Monday, December 5, 2011

நம்புங்கள்! முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

அயர்லாந்து நாட்டின் சின்னஞ் சிறிய நகரம் அது. மழையும் ஈரமும் கலந்த காலைப் பொழுது. தெருக்களில் மழை நீர் வழிந்தோடுவதால் வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.  மக்கள் வாழ்க்கையும்தான். அனைவரும் கடனில் மூழ்கியுள்ளனர். கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள்.

அந்த காலைப் பொழுதில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானியர் ஒருவர் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்துகிறார். அயர்லாந்தின் அழகை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணி அவர். ஓட்டலுக்குள் சென்று 100 ஈரோவை ஓட்டல் முதலாளியின் மேசை மீது வைத்துவிட்டு "இன்று இரவு இங்கு தங்க வேண்டும். மாடியில் ஒரு வசதியான அறை வேண்டும், அதற்கு முன்பு அறையை பார்வையிட வேண்டும்" என்கிறார். ஓட்டல் முதலாளி சில சாவிகளைக் கொடுக்க, அதை பெற்றுக் கொண்ட பயணி மாடிக்குச் செல்கிறார். 100 ஈரோவை லபக்கென்று எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிய முதலாளி ஓட்டலுக்குப் பக்கத்திலேயே இருந்த இறைச்சிக் கடைக்காரரிடம் சென்று தனது கடனை அடைக்கிறார்.

கைக்கு வந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு தெரு முனைக்கு ஓடுகிறார் இறைச்சிக் கடைக்கார்.  பன்றி வளர்க்கும் விவசாயியிடம் 100 ஈரோவைக் கொடுத்து தனது கடனை அடைக்கிறார்.

100 ஈரோவை பெற்றுக் கொண்ட விவசாயி பன்றிக்கு வாங்கிய தீவனக் கடனை அடைக்க விரைகிறார். 100 ஈரோவை தீவனக் கடைக்காரரிடம் கொடுத்து கடனை முடிக்கிறார்.

அத்தொகையைப் பெற்றுக் கொண்ட தீவன கடைக்காரர் கேளிக்கையும் விருந்தும் ஒருங்கே கிடைக்கும் பப்புக்கு விரைகிறார். ஏற்கனவே குடித்துத் தீர்த்த மதுக்கடனுக்காக 100 ஈரோவை பப் உரிமையாளரிடம் சேர்க்கிறார்.

தனது பப் சென்ட்டரில் வழக்கமாக மது அருந்தும் விலை மாதுவின் கைகளில் அந்த 100 ஈரோவும் நழுவுகிறது. விலை மாதுவின் தொழிலிலும் நெருக்கடி என்பதால் இப்பொழுதெல்லாம் அவர் தாராள மனதுடன் தனது சேவையை கடனாளிகளுக்கும் விரிவு படுத்தி வருபவர்.

தனது கைகளில் நழுவிய 100 ஈரோவை எடுத்துக் கொண்ட விலை மாது ஓட்டலுக்கு விரைகிறார். ஓட்டல் முதலாளியிடம் அதைக் கொடுத்து தனது அறை வாடகை பாக்கியை அடைக்கிறார்.

வசதி படைத்த ஜெர்மன் பயணி சந்தேகப்படக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அந்த 100 ஈரோவை பழையபடி மேசை மீது வைத்துவிடுகிறார் ஓட்டல் முதலாளி. அந்த நேரத்தில் படிகளில் இறங்கி கீழே வந்த ஜெர்மன் பயணி அந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு "ஓட்டல் அறைகள் திருப்திப் படும்படியாக இல்லை" என்று கூறிவிட்டு நகரை விட்டு வெளியேறுகிறார்.

இங்கே யாரும் எதையும் உற்பத்தி செய்யவும் இல்லை. யாரும் எதையும் சம்பாதிக்கவும் இல்லை.

எனினும் ஒட்டு மொத்த நகரமே இப்போது கடனிலிருந்து விடுபட்டு விட்டதால் இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல விழைகிறது அந்நகரம்.

எனவே, சீமான்களே! சீமாட்டிகளே!

ஆம்.நம்புங்கள்!குப்புற வீழ்ந்தாலும் ஐரோப்பிய மீசையில் மண் ஒட்டவில்லை. இப்படி முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

5 comments:

  1. good orticle. you can see this also...
    http://azifair-sirkali.blogspot.com/2011/12/6.html

    ReplyDelete
  2. இங்கே யாரும் எதையும் உற்பத்தி செய்யவும் இல்லை. யாரும் எதையும் சம்பாதிக்கவும் இல்லை...இப்படி சொன்னால் சரியாக புரிவதில்லை.கதை மாதிரி சொல்லும்போது கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கின்றது.நன்றி

    ReplyDelete
  3. ஊரான், ரொம்பப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
    ஆனால் இதே விஷயத்தை வேறு வடிவில் எங்கோ படித்ததாக ஞாபகம். ஆனால் எங்கேன்னுதான் தெரியலை. இது மீள் பதிவா
    உதவி செய்யுங்களேன்.

    ஆனால் உங்களின் எழுத்தில் படிக்கும் போது மனதை நெருடுகிறது.

    ReplyDelete
  4. அப்பு அவர்களுக்கு,

    இதே விவரங்களை நீங்களும் படித்திருக்கலாம். இது மீள் பதிவல்ல. நான் படித்த விசயங்களை எனது நடையில் கொடுத்துள்ளேன்.

    "ஆனால் உங்களின் எழுத்தில் படிக்கும் போது மனதை நெருடுகிறது" என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. நெருடுகிறது என்கிற சொல் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சற்று விளக்கினால் நல்லது.

    ReplyDelete
  5. மனதைப் பாதிக்கிறது என்ற நல்ல அர்த்தத்தில்தான்.... ஆனால் இன்னமும் இதைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கும் நண்பர்களை நினைத்தால் மனம் கவலையடைகிறது.

    ReplyDelete