Wednesday, December 26, 2012

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?



ஊழலுக்கு எதிராக டெல்லியில் நடந்ததைப் போன்றதொரு போராட்டம் தற்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு நடந்து வருகிறது. ஊழலை ஒழிக்க, கடுமையான லோக்பால் சட்டம் தேவை எனக் கோரியவர்களைப் போலவே பாலியில் வன்கொடுமை செய்வோரை மிகக்கடுமையக தண்டிக்கவேண்டும்; அதிலும் டெல்லி மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் எனக்கோரி தற்போது போராடுபவர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியாடுடே’ ஆங்கில ஏட்டில் ஒரு கட்டுரை படித்தேன். மராட்டிய மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தி அது. ஒரு காமுகன் அப்பாவி பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னப்படுத்தி விடுகிறான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் பலமுறை முறையிட்டும் காவல்துறையோ மற்றபிற வாக்கு வங்கி அரசியல் கட்சிகளோ உள்ளுர் பெரிய தலைகளோ இதை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் யுத்தக் குழுவைச்சார்ந்த (PWG) நக்சல்பாரி புரட்சியாளர்களிடம் (இன்றைய மாவோயிஸ்டுகள்) முறையிடுகின்றனர். நக்சல்பாரிகள் முன்னிலையில் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட மக்கள் நீதிமன்றம் கூடுகிறது. பொது விசாரணைக்குப் பின் குற்றம் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. தண்டனை வழங்குவது குறித்து மக்கள் மத்தியில் அப்போதே கருத்து கேட்கப்படுகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இவன்தான் என்பதற்கு அடையாளமாக அவனது மூக்கை அறுக்க வேண்டும் என மக்கள் தீர்ப்புக்கூற, அதுவே முடிவாகி அவனது மூக்கு வெட்டப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச) பிரிவு 375, 376, 376A, 376B, 376C, 376D ஆகிய பிரிவுகள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி சொல்கிறது. பிரிவு 376 ன்படி பாலியல் வன்கொடுமைக்கு (rape) அதிகபட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கமுடியும்.
 
மேற்கண்ட வழக்கில் நீதிமன்றம் சென்றிருந்தாலும்கூட அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான் வழங்கியிருக்க முடியும். ஆயுள் தண்டனை என்ன; தூக்கு தண்டனை நிச்சயம் என்றாலும்கூட அதற்கு யாரும் அஞ்சிவிடுவதில்லை. நமது கால்துறை மற்றும் நீதிமன்றங்களைப்பற்றி நம்மைவிட குற்றவாளிகளுக்கு மிக நன்றாகவேத் தெரியும். அது மட்டுமல்ல, தூக்கு தண்டனைக் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்பதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி தப்பித்துவிடுவர் என்பதால் தூக்கு தண்டனை சரியான தீர்வு கிடையாது என்பதை பெண் வழக்கறிஞர்களே முன்வைக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுவதற்கு சட்டமே இல்லாத போதும், தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு மாளிகையை முற்றுகையிடுகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற அதேவேளையில் இனி குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைதான். உணாச்சிப் பெருக்கான இதுபோன்ற போராட்டங்கள், பாலியல் தொடர்பான குற்றங்களின் சமூகப்பின்னணியை பரிசீலிப்பதற்கும், குற்றங்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவதற்கான தீர்வை நோக்கி இட்டுச்செல்வதில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைப் போன்று நாடெங்கிலும் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டெல்லியில் நடந்தது போன்ற ஒரு சில குற்றங்கள் மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

மன்னர்கள் காலத்தில்

அடிமை உடைமைச் சமுதாயத்தில் தொடங்கிய பெண்கள் மீதான வன்கொடுமைகள், நிலவுடமைச் சமுதாயத்தில் கேள்வி கேட்பாரின்றி நடந்தேறின. பண்ணை நிலவுடமையாளர்கள் இதை ஒரு அன்றாட நிகழ்வாகவே செய்து வந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கூலி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. இன்றும்கூட வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை. அதே போல முதலாளிகளும், பணக்காரர்களும் இன்று பெண்கள் மீதான வன்கொடுமையை கமுக்கமாக அறங்கேற்றி வருகின்றனர். பணபலமும், அதிகார பலமும், சாதி பலமும்தான் இவர்களை எப்போதும் பாதுகாத்து வருகிறது.

மன்னர்கள் தங்கள் காமலீலைகளை கஜூராவ்க்களில் செதுக்கினார்கள்; எல்லோராவில் தீட்டினார்கள; காமசூத்திரங்களாக எழுதித் தள்ளினார்கள். இத்தகைய கழிவுகளைத்தான் இந்தியாவின் பாரம்பரியப் பெருமை என்று இன்றும் பேணிக்காத்து வருகிறார்கள் காமத்தின் பாதுகாவலர்கள்.

திரைப்படங்களில்

“மாங்கா - அட தேங்கா - கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா” என எம்.ஜி.ராமச்சந்திரன் பாடியதில் காமம் இல்லையா?  சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டு கலைப்பணியாற்றும் கேப்டன்களால் பாலியல் தூண்டல் ஏற்படாதா? காம வெறியை வளர்ப்பதற்காகவே ஜெயமாலினிகள், சில்க்ஸ்மிதாக்கள், அனுராதாக்கள், டிஸ்கோ சாந்திகள், சிம்ரன்கள், நமீதாக்கள் என தொடர்ச்சியாக காமக்கிழத்திகளை திரைப்பட முதலாளிகள். அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஏடுகளில்

ஆடுகளைத் தோலுரித்து தொங்கவிடுவதைப்போல தினமலர், குமுதம், ஆனந்த விகடன், விகடன் டைம்பாஸ்,  நக்கீரன், சினிமா எக்ஸ்பிரஸ் ஈரான ஏடுகளில் அரைகுறை ஆடைகளுடன் காமக்கிழத்திகளின் ஸ்டில்களைப் போட்டு காமத்துக்கு கடை விரிக்கவில்லையா பத்திரிக்கை முதலாளிகள்?

தொலைக்காட்சிகளில்

மானாட - மயிலாட என்ற பெயரில் காமத்தைத் தூண்டும் கலா மாஸ்டர் அக்காள்களுக்கு பாலியல் குற்றங்களைத் தூண்டுவதில் பங்கு இல்லை என்று மறுக்க முடியுமா? குத்தாட்ட பாடல்களை நேயர் விருப்பம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி இஞைர்களிடையே காம போதையை ஏற்றவில்லையா தொலைக்காட்சி ஊடக முதலாளிகள்?

நாவல்களில்

சான்டில்யன்கள், சுஜாதாக்கள், ராஜேந்திரகுமார் - ராஜேஸ்குமார்கள் முதல் ‘சரோஜாதேவி’ புத்தகங்கள் வரை பெண்களின் அவையங்களை வர்ணித்து எழுதித் தள்ளியதில் காமம் வளர்க்கப்படவில்லையா?

நட்சத்திர விடுதிகளில்

‘டிஸ்கொத்தே’ என்கிற பெயரில் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் இரவு நேர களியாட்டங்களால் காமம் தூண்டப்படாதா? உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்கூட காமக்கிழத்திகளை ஆடவிட்டுத்தானே பக்தியை வளர்க்கிறார்கள் நம்மூர் ‘நாட்டாமைகள்’.

இணையதளங்களில்

கூகுளைத்தட்டினால் கொட்டப்படும் உடலுறவுக்காட்சிகள் - படங்கள் மூலம்  சைவ சித்தாந்தத்தையா போதிக்கின்றனர் இணைய தள முதலாளிகள்? இவைகளைத் தடைசெய்ய வக்கில்லாமல் சைபர் குற்றங்களில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டம் பாயும் என மிரட்டுகிறது அரசு. ஆளும் கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அம்பலப்படுத்தி எழுதுவதுதான் இவர்கள் மொழியில் சைபர் குற்றங்கள் போலும்!

விளைவு

வேலை ஏதுமின்றி தண்டச்சோறு திங்கும் காம வெறிபிடித்த திமிங்கலங்களும், அரசே ஊற்றிக்கொடுக்கும் சாராயத்தை ஏற்றிக்கொண்ட வெறியர்களும் தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து குதறுகிறார்கள்.  இதில் பெற்ற மகள் என்றும் பாராமல் சீரழிக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன. பணத்திமிர் கூடிவிட்டால் காமத்தின் வன்மம் மேலும் உக்கிரமாகிறது. கீழ்சாதிப் பெண்தானே என்கிற சாதிய வன்மமும் பாலியல் குற்றங்களில் முக்கியப்பங்காற்றுகிறது.

ஆளும் வர்க்கத்தின் பங்கு

இப்படி மன்னர் காலம் தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களை போகப்பொருளாக சித்தரித்து, ஆண்களிடம் காம வெறியை வளர்த்தவர்கள் – வளர்த்து வருபவர்கள் பணக்காரர்களும் முதலாளிகளுமே. இவற்றை எல்லாம் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இத்தகைய இழி செயல் புரிவோருக்கு கலைப்பணிக்கான விருதுகளையல்லவா வழங்கி கௌரவிக்கிறது!

எப்படித்தான் தடுப்பது?

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலட வேண்டும் என ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் தூத்துக்குடியில் பள்ளிச்சிறுமியைக் குதறினார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்துவது, கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்வது, தற்காப்பு ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்திருப்பது, தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது, இறுதியில் ஆண்கள் பெண்களை ஒரு மனுசியாக மதிக்கக்கற்றுக்கொள்வது என பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கப்படுகின்றன. முற்றும் துறந்த முனிகளே முந்தானைகளைத் தேடும் போது பக்திகூட இதில் சக்தியற்றுப்போகிறதே!

டெல்லியில் நடைபெறுவது போன்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் மூலமாகவோ அல்லது ‘பெண்ணியவாதிகள்’ முன் வைக்கும் தீர்வுகள் மூலமாகவோ புரையோடியிருக்கும் பாலியல் வன்மத்தையும், பாலியல் குற்றங்களையும் முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.

தற்போதைய உலகமயக் கொள்கை “எதைச் செய்தேனும் பணத்தை ஈட்டு! எல்லாவற்றையும் அனுபவி!” என மக்களிடையே நுகர்வு வெறியை வளர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் போன்ற ஊடகங்கள் மூலமாக பெண்களையும் ஒரு நுகர்வுப் பண்டமாக - அனுபவிப்பதற்கான ஒரு பொருளாக பார்க்கிற எண்ணத்தை வளர்த்துவருகிறார்கள்.  காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட திரைப்பட – பத்திரிக்கை - தொலைக்காட்சி – இணையதள - முதலாளிகளையும் இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் அரசுகளையும் ஒழித்துக்கட்டாமல் பாலியல் குற்றங்களுக்கு ஒரு போதும் முடிவுகட்டமுடியாது.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் மட்டுமே நடத்தி வெற்றி பெற்றுவிடவும் முடியாது. முதலில் பெண்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் போராளிகளாக மாறவேண்டும். அமைப்பாய் அணிதிரள வேண்டும். அப்பாவி பெண்களிடம்தான் காமாதி காம சூரர்களின் ‘வீரம்’ எடுபடும். அஜிதாக்களைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை என பெருகிவரும் மக்கள் பிரச்சனைகளுக்குக் காரணமான தனியார் மயம் -  தாராள மயம் - உலக மயத்தை எதிர்த்த போராட்டங்களோடு பாலியல் வெறியைத் தூண்டுகிற சமூக வெறியர்களுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் போது பாலியில் வன்மங்களும் வெறியாட்டங்களும் இச்சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படும்.

இதற்கு இ.த.ச க்களும் ‘நிதி’மன்றங்களும் தேவையில்லை. மக்கள் நீதிமன்றங்களே இன்றைய தேவை.

4 comments:

  1. அருமையான அவசியமான பதிவு
    குற்றங்களுக்கான வழியைத் திறந்துவிட்டு குற்றத்துக்குத் தண்டனை கொடுக்க வேணுடும் என்பதும் புதுமை...

    வன்புணார்வு குற்றமல்ல என்ற பதிவும் எழுதியுள்ளேன் நேரமிருப்பின் இந்த லிங்கில் சென்று பாருங்கள்
    http://citukuruvi.blogspot.com/2012/12/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. குற்றங்களுக்கான வழிகளையும் அடைத்தாக வேண்டும்.
      நன்றி!

      Delete
  2. அருமையான ஆக்கம் அனைத்து விதங்களிலும் பெண்கள் மனிதர்களாக இல்லாமல் அடிமைகள், பாலியல் தேவைகள் என்ற வகையிலேயே கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன. பெரிய தலைகீழ் மாற்றம் வந்தாலொழிய இது மாறாது.

    ReplyDelete
    Replies
    1. மாற்றத்திற்காக நம்மால் ஆனமட்டும் முயற்சிப்போம்.
      நன்றி!

      Delete