Showing posts with label krishna engineering college. Show all posts
Showing posts with label krishna engineering college. Show all posts

Friday, December 24, 2010

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!

”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.

"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை  மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்."- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.

இச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.

நகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.

ஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள்? இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே.  பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா? வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்? இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள். 

சென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் "புளூ கிராஸ்" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் "புளூ கிராஸ்"  காலியாகிவிடுமே!

இங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.

ஊரான்.