Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

Thursday, July 4, 2024

குசுவிட ஏற்ற நேரம் எது?

வாழ்க்கைத் துணை தேட-கல்யாணம்-முதலிரவு, 

குழந்தை பிறக்க-தொட்டிலில் போட-பெயர் சூட்ட, பள்ளியில் சேர்க்க-படிக்க-பணியில் சேர, 

நிலம்-மனை வாங்க, உழவு செய்ய-பூமி பூஜை போட, கடன் வாங்க-தொழில் தொடங்க-கடை திறக்க, வாகனம் வாங்க-ஓட்ட,

சாவு-பிணம் தூக்க-கருமாதி-திதி கொடுக்க, 

வீட்டை விட்டு வெளியே போக-வர 

என  எதற்கெடுத்தாலும்
நல்ல நாள்-கெட்ட நாள், வளர்பிறை-தேய்பிறை, ராகு காலம்-எமகண்டம்-குளிகை முதலாக ஜாதகம் மற்றும் கால நேரம் பார்ப்பது அதிகரித்து விட்டது.


மூக்குச் சளி சிந்த-மூத்திரம் பெய்ய-பிய் பேள என இவற்றிற்கும் கால நேரம் பார்க்கும் காலம் நெருங்குகிறதோ என அஞ்சும் வகையில் மக்களிடையே மூடநம்பிக்கைகள் மண்டிக் கிடக்கின்றன. 

அறிவு எனும் பயிர்கள் வளர வேண்டிய மனம் (mind-a product of brain) எனும் மண்ணில் களைகளே மண்டிக் கிடந்தால் என்ன கிடைக்கும், குப்பையைக் தவிர?

பழைய பஞ்சாங்கங்களே தேவலாம் என்கிற அளவுக்குப் புதிய பஞ்சாங்கங்கள் பல்கிப் பெருகி விட்டன. அறியாமை நம்மை ஆட்கொண்ட பிறகு அறிவியல் வளர்ந்து என்ன பயன்? 

குசு விடுவதற்கு இடம் பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கு. இல்லையேல் மானம் கப்பல் ஏறி விடும். ஆனால் இனி இதற்கும் நல்ல நேரம் பார்ப்பேன் என அடம் பிடித்தால், நீ நாறிப் போவதை யாரால்தான் தடுக்க முடியும். 

இதற்கெல்லாம் யாரை நொந்து கொள்ள? இவற்றையெல்லாம் ஒரு தொழிலாக உருவாக்கி, 
தனது வருவாய்க்கு வழி வகுத்து, 
அதை இன்றும் தொடர்கின்ற பார்ப்பனக் கூட்டத்தையா? 
அல்லது 
கண்டம் விட்டு கண்டம் தாவி, 
மண் எடுக்கும் அறிவை வளர்த்துக் கொண்ட பிறகும், 
நான் மண்ணாங்கட்டியாய்தான் இருப்பேன் என்று 
பார்ப்பனர்களின் கட்டுக்குள் சிக்குண்டு கிடக்கும்  நம்மவர்களையா? 

மது போதை மற்றும் மத போதையை விஞ்சும் இந்த ஜாதக போதையை ஒழிக்க ஏதேனும் வழி உண்டா? 

சமூக நீதிக் கொள்கையில் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை பின்பற்றும் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசே! 
எது வரினும் வரட்டும்! 
தயவு தாட்சண்யம் பாராமல் ஜாதகம் ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து வகையான பஞ்சாங்க நடைமுறைகளையும் சிறப்புச் சட்டம் மூலமாக உடனடியாக தடை செய்!    இல்லையேல் தமிழ்நாடு ஹத்ரஸ்களாக மாறுவதற்கு நீண்டகாலம் ஆகாது!

ஊரான்

Sunday, June 9, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Friday, May 17, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8


நால் வர்ண சாதிய அமைப்பு முறை, அதில் உயர்ந்த சாதி - கீழான சாதி என்கிற சாதியப் படிநிலை, அச்சாதி படிநிலைக்கேற்ப சாதியத் தீண்டாமை, உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, மக்களை மடமையில் ஆழ்த்தும் ஜாதகம் – ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதுதான் பார்ப்பனியம் என முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

வர்ணாசிரமக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கினாலோ, சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினாலோ, சாதியத் தீண்டாமை - உணவுத் தீண்டாமை - மொழித் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைகளுக்கு எதிராக போராடினாலோ இவை எல்லாம் இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து போராடுபவர்களை இந்து மத விரோதிகள் என முத்திரை குத்துவது பார்ப்பனியத்தின் நடைமுறை. பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் போது, அடக்கு முறை மற்றும் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவும், பொய் – புனைசுருட்டு - நயவஞ்சகம் - சூழ்ச்சிகள் மூலமாகவும், நீதி மன்றம் மற்றும் அரசுகளின் துணையோடும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பார்ப்பனர்கள் எப்போதுமே முயற்சித்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளின் மூலமாகத்தான் பார்ப்பனியம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

மிகச் சாதாரண மக்களைக்கூட தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்து மதக் கடவுளர்களையும் – நம்பிக்கைகளையும் இணைத்து பல்வேறு கட்டுத் கதைகளை அவ்வப் பொழுது அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கான சமீபத்திய எடுப்பான உதாரணம்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கான ‘இராமர் பாலம்’ என்கிற கட்டுக் கதை.

பார்ப்பனியத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வாலி வதத்திலும், ஏகலைவன் கட்டை விரலிலும் நாம் தேட வேண்டியதில்லை; சு.சாமி - சோ.சாமி போன்றோரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்!

பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் பார்ப்பனர்களுக்கு கௌதம புத்தரைப் பிடிக்காது; அம்பேத்கரைப் பிடிக்காது; பெரியாரைப் பிடிக்காது; மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களைப் பிடிக்காது; தமிழர்கள் தங்களுக்கான மொழி - பண்பாட்டு உரிமைகள் பற்றிப் பேசினால் பிடிக்காது; கோவில் கருவறையில் தமிழ் நுழைவது பிடிக்காது; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது; சமூகரீதியாக இழிவுபடுத்தப்பட்டு, கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கட்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தருவது பிடிக்காது; பொதுவுடமைச் சமுதாயம் கோரும் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. மொத்தத்தில் பார்ப்பனியத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குப் பிடிக்காது. காரணம் மேற்கண்டவை அனைத்தும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி பலவீனப்படுத்தக் கூடியவை; வீழ்த்தக் கூடியவை.

மக்களுக்கான சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளை நால் வர்ணக் கோட்பாடுகள் மறுக்கின்றன. பார்ப்பனியத்தின் நால் வர்ணக் கோட்பாடுகளும் இந்து மதக் கோட்பாடுகளும் வேறு வேறானவை அல்ல என்பதால்தான் இந்து மதத்தை பார்ப்பன சனாதன மதம் என்றே பெரியாரும், அம்பேத்கரும் வரையறுக்கின்றனர்.

விதிவிலக்காக ஒரு சில பார்ப்பனர்களைத் தவிர பெரும்பாலான பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்ப்பனர்களாய்ப் பிறந்ததனாலா? அல்லது பார்ப்பனியக் கருத்துகளில் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதனாலா? அதே போல பிற சாதியினர் பலரும் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம்?

பார்ப்பனர்களைப் பற்றி மட்டுமல்ல ஒவ்வொரு சாதியினரைப் பற்றியும் அச்சாதிக்கே உரிய குணமாக சில குணங்களை அடையாளப்படுத்தி அச்சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற கருத்து மக்களிடையே பரலமாக நிலை பெற்றிருக்கிறது. ஒருவரின் ஒரு குறிப்பிட்ட குணத்தை வைத்து அவர் அச்சாதியைச் சார்ந்தவர், அதனால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என பிறர் கூறுவதை இன்றளவும் நாம் கேட்க முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் அச்சாதியில் அவர் பிறந்ததனால்தான் அவர் அத்தகைய குணங்களைக் கொண்டுள்ளார் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது. இவ்வாறு பார்ப்பதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைகின்றன? எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் வளர்ப்பின் அடிப்படையில் வளர்கின்றன? இவற்றில் மாறுதலுக்குள்ளாகும் குணங்கள் - அடையாளங்கள் எவை?

தொடரும்......





பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


Thursday, May 2, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 6


மானிடப் பிறப்பின் மேன்மையைப் பறைசாற்ற “அரிது! அரிது! மானிடராய்ப் பிறத்தல் அரிது!” என்று பாடினாள் ஔவைப் பாட்டி ஆனால் “அரிது! அரிது! ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யும் ஒரு இந்துவைக் காண்பதும், நல்லது கெட்டதுகளுக்கு ஜோசியம் பார்க்காத ஒரு இந்துவைக் காண்பதும் அரிது!” என்றல்லவா இன்று பாட வேண்டியுள்ளது.

திருமணம் ஆகவேண்டிய வயதில் திருமணமாகவில்லை என்றாலும், திருமணத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும், குழந்தைக்குப் படிப்பு சரியாக வரவில்லை என்றாலும், படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வேலை பறிக்கப்பட்டுவிட்டாலும், வருவாய் போதாமல் கடனில் மூழ்கினாலும், விவசாயமோ – தொழிலோ அதில் நட்டம் ஏற்பட்டாலும், திடீரென விபத்துக்குள்ளானாலும், நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டாலும் அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்காமல் தனக்கு ‘ஏழரையில் சனி’ இருக்கிறது எனவும், தற்போது ‘கெட்ட தசை’ நடக்கிறது எனவும்தான் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் நம்பிக்கொண்டிருக்கிறான் நமது இந்துச் சகோதரன்.

சனியின் பிடியிலிருந்தும், கெட்டதசையிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணிலடங்கா சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடைபிடித்துப் பார்க்கிறான். பரிகாரங்களையும் செய்து பார்க்கிறான். எதையும் விடுவதில்லை. ஆனாலும் அவனால் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடிவதில்லை. ஜாதகம், ஜோசியம் பார்க்கும் இந்த ‘கெட்ட தசை’ நமது இஸ்லாமியச் சகோதரனையும், கிருஸ்தவ பிரதரையும்கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. அவ்வளவு ஏன்? பிரச்சனைகளுக்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இல்லாத போது தனது இயலாமையின் காரணமாக பகுத்றிவாளன்கூட இதற்குப் பலியாகிவிடுகிறானே!

ஏதோ ஒருவனுக்கு மட்டும் மேற்கண்ட பிரச்சனைகள் என்றால் அவனை மட்டுமே வைத்து பரிசீலிப்பதை ஒரு வாதத்துக்காக வேண்டுமானால் போனால் போகட்டும் என வாலாவிருந்துவிடலாம். ஆனால் ஒட்டு பொத்த மனிதர்களும் மேற்கண்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அதற்கான காரணங்களை நமது சமூகத்தில் நிலவும் அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு நிலைமைகளை பரிசீலித்து அதற்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பதற்கல்லவா முயல வேண்டும்.

ஏன் ஒருவனால் தனது பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக பரிசீலிக்க முடிவதில்லை? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று அறியாமை. மற்றொன்று இயலாமை. பெரும்பாலும் பலருக்குக் காரணம் தெரிவதில்லை. அப்படியே காரணம் இன்னதென்று தெரிந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இன்மை. இந்த இரு பலவீனங்களே அவனை ஜாதகம் மற்றும் ஜோசியத்தை நம்புவதற்கும், சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பதற்கும் இட்டுச் செல்கிறது. அப்படினால் அவன் இதைத் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறானா? அல்லது பிறர் வழிகாட்டுவதால் அவ்வாறு செய்கிறானா?

நம் மக்கள் எப்பொழுதுமே இளகிய, பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஒருவனுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் தங்களுக்குத் தெரிந்த பரிகார வழிமுறைகளை எல்லாம் சொல்லி வழி காட்டுவார்கள். அவன் பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களும் அறியாமையில் இருந்துதான் வழிகாட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத போது பிரச்சனைக்கு உள்ளானவன் என்ன செய்வான் பாவம்? அதை நம்பித்தானே ஆகவேண்டும். போகாத ஊருக்கு வழி காட்டும் இந்த நடைமுறைதான் இன்றைய சமூக எதார்த்தம். இந்த எதார்த்தம் எப்படி சாத்தியமானது?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவன் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அவைகளிலிருந்து மீள்வதற்காக சில முயற்சிகளைச் செய்கிறான். ஏதோ ஒரு வகையில் ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும் தான் மேற்கொண்ட முயற்சியால் மட்டுமே அவன் விடுபட்டதாக நம்புகிறான். அதை பிறறோடு பகிர்ந்து கொள்கிறான். இந்தப் பகிர்வு அடுத்தவனுக்கு பிரச்சனை வரும் போது அவனையும் செய்யத் தூண்டுகிறது. இப்படியாக சமூகம் முழுக்க ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை நடைமுறை பரவி விடுகிறது. இந்த நடைமுறைகளை எல்லாம் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறான். இப்படி தொகுக்கும் வேலையை ஒரு படித்த கூட்டம்தான் செய்ய முடியும். அப்படி தொகுத்ததை தனதாக்கிக் கொண்டு அதை வைத்தே பிறருக்கு வழிகாட்டும் வேலையையும் மேற்கொண்டிருக்க வேண்டும். தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இங்கே பேசப்படுவதில்லை. இங்கே, அது அவனது தலை எழுத்து என்கிற மற்றொரு அபத்தத்தையும் சேர்த்தே பரப்பிவிடுகிறார்கள்.

வழிகாட்டுபவன் எப்பொழுதுமே உயர்ந்தவனாகி விடுகிறான். புகழுக்கு உரியவனாகி விடுகிறான். போற்றுதலுக்கு உரியவனாகி விடுகிறான் இந்த வழிகாட்டுதலுக்கு தட்சணையாக தனக்குத் தேவையான தானியத்தையோ, பொருளையோ, பணத்தையோ பெற்றுக் கொள்கிறான். பார்ப்பனர்கள் மட்டுமே அன்று படித்தவர்களாக இருந்ததால் ஜாதகம் - ஜோசியம் பார்ப்பது, பரிகாரங்களை பரிந்துரைப்பது, சடங்குகள் - சம்பிரதாயங்களை செய்ய வைப்பது - செய்து வைப்பது அவர்களின் தொழிலாக மாறியிருக்க வேண்டும். அதனால்தான் இன்று வரை பஞ்சாங்கம் எழுதுவது, ஜாதகம் பார்ப்பது, பரிகாரங்களை பரிந்துரைப்பது போன்றவைகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் வசமே இருக்கிறது. மற்ற சாதியினர்கூட இன்று வருவாய்க்காகவும், புகழுக்காகவும் இத்தொழிலைச் செய்தாலும் அவை எல்லாம் துள்ளியமாக இருக்காது என்கிற கருத்தும் பார்ப்பனர்களால் பரப்பப்படுகிறது. மற்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் இவர்களின் பிழைப்பு போண்டியாகிவிடும் என்பதுதான் இதற்கும் காரணம். கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின் விட்டை என்ன? முன்விட்டை மட்டும்தான் கழுதையின் விட்டை என்பதுதான் பார்ப்னர்களின் வாதம்.

மக்களை மடமையில் ஆழ்த்தும் மேற்கண்ட தொழிலை பார்ப்பனர்களே பிரதானமாகச் செய்வதால் இத்தகைய மடைமைகளை அல்லது மூடநம்பிக்கைகளை பார்ப்பனியம் என்று அழைப்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.

தொடரும்....
தொடர்புடைய பதிவுகள்





Tuesday, December 21, 2010

" ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?


அன்புள்ள வலைப்பூ வாசகர்களே!

25.11.2010 அன்று "வினவு" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

ஊரான்.

---------------------------------------------------------------------------------------------

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”

“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

ஊரான்.

Friday, December 3, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்----2


திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் முதலில் பத்துப் பொருத்தம்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட நாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்தி ஒரு வரன் அமைந்து விட்டால் எப்படியாவது அதை முடித்துவிட வேண்டும் என்று அரும்பாடு படுகிறார்கள்.

பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் ஜாதகத்தைத்தான் முதலில் பரிமாறிக் கொள்கிறார்கள். அவரவருக்குத் தெரிந்த புரோகிதரிடம் ஜாதகத்தைக் காட்டுகிறார்கள். புரோகிதர் தனக்குத் தெரிந்த வரையில் ஜாதகத்தைப் பார்த்து எத்தனைப் பொருத்தம் பொருந்துகிறது என்பதையும், திருமணம் செய்யலாமா கூடாதா என்பதையும், பொருத்தத்தில் சிலவற்றை 'அட்ஜஸ்ட்' செய்துகொள்ள என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார். புரோகிதர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இது கம்ப்யூட்டர் யுகமாயிற்றே. பிறந்த நேரத்தையும் பிறந்த நாளையும் கொடுத்தால் ஜாதகம் 'ரெடி'.

புரோகிதர் ஜாதகமானாலும், கம்ப்யூட்டர் ஜாதகமானாலும் ஒரு துண்டுச்சீட்டில் பத்து கட்டங்களை வரைந்து நடுவில் ஒர பெரிய கட்டத்தையும் போட்டு சில கட்டங்களில் ராகு, கேது, சந்திரன், சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், சனி என எழுதுகிறார்கள். சில கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்களைக்கூட சேர்ந்தார்போல எழுதுவதுண்டு. நடுவில் உள்ள பெரிய கட்டத்தில் ராசியையும் நட்சத்திரத்தையும் போடுகிறார்கள். சில கட்டங்களை காலியாகவும் விடுகிறார்கள். கேட்டால் ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள். அதற்காகத்தான் சில கட்டங்களைக் காலியாக விட்டு வைத்திருக்கிறார்களோ?

படிக்காத பாமரானாலும் சரி, பி.எச்.டி பட்டம் வாங்கிய முனைவரானாலும் சரி, இந்த துண்டுச் சீட்டுதான் இவர்களின் வாழ்கையைத் தீர்மானிக்கும் 'அத்தாரிட்டி'. இந்தத் துண்டுச் சீட்டைப் படிக்கவோ, படித்துவிட்டு விளக்கம் சொல்லவோ அண்ணா பல்கலைக் கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலோ பயின்றவனால்கூட முடியாது; விளங்காது. 

வான்வெளியில் அதிநவீன ராக்கெட்டுகள் விட்டபிறகும்கூட கிரகங்களைக் கணிப்பதில் விஞ்ஞானிகளே திண்டாடுகின்றனர். ஆனால் கையளவு கட்டத்தில் நம்ம ஊர் புரோகிதன், 'அஞ்சாங்கிலாஸ்'கூட தாண்டாதவன், கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்!

பார்ப்பனக் குடும்பங்களில் சிறு வயதுமுதலே பள்ளிப்படிப்பு மண்டையில் ஏறாத சில மரமண்டைகளை, "இவனுக்கு சுட்டுப்போட்டாலும் இனி படிப்பு வராது, இவன் படித்தவிட்டு இஞ்ஜீனிராகவோ, டாக்டராகவோ, ஏன் ஒரு குமாஸ்தாவாகவோகூட வரமுடியாது. இவனுக்கு ஏத்தது புரோகிதம்தான்” என முடிவு செய்து அவனை இத்தொழிலுக்குள் இறக்கிவிடுகிறார்கள். நம் வீட்டுப் பிள்ளைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் நாம் என்ன செய்கிறோம்? ஆடு மாடு மேய்க்க அனுப்புகிறோம். அவர்கள் புரோகிதம் பார்க்க அனுப்புகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த 'அதி உயர்ந்த' தொழிலில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது. இங்கும் ஆண் ஆதிக்கம்தான். படிப்பு வராத பார்ப்பனப் பெண்கள் முருக்கு சீடைதான் சுட வேணடும்.

இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள்தான் கிரகங்களின் நடமாட்டத்தைக் கணித்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். இந்த அதிபுத்திசாலிகளுக்கு சில இடங்களில் ஏக கிராக்கி ஆகிவிடுகிறது. இன்று உலகமே ஒரு கிராமமாகி விட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலிலும் புரோகிதர்களுக்கு ஏக கிராக்கியாம். புரோகிதர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இடங்களில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளிலிலும் இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் 'சைடு பிசினஸாக' இத்தொழிலில் இறங்கி உள்ளனர்.

திருமணத்திற்கான பத்துப் பொருத்தங்கள்:

"நமது முன்னோர்கள் திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்துள்ளனர். நாளடைவில், அவற்றில் முக்கியப் பொருத்தங்களாக 10 மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதன. அவை:

1.தினப்பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்.
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்.
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்"

இவை ஒரு பஞ்சாங்கத்தில் படித்தது. கணிப்புகள் புரோகிதருக்கு புரோகிதர் மாறுபடலாம். 

தொடரும்

ஊரான்