Showing posts with label முட்டை. Show all posts
Showing posts with label முட்டை. Show all posts

Wednesday, April 24, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 3

உணவுத் தீண்டாமை

முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பூண்டு, டர்னிப் போன்ற காய்கறி உணவுகள் மீதும்; வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் மீதும்; பால், தேநீர், மோர், ஊறுகாய், உப்பு, சர்க்கரை, இனிப்பு, தேன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் மீதும்; மாட்டுக்கறி, பன்றிக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை போன்ற மாமிச உணவுகள் மீதும் ஒருவருக்கு விருப்பமும்-வெறுப்பும் இருப்பது அவரின் தனிப்பட்ட பொதுத் தன்மைகளாக (generalities) வரையறுக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வகை உணவை ஒருவர் விரும்புவதும் (desire) அல்லது வெறுப்பதும் (aversion) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உணவை உட்கொண்டால் அது அவருக்கு உடல் ரீதியிலான தொந்தரவுகளை அதிகப்படுத்துவதும் (aggravation) அல்லது தொந்தரவுகளை மட்டுப்படுத்துவதும் (amelioration) அந்த தனிப்பட்ட நபருக்கானதாக மட்டுமே பார்க்க வேண்டும். அதையே எல்லோருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. அந்த நபரைப் பொருத்தவரையில் இங்கே உணவில் உயர்ந்தது – தாழ்ந்தது என்கிற ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.

ஒரு பகுதியின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப அங்கே விளையும் காய்கறிகள் தானியங்கள் பழங்கள் போன்ற பயிர் வகைகளைப் பொருத்தும், வாழும் – வளர்க்கப்படும் பறவைகள் விலங்குகளைப் பொருத்தும் அவ்வட்டார மக்களின் உணவு முறை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சம் ஏற்படும் காலங்களில் உணவுக்கு இவர்கள் வேறு பகுதிகளை நாட வேண்டி இருப்பதால் அதற்கேற்ப உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்ற காலங்களில் உணவில் இது பிடிக்கும் அது பிடிக்காது என்கிற பேச்சுக்கே இடமில்லை. கிடைத்ததை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். எனவே உணவு முறையை திர்மானிப்பதில் இயற்கை பெறும் பங்காற்றுகிறது.

'நான் கேப்பக் கூழ், களி எல்லாம் சாப்பிடுவதில்லை. ஏன்! ரேசன் அரிசியைக்கூட வாங்குவது கிடையாது' என ஒருவன் சொல்லும் போது 'நான் என்ன கஞ்சிக்குச் செத்தவனா?' என்கிற எகத்தாளம் வந்து விடுகிறது. பின்பு அவன் வறியவனாகிவிட்டால் கேப்பக் கூழும், களியும், ரேசன் அரிசியும் அவனது அன்றாட அத்தியாவசிய உணவாகிவிடுகிறது. வசதி வந்தால் கூழ் கேவலமானதாகவும் வறுமை தொற்றிக் கொண்டால் அதே கூழ் அமிர்தமாகவும் மாறிவிடுகிறது.

'நான் அசைவம் சாப்பிட மாட்டேன்’ என்று ஒருவன் சொல்வதற்கும் ‘நாங்க கவிச்சியே சாப்பிட மாட்டோம்’ என்று மற்றொருவன் சொல்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. நான் என்பது ஒரு தனிப்பட்ட நபரோடு முடிந்து போகிறது. ஆனால் நாங்க என்று வரும்போது அது தங்களது சாதியை பிரதானப்படுத்துகிறது. சாதியைப் பிரதானப்படுத்தும் போது, ஒரு சைவ உணவுக்காரன் தன்னை உயர்ந்தவனாகவும், அசைவம் உண்பவனை இழிவானவனாகவும் பார்க்கிறான். பார்ப்பனர்கள் அவ்வாறு தங்களைக் கருதிக் கொள்வதால்தான் அக்கம் பக்கத்தில் பார்ப்பனர்கள் யாரும் வசிக்கவில்லை என்றாலும்கூட தங்களது வீட்டை வாடகைக்கு விடும் போது ‘சைவம் உண்போர் மட்டுமே அணுகவும்’ என விளம்பரப் படுத்துகிறார்கள்.

கறி சாப்பிடும் பிற சாதிக்காரர்களை பார்ப்பனர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ அதைவிட சற்றுக்  கூடுதலாகவே மாட்டுக்கறி உண்ணும் தாம்த்தப்பட்டவர்களை பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் பார்க்கின்றனர். அதனால்தான் உண்ணும் போது என்னவென்று தெரியாமல் உண்டுவிட்டு பிறகு தெரியவரும் போது உடனே வாந்தி எடுக்கிறான் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரன். உணவுத் தீண்டாமையின் உச்ச வடிவம் இதுதான்.

மொழித் தீண்டாமை

சென்னையிலிருந்து கன்யாகுமரி வரை வாழும் தழிர்களுக்குத் தாய் மொழி ஒன்றுதான். ஆனால் வட்டார வழக்கிற்கேற்ப சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் என பேசும் தொணியில் மட்டும்தான் வேறுபாடு இருக்கும்; சொற்கள் என்னவோ ஒன்றுதான். ஆனால் பார்ப்பனர்கள் தமிழகத்தின் - ஏன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அவர்களது பேச்சுத்தமிழ் வட்டாரத் தொணிக்கேற்ப இருக்காது. மாறாக அவர்களுக்கான அவாள் லேங்குவேஜில்தான் இருக்கும்.

அதனால்தான் ‘ஜலம்’, ‘சாதம்’, ‘ஆத்து’ போன்ற சொற்களை ‘எங்க லேங்குவேஜ்’ என்று பெருமையாகச் சொல்கிறாள் அந்தப் பார்ப்பனச் சிறுமி. இந்த அவாள் மொழி, வழக்கிழந்து போன சமஸ்கிருதத்தின் நீட்சியாகக்கூட இருக்கலாம். உங்க லேங்குவேஜைவிட எங்க லேங்குவேஜ் உயர்ந்தது என்கிற மொழித் தீண்டாமை இங்கே ஒளிந்திருக்கிறது. அக்கிரகாரத் தெருக்களில் தொடங்கும் இத்தகைய மொழித் தீண்டாமை கோவில் கருவறை வரை நீள்கிறது. அதனால்தான் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது.

“நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்”, என்பதும் “எங்க லேங்குவேஜ்”, என்பதும் பிற சாதிகளைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற ஒரு உயர் சாதி மனப்பான்மையின் வெளிப்பாடு. இதை ஒரு பார்ப்பனச் சிறுமி தானாக வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக அவளது குடும்பம் மற்றும் பார்ப்பனச் சாதி உறவுகள் மூலமாக அவளுக்குச் சொல்லப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட ஒன்று.

இப்படித்தான் குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் மெல்ல மெல்ல சாதி ரீதியிலான பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அவர்களது மனதில் விதைக்கப்படுகின்றன.

தொடரும்.....
தொடர்புடைய பதிவுகள்

Friday, April 19, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?....தொடர்-1

இது 'ஊரும்' அல்ல; சேரியும் அல்ல; அதற்கும் கீழே! அருந்ததியரின் குடியிருப்புப் பகுதி. இங்குதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறேன். அருகாமையில் பள்ளிக்கூடம், வெளியூர் சென்று வரப் பேருந்து மற்றும் தொடர் வண்டி வசதி, வற்றாத நல்ல நிலத்தடி நீர் என சில அடிப்படையான வசதிகள் இங்கு இருப்பதனால்தான் அருந்ததியர் காலனி என்றாலும் பிற சாதியினரும் அதிக அளவில் குடியிருக்கின்றனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளம் பார்ப்பன புரோகிதர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு எதிர் வீட்டில் குடியேறினார். இரண்டாவது குழந்தை ஒரு வயதே நிரம்பிய பெண்குழந்தை. முதல் குழந்தை மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தை. குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவ்விருவரும் எங்கள் தெருவில் உள்ள அனைவரையும் கவர்ந்து விட்டார்கள். தெருவில் உள்ள எல்லோருடைய வீடுகளுக்கும் செல்வார்கள். அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளே இவர்களின் சக நண்பர்கள்.

எங்கள் வீட்டின் செல்லக் குழ்ந்தையானாள் அப்பெண்குழந்தை. மூன்று வயதுவரை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது முதல் தற்போது முதல் வகுப்பு வரை பள்ளி செல்லும் நேரம் மற்றும் இரவில் அவர்கள் வீட்டில் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கள் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாள். சிறுநீர் - மலம் கழித்தால் சுத்தப்படுத்துவது, குளிக்க வைப்பது, தலை வாரி விடுவது, தேநீர் மற்றும் உணவு கொடுப்பது, கொஞ்சிக் குலாவுவது, விளையாடுவது என சொந்தக் குழந்தையை வளர்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் ஒரு பாதி அனுபவத்தையாவது இக்குழந்தையின் மூலம் பெற்றிருப்போம். இதனால் ஒரு பார்ப்பனக் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் கருத்தியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை மிக நுணுக்கமாக உணர முடிந்துள்ளது.

ஒரு வயதாய் இருந்த போது சாம்பாரோ – இரசமோ, மோரோ – தயிரோ, அவித்த முட்டையோ – ஆம்லெட்டோ, உருளைக்கிழங்கு வறுவலோ - வறுத்த கோழிக்கறியோ, விராலோ - இறாலோ இவை எல்லாம் நாம் உண்ணும் உணவு என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது இந்தக் குழந்தைக்கு.

திண்பது எதுவானாலும் “எனக்கு” எனக் கேட்பதும், “இந்தா” எனக் கொடுப்பதும்தானே குழந்தைகளின் இயல்பு. நாம் எதையாவது நமது குழந்தைகளுக்குத் திண்ணக் கொடுத்தால் “சாப்பிட்டுவிட்டு அப்புறமா வெளியில போ” என நாம்தானே குழந்தைகளின் பகிர்ந்துண்ணும் பண்பை முளையிலேயே கருக்கி விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அசைவ உணவை சாப்பிட மாட்டார்கள் என்பதெல்லாம் தெரியாத வயதில் நாங்கள் ருசித்து சாப்பிடும் போது அதைப்பார்க்கும் பார்ப்பனக் குழந்தைக்கு மட்டும் நாக்கில் எச்சில் ஊறாதா என்ன? அப்போது “எனக்கு” எனக் கேட்ட போதும் சைவ உணவைத் தவிர முட்டை உள்ளிட்ட மாமிச உணவு எதையும் நாங்கள் அவளுக்குக் கொடுத்ததில்லை. பகிர்ந்துண்ணும் பண்பைவிட அவர்களின் குடும்ப உணவு முறையில் நாம் குறுக்கிட வேண்டாம் என்பதால்தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மூன்று வயதைத் தொட்டபோது முட்டையும் கோழிக்கறியும் தங்களுக்கான உணவு இல்லை என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

ஒரு சமயம் நான் கோழிக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஐய்யய்ய.. நீங்க கறி சாப்பிடுறீங்க” என்றாள். “இது கோழிக்கறியில்ல, உருளைக்கிழங்கு, இந்தா சாப்பிடு என நான் கிண்டலுக்குச் சொன்னபோது”, “நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்” என பதிலுரைத்தது மட்டுமல்ல “அப்ப நீங்க பிராமிண் கிடையாதா?” எனக் கேள்வி வேறு எழுப்பினாள்.

தொடரும்.....