Showing posts with label காரியம். Show all posts
Showing posts with label காரியம். Show all posts

Thursday, December 19, 2024

முதலைக் கண்ணீர்! - 2

திருவண்ணாமலை, மத்தாளங்குளத் தெரு முனையில் கம்பி வலைக்குள் பெரியார். வலப்பக்கம் ஸ்ரீ கெங்கையம்மன். அதற்கு அருகிலே கிறிஸ்தவ தேவாலயம்.

சிலைகளுக்கு வலை போடலாம், ஆனால் சிந்தனையைச் சிறைப்படுத்திவிட முடியுமோ? அதனால்தானோ என்னவோ, கிழவன் அமர்ந்தாலே அலறுகிறது ஒரு கூட்டம். சிலைகளுக்குப் 'பவர்' உண்டா? நம்புகிறேன் நானும் இந்தக் கிழவனைக் கண்ட பிறகு.


பேருந்துத் திரையில் விஜயகாந்தின் 'பெரியமருது'வைப் பார்த்துக் கொண்டே தண்டராம்பட்டைத் தாண்டி விட்டேன். திரையில் ஒரு கண்ணுமாக, வெளியில் ஒரு கண்ணுமாக பார்வை அலைபாய, திரையில் மகேஷ் ஆனந்த், ரஞ்சிதாவை கொத்திக் குதரத் துரத்த, தனது 'கற்பைக்' காக்க அவள் மாடியிலிருந்து விழுந்து மாண்டு போகிறாள். வெளியில், கிரானைட் காடையர்களால் கொடூரமாய் சிதைக்கப்பட்டு வீழ்ந்து கிடந்தன சீரிளம் குன்றுகள்.

ஃபெஞ்சலால் உலகின் கவனத்தை ஈர்த்த சாத்தனூர் அணையை நோக்கிப் பேருந்து விரைந்தது. 'காரியத்துக்கு' என்று சொல்லி கட்டணம் இன்றி உள்ளே சென்றேன். பைரவனைச் சுமந்த கலைப்போ என்னவோ, பைரவனின் வாகனங்கள் சில சாலையில் படுத்துக் கிடந்தன. 

வழக்கமாகக் 'காரியம்' நடக்கும் ஒன்பதுகண் பாலத்திற்கு அருகில் ஐயர் சம்மணமிட்டு அவரது வேலைகளைத் தொடங்கியிருந்தார். உறவுகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அதற்குள், தமிழ்நாட்டின் அழகிய அணையை ஒரு சுற்றுப் பார்த்து வரலாம் என்று உறவுப் பேரனோடு புறப்பட்டேன். 

முதலைப் பண்ணைக்குப் போகும் வழியில் சிற்றோடையில் ஊற்றுநீர் ஓடிக்கொண்டிருந்தது. இடப்பக்கம் அடர்ந்த மரங்கள். மரங்களுக்கு அடியில் ஆட்கள் அடிக்கடி சென்று வரும் பாதைத் தடம். எட்டிப் பார்த்தேன். அங்கே மதுப் பிரியர்களின் கண்ணாடிக் காடுகள். 

பார்வையைத் திருப்பி நேரே சென்று பண்ணைக்குள் நுழைந்தோம். ஆசியாவிலேயே பெரிய பண்ணை. 500 இருந்த இடத்தில் இன்று 300 மட்டுமே. ஆறுகளிலும் அணைகளிலும் சுதந்திரமாய் உலாவும் முதலைகள், பாவம் இங்கே மக்களை மகிழ்விக்கச் சிறு சிறு குட்டைகளில் கைதிகளாய். 

வஞ்சக நெஞ்சுடன் நாம் வடிக்கும் போலிக் கண்ணீரை, முதலைக் கண்ணீர் என்று எவன்தான் சொன்னானோ? ஆனால் இங்கே முதலைகளின் நிஜக் கண்ணீரைக் காண முடிந்தது.

கொட்டடிக்குள், சிறு தொட்டிகளில் வண்ண மீன்கள், கண்ணாடிச் சுவர்களில் முட்டி மோதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.


கூரைகளுக்குக் கீழே, கம்பி வலைகளுக்குள் பச்சைக்கிளிகளும், பலவண்ணப் பறவைகளும், மாடப் புறாக்களும், மயில்களும், முயல்களும் என வாயில்லா ஜீவன்கள் அடைக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்தன.

சுதந்திரமாய் நீந்தி, பறந்து, ஓடி ஆடி உல்லாசமாய் வாழ வேண்டிய இடத்தில், சிறைக் கைதிகளாய் நம் கண்முன்னே. சிறைக்குள் வாடுவோரின் கண்ணீரைக் கண்டு இரசிக்கிறோமே, நாம் 'சேடிஸ்டுகளா' என்ற எண்ணம் ஒரு பக்கம் என்னைக் குடைய, அணையின் பதினோருகண் நீர்ப்போக்கியை நோக்கி மெதுவாய் நடந்தோம்.

பசி இல்லை என்றாலும், சுற்றுலாத் தளங்களில் பார்த்ததை எல்லாம் வாங்கித் தின்ன நாம் பழகிக் கொண்டதால், ஐஸ்கிரீம், பஜ்ஜி, நொறுக்குத் தீனிகளுக்குப் பஞ்சம் இல்லை. பஜ்ஜியை கையில் வாங்கிய அடுத்த நொடியே, தாவிப் பாய்ந்து பறித்துச் சென்றது வானரம் ஒன்று. இது அவர்களின் தேசமன்றோ?

காரப்பட்டைப் புரட்டிப் போட்டு, கடலூரை மூழ்கடித்த லட்சம் கனஅடி எப்படி இருக்கும் என்பதன் சுவடுகள் மட்டுமே அங்கே தென்பட்டன. பதினோருகண்
நீர் போக்குப் பாதையில், சிறு குன்றுகளை ஏறி மிதித்து, மரங்களை எல்லாம் வளைத்து நெளித்து, பாய்ந்து சென்ற பெருவெள்ளத் தடங்கள் பளிச்செனத் தெரிந்தன. நாங்கள் பார்த்தபோது வெளியேறிய 2000 கனஅடியே பேரிரைச்சலோடு சீறிப்பாய்ந்தது. அப்படியானால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கன அடி எப்படி இருந்திருக்கும்? நினைக்கையிலே உடல் சிலிர்க்கிறது.


பிற்பகல் 2 மணி. அணையின் பரந்த நீர் பரப்பைப் பார்த்தவாறு கீழே இறங்கினோம். மீனவர்கள் மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். "என்ன மீனுக்கா?" என்று வினவிய போது, "ஆம், நாளை காலைதான் திரும்புவோம்" என்று கடந்து சென்றனர்.

அணையின் காட்சிகள் இங்கு கவர்ச்சிக் காட்டியதால், நாங்களும் சில இடங்களில் மயங்கினோம்.  கைபேசியில் அவற்றை உள்ளடக்கியவாறு பேசிக்கொண்டே வந்தபோது, திடீரென, "நீங்கள் எத்தியிஸ்டா?" என்று கேட்டான் பேரன். "ஆம்" என்றேன். "நானும்தான்" என்றான். எனக்குள் ஒரு இளமைத் துள்ளல். 'அடடா, நம்மைப் போல் ஒருவன்' என்ற பெருமை என்னுள்.


50 ஆண்டு இடைவெளியில்,
இருவருமே ஒரே பருவத்தில், ஆம், பள்ளிப் பருவத்தில், பிறரின் தூண்டுதல் ஏதுமின்றி தானாகவே "எத்தியிஸ்ட்" ஆன ஒற்றுமை ஒன்று போதாதா பெருமை கொள்ள? நம்பிக்கைகளை விதைக்காமல் இருந்தால் நாமும் இங்கு 'நார்வே'க்கள்தானே?
(எத்தியிஸ்ட் - atheist)- நாத்திகன்)

"ஐயர் வந்தார், அள்ளிச் சென்றார்" என்பதற்கிணங்க 'காரிய' வேலைகள் கனஜோராய் நடந்து கொண்டிருந்தன. ஆண்கள் முகம் மழித்து, காசு பணம் வேட்டி சேலை என முறையுள்ளவர்கள் சம்பந்தம் கட்ட, கடைசியில் ஆற்று நீரை தலையில் தெளித்து தீட்டுக் கழிக்க, எதுவும் செய்யாதிருந்த என்னைப் பார்த்து "ஏன் நீங்கள் மட்டும் எதுவும் செய்யவில்லை?" என மற்றொரு பேரன் கேட்டான். 

"பிறப்பு, இறப்பு, பெண் பருவம் எய்தல், மாத விடாய், கிரகப்பிரவேசம் என எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நமக்குத் தீட்டாக்கி, அதைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்களைப் புகுத்தி, அன்றே நம்மை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி உள்ளனர். இவை எல்லாமே புரோகிதர்கள் தங்களுடைய வருமானத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதானே தவிர, இதனால் கால நேர பண விரயத்தைத் தவிர, நமக்கு ஆவப்போவது ஒன்றுமில்லை என்பதனால், நான் இவற்றை எல்லாம் செய்வதில்லை" என்று எடுத்துச் சொன்னேன். 

கம்பி வலைகளால் சூழப்பட்ட சமுதாயக் கூடத்திற்கு வெளியே, பைரவனின் சில வாகனங்களும், எண்ணற்ற வானரங்களும், ஒரு சில வராகன்களும், தங்கள் வயிற்றுப் பாட்டுக்கு சமுதாயக் கூடத்தைச் சுற்றி வளைக்க, கூரைக்கு உள்ளே சிறைக் கைதிகளாய் நாங்கள், கோழி பிரியாணியுடன் பசியாறினோம். 

இறப்பின் தீட்டைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்கள்  இருக்கு. ஆனால், உறவுகளுக்கிடையில் எழும் பகைமையைப் போக்க அப்படி ஏதேனும் உண்டா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்க, அவரவர் வந்த திசை நோக்கிப் பயணமானோம்? 

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவு 

Tuesday, March 8, 2011

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அண்ணன் முறை வேண்டும். அவர் இறந்த போது நான் வெளியூரில் இருந்ததால் சாவுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் காரியத்தில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் ஊருக்குச் சென்றேன்.


உழவனின் மரணம் பேரிழப்பல்லவா?

அவரது வீடு மலையடிவாரம் காட்டோரத்தில் இருந்தது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்செடிகளே காணப்பட்ட கரட்டு மேட்டில் இன்று வேர்க்கடலையும் கரும்பும் செழித்திருந்ததைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒரு பக்கம் பொன் விளையும் பூமியெல்லாம், நகரவாசிகளால் நாசமாக்கப்படும் போது, ஏதும் அறியா எனது அண்ணன் போன்ற விவசாயிகள் எதற்கும் உதவா மண்ணை, பொன் விளையும் பூமியாக மாற்றி விட்டல்லவா இறக்கிறார்கள். உறவினர் என்பதைவிட ஒரு உழைப்பாளியை இந்த உலகம் இழந்த விட்டது என்பதல்லவா எனக்கு..... ஏன் நமக்கு பேரிழப்பு.

தலை நிறைய பூச்சூடி, பட்டுப் புடவை கட்டி, மணப் பெண் போல ஜோடிக்கப்பட்ட எனது அண்ணி மாட்டுக் கொட்டகையில் தனியாக உட்கார்ந்திருந்தார். அண்ணன் இறந்த பிறகு பதினைந்து நாட்களாக மாட்டுக் கொட்டகையில்தான் வாசம். காரியம் முடியும் வரை வீட்டிற்குள் செல்லக் கூடாதாம். வீடு என்ன மாடி வீடா? கதவு வைத்த கொட்டகை அவ்வளவுதான். இவைதான் இன்று இந்தியாவில் எண்ணற்ற ஏழை விவசாயிகளின் பங்களாக்கள்.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் எல்லோருடனும் வாஞ்சையாய் கையைப் பிடித்தும், கட்டியழுதும் தனது சோகத்தை தணித்துக் கொண்டிருந்தார் அண்ணி. என்னாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் “எப்பிட்ரா இருக்க?” என்று கேட்ட அவரது குரல் மட்டும் என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. ஆனால் அவர் எப்பொழுதும் பீடியும் கையுமாகத்தான் இருப்பார்.  இப்படித்தான் நூறு வயது வாழ வேண்டியவர்கள் அறுபது வயதிலேயே ஆயுளை முடித்துக் கொள்கின்றனர்.

புண்ணியாதானம்!

ஐயர் வந்தார். வீட்டில் செய்யும் புண்ணியாதானம் என்ற சடங்கை முடித்தார். வடக்கே காட்டுப் பக்கம் ஒரு சிறுவனோடு சென்றார்.

”எங்கே இந்தப் பக்கம் போறார்?” எனக் கேட்டேன்.

 ”தண்ணி அடிக்கப் போறார்” என்றார் அருகிலிருந்த உறவினர்.

கல்லாணமோ கருமாதியோ தண்ணியடிப்பதுதானே இன்றைக்கு 'பேஷன்' என்பதால் நான் தப்புக் கணக்குப் போட்டு விட்டேன்.

"என்ன தண்ணி அடிக்கவா”? என ஆச்சரியமாய் நான் கேட்க, புண்ணியாதானம் முடித்து பங்காளி வீடுகளின் கூரைகளில் புனித நீரைத் தெளித்து வரவேண்டுமாம். அது ஐதீகம். எதற்கு என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை. ஐயர் சொன்னால் ஏன் என்று கேட்கக்கூடாது. இப்படித்தானே பல சப்பிரதாயங்களைப் புகுத்தி மக்களை மடமையில் வைத்துள்ளார்கள். அதுதானே பார்ப்பனர்களுக்கு மூலதனம். இல்லை என்றால் அவாளெல்லாம் அமெரிக்கா செல்லும் போது இவாளைப் போன்ற சிலர் இன்னும் மலைக் கிராமத்தைக்கூட விடவில்லையே ஏன்?

ஆங்காங்கே நிலத்ததையொட்டியே உறவினர்களின் வீடுகளும் இருந்ததால் ஒவ்வொரு வீடாகச் சென்று தண்ணீர் அடித்துவிட்டு ஏரி ஓரம் உள்ள குளக்கரைக்கு வந்து சேர்ந்தார் ஐயர். சம்பந்தம் கட்டும் சடங்கை முடிக்க வந்தவர்கள் ஏற்கனவே அங்கே கூடியிருந்தனர்.

ஊர்ப்பக்கம் வரும் ஒற்றைப் பேருந்தை நம்பி, தொலை தூர ஊர்களிலிருந்து ஒரு சிலர் வந்திருந்தனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் பலர் வந்திருந்தனர். பெரும்பாலானோரின் கைகளில் ஜவுளிக்கடைகளின் பைகள் தொங்கின.

சம்பந்தம் கட்டுதல்!

இறந்து போனவரின் உறவினர்களுக்கு, அவரவர்களின் சம்மந்தி முறை உறவினர்களும், திருமணமாகிச் சென்ற அக்கா-தங்கைகள் தங்களது அண்ணன்-தம்பிகளுக்கும் சம்மந்தம் கட்டுவது காரியத்தில் காலம் காலமாய் கடைபிடிக்கப்படும் ஒரு சம்பிரதாயம். வேட்டி மற்றும் துண்டு என இருந்த சம்மந்தம், பிறகு 'பேண்ட்' சட்டையாய் மாறியது. சில சமயங்களில் சிறுவர்களுக்கான 'ரெடிமேடு'களாய்க்கூட மாறுவதுண்டு. ஆனால் இன்று பணத்தையே சம்மந்தமாய் மொய் போல சிலர் கொடுத்து விடுகிறார்கள். துணியோ பணமோ எல்லாமே கல்யாண மொய் போல பின்னால் செய்ய வெண்டிய கடன்தானே. அதனால் இன்று ஆயிரங்களில்கூட சம்மந்தம் போடுகிறார்கள்.

நான் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் கடைபிடிப்பதில்லை . சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லை என்றாலும் வெறுத்து ஒதுங்கிக் கொள்வதில்லை. நல்லது கெட்டதுகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அர்த்தமற்றவைகளாக இருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதால் அவர்கள் கெட்டவர்கள் இல்லையே. அறியாமையால்தானே இவைகளை மக்கள் கடைபிடிக்கிறார்ள். அறியாமையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிதான் இங்கு தேவையேயொழிய ஒதுங்கிக் கொண்டு அவர்களை வைவதல்ல.

ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

பூஜைகள் முடிந்தன. சம்மந்தம் கட்டும் சடங்கு தொடங்கியது. ஒவ்வொருவரும் ஊரையும் பேரையும் சொல்ல, அதையே ஐயர் திருப்பிச் சொல்லி, துணியையும் பணத்தையும் வாழ்த்திக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் சம்மந்தம் கட்டும் போதும் தட்டில் விழுந்த ஐந்தும் பத்தும் ஐயர் மடிக்குச் சென்றன. ஆண்டவனின் ஆசிபெற்றல்லவா கொடுக்கிறார். சும்மாவா கொடுக்க முடியும்? 

சுமார் 250 பேர் சம்பந்தம் கட்டியிருப்பார்கள். மொத்தமாக ஐயர் மடியில் சுமார் இரண்டாயிரம் சேர்ந்திருக்கும். சடங்குகள் செய்ய அழைத்து வந்தவர் கொடுக்கும் கட்டணம் தனி. அது ஒரு ஆயிரம் என்றாலும் மூன்று மணி நேரத்தில் ஐயருக்கு வரும்படி மூவாயிரம் ரூபாய். 'ஐ.டிஐ' முடித்து ஆலையில் வேலை செய்பவன் மாதத்தில் மூவாயிரம் தேத்துவதற்கு மூன்று 'ஷிப்டும்' உழைத்தாலும் முடிவதில்லையே.

அப்படி என்னதான் படித்துள்ளார் எங்க ஊர் ஐயர். ஐந்தாங் 'கிலாஸ்'கூட தாண்டவில்லை. ஐயராய் இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் படித்தால் எப்படித் தாண்ட முடியும்?

இவரது தந்தை பத்து ஏக்கர் நிலத்தோடு விவசாயம் பார்த்த அதிசய ஐயர். அவர் வயலில் இறங்கி உழைக்கவில்லை என்றாலும் ஒரு பணக்கார விவசாயியாய் வாழ்க்கை நடத்தியவர். என்னை ”கரிபால்டி” என்பார்கள் எனது பள்ளி நண்பர்கள். அவர் என்னைவிட கருப்பு. வாரிசும் அப்படியே. ஆரிய திராவிட இனக்கலப்புக்கு ஒரு எடுப்பான உதாரணம். இதை இழிவாக நான் சொல்லவில்லை. திராவிடர்களிலும் செக்கச் சிவப்புகளும் ஏராளமாய் இருக்கத்தானே செய்கிறார்கள். இது எதார்த்தம்.

பையனுக்கு படிப்பு இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாலையே கிடையாது. போக்கு வரத்துக்கு நடராஜாதான். பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? ஆனாலும் துணிந்து வந்தார் ஒருவர் நிபந்தனையோடு. பையன் புரோகிதம் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. திருமணத்தோடு சில மந்திரங்களை மனப்பாடம் செய்ய அடித்தது யோகம். வேறு ஒரு ஊரில் இருந்து மிதி வண்டியில் வந்து புரோகிதம் பார்த்த ஐயரும் மூப்பாகி முடியாமல் போனதால் சுத்துப் பட்டு பத்து கிராமங்களுக்கும் சேர்த்து இன்று இவர் ஒருவரே “ஆஸ்தான“ புரோகிதர்.

முக்கி முக்கிப் படித்து வக்கீலாகி வாழ்க்கையில் “செட்டில்“ ஆவதற்குள் வழுக்கை விழுந்த எனது மற்றொரு அண்ணன் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம். "என்னடா தொழில் பரவாயில்லையா?" என்றபோது பெரு மூச்சு விட்டான் “டி.வி.எஸ்.ஃபிப்டியில்“ புறப்படத் தயாராய் இருந்த ஐயரைப் பார்த்து.

அவ்வை பிராட்டி இன்று இருந்திருந்தால் "அரிது அரிது பார்ப்பனராய்ப் பிறத்தல் அரிது" எனப் பாடியிருப்பாரோ!

ஊர் வந்து சேர்ந்தேன். பயணம் முடிந்தது.