Sunday, April 21, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் - 2

ஒரு வயதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்குப் பெரும்பாலும் மாலை நேரத் தேநீர் எங்களது வீட்டில்தான். தேநீரோடு பிஸ்கட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பிஸ்கட் இல்லை என்றால் “ஆண்ட்டி! அறிவிருக்கா? பிஸ்கட்கூட வாங்கி வைக்காம இருக்க! பிஸ்கட் இல்லாம எப்படி டீ குடிக்கறது?” என எனது துணைவியாரிடம் கடிந்து கொள்வாள்.

“அடியேய்! உங்கள மாதிரி எங்களுக்கு வசதி கிடையாது! நாங்க வாடகை வீட்லதானே குடி இருக்கோம். நாங்க என்ன உங்கள மாதிரி காரு வச்சிருக்கோமா? நீ போய் உங்க வீட்ல இருந்து எடுத்துட்டு வா!” என செல்லமாக பதில் கூறும் போது “எங்க அப்பா மாதிரி அங்க்கிள கோயிலுக்குப் போகச் சொல்லு. நெறய காசு வரும். எங்கள மாதிரி நீங்களும் காரு வாங்கலாம். சொந்தமா வீடு வாங்கிக்கலாம்” என ஆலோசனை கூறுவாள்.

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதையும், அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் அதே வீட்டை ஓரிரு ஆண்டுகளில் விலை கொடுத்து வாங்கி சொந்த வீடாக்கிக் கொண்டதையும், அடுத்த ஆண்டிலேயே அவர்கள் புதிதாகச் சொந்தக் கார் வாங்கியதையும் புரிந்து கொண்டுதான் அவள் அவ்வாறு கூறினாள். கோவிலுக்குச் சென்று பூசை செய்தால் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு இவற்றை எல்லாம் பெறலாம் என்பது அவளது புரிதல்.

அவளது அப்பா ஆகமவிதிகளின் கீழ் வரும் கோவிலுக்கும் செல்கிறார்; சாதாரணக் கோவிலுக்கும் செல்கிறார். இது அன்றாடம் அவர் செய்யும் அர்ச்சகர்த் தொழில். இது தவிர திருமணம், புதுமனைப் புகுவிழா, காரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை முடக்கித் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றம் வரை சென்று இன்று வரை தங்களது ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் நிலைநாட்டி வருகிறார்கள் என்பது தெரியாத வயது அவளுக்கு. அதனால்தான் வெள்ளந்திரியாய் அவள் என்னிடம் அர்ச்சகர் வேலைக்குச் செல்லச் சொல்கிறாள்.

நாட்கள் வேகமாக உருண்டோடுகின்றன. மழலையர் பள்ளிப்படிப்பை முடித்து, முதல் வகுப்பிற்குச் செல்கிறாள். அவள் வளர வளர, அவளது பேச்சில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நாள் எங்களது வீட்டில் இரவு உணவின் போது குழந்தை என்பதால் அவளுக்கு கொஞ்சமாகச் சோறு போடுகிறார் எனது துணைவியார். தட்டில் உள்ள சோறு தீர்ந்தவுடன் “ஆண்ட்டி சாதம் போடு” என்கிறாள். “சாதம் இல்லடி, சோறுனு கேளு!” என்ற போது “சோறுனு சொல்லக்கூடாது, சாதம்னுதான் சொல்லனும்” என பதில் கூறினாள்.

“நாங்கள்லாம் உங்கள மாதிரி பேசமாட்டோம். வீட்டை ‘ஆத்து’னுதான் சொல்லுவோம். தண்ணிய ‘ஜலம்’னுதான் சொல்லுவோம்.” என மேலும் சில உதாரணங்களை எடுத்தியம்புகிறாள்.

“ஏய்!‘ஆத்து’னா தண்ணி போற ஆறு! நீங்க என்ன அங்கேயா குடியிருக்கீங்க?” என கிண்டல் செய்த போதும் “அய்யோ ஆண்ட்டி! தண்ணி போறதுக்குப் பேரு ஆறு! இது ‘ஆத்து!’...‘ஆத்து!’ வீட்டை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்” என மிகப் பொருமையாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கமளித்தாள்.

“நாங்க பிராமிண். இப்படித்தான் பேசுவோம். எங்க லேங்குவேஜ் இதுதான்” என பெருமைவேறு பட்டுக்கொண்டாள்.

எங்களது உறவினர்கள் பலரும் இவளுக்கு உற்ற நண்பர்கள். எல்லோரும் இவளோடு கிண்டலும் கேலியுமாய் இருக்கும் போது, அவளும் எங்களை கிண்டலும் கேலியும் செய்வாள். சென்ற வாரம் இவளது குடும்பம் சென்னைக்குக் குடிமாறிச் செல்ல ஆயத்தமாகிக்  கொண்டிருந்தபோது ஒரு நாள் நானும் எனது துணைவியாரின் அக்கா பேத்தியும் “என்ன ஆத்த காலிபண்ணிட்டு சென்னைக்குப் போறீங்களாமே?” எனக் கிண்டலாய் கேட்டபோது “எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்றுவிட்டாள். "டீ போட்டாச்சு, குடிச்சிட்டுப் போ" என வலியுருத்திய போதும் அன்றைய மாலை நேரத் தேநீரை அவள் புறக்கணித்துவிட்டாள்.

தொடரும்.....

தொடர்புடைய பதிவு: 

பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1

7 comments:

  1. உலக மகா உளறல்...அத்தனையும் தவறு...

    //வீட்டை ‘ஆத்து’னுதான் சொல்லுவோம். தண்ணிய ‘ஜலம்’னுதான் சொல்லுவோம்.”//

    வீடு என்பதற்கு "ஆத்து" கிடையாது. "ஆம்" என்பதே சரி . வீட்டிற்க்கு என்பதற்கு தான் "ஆத்துக்கு" என்று சொல்வார்கள்..
    வீட்டிற்கு போகிறேன் -"ஆத்துக்கு போகிறேன்".

    சரி "ஆம்" என்றால் என்னனு தெரியலல ? "அகம்" என்பது தான் "ஆம்" என்று மருவியது.."அகம்" என்றால் "உள்ளே" என்று பொருள்...நான் உறையும் இடம் (வீடு) எனது அகம். அதுவே ஆம் என்று மருவி விட்டது.. "ஆத்துக்கு" , "ஆம்" என்பன 200% தூய தமிழ் சொல். அது மட்டும் இல்லாமல்..திருத்துழாய் , அடியேன் , அமுது, போன்ற தமிழ் வார்த்தைகளை இன்னமும் உபயோகிப்பது பார்பனர்கள் தான்...

    //அவளது அப்பா ஆகமவிதிகளின் கீழ் வரும் கோவிலுக்கும் செல்கிறார்; சாதாரணக் கோவிலுக்கும் செல்கிறார். இது அன்றாடம் அவர் செய்யும் அர்ச்சகர்த் தொழில். இது தவிர திருமணம், புதுமனைப் புகுவிழா, காரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்.//

    கோவிலில் அர்ச்சகராக உள்ள பார்பனர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தட்டில் காசு வாங்குவது எதானால் தெரியுமா..? பார்பனர்கள் மாதம் 15000 சம்பளம் வாங்குகின்றனர் என்று நினைத்து கொண்டிருக்கின்றீர்களோ?

    சரி அத விட்டுடுவோம்...பூணல் போட்டிருக்கும் அனைவரும் பார்பனர்களா? பார்பனர்களிலேயே இவர்கள் இதை தான் செய்ய வேண்டும் என்று உள்ளது...எல்லாரும் புதுமணி புகுவிழாவோ, காரியம் செய்து வைக்கவோ முடியாது...



    எல்லாவற்றிற்கும் இது போல் விளக்கம் கூறிக் கொண்டு இருக்க முடியாது...விமர்சிப்பவர்கள் முதலில் கரைத்து குடித்து, உண்மை அறிந்து விமர்சனம் செய்வது நல்லது....நெட் லேர்ந்து காப்பி அடிக்கறது...புத்தகத்த பாத்து எழுதறது, சமஸ்க்ருதம் தெரியாமலே வேடத்துல இப்படி போட்ருக்கு அப்படி போட்ருக்கு நு சொல்ல வேண்டியது... ..... தெரியாமல் சொன்னால் ஒகே...பொய்யான கதைகளை வேண்டுமென்றே சொன்னால் காலம் பதில் சொல்லும்..

    கலிகாலம்...கம்ப்யூட்டர் இருக்கு..நெட்டு இருக்கு...நேரம் இருக்கு ன்னு அடிச்சு விட்றது ???? என்னமோ ...ஆண்டவன் தான் பாத்துக்கணும் .....

    //என்ன சார் நான் போட்ட கமெண்ட் வெளியுடுவீங்களா ? மாட்டீங்களா ? :P

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இந்தப் பதிவில் எழுதப்பட்டுள்ளவை அனுபவத் தொகுப்புதானே ஒழிய எதுவும் இட்டுக்கட்டியோ கற்பனையோடவோ எழுதப்பட்டதல்ல.

      ஆத்துக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி. ஆத்து என்பது தமிழா அல்லது வேற்று மொழிச் சொல்லா என்பதல்ல இங்கு பிரச்சனை. ஒரு குழந்தை வளரும் போது அது எப்படி தன் சாதி சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு மாற்றப்படுகிறது என்பதைத்தான் பதிவு செய்துள்ளேன்.

      புரோகிதம் செய்பவர்களின் வருமானம் எவ்வளவு என்பதை வாங்குபவர்கள் கண்டிப்பாக கணக்கு காட்டமாட்டார்கள். காட்டினால் வருமான வரியில் சிக்க நேரிடும் (ஒரு சிலர் வதிவிலக்காக இருக்கலாம். மறுக்கவில்லை). அவர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது கொடுக்கின்றவர்களுக்குத் தான் தெரியும்.

      யார் பார்ப்பனர்கள் என்பது குறித்த எனது கண்ணோட்டத்தை அறிய விரும்பினால் இத்தொடர் முழுவதையும் படித்துவிட்டு கருத்திடுங்கள்.

      "உண்மை அறியாமல் எழுதுவது... காப்பி அடிப்பது..... புத்தகத்தைப் பார்த்து எழுதறது........ என... பொய்யான கதைகள் சொல்வதாக கதை அளந்துள்ளீர்கள்"... என நீங்களே எனது வலைப்பூவை தொடர்ந்து படிக்காமல் கதை அளந்துள்ளீர்கள்.

      ஒரு வேண்டுகோள்: எனது வலைப்பூவை நிதானமாகப் படியுங்கள். வேறு எங்கெல்லாமோ படித்ததையெல்லாம் வைத்துக் கொண்டு இங்கே முடிச்சுப் போடாதீர்கள்.

      எது சரி? எது தவறு? என்பதை பார்த்துக்க ஆண்டவன் தேவையில்லை. வாசகர்களே போதும்!

      கருத்துப் பதிவிற்கு நன்றி!

      Delete
  2. அருமை...ஆனால். எந்த பார்ப்பனர் வீட்டிலும் "ஆத்து" என்று கூறமாட்டார்கள். மேலே சரியான விளக்கம் தந்திருக்கிறார் ஒருவர். எனவே , குழந்தையை கதை மாந்தராக்கி , இட்டுக் கட்டி எல்லாம் எழுத வேண்டாம். கண்றாவியாக உள்ளது. இதிலே அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதியது என்றெல்லாம் கூறுவதை நம்பவே முடியவில்லை. இந்த பதிவு முழுவதையும் screenshot மற்றும் வெப் பேஜ் ஆக சேமித்துக் கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சங்களுக்கு புதிதாக மறுப்புரை தேவை இல்லை எனக்கருதுகிறேன். மேலே நான் கொடுத்துள்ள மறுப்புரையே போதுமானது.

      Delete
    2. உங்கள் விமர்சங்களுக்கு புதிதாக மறுப்புரை தேவை இல்லை எனக்கருதுகிறேன். மேலே நான் கொடுத்துள்ள மறுப்புரையே போதுமானது.

      Delete