Showing posts with label துட்டு. Show all posts
Showing posts with label துட்டு. Show all posts

Thursday, May 18, 2023

யூடியூப் சேனல்கள்: காசு! பணம்! துட்டு! மணி! மணி!!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, ஊடகத் துறையில் இன்று கோலோச்சுவது யூடியூப் சேனல்கள். படிப்பதை விட, பார்ப்பதும் கேட்பதும் சுலபமாகிவிட்டது மக்களுக்கு. இதை சோம்பேறித்தனம் என்பதா அல்லது நவீன தொழில்நுட்பத்துக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள் என்பதா? இதுதான் யூடியூப் சேனல் காரர்களின் மூலதனம்.

 

கொஞ்சம் குரல் வளமும், பேச்சுத் திறமையும், சில விவரங்களைச் சேகரிக்கின்ற ஆற்றலும் இருந்தால் போதும். உடனே ஒருவர் யூடியூப் சேனலைத் தொடங்கி விடுகிறார். ஏதோ சமூகத்தைப் புரட்டிப் போடுவதற்காகவே தான் யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்துவதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள் இவர்கள்.


ஆனால் உண்மை அதுவல்ல. வருவாயை மனதில் கொண்டுதான் இவர்கள் யூடியூப் சேனலையே தொடங்குகிறார்கள். சிலருக்கு ஆயிரங்களையும், சிலருக்கு லட்சங்களையும் வாரிக் கொடுக்கிறது யூடியூப் சேனல்கள். அவரவர் தனக்குத் தெரிந்த கலையைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். சமையல், மருத்துவம், உடல் ஆரோக்கியம், கோலம், அரசியல் என மக்களின் அன்றாடத் தேவைகள்/ பிரச்சனைகள் தொடர்பான தலைப்புகளில் யூடியூப் சேனல்கள் பல்கிப் பெருகிவிட்டன


எது, பற்றி எறிகிற பிரச்சனையோ அந்தப் பிரச்சனை பற்றி அரசியல் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டால், அது பலரிடம் சென்றடையும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தற்போதைய 'ட்ரெண்ட்' கள்ளச்சாராயச் சாவுகள். சில நாட்களுக்கு இது தொடரும். அடுத்து வேறு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் அதில் யாரைக் குறை கூறினால் அந்தப் பதிவைப் பலரும் பார்ப்பார்களோ, அதற்கு ஏற்ப கருத்தைத் தெரிவிப்பார்கள். மற்றபடி அந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான அறிவோ, ஆலோசனையோ அவர்களிடம் இருக்காது. சமூகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் மக்களுக்குத்தான் பிரச்சனைக்குரியது; ஆனால் இவர்களுக்கோ அது வருமானத்துக்குரியது.


எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆயிரம் பேரை நீங்கள் சந்தாதாரர்களாக சேர்த்துக் கொண்டால் போதும்; வருமானத்துக்கு உத்திரவாதம் உண்டு. சந்தாதாரராக சேருவதற்கு பணம் எதுவும் கிடையாது. இலவசம் தான்.


இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு பார்வைக்கும் (view) வருவாய் ரூ.0.053. 10000 பார்வைக்கு ரூ.200-500, ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.2000-5000, பத்து லட்சம் பார்வைக்கு ரூ.7000-30000, 1.5 கோடி பார்வைக்கு ரூ.150000-600000. 

என்ன தலையை சுற்றுகிறதா? இப்படித்தான் யூடியூபில் சம்பாதிக்கிறார்கள்.  கோலம் போட்டதற்கே 4000 ரூபாய் வந்ததாக எனது தங்கை மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய போதுதான் எனக்கு இது தெறிய வந்தது


ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலின் பதிவு ஒன்றைப் நீங்கள் பார்க்கும் பொழுது, அந்தப் பதிவை அதுவரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த மாதத்தில் அவர் எத்தனைப் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார், மொத்தப் பார்வைகள் எவ்வளவு என்பதையும் கணக்கிடுங்கள். அதன் பிறகு அதற்கான வருவாய் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும். மதனும், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட யூடியூபர்களும் இப்பொழுது உங்கள் கண் முன்னே வந்து சென்றிருப்பார்களே? சமையல் கலை வல்லுநர்கள் பலரும் காட்சியளித்திருப்பார்களே?


சமையல் மற்றும் மருத்துவம், உடல் நலம்  சார்ந்த யூடியூப் சேனல்களைப் பார்த்து அதன்படி ஒருவர் செய்ய/நடக்கத் தொடங்கினால் அது சம்பந்தப்பட்ட தனி நபரை மட்டுமே பாதிக்கும். அதையே அதிகமானோர் கடைபிடித்தால் மொத்த சமூகமும் பாதிக்கும். இவை எதுவும் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அரசியல் சார்ந்து போடக்கூடிய பதிவுகள் மிகவும் ஆபத்தானவை. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அத்தகையப் பதிவுகள் பலரையும் சென்றடையாது. மாறாக பொய்யையும் புரட்டையும் கலந்து அடித்து ஒரு 'திரில்லர்' போல வெளியிட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். சும்மாவா பின்ன? பணம்! துட்டு! காசு! மணி! மணி!


பெரும்பாலான யூட்யூப் சேனல்கள் இந்த வகையைச் சார்ந்தவையே. அவர்கள்தான் அதிகமாக துட்டு பார்க்கிறார்கள். நமது அறியாமையே அவர்களது மூலதனம். புலனறிவு-பகுத்தறிவு-நடைமுறை என்கிற சுழலேனி முறையில் நாம் உண்மையைக் கண்டறியத் தவறினால் நமது 'பாக்கெட்' மட்டுமல்ல மூளையும் சேர்ந்தே 'எம்டி'யாகிவிடும்


சமூக அக்கறையோடு நடத்தப்படுகின்ற தனிநபர் மற்றும் அமைப்பு சார்ந்த யூடியூப் சேனல்களும் சில இருக்கவே செய்கின்றன. ஆனால், அவை பெரிய அளவில் மக்களால் ஈர்க்கப்படவில்லை என்பதே எதார்த்தம்.


சொல்றத சொல்லிட்டேன். யூடியூப் சேனல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் போகிறீர்களா அல்லது ஏமாறப் போகிறீர்களா? அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.


ஊரான்


Sunday, September 27, 2020

காசு, பணம், துட்டு!

 பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி தேவையா?

"......... நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி,  அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ...... சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறி விட்டது. .....  'நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்கள் நடத்துவது நல்லது அல்ல' என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது.

நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்தில் இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்  அந்நிதியுடன் ஊன்றப் பட்டு விடுகிறது.

பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்டக் காரியங்களையும், அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தர்ம ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தர்மகர்த்தாக்களே, அச்சொத்துக்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. 'இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது' என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்துவரும் உரிமையே இல்லை .வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து"

இதைச் சொன்னவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  இந்தக் கருத்து சரிதானா? உங்கள் கருத்து என்ன?

ஊரான்