Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Tuesday, July 4, 2023

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடுப்பாடுகளில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவரின் உயரம் இருக்கக் கூடாது என விதி இருந்தும் இந்தக் கல்லூரியில் 10 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விதி மீறலில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே சரியான சட்ட நடைமுறையாகும்.


2019 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலர் பலியானபோது அது குறித்து எழுதப்பட்ட கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். தற்போதைய கோயம்புத்தூர் சுற்றுச்சுவர் படுகொலையைப் புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்.

******
மீள் பதிவு:
06.12.2019

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கிராமம் என்றால் காலனி அல்லது சேரிகள் ஊருக்கு வெளியே இருக்கும். தாழ்த்தப்பட்டவர்களே இங்கு வசிக்கின்றனர். நகரம் என்றால் ‘சிலம்’ (Slum) அல்லது குடிசைப் பகுதிகள் இருக்கும். கிராமங்களில் வாழவழியற்று நகரில் தஞ்சம் புகுந்தவர்கள் வாழுகின்ற பகுதிதான் ‘சிலம்’. இங்கும் ஆகப்பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்டவர்களும், வறுமையால் பிழைப்பு தேடி நகரம் வந்த ஒருசில இடைநிலைச் சாதியினருமே வசிக்கின்றனர்.



மனு தரும சாஸ்திரத்தின் வரையறையின்படி, கிராமங்களில் சேரிப் பகுதி ஊரிலிருந்து தள்ளியே இருப்பதால் உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் அருகருகே வசிப்பதற்கான சூழல் கிடையாது. எனவே அங்கு இந்த சுற்றுச்சுவர் பிரச்சனை பெரிதாக எழுவதில்லை என்றாலும் சேரிகளையொட்டி ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பது என்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சுவர் பிரச்சனையும் எழுகிறது. ஆனால் நகரங்களில் ஆற்றோரங்களோ ஒதுக்குப்புறங்களோதான் ஏழைகளின் வாழ்விடங்கள். தனது வீட்டையொட்டி ‘சிலம்’ இருப்பதால் எவ்வளவு உயரத்துக்கு சுற்றுச்சுவரை உயர்த்தலாம் என கேள்வி எழுப்புகிறார். ஒரு மேட்டுக்குடி கனவான். ஆனால் இவரது வீட்டருகே ‘சிலம்’முக்குப் பதிலாக, இவரைப் போன்றே மற்றொரு மேட்டுக்குடி இருந்தால் அவருக்கு இத்தகைய கேள்வி எழுவதில்லை.

‘சிலம்’ என்றால் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏன் எழுகிறது? சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிப்பது, பாதுகாப்பு நலன் கருதி அல்ல; மாறாக அருகில் வாழுபவர்கள் சேரி மக்கள் என்கிற தீண்டாமை கண்ணோட்டமே முக்கியப் பங்காற்றுகிறது. மேட்டுப்பாளையமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சுவர் அருகே குடிசைகள் அமைத்ததால்தான் உயிரிழப்பு எனக் கதைப்போரும் உண்டு. சுற்றுச்சுவரையொட்டி நடைபாதையோ அல்லது சாலையோ இருந்தால் அதில் செல்வோர் பாதிக்கப்படமாட்டார்களா? அல்லது சுற்றுச்சுவர் கட்டும் போதோ அல்லது கட்டிய பிறகோ பழுதுபார்க்கும் வேலை நடைபெறும் போது அச்சுவர் இடிந்து விழுந்தால் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? எப்படி இருந்தாலும் சுற்றுச்சுவர் என்றால் அதில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது.

கருங்கல்லிலேயே கட்டப்பட்டிருந்தாலும் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாமா? எவ்வளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? எத்தகையை கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? இவற்றை வரைமுறைப்படுத்த சட்டங்களும் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளும் கிடையாதா? என்கிற கேள்வியே இங்கு முதன்மையானது.

வீடு உள்ளிட்ட கட்டடங்கள் எனில், சுற்றுச்சுவரின் உயரம் அதிகபட்சம் 1.5 மீட்டர் அதாவது 5 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்றால் கூடுதலாக 0.9 மீட்டர் அதாவது 3 அடி உயரத்துக்கு திறந்த வகை சுற்றுச்சுவரை சிறப்பு அனுமதி பெற்று அமைத்துக் கொள்ளலாம். திறந்த வகை என்பது கம்பிகளைக் கொண்டு அல்லது வேறு பொருட்களைக் கொண்டோ அமைப்பது; கற்களைக் கொண்டு அல்ல. ஆக ஒரு சுற்றுச்சுவரின் உயரம் மேற்கண்ட இரண்டையும் சேர்த்து 2.5 மீட்டர் அதாவது 8 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்கிறது
இந்தியத் தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) உருவாக்கிய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code 2016). BIS என்பது இதற்கு முன்னர் ISI என்று அழைக்கப்பட்டு வந்தது.

தேசிய கட்டிடக் குறியீடு என்பது ஒரு விரிவான கட்டிடக் குறியீடு, இது நாடு முழுவதும் கட்டிட கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. பொதுப்பணித் துறைகள், பிற அரசு கட்டுமானத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

கட்டிட வடிவமைப்பு, கட்டுமானப் பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், பிளம்பிங் வேலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இக்குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1970-ல் உருவாக்கப்பட்ட இக்குறியீடு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு கடைசியாக 2016-ல் வெளியிடப்பட்டது.

துணை மின்நிலையங்கள், மின்மாற்றி நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள் மற்றும் விடுதிகள், பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சுவரின் உயரத்தை 2.4 மீட்டர் அதாவது 8 அடி வரை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு. ஆக எத்தகையக் கட்டடமாக இருந்தாலும் 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவர் எழுப்புவது விதி மீறலாகும். மேற்கண்ட விதியை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு.

விதியை மீறி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி 17 பேர் படுகொலைக்குக் காரணமான மேட்டுப்பாளையம் கட்டட உரிமையாளர் மற்றும் இந்த விதிமீறலை அனுமதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அனைவருமே இங்கு கொலைக் குற்றவாளிகள்.

மேட்டுப்பாளையங்கள் இனியும் நிகழக்கூடாது எனில் 8 அடிக்கு மேல் எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை, அது எத்தகைய கட்டடமாக இருந்தாலும், அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டிருந்தாலும் உடனடியாக இடித்துத்தள்ளுவோம்; இற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பையும் சேர்த்து.

– ஊரான்

Monday, March 19, 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2

எங்கு நோக்கினும் பொறாமை

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை. 

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை. 

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை. 

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது. 

ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை. 

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை. 

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை. 

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை. 

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை. 

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். 

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை. 

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை. 

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை. 

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை. 

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

விளைச்சல் - கால்நடைகள் - குழந்தைப்பேறு - படிப்பு - வேலை வாய்ப்பு - பதவி உயர்வு - சொந்த வீடு - அழகு - காதல் - திறமை - விளையாட்டு என எதுவாக இருந்தாலும் இது வரை ஏதும் இல்லாதிருந்தவன் இனி இவைகளைப் பெற்றுவிடக்கூடாது அல்லது தன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இருக்கக்கூடாது அல்லது தன்னைவிட அடுத்தவனிடம் அதிகமாகிவிடக்கூடாது என்று பார்க்கிற மன நிலையையே மனிதன் வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே அடுத்தவன் என்பது முதலில் தனது உறவுக்காரர்களையும்; அதற்கடுத்து, அக்கம் பக்கத்தில் வாழ்வோரையும்; அதற்கடுத்து, பணியிடத்தில் உள்ளோரையும்; அதற்கடுத்து, நண்பர்களையும்; அதற்கடுத்து, அடுத்தத் தெரு - அடுத்த ஊர் - அடுத்த மாநிலம் - அடுத்த நாட்டினரையும் குறிக்கும். இந்த வரிசைக்கிரமத்தில்தான் இவர்களின் பொறாமையின் உக்கிரமும் அமைகிறது.

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு, மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை. 

பாமரன் முதல் படித்தவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது. 

பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை. 

பொறாமை என்று வந்துவிட்டால்…… 

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார். 

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்! 

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைக்குக்கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. 

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது. 

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

உள்ளத்தில் பொறாமை எண்ணம் மேலோங்குவதால் சண்டைகளும் சச்சரவுகளும் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. 'நியாயமாக' இருப்பதாகக் கருதிக் கொள்ளும் சிலரிடமும், அறிந்தோ - அறியாமலோ சில சமயங்களில் அவர்களிடமும் பொறாமை குணம் வெளிப்படத்தான் செய்கிறது.ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போது தோன்றியது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

தொடரும்....

தொடர்புடைய பதிவு:
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1
http://hooraan.blogspot.in/2012/03/1.html

Sunday, January 9, 2011

இளம் பெண்களே அச்சப்படாதீர்கள்!

மாலை ஐந்து மணி. பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறுவதற்காக வேகமாகச் சென்று கொண்டிருந்தவர்கள், பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்பவர்கள் என பேருந்து நிறுத்தமே கலை கட்டியிருந்தது. நடுத்தர மற்றும் உயர் வருவாய்ப் பிரிவினர் வாழும் பகுதிக்கான பேருந்து நிறுத்தம் அது. கல்லூரி மாணவர்களே அதிகமாகப் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் குடியிருப்புப் பகுதியின் நுழைவு வாயிலருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

"ஏ வாப்பா இப்டியே போலாம்". முழங்கால் வரையிலான ஜீன்ஸ் பேண்ட்டும் டி-சர்ட்டும் அணிந்திருந்த மாணவி, சுடிதார் போட்ட மாணவியைப் பார்த்து அழைக்கிறார். 

"நான் உங்கூட வரலப்பா,  பயமா இருக்கு!" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு  சேலை உடுத்திய மற்றோரு மாணவி முயற்சி செய்தும், அதைப் பொருட் படுத்தாமல் சுடிதார் போட்ட அம்மாணவி மற்றொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினார். 

அனைவருமே ஒரே குடியிருப்பைச் (township) சேர்ந்தவர்கள். இதுவரை பேருந்தில் ஒன்றாக வந்தவர்கள் தற்போது வீட்டிற்குத் தனியாகப் பிரிந்து செல்லக் காரணம் என்ன? 

ஒருவருக்கொருவர் அறிமுகமான குடியிருப்புப் பகுதி அது. ஐந்திலிருந்து பத்து நிமிடங்களில் நடந்தே வீட்டிற்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்து மணி, இருட்டுப் பயமும் கிடையாது. பிறகு பயமேன்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்தது.

ஒரு நல்ல வேலைக்கு வந்து பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் முதல் தலைமுறையினர் வாழும் பகுதி அது. அவர்களின் வாரிசுகள்தான் இம்மாணவிகள். கல்வியில் மட்டுமல்ல, நடை உடை பாவனைகளில், நகர்ப்புறங்களில் உள்ளவர்கயோடு போட்டிப் போட வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் தைரியத்தைப் பெறாதவர்கள். அதனாலேயே வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் என்ன சொல்வார்களோ என அஞ்சுபவர்கள் இவர்கள்.

"அவ டிரஸ்சப் பாரு அசிங்கமா, நீ அவளோட சேராதே"  என வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?. அவளோடு சென்றால் மற்றவர்களும் நம்மைத் தவறாகப் பார்த்து விட்டால் அசிங்கமாகி விடாதா? இதுவே பயத்திற்கு அடிப்படை. இந்தப் பயமே அவரைத் தனியாக வீட்டிற்கு விரட்டுகிறது.

அந்த மாணவி அணிந்திருந்த உடை அப்படி ஒன்றும் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ இல்லை. வட இந்தியாவில் சிறு நகரங்கள் மற்றும் டெல்லி, மும்பய் உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான இளம் பெண்களின் உடை அதுதான். அங்கு ஆண்கள் உள்ளிட்ட யாரும் இதை அசிங்கமாகப் பார்ப்பதில்லை. ஏன் தமிழகத்திலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள உயர் கல்வி பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கணிசமானப் பெண்கள் அணியும் உடையாகப் பேண்ட் - டி சர்ட் உருவெடுத்துள்ளது.

முதலில் நாகரிகம்-பேஷன் என்ற பெயரில் இவை அறிமுமானாலும், இத்தகைய உடை மாற்றங்கள் பிறகு சாதாரணமாகி விடுகின்றன. இப்படித்தான் சுடிதார் நுழைந்தது. அப்போதும் சுடிதார் போட்டவர்களை அசிங்கமாகப் பார்க்கும் மன நிலை இருந்தது. இன்று கிராமப்புறம் வரை சுடிதார் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண உடையாக மாறி விட்டது. தாவணிகள் 'ஏனை'களாகிவிட்டன.

தாவணிக் கனவு கண்டவர்கள் பதறிப் போனார்கள். தமிழ்ப் பண்பாடு அழிவதாகக் கூச்சலிட்டார்கள். ஆனால் பெண்கள் இக்கூச்சலை பொருட்படுத்துவதாகத் தெரிய வில்லை. தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறதோ, அது ஆபாசமாக இல்லாத பட்சத்தில் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆபாசமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம்கூட பெண்களுக்கு உரியதே ஒழிய ஆண்களுக்கு உரியதல்ல. காரணம் எந்த உடையை அணிந்தாலும் அதில் ஆபாசத்தைத் தேடுவதுதான் ஆணாதிக்க மனப்போக்காயிற்றே?

உடையில் ஏற்படும் மாற்றம் என்பது பண்பாட்டளவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது தவிர்க்க முடியாதது. அந்தந்தச் சமூகச் சூழலுக்கு ஏற்ப, தாங்கள் மேற்கொள்ளும் தொழில் மற்றும் வேலை நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுடையது. மத, இனப் பண்பாட்டைக் காக்கிறேன் என்ற பேரில் இதில் மூக்கை நுழைப்பது ஆதிக்கத் தன்மை கொண்டது. 

ஆபாசமான உடைகளை விதவிதமான வகைகளில் புகுத்த முயல்பவர்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள அலையும் திரைத் துறையினரும், வியாபாரிகளும், பேஷன் டிசைனர்களும்தான். இல்லை என்றால் இவர்களில் பலர் கல்லா கட்ட முடியாது. இவர்களே ஆபாசத்தின் ஊற்றுக் கண்களாகவும் இருக்கிறார்கள். இன்றைய உலக மயமும், தாராளமயமும் ஏற்படுத்தி வரும் லாபவெறி இவற்றை மேலும் விரிவுபடுத்துகிறது.  

ஊரான்

Friday, December 24, 2010

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!

”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.

"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை  மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்."- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.

இச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.

நகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.

ஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள்? இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே.  பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா? வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்? இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள். 

சென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் "புளூ கிராஸ்" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் "புளூ கிராஸ்"  காலியாகிவிடுமே!

இங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.

ஊரான்.