Wednesday, July 15, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி இந்துக்களால் – இங்கே சாதி இந்துக்கள் எனப்படுபவர்கள் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதியினர் அனைவரும் இதில் அடங்குவர் - தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு வந்ததால் சுதந்திர இந்தியாவிலாவது இந்த இழிவு நீக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கில் இந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் சுதந்திர இந்தியாவில் தீண்டாமை தொடரவே செய்தது. எனவே தீண்டாமை கடைபிடிப்போரை தண்டிப்பதற்காக தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 1976 திருத்தியமைக்கப்பட்டு சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம்-1955 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தீண்டாமை முன்னிலும் மூர்க்கமாக தொடரவே செய்தது. எனவே 1989ல் வன்கொடுமை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரும் தீண்டப்படாதவர்கள் மீதான வன்கொடுமையும் தீண்டாமையும் தொடர்ந்து வருகிறது.

தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட சாதி இந்துக்கள் தயாராக இல்லை. மாறாக வன்கொடுமை தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கூப்பாடு போடுகின்றனர். வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஒரு சில சாதிய அரசியல் கட்சிகளும் இதற்கு தூபம் போடுகின்றன. இதன் விளைவு தற்பொழுது இச்சட்டத்தை தடுத்திட வேண்டுமெனும் சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழு முன் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தீண்டாமை தற்போது நவீன வடிவில் கடைபிடிக்கப்படுவதால் எந்தச் சட்டத்தாலும் அதை ஒழிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் தீண்டாமை எங்கே இருக்கிறது? யார் கடைபிடிக்கிறார்கள்? என சாதி இந்துக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இளவரசனும் கோகுல்ராஜீம் மாண்டு போனதற்கு தீண்டாமை காரணம் இல்லையா?

வாடகைக்கு வீடு தரும் போது சாதி கேட்காமல் தருகிறார்களா? தீண்டத்தகாதவன் என்றால் வேறு காரணங்களைக் கூறி மறுத்துவிடலாம். இன்னமும்கூட பொது சுடுகாடு கிடையாது. பொதுக்கிணற்றில் / குழாயில் தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுக்க / பிடிக்க முடியாது? தீண்டத்தகாதவர்கள் கோவில்களுக்குள் சென்று சாதி இந்துக்களைப் போல வழிபட முடியாது.

1947க்கு முன்பு தீண்டாமை எப்படி இருந்தது? அதன்பிறகும் தீண்டாமை தொடர்வதற்கான காரணம் என்ன? இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு யார் காரணம்? சாதி இந்துக்களில் உள்ள ஒருசிலரின் தூண்டுதலினால் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா? அப்படியானால் அந்த ஒரு சிலர் தவிர பிற சாதாரண சாதி இந்துக்களிடம் தீண்டாமை எண்ணம் இருப்பதில்லையா?

சாதி இந்துக்களிடம் தீண்டாமை என்பது ஒரு வாழ்க்கை முறையாக – ஒரு பண்பாடாக நிலை பெற்றது எப்படி? தீண்டாமையை கடைபிடிப்பது குற்றமா அல்லது பாவமா என்பது பற்றியெல்லாம் ஒரு சாதி இந்து சிந்தித்துப் பார்ப்பதில்லையே.! ஏன்?. தீண்டாமை ஒரு அநிச்சை செயலாகவல்லவா அவனிடம் குடிகொண்டுள்ளது.

தொடரும்… 
தொடர்புடைய பதிவுகள்:

4 comments:

  1. ஆதிக்கச் சாதியினர் இந்துவாக இருப்பது அவரக்ளுக்கு பெருமை....

    ஆதிக்கச் சாதியினரால் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு கொலை செய்யப்படும் தீண்டத்தாகதவர்கள் இந்துவாக இருப்பது இழிவிலும் இழிவு....

    ReplyDelete
    Replies
    1. அம்பேத்கரைப் படித்தவர்கள் ஒரு போதும் இந்துவாக வாழ முடியாது.

      Delete
  2. சாதியற்ற சமுதாயம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம். அதற்கு சாதியத்தின் ஆதாரமாக உள்ள மனுதர்ம வாழ்க்கை முறை ஒழிக்கப்பட வேண்டும்.

      Delete