Wednesday, 1 April 2026

பிறந்த வீட்டின் மகள், புகுந்த வீட்டிலும் மகளாக முடியுமா? ஓர் அலசல்!

 சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு (அகுல் ரஸ்தோகி வழக்கு), இந்தியக் குடும்ப அமைப்பில் ஒரு பெண்ணின் நிலையை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. 


ஒருபுறம், வயதான மாமனார் - மாமியாரைப் பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை மருமகளுக்கு இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. 

மறுபுறம், கணவன் இறந்த பிறகு மருமகளுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டிய கடமை மாமனாருக்கு உண்டு என்கிறது. 

இந்த இரு துருவத் தீர்ப்புகளுக்குப் பின்னால் இருக்கும் சட்டச் சிக்கல்களையும், சமூக யதார்த்தங்களையும் நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது.


சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமானவையா? - ஒரு மாயை

இன்றைய சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்குச் சாதகமாகவே இருப்பதாகப் பலரும் மேலோட்டமாக, ஒருவித அப்பாவித்தனத்தோடு கருதுகிறார்கள். இதற்குக் காரணம், வரதட்சணைக் கொடுமை அல்லது பராமரிப்புத் தொகை தொடர்பான சில சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சித்திரிக்கப்படும் ஒரு சில செய்திகளே.

ஆனால், ஆழமாகப் பார்த்தால் உண்மை வேறானது. சட்டம் ஒரு பெண்ணுக்குப் பராமரிப்புத் தொகைக்கு (Maintenance) வழிவகை செய்கிறதே தவிர, அந்த வீட்டின் 'அதிகாரத்தில்' அல்லது 'சொத்தில்' அவளுக்குச் சமமான இடத்தைத் தருவதில்லை. ஒரு பெண் தன் அடிப்படைத் தேவைகளுக்காகக் கணவனிடமோ அல்லது மாமனாரிடமோ நீதிமன்றத்தில் மண்டியிட்டுப் போராடிப் பெறுவது 'சலுகை' அல்ல; அது அவளது உரிமை மறுக்கப்பட்டதன் அடையாளம்.

தங்கத்தை ஏற்கும் குடும்பம், பெண்ணை ஏற்பதில்லை

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வரும்போது, அவளோடு வரும் சீதனத்தையும், தங்கத்தையும் வாரி எடுத்துக் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதே வீட்டில் அந்தப் பெண்ணைத் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக ஏற்காமல் பங்கமாக நடத்துகிறார்கள்.

சமூக ரீதியாக "மருமகளை மகளாகப் பாருங்கள்" என்ற அறைகூவல் வெறும் மேடைப் பேச்சாகவே இருக்கிறது. நடைமுறையில் சொத்துரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்று வரும்போது அந்தப் பெண் 'அந்நியமாகவே' (Outsider) நடத்தப்படுகிறாள். இதனால்தான் நீதிமன்றமும் அவளை ஒரு 'வெளி ஆளாகக்' கருதி, "உனக்குக் கடமை இல்லை, ஆனால் உரிமை உண்டு" என்று தீர்ப்பளிக்கிறது.

இரட்டைப் பலனா அல்லது ஈடா?

பிறந்த வீட்டில் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறுவது, புகுந்த வீட்டில் மாமனார் வழியே உரிமை கோருவது என்பது ஒரு பெண்ணுக்கு 'இரட்டைப் பலன்' தருவது போல் ஒரு பிம்பம் உண்டு. ஆனால், இதை நாம் ஒரு 'ஈடுசெய்தல்' (Compensatory justice) என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.

காலம் காலமாகப் பெண் உரிமைகள் மறுக்கப்பட்டவளாகவும், ஒடுக்கப்பட்டவளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறாள். இதன் விளைவுதான் ஆணாதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனம். 

எப்படி கல்வி மறுக்கப்பட்டும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மக்களுக்குப் பொதுப்பட்டியலிலும், தனியான இட ஒதுக்கீட்டிலும் முன்னுரிமை கொடுத்து அவர்களைக் கைதூக்கி விடச் சட்டங்கள் இருக்கிறதோ, அதுபோன்றதொரு சிறப்பு ஏற்பாடு சட்டரீதியாகப் பெண்களுக்குச் செய்யப்பட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்பதற்கு இத்தகையக் 'கூடுதல் பாதுகாப்பு' அவசியமாகிறது.

அச்சம் என்பது அதிகாரப் பற்றே!

"ஒரு பெண்ணுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்துவிட்டு, அவள் வேறொருவருடன் சென்றுவிட்டால் அது குடும்பத்திற்கு மாபெரும் இழப்புதானே?" என்ற கேள்வி எழக்கூடும். இது பல நூற்றாண்டுகளாகப் பெண்களைச் சொத்துரிமையிலிருந்தும், குடும்ப அதிகாரத்திலிருந்தும் விலக்கி வைப்பதற்குச் சொல்லப்படும் ஒரு தற்காப்பு வாதம்.

பெண்ணுக்கு உரிமை கொடுத்தால் அவள் குடும்பத்தை விட்டுச் சென்றுவிடுவாள் என்ற இந்த அச்சம், உண்மையில் பெண்ணின் மீதுள்ள பயம் அல்ல; அது குடும்பத் தலைவர்களின் 'அதிகாரப் பற்று'. 

ஒரு மகனுக்கு உரிமை கொடுக்கும்போது வராத இந்த அச்சம், மருமகளுக்குக் கொடுக்கும்போது மட்டும் ஏன் வருகிறது? ஏனென்றால், இன்றும் நாம் பெண்ணை ஒரு குடும்பத்தின் 'உறுப்பினராகப்' பார்க்காமல், பாதுகாத்து வைக்க வேண்டிய ஒரு 'பொருளாகவே' பார்க்கிறோம். 

பெண்ணை மனிதனாக மதிக்கத் தொடங்கினால், 'இழப்பு' என்ற சொல்லுக்கே அங்கே இடமிருக்காது.

சட்டமே தீர்வாக வேண்டும்:
மாற்றத்திற்கான பரிந்துரை

மருமகளை மகளாகப் பார்க்கும் சமூகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது கசப்பான உண்மை. சமூக அமைப்பு தானாக மாறும் வரை நாம் காத்திருக்க முடியாது.

1.சட்டப்பூர்வ அங்கீகாரம்: ஒரு பெண் திருமணமானவுடன், அந்தப் புதிய குடும்பத்தின் 'சட்டப்பூர்வ மகள்' என்ற அங்கீகாரத்தை அவர் பெற வேண்டும். இது தார்மீகக் கடமையாக இல்லாமல் சட்டக் கடமையாக ஆக்கப்பட வேண்டும்.

2.சமமான கடமைகளும் உரிமைகளும்: இவ்வாறு சட்டம் தெளிவாக இருந்தால், மாமனார் - மாமியாரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மருமகளுக்குத் தவிர்க்க முடியாத சட்டக் கடமையாக மாறும். உரிமை இருக்கும் இடத்தில் கடமையும் தானாக வந்து சேரும்.

3.முரண்பாடுகளைத் தவிர்த்தல்: சட்டம் இவ்வாறு தெளிவாக வரையறுக்கப்பட்டால் மட்டுமே, நீதிமன்றங்கள் வெவ்வேறு வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்குவதைத் தடுக்க முடியும்.

முடிவுரை

சட்டம் பெண்களுக்குச் சாதகமானது என்பது ஒரு மாயை; அது பெண்களைப் புகுந்த வீட்டில் 'வாடகைக்கு இருப்பவர்களாகவே' வைத்திருக்கிறது. 

வாடகைதாரருக்குச் சில பாதுகாப்புகள் இருக்கலாம், ஆனால் அந்த வீட்டின் மீது அவருக்கு அதிகாரம் இருக்காது.
அந்த அதிகாரம் வேண்டும் எனில், சட்டம் மருமகளை 'மகளாக' அங்கீகரிக்க வேண்டும். 

பெற்றோரின் சொத்தில் உரிமையும், புகுந்த வீட்டில் குடும்ப அங்கமாக வாழும் உரிமையும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். 

தங்கத்திற்காகப் பெண்ணை ஏற்கும் கலாச்சாரம் ஒழிந்து, ஒரு குடும்பத்தின் முழுமையான அங்கமாகப் பெண்ணை ஏற்கும் சட்டம் மலர வேண்டும். அதுவே உண்மையான சமூக மாற்றம்.

பொன்.சேகர்
வழக்கறிஞர்

தொடர்புடைய பதிவு

No comments: