Sunday, March 19, 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5

V

ஹர்ஷத் மேத்தா

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் இந்தியச் சந்தையை உலகச் சந்தைக்கு திறந்துவிட்ட 1990-களின் காலகட்டத்தில், ஹர்சத் மேத்தா என்கிற பங்குச் சந்தைத் தரகரின், பங்குச் சந்தை மோசடி இந்திய முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹர்சத் மேத்தா அங்கேயே மாண்டு போனார். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த பலர் தங்களுடைய சுமார் ரூ.3542 கோடி மதிப்பிலான சொத்தை இழந்து நடைபிணமாய் வீதியில் வீசப்பட்டனர்.

விஜய் மல்லய்யா

எப்பொழுதும் அழகிகளோடு ஆட்டம் போடும் பிரபல கிங்பிஷர் சாராய அதிபரும், யுனைட்டடு பிரீவரீஸ் நிறுவனத்தின் முதலாளியுமான விஜய் மல்லய்யாவை அறியாதோர் உண்டோ? சாராயத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே, 2005 ஆம் ஆண்டு வாக்கில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஒரு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பலகோடி ரூபாயைக் கடனாகப் பெறுகிறார். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே போதிய வருவாய் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி கிங்பிஷர் ஏர்லைன் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி அடைக்க நெருக்குதல் கொடுத்த போது, 2016 மார்ச் 6 அன்று இந்தியாவைவிட்டு தப்பிஓடி இங்கிலாந்தில் அடைக்கலமாகிறார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), ஐடிபிஐ (IDBI), பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அவர் கடனாகப் பெற்ற சுமார் ரூ.9000 கோடியில் ஒருபைசாவைக்கூட இன்றுவரை திரும்பப் பெறமுடியவில்லை. உண்மையில் விஜய் மல்லய்யா ஏப்பம் விட்ட இந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.30000 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூப்பாடு போடும் மோடியால் இன்றுவரை இங்கிலாந்தில் சல்லாபமாக வாழ்ந்து வரும் மல்லய்யாவின் ஒரு மயிரைக்கூடத் தொடமுடியவில்லை.

கைலாசா

முதலாளிகள் மட்டுமல்ல சாமியார்கள்கூட இந்தியப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்து சல்லாபமாய் கூத்தடிக்கின்றனர் என்பதை நித்தியானந்தா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.  பலஆயிரம் கோடி சொத்துக்களோடும் சில நூறு அழகிகளோடும் ஒருவன் இந்தியாவைவிட்டு ஓடுவது மோடி கூட்டத்திற்குத் தெரியாதா என்ன? பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு இராணுவக்காரன் ஒருவன் விடும் குசுவைக்கூட மோப்பம் பிடிக்கத் தெரிந்த நமது புலாய்வுப் புலிகளுக்கு நித்தியானந்தா எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!  ஐ.நா சபையிலேயே கைலாசா சார்பாக பேச முடிகிறது என்றால் நாம் எத்தகைய கேணயர்கள் என்பதை நாம்தான் உணர வேண்டும். நித்தியானந்தா வெறும் கோவணத்தோடு ஓடியிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவன் இந்தியாவின் சொத்துக்களை அள்ளிச் சென்றிருக்கிறான் என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. இந்த வரிசையில் அடுத்து இந்தியாவை விட்டு ஓடக்கூடியவன் ஜக்கியா அல்லது பதஞ்சலி இராம்தேவா என்பது நமக்குத் தெரியாது.

ஆலைகளை அமைத்து தொழில் செய்யும் ஒரு சில  முதலாளிகள் சில லட்சம் ரூபாய்களை சம்பாதிப்பதற்கே அல்லாடும் போது, வெறும் கோவணத்தைக் காட்டியே இவர்களால் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்ட முடிகிறது என்றால், அது அவர்களின் திறமையினாலா அல்லது நமது இளிச்சவாய்த் தனத்தினாலா? சிந்திக்க வேண்டும். 

தொடரும்...... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment