Saturday, January 15, 2011

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!

தலை மயிரைப் பாதுகாக்க தவியாய் தவிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். தலை முடி என்று எழுதாமல் தலை மயிர் என்று நாகரிகமில்லாமல் எழுதுவதாக யாரும் தவராகக் கருதி விடாதீர்கள். சாதம் என்று சொன்னால் நாகரிகம். சோறு என்று சொன்னால் நாட்டுப்புறம். இப்படித்தானே நாம் பழகிப் போயிருக்கிறோம். அதனால்தான் மயிர் என்று படித்தவுடனே சற்றே நாம் நெளிகிறோம். கேசம் என்றோ, முடி என்றோ எழுதலாமே எனத் தோன்றுகிறதல்லவா?

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் hair  க்கு முதல் சொல்லாக மயிர் என்றுதான் பொருள் சொல்லப்பட்டுள்ளது. எனவே மயிர் என்று சொல்வது தமிழுக்குரிய மரியாதைதானேயொழிய அசிங்கம் அல்ல. 'மயிரைழையில் தப்பினேன்' என்றுதான் சொல்கிறோம். இங்கே மயிர் அசிங்கமாகப் பார்க்கப்படுவதில்லையே!

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா போன்ற பல 'மயிர் பிளக்கும்' வாதங்களைக் கண்டவர்கள் நாம். நெஞ்சில் மயிர் அதிகமானால் அது ஆண்மைக்கு அடையாளம் என மார்தட்டும் காளைகளையும் பார்த்திருக்கிறோம். அதே மயிர் நரைத்துப்போனாலும் 'வயதானாலும் வாலிபம் குறையவில்லை' என வசீகரிக்கும் 'முது வாலிபர்களையும்' பார்த்து வருகிறோம்.

மயிரின் வனப்பு மரபுக் கூறுகளாலும், உணவு ஊட்டத்தாலும், செய்யும் தொழிலாலும், வாழும் புறச்சூழலாலுமே தீர்மானிக்படுகிறது. தலை மயிர்தான் நம் உடலில் அதிகமாக கவனிக்கப்படும் ஒரு பகுதி. தலை மயிரில் ஒரு குறை என்றால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடைந்துதான் போகிறார்கள். ஆம்! உடைந்துதான் போக வேண்டும். அந்த அளவுக்கு மயிர் நம் உடல் நலத்தோடு தொடர்புடையது.  நம் உடலியக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தலை மயிரில் குறிகளாக (symptoms) வெளிப்படும்.

இளவயது வழுக்கை (baldness), மயிர் கொட்டுதல் (hair falling) அதுவும் கொத்துக் கொத்தாக கையளவுக்குக் கொட்டுதல் (falling: handfuls, in), மயிர்ப்பிளவு (bristling), வெளிறிய மயிர் (gray, becomes), வறண்ட மயிர் (dryness), மயிர் உடைதல் (brittleness), பிசுபிசுப்பான மயிர் (greasy), சடைப்பிடிப்பு மயிர் (plica polonica),  ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் மயிர் (sticks together), சிக்கலுக்குல்லாகும் மயிர் (tangles easily), மெல்லிதான மயிர் (thin)  என மயிரில் ஏற்படும் இம்மாற்றங்கள் நாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் என்பதைக் காட்டும் குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் உணர்த்துகிறது.

இவற்றிற்கு முறையாக மருத்துவம் பார்த்து சரிசெய்து கொண்டால் நம் மொத்த உடல் நலமும் பாதுகாக்கப்படும். மயிரும் அதற்குரிய பொலிவோடு மிளிரும். தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி மைனராக இருக்கத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். என்னதான் நரையை மறைத்தாலும் வெளி உலகுக்கு வேண்டுமானால் மைனராக காட்சியளிக்கலாம். ஆனால் பேரப்பிள்ளைகள் "தாத்தா" என்றழைப்பதை தடுக்க முடியுமா? அப்படி அழைப்பதில்தான் ஒரு சுகம் இருக்கிறதே. பிறகேன் இந்த மைனர் வேஷம்? வண்ணச் சாயம் பூசும் பாட்டிகளும் இப்படித்தான. வீட்டில் வேண்டுமானால் "ஆயா" என்றழைக்கலாம். ஆனால் வெளியில் பிறர் மத்தியில் "ஆண்ட்டி" என்றுதான் அழைக்க வேண்டும்.

பொதுவாக மனைவிமாரைவிட கணவன்மார்களுக்கே முதலில் நரை ஏற்படுகிறது. மீசைதான் முதலில் நரைக்கும். கணவன் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் மனைவி விடுவதாயில்லை. "டை அடி, டை அடி" என நச்சரித்து, படாத பாடுபடுத்தி ஒரு வழியாக கணவன் மயிரை கருப்பாக்கி விடுகிறார்கள். இதற்காக இவர்கள் பிரில் கிரீமிலிருந்து மருதாணி வரை எதையும் விடுவதில்லை. "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணு" என்கிற கதையாக பெரும்பாலான சமயங்களில் நம் தமிழர்கள் செவ்விந்தியர்களாக சிறிது காலம் காட்சியளிக்கிறார்கள். நரகலைத் தேய்த்தால் நரை போகும் என்றால் அதையும் விட மாட்டார்கள் போலும். எதைச் செய்தாவது தனது கணவனை இளைஞனாக்க வேண்டும். பிறர் கண்ணுக்கு தனது கணவன் கிழவனாக தோற்றமளித்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் சில மனைவிமார்கள். இது மனைவிமார்களின் மனநிலை.

உடல் நலிவால், ஏதோ ஒன்றிரண்டு மயிர் வெள்ளையாகிப் போனால் தன்னை ஏமாற்றி கிழவியை தலையில் கட்டிவிட்டார்கள் என கணவன்மார்களும்; கிழவனுக்குத் தன்னை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாகப் புலம்பும் மனைவிமார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். மயிருக்காக விவாகரத்து வரை செல்லும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வயோதிகர்களுக்கு வெள்ளை மயிர் ஒரு பிரச்சனை என்றால் வாலிபர்களுக்கோ 'ஹேர் ஸ்டைல்' ஒரு பிரச்சனை. இதற்காக சலூன்களைத் தேடி அலைகிறார்கள். இவர்களுக்காகத்தான் சலூன்களெல்லாம் இன்று 'பியூட்டி பார்லர்களாக' பெயர் மாற்றம் பெருகின்றன. ரஜினி ஸ்டைல், அஜித் ஸ்டைல், விஜய் ஸ்டைல், என சினிமாக்காரனைப் பார்த்து மயிரில் 'ஸ்டைல்' காட்டும் அவலத்திற்கு நம் இளைஞர்கள் ஆளாகி வருகிறார்கள்.

சுக போகங்களைத் துறந்த சாமியார்களுக்கோ மயிர்தான் மூலதனம். மயிர் போனால் இவர்களின் தொழிலும் போச்சு. அதனால்தான் கிழச் சாமியார்கள்கூட தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி வெண்தாடிக் கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். ஒரு வேளை இதுதான் பெண்களை வசியம் செய்யும் மையோ!

அரசியல் வாதியிலிருந்து அட்வகேட் வரை இதற்கு மயங்காதவர்கள் உண்டோ! "கரு கரு" மயிரோடு பவணி வரும் இவ்விளம் முதியோர்கள் ஒரே ஒரு நாள் அசந்தாலும் சாயம் வெளுத்துவிடும். பல் துளக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் மயிருக்கு சாயமடிக்க மட்டும் மறந்து விடக்கூடாது. திரைப்பட நடிகைகள் முதல் அலுவலகப் பெண்கள் வரை மாதர்களையும் இந்தச் சாயம் விட்டு வைக்கவில்லை.

கூந்தல் மயிர் உரசலில் 12 வோல்ட் மின்சாரத்தின் சுகத்தைக் காணும் காளையர்கள் அதே மயிர் சாப்பாட்டில் இருந்துவிட்டால் 230 வோல்ட் மின்சாரத்தின் ஷாக்குக்குள்ளாகி தட்டை முகத்தில் வீசியெறிவதும் நடக்கத்தானே செய்கிறது. இங்கே கூந்தல்தான் வேறுபடுகிறது. மயிரென்னவோ அதேதான்.

வேண்டுதலுக்காக மயிர் வளர்ப்போரும் உண்டு. இந்த மயிரை வைத்து கோடிகளைச் சுருட்டுகிறான் ஏழுமலையான். பறி கொடுத்த பக்தனோ பட்டை நாமத்தோடு திரும்புகிறான். பயிர் நடுவது குறைந்து வருவது பற்றி கவலையில்லை. ஆனால் மயிர் நடுவது பற்றிய கவலையில் மூழ்கியிருக்கிறது ஒரு கூட்டம். இதற்கான ஆராய்ச்சிகள்கூட அதிகரித்துவிட்டனவாம். வயல்கள் காய்ந்தால் என்ன? இனி வழுக்கைகள் காயாதல்லவா!

இளமையில் முடி வளர்வதும், முதுமையில் நரைப்பதும், வழுக்கை விழுவதும் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வே. ஒரு உயிரியல் நிகழ்வே. இதில் செயற்கையாய் செய்யப்படும் செயல்கள் யாவும் மனப்பிறழ்வின் விளைவுகளே.

இந்த மனப்பிறழ்வே நமது பலவீனம். இதுவே முதலாளிகளின் மூலதனம். வித விதமான கிரீம்கள், ஷாம்புகள், சோப்புகள், கேசவர்த்தினி தைலங்கள், வண்ணச்சாயங்கள் (dye) என மயிர் காக்கும் சரக்குகளால் கொழுக்கிறார்கள் முதலாளிகள். இந்தச் சரக்குகளின் பக்க விளைவுகளாலும் மயிரின் தன்மையை மறைத்ததாலும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள் மக்கள்.

நாம் அழகாய்த் தோன்றினால் அது நமக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் மயிரை அழகுபடுத்திக் கொள்வது சரிதானே என்று தோன்றலாம். தோற்றத்தில் அழகைத் தேடினால்,  அதற்கு எல்லை ஏது? ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பதில்லையே! இருக்கவும் முடியாது. ஆகவும் முடியாது. தோற்றப் பொலிவு ஒரு கானல் நீர்.

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அதுவே சமூகத்திற்கும் அழகு சேர்க்கும்.

1 comment:

  1. ஏன் தமிழ்மணம் பட்டை இன்ட்லி என்னாச்சு?

    ReplyDelete