற்றதாக மாற்றப்படும். எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு சமூகத்தில் எப்பொழுதும் பதற்றமே நிலவும்.


யுத்தத்தில் பிடிபட்டவன், பக்தியினால் வேலை செய்பவன், தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், தானமாகக் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்பவன் மற்றும் குற்றத்திற்காக வேலை செய்பவன். இவர்கள் மனு வகைப்படுத்தும் ஏழு வகைத் தொழிலாளர்கள் (மனு:8-415). மனு காட்டிய வழியில்தான் இன்றைய மனுவாதிகளும் தொழிலாளர் வர்க்கத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர்.


அனைத்துவிதமான உடல்தகுதி சோதனைக்குப் பிறகுதான் ஒருவருக்கு வேலையே தருகிறார்கள். பணிச் சூழலால் ஒரு தொழிலாளிக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்டறிந்து தொழிலாளியை சரி செய்வதோ அல்லது உடல் தகுதிக்கு ஏற்ற மாற்று வேலையை தருவதோ நிர்வாகத்தின் கடமை. இதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் இனி எந்த நேரத்திலும் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என நிலை ஆணைகளை வகுத்திருக்கிறார்கள் (விதி-19: மாதிரி நிலை ஆணைகள்). தொழிலாளர்களின் உழைப்பைச் சக்கையாகப் பிழிந்துவிட்டு நிறுவனத்திற்காக உழைத்தத் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் உடல் தகுதியைக் காரணம் காட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளார் மோடி.  


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்


மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4

 

No comments:

Post a Comment