சென்னை
முதல் கன்யாகுமரி வரை வாழும் தமிழனின் பொது அடையாளம் தமிழ் மொழி. ஆனாலும் அவனுக்கு
சென்னைத் தமிழன், கொங்குத் தமிழன், நெல்லைத் தமிழன் என்கிற வட்டார அடையாளங்களும்
உண்டு. சென்னைத் தமிழைக் கேவலமானதாகக் கருதி கிண்டல் செய்யும் கொங்குத் தமிழன்
சென்னைக்கு வந்து வாழத் தொடங்கியதும் அவனிடம் சென்னைத் தமிழ் ஒட்டிக் கொள்கிறது.
சென்னைக்காரன் நெல்லைக்குச் சென்றால் அவன் நெல்லைத் தமிழனாகி விடுகிறான். இவை
எல்லாம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட அடையாளங்கள். பேசும் மொழி அடையாளம் ஒன்றைத்தவிர
வேறு ஒன்றுபட்ட பொது அடையாளம் எதுவும் தமிழனிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அது
போல இந்தியனை அடையாளப் படுத்தும் பொது அடையாளம் ஏதும் இருக்கிறதா? நான்
இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படி பொது அடையாளம்
எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பொது அடையாளம் எதுவும் இல்லாதது
மட்டுமல்ல இந்தியர்கள் சாதி-மத-இன-பிராந்திய-மாநில-மொழி ரீதியாக ஒருவரை ஒருவர்
அடித்துக் கொண்டு மாய்ந்தாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனக்கூறிக்கொண்டு பிய்ந்து
கிடக்கும் இந்தியனை ஒட்டவைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்தியனோ,
தமிழனோ அவன் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு நிற்பது இரண்டு விசயங்களில்த்தான். ஒன்று லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு
மக்களின் சொத்தைச் சூறையாடுவது; இரண்டாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது. மற்ற
விசயங்களில் இவன் எப்படி எல்லாம் வேறுபடுகிறான் என்பதைப் பார்ப்போம்.
தமிழ்
நாட்டில் வாழ்ந்து கொண்டு தழிழையே அன்றாடம் பேசினாலும் தமிழ் நாட்டுக் கோவில்களில்
தமிழில் பூசை செய்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது.
தாழ்த்தப்பட்டவர்கள்
கோவிலுக்குள் நுழைந்து உள்ளே சென்று ஆண்டவனை வழிபடுவது பார்ப்பனர் உள்ளிட்டு பிற
சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது.
அனைத்து
சாதியினரும் அர்ச்சகராவது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு அதிசயம்
ஏதும் நடந்து விட்டால் ஒரு பறையன் கருவறைக்குள் சென்று பூசை செய்வது பிற்பட்ட
சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது. அப்பொழுது இவர்கள் ஒட்டு மொத்தமாக
நாத்திகர்களாக மாறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எஸ்.சி,
எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, ஓ.பி.சி இவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்
இடஒதுக்கீடு கொடுப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களைவிட இவர்கள்
முன்னேறுவதை பார்ப்பனர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.
இட
ஒதுக்கீடு கிடைக்காத பார்ப்பனரல்லாத பிற உயர் சாதிக்காரனுக்கு ஓ.பி.சி க்காரன்
முன்னேறுவதைப் பொருத்துக் கொள்ள முடியாது. எம்.பி.சி க்காரன் முன்னேறுவதை பி.சி
க்காரனால் பொருத்தக் கொள்ள முடியாது. எளிமையாகச் சொன்னால் எம்.பி.சி ஒதுக்கீட்டின்
மூலம் ஒரு வன்னியன் முன்னேறினால் ஒரு முதலியாருக்குப் பிடிக்காது.
பறையர்-பள்ளர்-அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதை ஓ.பி.சி –
பி.சி – எம்பி.சி க்காரர்களால் பொருத்துக் கொள்ள முடியாது. தனி இட ஒதுக்கீடு மூலம்
அருந்ததியர் முன்னேறுவதை பள்ளர் - பறையர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.
இஸ்லாமியனுக்கோ,
தாழ்த்தப்பட்ட கிருஸ்தவனுக்கோ இட ஒதுக்கீடு கொடுப்பது இந்துக்களுக்குப்
பிடிக்காது.
பார்ப்பனப்
பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப்
பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம்
செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு
தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப்
பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது.
பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப்
பிடிக்காது.
இப்படி
அவரவருக்குப் பிடிக்காத அனைத்திலும் ஒளிந்திருப்பது தீண்டாமையைத் தவிர
வேறெதுவுமில்லை. இத்தகைய தீண்டாமை பார்ப்பனர்களிடமிருந்தே தொடங்கி நடைமுறையில்
இருப்பதால் இதைப் பார்ப்பனியம் என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.