Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Friday, December 2, 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

Monday, October 17, 2011

"குவார்ட்டர் கட்டிங்"

இது பருவ மழைக்காலம். இந்நேரம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியிருக்கவேண்டும். பருவ மழை ஏன் தாமதமாகிறது என்பதைக் கண்டறிய சென்னை வானிலை ஆய்வுமைய விஞ்ஞானிகள் ரமணன் தலைமையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருப்பதாகக் கேள்வி.

கடந்த பத்து நாட்களாக வேறு ஒரு புயல் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருக்கிறது. இந்தப்புயல் நீடிக்கும் வரை வங்கக்கடலில் வேறு ஒரு புயல் உருவாக முடியாது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இது வருகிற பத்தொன்பதாம் தேதி மாலைவரை நீடிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவரை தமிழகத்தில் மிகப் பரவலாக அடிதடி இடியுடன் கூடிய கனமழை மற்றும் வெட்டுக் குத்துடன் கூடிய சூறாவளியாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகப் புயல் மழை என்றால் ஏரி குளங்கள் நிறையும்; இந்தப்புயல் தண்ணீரை வானத்திலிருந்து நேரடியாகக் கொட்டாமல் பாட்டில்களில் அடைத்துக் கொடுப்பதால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ஒருசிலருக்கு மட்டுமே கிடைத்துவந்த புயல் தண்ணி இன்று ஆண்மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக பாட்டில்களாக வீசப்பட்டு வருகிறது. 

பாட்டில்களில் இருக்கும் இந்தத் தண்ணியை பெண்கள் விரும்புவதில்லை. அதனால்தான் என்னவோ அதை ஈடுகட்டும் வகையில் தேர்தல் பகவான் கருணையால் இந்தப்புயலில் நோட்டுக் கட்டுகளும், பரிசுப் பொருட்களும் சூறாவளிக் காற்றில் அடித்துவரப்பட்டு வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக மாவட்டங்களிலிருந்து வரும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இது பற்றி வேலூரிலிருந்து நமது நிருபர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம். 

மகிழ்ச்சியில் மக்கள்

”வணக்கம் ஊரான் அவர்களே! புயல் பலமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் வீசி வருகிறது. குடம்-குடை-தட்டு-மூக்குத்தி-சேலை-ஜாக்கெட் என வகை வகையான பொருட்கள் ஒருபுறம்;   ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என காதித நோட்டுகள்-அதுவும் 'கவர்களில்' அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. பெண்கள் ஏக 'குஷியில்' இருக்கிறார்கள். இவை எல்லாம் வீட்டுக்குள்ளேயே விழுவதால் வெளியில் இருக்கும் ஆண்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆண்கள் வெளியில் ஏக்கத்ததோடு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏக்கத்தோடு காத்திருக்கும் ஆண்களுக்காவே நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் ஒன்பது கோடி மதிப்பிலான பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணி,புயலில் அடித்துவரப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதாக பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்தப் புயல் ஆண்-பெண் இருபாலரையும் மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊரான் செய்திகளுக்காக வேலூரிலிருந்து சம்புவராயன்."

"நன்றி சம்புவராயன் அவர்களே!"

இனி புயலின் சேதாரம் குறித்து பார்ப்போம்.

பொதுவாகப் புயல் என்றால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதாரம் ஏற்படும்; ஆடுமாடுகள அடித்துச் செல்லப்படுவதோடு மனித உயிர் இழப்புகளும் ஏற்படும். 

புயல் நிதானமாக இருக்கும் அதே வேளையில் பலமாக இருப்பதால் ஒருசில இடங்களில் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சேதாரத்தின் விவரங்கள் முழுமையாகக் கிடக்கவில்லை என்றாலும் பாட்டில்களை கைப்பற்றும் போது ஏற்பட்ட மோதல்களால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாவும், பாட்டில் தண்ணியை வயிறுமுட்டக் குடித்ததால் நிலை தடுமாறி கீழு விழுந்து மண்டை உடைபட்டு சிலர் படுகாயம் அடைந்ததாகவும், மண்டையில் அடிபட்ட ஒருசிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரியாணி பொட்டலங்களும் புயலில் அடித்துவரப்பட்டதால் புயல் மழையில் சிக்கியோருக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலம் வீச வேண்டிய தேவை இம்முறை ஏற்படவில்லை என்பது அரசாங்கத்துக்கு ஆறுதலான செய்தி.

நேர்த்திக்கடன்

பொதுவாக புயல் மழையால் ஏரி குளங்கள் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்தால் அனைவருக்கும் நல்லதுதானே. அதனால் வருணபகவானுக்கு படையல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது நம் மக்களின் வழக்கம். அதே போன்று நேற்று இரவு கொட்டித் தீர்த்த பரிசு மழை நல்ல பலனைக் கொடுத்ததால் இன்று காலை முதல் மக்கள் சாரி சாரியாகச் சென்று மழைக்குக் காரணமான கடவுள்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றர்.  

மழையைக் கொடுத்தது ஒரே ஒரு கடவுளாய் இருந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதில் போட்டி இருக்காது. ஆனால் தற்போதைய மழைக்கு சூரிய பகவான், இரட்டையிலையம்மன், மாங்கனிச்சாமி, முரசையாண்டி, தாமரைக் கண்ணன், பம்பரக் கிருஷ்ணன், அருவாச்சாமி என பிரபல சாமிகளும்; கத்தரிக்கோலன், சாவி முண்டேஸ்வரி, பூட்டு எல்லம்மா, சீப்புவேலன் என பல நூறு வட்டார தெய்வங்களும் இந்த மழைக்குக் காரணமாய் இருப்பதால் நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்களில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சலசலப்புக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினாலும் நேர்த்திக்கடன் என்னமோ பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தப் புயல் மேலும் நீடிக்கும் என்பதால் தமிழகத்தின் வேறு சில இடங்களில் நாளை இரவும் பரிசு மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசு மழைக்கான நேர்த்திக்கடன் நாளை மறுநாள் செலுத்தப்படும். புயல் கொடுத்த பரிசு மழையில் மெய்மறந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள் ஏனோ பின்கதவை மூடி தாழ்ப்பால் போட மறந்துவிட்டார்கள். இன்று வாரிக் கொடுத்த தெய்வங்கள் நாளை வாரிச் செல்ல இதுதான் வழியோ!

பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்தப் புயலுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணனைக் கேட்டபோது இந்தப் புயலுக்கு "குவார்ட்டர் கட்டிங்” என பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஊரான்

Friday, March 4, 2011

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, தனியார்ப் பேருந்தைப் போலல்லாமல் விரைவிலேயே நகரைக் கடந்து மாநில நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காலை நேரம் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காகத் தூக்கத்தைக் தொலைத்தவர்கள் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும், ஒரு சிலர் கண்களை மூடியவாறு காதுகளில் 'ஹியர் ஃபோனை' மாட்டிக் கொண்டு தாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்தனர். தூக்கம் கெட்டிருந்தாலும் நான் பேருந்துப் பயணத்தின் போது தூங்குவதில்லை.  பயணங்கள் தரும் பாடங்கள் நிறைய இருக்கே.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் கண்களைக் குளிர வைக்கும் போது தூக்கம் எப்படி வரும்?

அடுத்து வட்டத் தலைநகர் வந்தது. இறங்கி அடுத்தப் பேருந்தில் ஏறி பயணமானேன். முப்பது கி.மீ. தூரப் பயணம். விரைவுப் பேருந்து என்பதால் உரிய நேரத்தில் சென்று விடும். எனது கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தை பிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு இருந்தேன். இன்னும் பத்து நிமிடம் பயணித்தால் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம் என எண்ணிய போது ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டினார். 

எனக்கு சற்றே கலக்கம். அது ஒரு சிறிய கிராமம். எதற்கு இங்கே ஓரம் கட்டுகிறார் என எண்ணிக் கொண்டிருந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இருந்த சிறிய சிற்றுண்டியகத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு 'பேண்ட்' சட்டை போட்டவர்களும் செல்லவே நானும் சென்றேன். நான்கு இட்லி, இரண்டு வடை. மொத்தமே பத்து ரூபாய்தான். போதுமானதாக இருந்தது. காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என தூக்கலாய்தான் இருந்தது. ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சாப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஒரு சில 'மோட்டல்களை' நினைத்துப் பார்த்தேன். அவைகள் பசியாற்றும் 'ஓட்டல்கள்' அல்ல. தொலைதூரப் பயணிகளை மறித்து காசு பறிக்கும் வழிப் பறி கொல்லையர்களின் கூடாரங்கள்.

இரண்டு மொடக்குக்குக்கூட ஆகாத டீ, பாதி சோடா மாவு மற்றும் ஆமணுக்குக் கொட்டையால் குஷ்பு இட்லியாக மாறிய ரேசன் அரிசி. இட்லி ஆறிப் போனால் நாறிவிடும் என்பதால் சூடாகத்தான் கொடுப்பார்கள். ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்த உடனே நம்மாளு மயங்காமலா இருப்பான். அதுவும் நல்லிரவு லேசான குளிரும் சேரும் போது விடவா முடியும். இட்லி சூடாக இருக்கும் போது பூப் போலத்தான் இருக்கும். குடலின் ஈரம் பட்டு 'கொன்ச்சிங்' ஆன இட்லி கடினமாகி குடலை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். அதன் விளைவை பிறகு தவிர்க்கவா முடியும்?

இங்கு விலையோ மூன்று மடங்கு. 'லீ மெரிடியனில்'கூட உணவருந்திவிட்டு பத்து ரூபாயை மிச்சப் படுத்தி வெளியே வந்து நகரப் பேருந்தில் வீடு போய்ச் சேரலாம். ஆனால் 'மோட்டல்களுக்குச்' சென்றால் 'பர்சு' காலி. 'ஏ.டி.எம் கார்டு' இருந்தால் ஊர்ப் பயணம் தொடரலாம். இல்லை என்றால் ஊராவது பயணமாவது வேலை கிடைத்து விட்டது எனக் கருதி அங்கேயே 'செட்டிலாகலாம்'.

உள்ளே சென்றால்தானே காசைப் பறிக்கிறார்கள். வெளியிலேயே 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கித் தின்று தண்ணீர் குடித்தால் போதும் எனக் கருதி வாங்கச் சென்றால் விலையோ எகிறிக் கிடக்கும். ஐந்து ரூபாய் 'பிஸ்கட்' ஏழு ரூபாயாம். எங்கே சென்று முறையிடுவது? காய்ந்த தொண்டையை இரண்டு ரூபாய் 'பாக்கெட்' தண்ணீரால் ஈரப்படுத்தி பயணத்தைத் தொடர வேண்டியதுதான், ஊர்ப் போய்ச் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. 

காலை சிற்றுண்டி முடித்து பேருந்து புறப்பட்டது. நடத்துநரிடம் பேச்சுக் கொடுத்தேன். "முன்ன மாதிரி கஷ்டமில்ல சார்", "ரோடு நல்லாயிருக்கு" என்றார். ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட சாலை. பல தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்ட தரத்தோடு போடப்பட்டிருந்தது. இப்பொழுது அதில் பயணிப்பது அலாதி சுகம்தான்.

இதே சாலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப் பொழுது பயணித்துள்ளேன். முப்பது கிலோ மீட்டருக்கு மூன்று மணி நேரம் ஆகும். 'கார்ப்' பந்தயங்களை நடத்த காடு மேடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. குறை மாத கர்ப்பிணிகள் முப்பது கிலோ மீட்டரிலேயே நிறைமாதமாகி குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் உண்டு. கூடுதலாக ஒரு இட்லியை வயிற்றில் திணித்து அவசரமாய்ப் பேருந்தில் பயணிக்கும் வயதுப் பெண்கள் பேருந்து குலுக்கும் குலுக்கலில் வாந்தி எடுத்து பிறரின் சந்தேகத்திற்கு ஆளாவதும் உண்டு. இன்று நெடுஞ்சாலைகள்தான் மேம்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் பயணித்தால் மூன்று கிலோமீட்டர் பயணத்திலேயே மேற்கண்ட அதிசயங்கள் நிகழும். 

எனது ஊருக்குச் செல்லும் கூட்டுச் சாலை வந்தது. காலை மணி ஒண்பதைத் தாண்டிவிட்டது. நகரப் பேருந்து சென்று விட்டது. ஏழு கி.மீ தூரம் எப்படிச் செல்வது? படிக்கும் காலத்தில் பெரும்பாலும் நடந்தே செல்வேன், இள வயசு.

அப்பொழுதெல்லாம் வாடகை சைக்கிள் கடை ஒன்று இருக்கும். உடனே திரும்புவதாக இருந்தால் சில நேரங்களில் சைக்கிள் எடுத்துச் செல்வேன். திரும்புவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகும் என்றால் சைக்கிளை யார் திரும்ப ஒப்படைப்பது? இரண்டு நாள் வைத்திருந்து எடுத்து வரலாம் என்றால் நாள்வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? அதனாலேயே பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

வாடகை சைக்கிள் கடைகளைல்லாம் இன்று பழங்கதைகளாகி வருகின்றன. கிராமமோ, நகரமோ 'ஸ்பிலண்டர்களும்' 'பல்ஸ்சர்களும்' சீறிப் பாயும் காலம் இது. ஊர்ப்பக்கம் செல்லும் ஒரு வாகனத்தில் ஒட்டிக் கொண்டேன். ஊரைச் சென்றடைந்தேன். ஏரி நிறைந்திருந்தது. நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கண்களைக் குளிர வைத்தன. எல்லாம் இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் ஏற்ப்பட்டதன் விளைவு.

தேர்தல் வருகிறது. கருணாநிதி ஆட்சி என்றால் மழைகூட பெய்யாது என்பது காலங்காலமாய் இருக்கும் கிராமத்து நம்பிக்கை. இந்த அறியாமைதானே சில தேர்தல்களில் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோட்டைக் கதவுகளை திறக்க உதவின.

மேம்பட்ட நெடுஞ்சாலைகளால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் இன்று சீறிப்பாய்கின்றன. சாதாரண மக்களையும் விழி பிதுங்க வைத்த தக்காளி, பூண்டு, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாய்க் குறைந்துவிட்டன. கருணாநிதியின் தயவால் குறையவில்லைதான். இது விளைச்சல் காலம். இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இது சாதகம் இல்லையே.

எதைச் சொல்லி எதிர்க்கட்சிகள் ஓட்டுக் கேட்பார்கள்?. கருணாநிதிக்கு 'ஓட்டு' விழுமா? கூட்டணி பலமாய்ப் போட்டாலும் ராஜா-கனிமொழியின் கூட்டு கலைஞரின் கோட்டைக் கனவுக்கு வேட்டாய் மாறுமா? ஐயம் தொடர்கிறது.

ஊர்ப் பயணமும் தொடரும். மீண்டும் சந்திப்போம்!