Monday, 13 April 2026

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா? -2 : ஒரு செய்தி சொல்லும் பெண்களின் வாழ்வியல் உண்மை

இன்று காலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை புரட்டிக் கொண்டிருந்தபோது மனைவியை சமையலறைக்குள் அனுமதிக்காத கணவன் குறித்த ஒரு சிறிய செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

பிறந்த வீட்டில் வானம்பாடியாய் உயரே உயரே பறந்தவர்கள் புகுந்த வீட்டில் நெருப்புக் கோழியாய் முடக்கப்படுகிறார்கள்.

புதுவாழ்வு தொடங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, போகிற இடம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் அவளைக் கவ்விக்கொள்கிறது. 


அண்ணனிடமே ‘வாடா போடா’ என்று அன்போடு பழகியவள், புதிய வீட்டில் எப்படிப் பழகுவது என்று குழம்பிப் போகிறாள்.

அவள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பரவாயில்லை.
காலங்காலமாக போதிக்கப்பட்ட ‘பெண்மை’ என்ற கருத்து, புகுந்த வீட்டில் மாமனார் மாமியாரிடம் மண்டியிட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறது.

நேற்று வரை அண்ணன் அப்பா முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்து பழக்கப்பட்டவர், அவள் மெத்தப்படித்திருந்தாலும் மேன்மையான‌ பதவியில் இருந்தாலும் புகுந்த வீட்டில் மாமனார் மாமியார் இருக்கும் போது நாற்காலி சோபாவில் அமர அச்சப்பட்டு தரையில்தான் அமர வேண்டும். இல்லையென்றால் ‘பாத்தியா மரியாதைய’ என முனுமுனுப்புகள் தொடங்கி விடும். பெற்ற மகளும் வந்த மகளும் பெண்தானே; ஆனால் இங்கே வந்தவளுக்கு மட்டும் தனி நீதி.

இப்படித்தான் மராட்டியத்தில் ஒருவன் கட்டின மனைவியை சமையல் அறைக்குள் செல்லக்கூடாது என தடை விதிக்கிறான். அவள் சமைக்கக் கூடாது என்பதற்காக சமையலறையையே பூட்டி வைத்திருக்கிறான். கடைக்குச் சென்று உணவு வாங்கி வரச் சொல்கிறான். வெளியே சென்று வந்தால் வீட்டுக் கதவு சாத்தி இருக்கும். இவள் வீட்டிற்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக ‘காலிங் பெல்லையே’ அகற்றி உள்ளார்கள்.

இப்படி மனைவியைத் துன்புறுத்தியதோடு, போதிய காரணம் ஏதுமின்றி விவாகரத்துக் கோரி இருக்கிறான்.  கீழமை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தபின், இவன் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறான். இவன் தனது மனைவியை நடத்திய விதம் உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல, மனரீதியான வன்முறையும்கூட எனக்கூறி, அவனது மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று மகளிரைப் போற்றும் வகையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடிவிட்டுச் சென்றுவிட்டார். 

“மகளிராய்ப் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமோ” என்று பாடும் அளவுக்குத்தான் மகளிர் நிலைமை உள்ளதோ என்பதைத்தான் இந்த வழக்கு உணர்த்துகிறது. 

கோவில்களின் கர்ப்பகிருகத்திற்குள் கூட சமத்துவம் பேசப்படும் காலத்தில், இல்லத்தரியை அடுப்பங்கரைக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! 

முற்றும்

ஊரான்
13.04.2026

தொடர்புடைய பதிவு 

No comments: