Showing posts with label பகுத்தறிவு பெரியார் திராவிடம் மூடநம்பிக்கை மாசிமகம் புனித நீராடல். Show all posts
Showing posts with label பகுத்தறிவு பெரியார் திராவிடம் மூடநம்பிக்கை மாசிமகம் புனித நீராடல். Show all posts

Wednesday, March 12, 2025

பெரியார் மக்களின் மனங்களில் வாழ்கிறாரா?

மக்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூடநம்பிக்கைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. பரிகாரங்களைத் தேடி மக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மாசிமக புனித நீராடல்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெரியாரின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட ஒரு மூதாட்டி, தன் பேத்திக்கு வரன் பார்க்க வருவோரை குளிகை தொடங்குவதற்கு முன் வந்து விடுங்கள் என்கிறார். வரன் குறித்துத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், ராகு காலம் எனப் பலர் துண்டித்துக் கொள்கின்றனர்.


முற்போக்கு எனும் ஒரு சிறிய வட்டத்திற்குள் இன்று பெரியார் முடக்கப்பட்டிருக்கிறார். தங்களுக்குள்ளாகவே பெரியாரைப் பற்றி பேசி, புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் நம் தோழர்கள். அயல்நாடுகளுக்கெல்லாம் பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் உள்நாட்டில் எடுத்துச் செல்ல மறந்தது ஏனோ? 

அன்று மக்களையும் தொண்டர்களையும் தேடி கிராமங்களுக்குச் சென்றார் பெரியார். இன்று தலைவர்களைத் தேடி தங்கும் விடுதிகளுக்குச் செல்கின்றனர் தொண்டர்கள்.

செல்லும் இடமெல்லாம் கிராமங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்ததோடு அவர்களோடு தங்கிப் பழகியதால், பாமர மக்களால் பெரியாரைப் புரிந்து கொள்ள முடிந்தது. பகுத்தறிவும் அன்று பற்றிப் படர்ந்தது. 

ஆனால் இன்று, பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் சொகுசுந்துகளிலே பயணித்து, குளு குளு அறைகளில் ஓய்வெடுத்து திரும்பி விடுகின்றனர். மெய்நிகர் உலகில் மட்டும் பெரியாரை மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மெய்யுலகில்  பெரியாரைப் போன்று யாரும் இல்லையே?  அதனால், பெரியாரின் சிந்தனைகளும், கருத்துக்களும் மக்களின் மனங்களில் ஆழப் பதியாமல் காற்றோடு காற்றாய் கரைந்து போகின்றன.

மார்க்சியத்திற்கும் இதே நிலைதான். தலைவர்கள் மக்களோடு ஒன்று கலக்காமல் பகுத்தறிவும் மார்க்சியமும் ஒருபோதும் மக்களைச் சென்றடையாது.

வீழ்ந்து கிடப்பவனை உடனிருந்து, கரம் பிடித்து தூக்கி நிறுத்துபவர்களையே மக்கள் நம்புவார்கள்.

ஊரான்