Monday, March 20, 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7

 VII

குஜராத் இனப்படுகொலை

முதலில் மோடியை குஜராத்தின் முதலமைச்சராக்கி, குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். குஜராத் மாநிலம் வேகமாக வளர்ந்து வருதாகக் கதை அளந்தார்கள். அதற்கு, “குஜராத் மாடல்” என்று நாமகரணம் சூட்டி அவர்களுக்கள்ளாகவே அகமகிழ்ந்து கொண்டார்கள். குஜராத்தின் வளங்களை கொள்ளையடிக்க அதானிக்கும், அம்பானிக்கும் பட்டுக் கம்பளம் விரித்ததைத் தவிர மோடி வேறு எதையும் செயவில்லை என்பதை நாடறியும். அதற்குக் கைம்மாறாக அவர்கள் மோடிக்குக் கோடிகளை வாரிக் கொடுத்தனர். இவற்றை எல்லாம் மூடிமறைப்பதற்காக இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் கோத்ரா இரயிலை எரித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்கிற பொய்யைத் திட்டமிட்டே பரப்பி, “இஸ்லாமியர்களுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்து, 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்தத் தாக்குதல் மூலம் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து டெல்லிக் கோட்டைக்குப் பாதை அமைத்துக் கொண்டார் மோடி. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கு மோடிதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தி பிபிசி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட ஆவணப்படத்தை மோடி அரசு தடைசெய்ததன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகளை மூடிமறைக்க முயன்றது. ஆனால் தடையையும் மீறி இரத்தக்கரை படிந்த மோடியின் கோரப் பற்கள் வெளியே தெரிந்ததை அவர்களால் மறைக்க முடியவில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனை

2014  ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என ஆசை வார்த்தைக் கூறி அனைவரையும் வங்கிக் கணக்குத் தொடங்கச் சொல்லி நம்மை வங்கி வலைப் பின்னலில் சிக்கவைத்தார்.  குறைந்தபட்ச இருப்பு இல்லை எனக் கூறி நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகள் அபகரித்துக் கொண்டதைத் தவிர வேறு எதைக் கண்டோம் நாம்?

எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மாயாஜாலம் காட்டினார் மோடி. நாமும் அதை நம்பி ஜி-பே, கூகுள் பே என அதன் பின்னால் ஓடினோம். இன்று அதற்கும் கட்டணம் வசூலித்து கல்லா கட்டுகிறது மோடி அரசு.

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த பலர் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினால் அதைக் கிடப்பில் போட்டு வேடிக்கை காட்டுவதோடு, தற்கொலைகளுக்கு வெண்சாமரம் வீசி வருகிறார் ஆளுநர் ஆர்.என் இரவி. 

பண மதிப்பிழப்பு

கள்ளப் பணம் நாட்டில் பெருகிவிட்டதாகவும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் 8 அன்று திடீரென அறிவித்தார் மோடி. ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் உருவப்பட்டன. கார்டைச் சொருகினால் பணத்தாளுக்குப் பதிலாக காற்றுதான் வந்தது.

வங்கிக்குச் சென்று மணிக் கணக்கில் கால்கடுக்க நின்றும் வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. அன்றாட தேவைக்கும் அவசரத் தேவைக்கும் பணம் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர்.  ஏதோ கருப்புப் பணம் ஒழிந்தால் சரி என மக்களும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டனர். அதன் பிறகு புதிய 500 ரூபாய் தாள்களையும் 2000 ரூபாய் தாள்களையும் புழக்கத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று 500 ரூபாய்த் தாள்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 2000 ரூபாய்த் தாள்கள் எங்கே சென்றன என்பது மர்மமாகவே உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் அதானியில் இமாலய நிதி மோசடி.

விலைவாசி உயர்வு

பணமதிப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், அதன் விளைவாக விலைவாசி குறையும் என நம் நாவில் தேன் தடவினார்கள். நாமும் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு மீண்டும் மோடியை பிரதமராக்கினோம். என்ன நடந்தது?

2014 க்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சுமார் 400 ரூபாயாக இருந்த போது விலைவாசி விண்ணை முட்டுவதாகக் கூப்பாடு போட்டவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இன்று ஒரு சிலிண்டர் கேஸ் விலை 1100 ரூபாயைத் தாண்டிவிட்டது. 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.103. ரூ.55 க்கு விற்பனை செய்யப்பட் டீசல் விலை இன்று ரூ.95. மோடியை மீண்டும் பிரதமராக்கியது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொண்ட கதையாவிட்டது நமது கதை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

No comments:

Post a Comment