Showing posts with label Thirumalai chemicals limited. Show all posts
Showing posts with label Thirumalai chemicals limited. Show all posts

Wednesday, October 21, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்